Wednesday, October 18, 2017

பார் போற்றும் பரமஹம்சர்

பார் போற்றும் பரமஹம்சர் J.K. SIVAN


ஒரு விவாதம்.

''எம்'' சொல்வது காதில் விழுகிறதா. அடுத்தநாள் காலை எட்டு மணிக்கே போய் பரமஹம்ஸர் ஆஸ்ரமத்தில் நின்றேன்.

பரமஹம்சர்: ''அட நீயா வா வா. உட்காரு .இந்த ஊர்லே தானே இருக்கே. எங்கே வீடு?

M: "கல்கத்தாவில் தான் சுவாமி "

ப :''எந்த இடத்திலே?''

M: "பரநகர் லே என் அக்கா வோடு தங்கியிருக்கிறேன்.. இஷான் கவிராஜ் வீட்டிலே ஐயா ."

ப: ''ஓ தெரியுமே இஷானை. கேசப் சந்திர சேன் எப்படி இருக்கார். உடம்பு சரியில்லாம இருந்தாரே''

M: " ஆமாம். இப்போ கொஞ்சம் பரவாயில்லே. ஸ்வஸ்தம் ஆகிண்டு வரார்னு கேள்விப்பட்டேன். ''

ப: "நான் கேசப் உடம்பு சரியாக போகவேண்டும் என்று அம்மா கிட்டே தேங்காய் உடைச்சு சக்கரையோட நைவேத்தியம் பண்ணுறேன்னு வேண்டிண்டு இருக்கேன். சில நாள் விடிகாலையில் எழுந்து அம்மா கிட்டே கதறுவேன். ''உடனே அவரை குணமாக்கிடு. கல்கத்தா போனா அவர் இல்லை என்றால் யார் கூட நான் பேசுவேன்?''

ஒரு நிமிஷ மௌனம். பரமஹம்சர் தொடர்ந்தார்.

"உனக்கு மிஸ்டர் குக் என்று ஒரு வெள்ளைக்காரர் கல்கத்தா வருவாரே. அவரை தெரியுமா. பிரசங்கம் எல்லாம் பண்ணுகிறவர் . ஒருதடவை கேசப் படகில் என்னை கூட்டிக்கொண்டு போனபோது அவரும் இருந்தார்.''

M: "ஆமாம் ஐயா. அவர் ஒரு பேச்சாளி என்று கேள்விப்பட்டதுண்டு. நேரில் கேட்டதில்லை. அவரைப் பற்றி தெரியாது.''

ப: ''உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?''

M: "ஆமாம் ஐயா."

இதை கேட்டதும் ஏதோ தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது பரமஹம்சருக்கு. உடல் நடுங்கியது. '' ஓ ராமா. இவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாம்!'' என தனக்குள் முணுமுணுத்தார்.

M இதை கேட்டதும் ஏதோ செய்யக்கூடாத தப்பை செய்தது போல் தலை குனிந்து தரையை பார்த்தார். கல்யாணம் செய்து கொள்வது அப்படி என்ன ஒரு பஞ்சமகா பாதகமா?

ப: '' குழந்தைகள் உண்டா?''

M க்கு ''உண்டு'' என்று பதில் சொல்லும்போது அதுவும் ஒரு தவறோ என்று நினைக்க தோன்றியது. பரமஹம்சரும் தனக்குள் அவர் காதுபட '' ஒ! இவருக்கு குழந்தைகளும் உண்டாம்'' என்று வருத்தமாக சொல்வது தெரிந்தது.

ப : ' ஒருவரது நெற்றியை, கண்களை பார்த்தாலே சில ஏதேதோ விஷயங்கள் சொல்கின்றன. சொல்லுங்கள் உங்கள் மனைவி...... எப்படிப்பட்டவள் . ஆன்மீக பக்தி உணர்ச்சிகள் உண்டா,"''

M : ''பக்தி உண்டு. ரொம்ப விஷயஞானம் எல்லாம் கிடையாது சுவாமி ''
ப: ''ஓ .. நீங்கள் ஞானியோ?''

M தான் அதிகம் படித்தவர் என்ற எண்ணம் அவர் மனதில் எப்போதும் இருந்தது. ஒரு நொடியில் அது தளர்ந்தது. படிப்பு வேறு ஞானம் வேறு என்று புரிந்தது.

ப: ''கடவுள் .. உருவத்தோடா, இல்லாமலா? எப்படி நம்பிக்கை உங்களுக்கு?

M பதில் சொல்லவில்லை. கடவுள் உருவம் கொண்டவர் என்றால் உருவமில்லை என்பது தவறாகிறது. உருவம் இல்லாதவர் என்றால் எங்கு கடவுள் உருவம் கண்டாலும் அது இல்லை என்றாகிறது. ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே. பால் வெள்ளை திரவமாக இருப்பதை கருப்பு என்று எப்படி ஏற்பது ?
''ஐயா கடவுள் அருவமானவர்'' என்று நம்புகிறேன் .

ப: ''நல்லது.எதிலோ ஒன்றில் நம்பிக்கை தான் அவசியம். அருவம் என நம்பும்போது உருவமுள்ளவர் என்பதில் தவறு காண வேண்டாம். உங்களது நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்''.

M அசந்து போனார். எந்த புத்தகத்திலும் இதை அவர் இதுவரை படிக்கவில்லையே. குருநாதர் மீது பக்தி வலுப்பட அவரை இன்னும் கொஞ்சம் சீண்டிப்பார்க்க முற்பட்டார். அப்போது தானே அவரை புரிந்து கொள்ள முடியும்.

M: "குரு மஹராஜ். கடவுளுக்கு உருவம் உண்டு என்றால் அவர் வெறும் களிமண் பொம்மை மட்டும் இல்லையே?"'

ப: '' ஏன் களிமண்ணாக பார்க்கிறாய். தெய்வீக சக்தியின் உருவாக பார்க்கலாமே''

M: ''இப்படி உருவ வழிபாடு செய்பவர்களுக்கு ''கடவுள் மண் பொம்மை இல்லை. இதன் மூலம் உணரவேண்டும். மண்ணை கடவுள் என்று வழிபடாதீர்கள் என்று சொல்லவேண்டுமில்லையா.

ப: கல்கத்தா காரர்கள் இப்படித்தான். மற்றவருக்கு நீட்டி முழக்கி பேசுவது வெளிச்சம் காட்டுவது. தான் ஒளி தேடாமல் அடுத்தவருக்கு உபதேசிக்க அவர்கள் யார் ? சர்வ லோக நாயகன், மாதா சொல்லட்டுமே. இந்த உலகம் தில் உள்ள அனைத்தும், சூரியன் சந்திரன், நக்ஷத்திரம் மனிதன் விலங்குகள் எல்லாம் படைத்தவனுக்கு தன்னை எப்படி வழிபடவேண்டும் என்று சொல்லமாட்டானா. வழி காட்ட மாட்டானா. குருவாக மாட்டானா? நாம் யார் சொல்ல?' செய்வது தவறு என்றால் அவனல்லவோ வழிகாட்டுவான். நீ பேசாமல் பக்தியும் ஞானம் பெற முயற்சி செய்''

M மனதில் புயல் வீசியது. ''அவர் சொல்வது தான் சரி. தன்னை களிமண்ணாக காணவேண்டாம் என்று சொல்லாமல் ஏன் ஏற்றுக் கொள்கிறான். அருள் பாலிக்கிறானே. எனக்குஎதற்கு இந்த வேண்டாத வேலை. தலைவலி. முதலில் ஞானத்தை தேடுகிறேன். பக்தியை வளர்த்துக்கொள்கிறேன். நான் கடவுளை கண்டிருக்கிறேனா? அவர் மேல் அன்பு உண்டா எனக்கு? என் படுக்கையில் எனக்கே படுக்க இடமில்லை. மற்றவர்களுக்கு உபச்சாரமா?நான் உபதேசிப்பதா. இது என்ன வெறும் கணக்கா, சரித்திர பாடமா, இலக்கியமா என்ன? அறிவுபூர்வ தேடல். ஆம் குரு சொல்வது எனக்கு புரிகிறது.''


இந்த சம்பவம், நடந்த உரையாடலுக்கு, பிறகு குருநாதர் முன்பு M வாயே திறக்கவில்லை.

ப: ''களிமண் உருவம் சிலருக்கு அவசியம் தான். எத்தனையோ உருவத்தில் அதுவும் ஒன்று.அம்மா சமைக்கிறாள். குழந்தைகளுக்கு காரம் கம்மி, பெரியவர்களுக்கு கார சாரமாக. ஒரே உணவு பல ரூபங்களை அவரவர் வயிறு தாங்கும் அளவிற்கு, ருசியில்.. உனக்கு புரிகிறதா என்ன சொல்ல வருகிறேன் என்று?''

M. கைகூப்பிக்கொண்டு -- ''வாஸ்தவம். கடவுள் மீது மனதை நிலை நிறுத்துவது எப்படி சுவாமி?''

ப: ''விடாமல் நாமங்களை சொல். பெருமையை பேசு. படி, பாடு, எழுது. அவன் பக்தர்களை சந்தி. உலக இயலில் மனம் சென்றுவிட்டால் அதை கடவுள் மீது செலுத்துவது இயலாது. தனிமை கிடைத்தால் விடாதே. அவசியம் அப்போது கடவுளை நினை. முதலில் கஷ்டமாக இருக்கும். நம்பிக்கை தளரும். மரம் முதலில் செடியாக வளரும்போது அதை சுற்றி வேலி, பாதுகாப்பு வளையம் வைக்கிறோம். ஆடு மாடு நெருங்கி அழிக்காமல். பெரிதானப்புறம் எதற்கு அதெல்லாம்? மனதும் செடி தான். உனக்குள்ளே மனத்தை செலுத்து.வெளி உந்துதல் இல்லாத தனி இடம் அதற்காக தான். ரிஷிகள் அதனால் தான் காடுகளுக்கு சென்றார்கள் தவம் செய்ய. அழியும் வஸ்துக்கள் மேல் மனம் போகக்கூடாது.''

எப்படி இருக்கிறது. பிடிக்கிறதா. மேலே இன்னும் சொல்லப்போகிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...