Monday, October 9, 2017



அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN 

நண்பர்களே, சில நாட்களாக ஒரு தொடராக பன்னிரண்டு ஆழ்வார்களைப் பற்றி ''அமுதன் ஈந்த ஆழ்வார்கள்'' என்ற தலைப்பில் எழுதி வந்ததை எத்தனை பேர் ரசித்தீர்களா? அதை ஏற்கனவே ஒரு புத்தகமாக வெளியிட்டு விநியோகமும் தொடர்கிறது. இன்னும் சில பிரதிகளே உள்ளன. இன்றய கட்டுரையோடு அந்த தொடர் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாம் ஆண்டாள் எனும் கோதையை மார்கழி மாதம் கட்டாயம் சந்திப்போம். அமுதன் ஈந்த ஆழ்வார்கள் புத்தகம் வேண்டுவோர் என்னை அணுகலாம். என் எழுத்து பிடிக்காதவர்களுக்கு வெகு தொலைவில் ஓட இது ஒரு நல்ல சந்தர்ப்பம். - ஜே.கே. சிவன்
                                        
                                      டும் டும் டும் கல்யாணம்
முடிப்பதை ஒரு கல்யாணத்தோடு முடித்தால் என்ன என்று தோன்றி அதை ஆண்டாள் திருக்கல்யாணத்தை ''அவளே கனவு கண்ட படி'' அவள் வாக்கிலே அதை சொல்வதில் மகிழ்ச்சி.
கோதை அரங்கனுக்கென்றே முடிவாகிவிட்டது. அரங்கன் தான் பெரியாழ்வாரின் -- இனி அவர் விஷ்ணு சித்தர் அல்ல, என்று தன் மகளை அந்த ரங்க மன்னாருக்கு மனைவி என்று முடிவு கட்டி விட்டாரோ, மன்னாரின் ''மா மன்னார்'' - ''மாமனார்'' ஆகிவிட்டாரே. சாதாரண ஆழ்வார் பெரிய ஆழ்வார் ஆகிவிட்டாரே. அவர் கனவில் அரங்கன் தோன்றி ''உமது மகள் இனி என்னவள். உடனே அழைத்துக்கொண்டு எம்மிடம் வாரும்'' என்று தான் கட்டளை இட்டு விட்டானே. மதுரை அரசனுக்கும் சேதி போய் விட்டதே. சகல வித வாகனாதிகளோடும், மாலை மரியாதைகளோடும், தூப தீபங்களோடும், வரிசைகளோடும் , வாத்ய வேத கோஷங்களோடும் அனைவரும் புறப்பட் டுவிட்டனரே. வில்லி புத்தூரை நோக்கி மாபெரும் ஊர்வலம் சிவிகையோடு கிளம்பிவிட்டது. மணப்பெண் தயாராக இருப்பாளே. அவளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீ ரங்கம் செல்ல வேண்டாமா? வழியெங்கும் கல்லையும் முள்ளையும், காட்டையும், பற்றி எல்லாம் யாருக்கு இனி கவலை?
மாப்பிள்ளை யார்? சாதாரணமானவரா? சகல கல்யாண குணங்களும் பொருந்தியவரல்லவா? ஸ்ரீமன் நாராயணனே அல்லவா அரங்கனாக ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார். ஊர்வலத்தை பற்றி ஒரு சில விவரங்கள் உங்களுக்கு தர வேண்டுமல்லவா.
அடேயப்பா, ஆயிரக்கணக்கான, மலையே அசைந்து வருவது போல், கூட்டமாக யானைகள் பிளிறிக்கொண்டு உற்சாகமாக நடை போடுகின்றன. அத்தனை யானைக்கும் முக படாம், மேலே வண்ண அலங்கார பட்டுத் துணிகள் போர்த்தப்பட்டு கண்ணைப் பறிக்கின்றன. வழி முழுதும் எங்கும் வித வித வர்ணங்களில் வகைகளில் காற்றில் பறக்கும் தோரணங்கள்.
ஆங்காங்கே வேத விற்பன்னர்கள் மந்திரமோதிக்கொண்டு தங்க மய பள பளக்கும் கலசங்களில் பூரண கும்பங்கள் ஏந்தி நிற்கின்றனர். நாளைக்கு இதுவரை எவரும் அறியாத மிக மகோன்னத திருமணம் நடக்கப் போகிறதே.
தென்னை பனை, வாழை பாக்கு மாந்தளிர் எல்லாவற்றையும் சேர்ந்த பந்தல் மிகப்பெரியதாக போடப்பட்டு விட்டதே. சூரியனே உள்ளே நுழைய முடியாது. தென்றல் குளு குளு வென்று வீசி சந்தனம் பன்னீர் ரோஜா வாசனை திரவியம் தைல மணம் மூக்கைத் துளைக்கிறதே. இதோ பந்தலுக்குள் மாப்பிள்ளை வீர நடை போட்டு சிங்கம்போல் நுழைகிறார். ''கோவிந்தா கோவிந்தா'' என்ற குரல் வானைப் பிளக்கிறதே.
கூட்டத்தில் நிறைய முகங்கள் ஏற்கனவே பார்த்தவையாக இருக்கின்றனவே. ஒ, அடடா, இது இந்திரன் அல்லவா. என்ன தேஜஸ், அவரைச் சுற்றி தான் எத்தனை தேவாதி தேவர்கள் -- பிள்ளை வீட்டார்களாயிற்றே. சகல மரியாதைகளோடும் அமர்ந்திருக்கிறார்கள்.
''என்னை முறையாக பெண் கேட்க நிச்சயதார்த்ததுக்கு அல்லவோ வந்திருக்கிறார்கள். என் அப்பா, மதுரை ராஜா சில ஆழ்வார்கள் மட்டுமே என் பக்கம். நாங்கள் பெண் வீட்டார். இரு பக்கமும் கலந்து பேசி கல்யாணம் நிச்சயமாகி விட்டது. எல்லோருக்குமே பரம சந்தோஷம்.
மத்தள நாதஸ்வர சப்தம் காதைப் பிளக்க அதோடு கலந்து வேத மந்த்ரங்கள் முழங்க இதோ கூரைப்புடைவை எடுத்து என் கையில் கொடுத்தாகி விட்டது. நான் அதை இதோ ஒரு நொடியில் சம்பிரதாயப்படி உடுத்திக்கொண்டு வந்து விடுகிறேன். ஒரு நிமிஷம் பொறுங்கள்.
இந்த அழகிய தெய்வீக மங்கை யார்? பார்த்திருக்கிறேன் ஞாபகம் வருகிறது நன்றாக. இவள் தான் என் கணவனின் சகோதரி துர்க்கை என்பது தெரிந்துவிட்டது. அவள் எனக்கு முக மலர்ச்சியுடன் மாலை சூட்டுகிறாளே .
''வழி விடுங்கள் வழி விடுங்கள்'' என்று ஒலித்துக்கொண்டே ஒரு கூட்டம் வருகிறதே இவர்கள் யார். எதற்கு இங்கு? அவர்கள் கையில் இருப்பதைப் பார்த்ததும் தான் புரிகிறது. ஓஹோ, சகல புண்ய நதிகளின் தீர்த்தம் அல்லவோ இந்த குடங்களில், வாய் மணக்க வைதீகர்கள் மந்திரம் ஒலித்துக்கொண்டு நாலா பக்கமும் மாவிலையால் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டு வந்துவிட்டார்கள். எங்கும் பரிசுத்தம், நறுமண கந்தம். உரத்த குரலில் ஆயிரக்கணக்கான வேதியர்கள் மந்திரம் ஒலிக்கிறார்கள். எனக்கும் ''அவருக்கும் '' மங்களா சாசனம் நடக்கிறது. புன்முருவலிக்கும் அவரை கடைக்கண்ணால் வெட்கத்துடன் ஒரு பார்வை. ஆஹா இந்த ஆணழகன் நறுமண மலர் மாலைகள் அணிந்து கம்பிராமாக எத்தனை கொள்ளை கொள்ளும் வசீகரன். இதோ பார்த்தீர்களா எங்கள் இருவர் கைகளிலும் கங்கணம் காப்பு .
அட, இதென்ன, இத்தனை நேரம் இங்கே திரும்பி பார்க்காமல் போய்விட்டேனே!. அப்பப்பா , எத்தனை வரிசை. அழகான இளம் பருவ மங்கைகள், பல் வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது உடை, ஆபரணம் , அலங்காரம் எல்லாம் கதை கதையாக சொல்கிறதே. அனைவர் கைகளிலும் தீபங்கள், வித வித தட்டுகள் நிறைய என்னன்னவோ பொருள்கள், பொன் கலசங்கள். யாருக்காக இவர்கள் இங்கு நின்று எவரை எதிர்கொண்டழைக்க தயார் நிலையில் உள்ளார்கள்.
ஆமாம் அவர்கள் காத்திருக்க இதோ மதுரை மன்னன் சுந்தரேஸ்வரரும் வந்துவிட்டாரே.
மத்தள மேளங்கள் கொட்ட, வரியுடைய சங்குகளை ஊத, அந்த மதுசூதனன், முத்து மாலைகள் கட்டித் தொங்க விடப்பட்ட அழகிய பந்தலில் என் கைத் தலத்தைப் பற்றுகிறாரே.
வேத உச்சரிப்பில் வல்லவர்களான வேதியர்கள் சிறந்த வேதத் தொடர்களை ஓத, அந்தந்தச் சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே, பசுமையான தர்ப்பைகளையும், ஸமித்துகளையும் பரத்தி வைத்து வேள்வி செய்து, சினம் கொண்ட மத யானை போன்ற கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வரு கிறான் !
இந்தப் பிறவிக்கும், மேல் வரும் எல்லாப் பிறவிகளுக்கும் அடைக்கலமான பற்றுக்கோடாக, நமக்கு நாயகத் தலைவனாக உள்ள நம்பியான நாராயணன், தன் செவ்விய திருக்கையால் எனது கால்களைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்தும் வைத்து விட்டான். அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நேரம் இதுவாச்சே.
என் முன்னே ஹோம குண்டத்தில் நெருப்பை இட்டு வளர்த்து, வில்லினை ஒத்த புருவமும், ஒளி பொருந்திய முகமும் கொண்டஎன்னை அதன் முன்னே நிறுத்தி, அச்சுதனான அந்தக் கண்ணன் கைமேல் என் கையை வைத்து, பொரிகளை அள்ளி அக்னியில் சேர்த்து விட்டார்கள். இதை என்னால் மறக்கமுடியுமா ?
நான் மேலே சொன்னதெல்லாம் என் கற்பனை அல்ல சுவாமி. இதெல்லாம் ஆண்டாள் என்கிற கோதை தனக்கும் அந்த மாயவன் அரங்கனுக்கும் கனவில் நடந்த திருமணம் என்று தோழிக்கு உணர்த்தும் அருமையான காவியம் தான் வாரணமாயிரம் பாசுரங்கள்.
அவற்றை கீழே அளித்துள்ளேன். இதைப் படித்துவிட்டு அந்த பாசுரங்களை பாடி மகிழும் போது தான் அதன் தத்ரூப ருசி தெரியும். புரியும். . இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயில வல்லவர்கள், நல்ல குணங்களுடைய குழந்தைகளைப் பெறுவர். கன்னியர் கண்ணனைப் போன்ற கணவனைப் பெற்று மகிழ்வர் என்று அதன் பல சுருதி வாக்குறுதி அளிக்கிறது.

556:வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.) 1
557:நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2
558:இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3
559:நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
560: கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
561:மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6
562: வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7
563: இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8
564:வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9
565:குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10
ஹோமப் புகையின் முன்னே நெடுநேரம் நின்றிருந்ததால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணித்து குளிரூட்டும் வகையில் குளிர்ந்த குங்குமக் குழம்பை உடலில் பூசி, சந்தனத்தை நிறையத் தடவி விட்டனர். பின் அங்கிருந்த ஒரு யானையின் மீது நான் கண்ணனுடன் கூடி அமர, அலங்காரம் மிகுந்த தெருக்களிலே திருமண ஊர்வலம் வந்து, நிறைவாக வாசனை நீரில் மஞ்சன நீராட்டுவதைக் கனவினில் கண்டேன் தோழி!
566:ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11
கோதை என்ற பெண் ஆண்டாள் ஆகி அந்த அரங்கனோடு தனக்கு திருமணம் முடிவது போல் கனவு கண்டாள் . இதில் ஒரு இனிய விஷயம் என்ன என்றால் நினைவிலும் கனவிலும் அவள் சுவாசம் அரங்கனாகவே இருந்தது என்பதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...