Monday, June 18, 2018

PANJALI SABATHAM




துரியோதனன் பொறாமை J.K. SIVAN சிலருக்கு என்னதான் அவர்களிடம் நிறைய தேவைக்கும் மேலாக பொருள் இருந்த போதும் அடுத்தவனிடம் தன்னிடம் இல்லாதது ஏதேனும் இருந்தால் நிம்மதி இழப்பார்கள். ஒரு சிறு பிளாஸ்டிக் பெட்டி அழகாக மற்றவனிடம் இருந்தாலே போதும். அது நம்மிடம் இல்லையே என்று தூக்கமிழப்பவர்கள் நிறைய பேர் இன்னும் இருக்கிறார்கள். ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். திருப்தி என்பதே இல்லாத ஜீவன்கள். அவர்களில் தலை சிறந்தவன் துரியோதனன். இந்த்ரப்ரஸ்தம் சென்று வந்தது முதல் அவன் எண்ணம் யுதிஷ்டிரன் ராஜசூய யாகத்தில் பெற்ற எண்ணற்ற பொருள் மீதே தான். பாண்டவர்களுடைய செல்வம், பெருமை, புகழ் அவனை சித்ரவதை செய்தது. தன்னிடம் அனேக பொருள் குவிந்திருந்த போதும், அதிகாரமும், மற்றவர்களுக்கில்லாத அளவு பெருஞ் செல்வமும் படைகள், சேனைகள் இந்திரன் போல மரியாதை, பதவி இருந்தும், உலகில் ஒருவருக்கும் கிடைக்காத இன்பம் அனைத்தும் இருந்த போதும், கண்ணற்ற முதியோன் திருதராஷ்டிரன் மகனான துரியோதனன் காய்ந்த நெஞ்சுடன் பொறாமையால் துடித்து என்ன சொல்கிறான் தெரியுமா? ' இந்த பாண்டவர்கள் முடியணிந்து பிரபலமாக, இந்தப் பார் மீது அரசர்களாக யுலவிடும் நாள்வரை, நானும் ஒரு அரசனா? எனது இந்த அஸ்தினாபுரம் ஒரு ராஜ்யமா? அரசர்கள் மத்தியில் அவர்கள் மதிப்பில் நமது ராஜ்யம் குறைந்ததாகவே தான் உணரப்படும். எனது ஆண்மையும் புகழும் ஒரு பொருட்டாகுமோ? உலகமே திரண்டு மெச்சும் அந்த காண்டிபம் என்கிற வில்லுடைய அர்ஜுனன் கண்களிலும் யானை பலம் கொண்ட அந்த மகா பலிஷ்டன் பீமன் மார்பிலும் என்னைப்பற்றி ''சீ நீயும் ஒரு வீரனா?'' என்று இகழ்ச்சியாக எழுதி ஒட்டியது போல் அல்லவா இருக்கிறது? என்னால் மறக்க முடியவில்லையே! யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்திற்கு அப்பப்பா.பாரத நாட்டிலுள்ள முடியரசர்கள் அனைவரும் பார்த்து இவனே எங்களின் தலைவன் என்று ஏற்றுக் கொண்டதை, அதை அங்கீகரித்து அங்கே நாரத முனிவரே மற்ற பெரும் ரிஷிகளோடு வந்து மெச்ச, அந்த யாகத்தை தருமன் நடத்தி பெருமை சேர்த்தான். எல்லாம் அந்த கள்ளன், கிருஷ்ணன், யது குலத்தான் செய்யும் சூழ்ச்சி. தனது வீரத் தம்பியரின் தோள்வலியில் குளிர் காய்ந்து கொண்டுள்ள அந்த வீரமிலாத் தர்மன் தான் உலகத்திலேயே ராஜாதி ராஜன், சக்ரவர்த்தி என்று பிரகடனப் படுத்தினார்களே. என்னால் தாங்க முடியவில்லையே. அடேயப்பா, எவ்வளவு பெரிய கூட்டம் அன்று அங்கே. ஆயிரம் ஆயிரம் முடிவேந்தர்கள், பதினாயிரமாயிரம் சிற்றரசர்கள் எல்லோரும் வரிசை வரிசையாக நின்று கப்பம் கட்டினார்களே தர்மனுக்கு. மலை மலையாக பரிசுகள், ஆடைகள், ஆபரணங்கள், எத்தனை பெண்கள், தேர்கள், எல்லாமே கொஞ்சமாகவா கொடுத்தார்கள்? குடம் குடமாக பொங்கி வழியும் தங்க காசுகள். மாணிக்கம், மரகதம், ரத்னம், முத்துக் கற்கள் வைத்து பூட்டிய பெரிய தேர்களையும் ''இந்தா என் காணிக்கை'' என்று அல்லவோ கொடுத்தார்கள். அப்படியே எல்லாம் என் கண் முன்னாலேயே நிற்கிறதே'' துரியோதனனுக்கு தூக்கம் போய் விட்டது. திரும்ப திரும்ப அவன் கண்ட காட்சிகள் வந்து அவனை துன்புறுத்துகிறது. ''அப்பப்பா, என்ன வெல்லாம் பரிசு அந்த தர்மனுக்கு அன்று. நாலு வகை பொன், ஒரு நாலாயிர வகைப் பணக்குவியலும், வித வித ஆயுதங்கள், வேல், வில், அம்பு, அம்புரா துணிகள், வாள், ஈட்டிகள், கதைகள், எண்ணற்ற வாத்யங்கள், மேள தாளங்கள், இப்படியெல்லாம் கூடவா கொடுப்பார்கள்? 'எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் வேலையில்லா கிழவிகள், முனிவர்கள், போல தனியே அமர்ந்து பழைய காலத்து கிளிக்கதை படிப்பவன் அவன், பொறுமை சாத்வீகம் கர்மா என்று சொல்லிக்கொண்டு வீரமில்லாமல், ஒரு ஓரமாக மதிப்பின்றி கிடந்த அந்த வழ வழா கொழ கொழா ஆசாமி தர்மனுக்கா இந்த சக்ரவர்த்தி பட்டத்தை மன்னாதி மன்னர்கள் கொடுத்தார்கள்? அவன் காலில் விழுந்து வணங்கினார்கள்? மனம் எனக்கு ஆறவில்லையே, பொறுக்கவில்லையே? எல்லாம் அந்த பீமார்ஜுனர்கள் பலத்தால் தானே? உலகே மூக்கில் விரல் வைக்கும் மா பெரும் யாகம்! பேர், புகழ். ராஜாக்கள் அனைவரும் யுதிஷ்டிரன் காலடியில் ! இந்த தருமன் எப்படி இருந்தான் என்று எனக்கு தெரியாதா? அவனுக்கு வந்த வாழ்வைப் பாருங்களேன்! முத்து, பவழம், வைரம், வைடூரியம், எல்லாத்தையும் கொண்டு வந்து காலடியில் கொட்டிவிட்டு பெரிய பெரிய ராஜாக்கள் கைகட்டி ஓரமாக நிற்கிறார்களே! அக்கிரமம் இல்லை இது! இல்லை அவனுடைய அதிர்ஷ்டமா?'' துரியோதனன் பொறாமையால் போடும் பட்டியல் இன்னும் முடியவில்லை. மேலே படியுங்கள். ' மலை நாடுகளின் அரசர்கள் நிறைய மான், தேன், என்னென்னவோ, குதிரை, பன்றி, ஆடு, மாடுகள் கொணர்ந்து தந்தார்களே . அடேயப்பா, எவ்வளவு கலைமான் கொம்புகள்,யானைகளின் தந்தமும், கவரி மான்கள் தோல், கொம்புகள், வித வித அழகிய பதப் படுத்திய தோல் வகைகள், ஒருவேளை இது போதாதோ என்று நிறைய பொன்னும் மணியும் வேறு! இது எங்கேயாவது அடுக்குமா? 'தோல் என்று சொன்னேனே, அதில் தான் எத்தனை நிறம். சிகப்பு, கருப்பு, பொன்னிறம், புலித்தோல், யானையுடையது,. பறவைகள். அந்த திரௌபதிக்கு என்று நிறைய சந்தனம், அகில் கட்டைகள், வாசனை திரவியங்கள். என்னையா இது? வாசனையாக மூக்கை துளைக்கும் ஏலக்காய், கற்பூரம், லவங்கம், ஜாதி, மலையாக அல்லவோ குவித்துவிட்டார்கள்!. விலை சொல்ல முடியாத அழகிய கை வேலைப் பொருள்கள். எல்லா மன்னர்களும் கொடுப்பதையும் கொடுத்து விட்டு கை கட்டி வேறு நின்றார்களே. கண்டது கனவா நிஜமா? ‘’இதை சொல்ல வில்லையே. பளபள வென்று பொன் கவசம், கழல்கள், கடகம், ஹாரம். வெள்ளை, சிகப்பு, நீலம், மயில் கழுத்து, கிளி வயிறு போல பல நிறங்களில், அக்னி மாதிரி சிவப்பில், மேகம் மாதிரி நீலம், கருப்பில், வான வில் போல எத்தனையோ வண்ணங்களில் ஆபரணங்கள். போதுமா? அங்கே நான் பார்த்த யானை குதிரைகளைப் பற்றி ஒரு வார்த்தை. காற்றைவிட வேகமாக செல்பவை. அரேபிய உயரமான ஜாதி வகைகள். ஒட்டகங்கள், யானைகள் மந்தை மந்தையாக. தெற்கு பக்கத்திலிருந்து சாவகம், புஷ்பகம் தீவுகளிலிருந்து சீன தேசம் வரை கூட ராஜாக்கள் வந்து பரிசுகள் கொடுத்தார்களே. 'வண்ண வண்ண நறுமண மாலைகள் பொன், மணிகள் கட்டிய வகை வேறு, வண்ண வண்ண பட்டு பீதாம்பர சேலைகள்,எத்தனை எத்தனை வகை ஆடுகள், பசுக்கள், வண்டி வண்டியாக அரிசி பருப்பு வகை தானியங்கள், கட்டு கட்டாக கரும்பு, வாசனை தைலங்கள். இந்த கேடு கேட்ட தர்மன் யாகத்துக்கு குடம் குடமாக நெய், பால், வெண்ணை, தயிர், அங்கிகள், சால்வைகள், கம்பளங்கள், ஆளுயரத்திற்கு அடுக்கி அடுக்கி அல்லவா வைத்திருந்தார்கள். வேறு சில வேந்தர்கள் அப்பாண்டவர் மனம் கோணாது திருப்தியுற தந்தத்தில் கட்டில்கள், பல்லக்கு, தேர், வாகனங்கள், தந்த பிடி போட்ட வாள்கள், அழகிய சிற்ப வேலைப்பாடுகள், இதெல்லாம் என்னால் கணக்கிட்டு சொல்ல முடியவில்லை. அவ்வளவும் அங்கே பார்த்தேன். நெஞ்சு வெடித்துவிடும்போல இருக்கிறதே. தருமனுக்கா இத்தனையும்? பார்த்த பல் வேறு பொருள்கள், பரிசுகள் அந்த மாபெரும் அரசன் துரியோதனனை தான் ஒரு பரம ஏழை பிச்சைக்காரன் என்று நினைக்க வைத்துவிட்டதே. பொறாமை இயலாமை அவனை வாட்டியது. அவனது ஆண்மை, வீரம் எல்லாம் அழிந்து பரிதாபமாக நின்றான். சக்தியற்ற ஒரு பெண் போல், சிறு பிள்ளை போல தவித்தான் . துரியோதனன் பொறாமை மனதில் விதைத்த கோபத்தில் கொதித்தான். என்ன ஆனாலும் சரி. அந்த பாண்டவர்களை தொலைப்பேன். எப்படி எந்த வழியில் அவர்களுக்கு கெடுதல் செய்வது என்று யோசிக்கும் வேளையில் கடவுள் காட்சி கொடுத்தார் அவனுக்கு. சகுனி ரூபத்தில். பொய் தீமை ஒன்றே உருவான மாமன் அல்லவா? ' மாமா வா. நீ தான் ஒரு வழி காட்டவேண்டும்'' என் மனதில் கொந்தளிப்பதை யாரிடம் சொல்வது என்று நினைக்கும்போது தான் சரியானவனாக நீயே வந்தாய். சொல்கிறேன் கேள்: துரியோதனன் வார்த்தைகளை அடுத்து கேட்போமா? பாஞ்சாலி சபதத்தில் இதுவரை சொன்னதை பாரதியார் தமிழில் படிக்கும்போது எவ்வளவு ஆனந்தம். அதை அனுபவியுங்கள்: 5. துரியோதனன் பொறாமை எண்ணிலாத பொருளின் குவையும் யாங்க ணுஞ்செலுஞ் சக்கர மாண்பும் மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர் வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று வேண்டு மின்பமும் பெற்றவ னேனும் கண்ணி லாத்திரி தாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். ‘பாண்டவர் முடியுயர்த்தே-இந்தப் பார்மிசை யுலவிடு நாள்வரை தான் ஆண்டதொர் அரசா மோ?-எனது ஆண்மையும் புகழுமொர் பொருளா மோ? காண்டகு வில்லுடை யோன்-அந்தக் காளை யருச்சுனன் கண்களி லும மாண்டகு திறல்வீ மன்-தட மார்பிலும் எனதிகழ் வரைந்துள தே! ‘பாரத நாட்டி லுள்ள-முடிப் பார்த்திவர் யார்க்குமொர் பதியென்றே நாரதன் முதன்முனி வோர்-வந்து நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய் தான்; சோரனவ் வெதுகலத் தான்-சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும் வீரமி லாத்தரு மன்-தனை வேந்தர் தம் மதலென விதித்தன வே. ‘ஆயிரம் முடிவேந் தர்-பதி னாயிர மாயிரங் குறுநிலத் தார் மாயிருந் திறைகொணர்ந் தே-அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திட வோ? தூயிழை யாடைக ளும்-மணித் தொடையலும் பொன்னுமொர் தொகைப்படு மோ? சேயிழை மடவா ரும்-பரித் தேர்களுங் கொடுத்தவா சிறுதொகை யோ, ‘ஆணிப் பொற் கலசங்க ளும்-ரவி யன்னநல் வத்தின் மகுடங்களும் மாணிக்கக் குயிவல்க ளும்-பச்சை மரகதத் திரளும்நன் முத்துக்க ளும் பூணிட்ட திருமணி தாம்-பல புதுப்புது வகைகளிற் பொலிவன வும் காணிக்கை யாக்கொணர்ந் தார்;-அந்தக் காட்சியை மறப்பதும் எளிதா மோ? ‘நால்வகைப் பசும்பொன் னும்-ஒரு நாலா யிரவகைப் பணக்குவை யும் வேல்வகை வில்வகை யும்-அம்பு விதங்களும் தூணியும் வாள்வகை யும் சூல்வகை தடிவகை யும்-பல தொனிசெய்யும் பறைகளும் கொணர்ந்துவைத் தே ‘கிழவியர் தபசியர் போல்-பழங் கிளிக்கதை படிப்பவன்,பொறுமையென்றும் பழவினை முடிவென்றும்-சொலிப் பதுங்கிநிற் போன் மறத் தன்மையி லான், வழவழத் தருமனுக்கோ-இந்த மாநில மன்னவர் தலைமைதந் தார்! முழவினைக் கொடிகொண் டான்-புவி முழுதையுந் தனியே குடிகொண் டான். ‘தம்பியர் தோள்வலி யால்-இவன் சக்கர வர்த்தியென் றுயர்ந்தது வும், வெம்பிடு மதகலி யான்-புகழ் வேள்விசெய் தந்நிலை முழக்கிய தும், அம்புவி மன்னரெ லாம்-இவன் ஆணைதம் சிரத்தினில் அணிந்தவ ராய் நம்பரும் பெருஞ்செல் வம்-இவன் நலங்கிளர் சபையினில் மொழிந்தது வும். ‘எப்படிப் பொறுத்திடு வேன்?-இவன் இளமையின் வளமைகள் அறியே னோ? குப்பை கொ லோமுத்தும்-அந்தக் குரைகடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார்; சிப்பியும் பவளங்க ளும்-ஒளி திரண்டவெண் சங்கத்தின் குவியல்க ளும் ஒப்பில்வை டூரிய மும்-கொடுத்து ஒதுஞ்கி நின்றார் இவன் ஒருவனுக் கே. ‘மலைநா டுடையமன் னர்-பல மான்கொணர்ந் தார் புதுத் தேன்கொணர்ந் தார், கொலைநால் வாய்கொணர்ந் தார்-மலைக் குதிரையும் பன்றியும் கொணர்ந்துதந் தார்; கலைமான் கொம்புக ளும்-பெருங் களிறுடைத் தந்தமும் கவரிக ளும் விலையார் தோல்வகை யும்-கொண்டு மேலும்பொன் வைத்தங்கு வணங்கிநின் றார், செந்நிறத் தோல்,கருந் தோல்,-அந்தத் திருவளர் கதலியின் தோலுட னே வெந்நிறப் புலித்தோல் கள்,-பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத் தோல், பன்னிற மயிருடை கள்,-விலை பகரரும் பறவைகள் விலங்கினங் கள், பொன்னிறப் பாஞ்சாலி-மகிழ் பூத்திடும் சந்தனம் அகில்வகை கள். ‘ஏலம் கருப்பூ ரம்-நறும் இலவங்கம் பாக்குநற் சாதி வகை, கோலம் பெறக்கொணர்ந்தே-அவர் கொட்டி நின்றார் கரம் கட்டிநின்றார்; மேலுந் தலத்திலு ளார்-பல வேந்தர் அப்பாண்டவர் விழைந்திட வே ஓலந் தரக்கொணர்ந் தே-வைத்த தொவ்வொன்றும் என்மனத் துறைந்தது வே. ‘மாலைகள் பொன்னும்முத் தும்-மணி வகைகளிற் புனைந்தவும் கொணர்ந்துபெய் தார்; சேலைகள் நூறுவன் னம்-பல சித்திரத் தொழில்வகை சேர்ந்தன வாய், சாலவும் பொன்னிழைத் தே-தெய்வத் தையலர் விழைவன பலர்கொணர்ந் தார், கோலநற் பட்டுக்க ளின்-வகை கூறுவதோ?எண்ணில் ஏறுவ தோ ‘சுழல்களும் கடகங்க ளும்-மணிக் கவசமும் மகுடமும் கணக்கில வாம் நிழற்நிறப் பரிபல வும்-செந் நிறத்தன பலவும்வெண் ணிறம்பல வும் தழல்நிறம் மேக நிறம்-விண்ணில் சாரும் இந்திர வில்லை நேரும் நிறம் அழகிய கிளிவயிற் றின்-வண்ணம் ஆர்ந்தன வாய்ப்பணி சேர்ந்தன வாய். ‘காற்றெனச் செல்வன வாய்‘-இவை கடிதுகைத் திடுந்திறம்மறவ ரொடே, போற்றிய கையின ராய்ப்-பல புரவலர் கொணர்ந்து,அவன் சபைபுகுந் தார். சீற்ற வன்போர் யானை-மன்னர் சேர்த்தவை பலபல மந்தையுண் டாம்; ஆற்றல் மிலேச்சமன் னர்-தொலை அரபியா ஓட்டைகள் கொணர்ந்துதந் தார். ‘தென்றிசைச் சாவக மரம்-பெருந் தீவு தொட்டேவட திசையத னில் நின்றிடும் புகழ்சீ னம்-வரை நேர்ந்திடும் பலபல நாட்டின ரும், வெற்றிகொள் தருமனுக் கே,-அவன் வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண் ணம், நன்றுபல் பொருள் கொணர்ந் தார்-புவி நாயகன் யுதிட்டிரன் எனவுணர்ந் தார். ‘ஆடுகள் சிலர்கொணர்ந் தார்;-பலர் ஆயிர மாயிரம் பசுக்கொணர்ந் தார்; மாடுகள் பூட்டின வாய்ப்-பல வகைப்படு தானியம் சுமந்தன வாய் ஈடுறு வண்டி கொண்டே-பலர் எய்தினர்;கரும்புகள் பல கொணர்ந் தார்; நாடுறு தயில வகை-நறு நானத்தின் பொருள்பலர் கொணர்ந் தார்; “நெய்க்குடம் கொண்டுவந் தார்-மறை நியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே; மொய்க்குமின் கள்வகை கள்-கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுற வே; தைக்குநற் குப்பா யம்.-செம்பொற் சால்வைகள்,போர்வைகள்,கம்பளங் கள், கைக்குமட் டினுந்தா னோ-அவை காண்பவர் விழிகட்கும் அடங்குப வோ? “தந்தத்தில் கட்டில்க ளும்,-நல்ல தந்தத்தின் பல்லக்கும்,வாகன மும், தந்தத்தின் பிடி வாளும்-அந்தத் தந்தத்திலே சிற்பத் தொழில்வகை யும், தந்தத்தி லாதன மும்-பின்னும் தமனிய மணிகளில் இவையனைத் தும் தந்தத்தை கணக்கிட வோ?-முழுத் தரணியின் திருவும் இத் தருமனுக் கோ?” என்றிவ் வாறு பலபல எண்ணி ஏழை யாகி இரங்குத லுற்றான். வன்றி றத்தொரு கல்லெனும் நெஞ்சன், வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான், குன்ற மொன்று குழைவுற் றிளகிக் குழம்பு பட்டழி வெய்திடும் வண்ம் கன்று தலத் துள்ளுறை வெம்மை காய்ந்தெழுந்து வெளிப்படல் போல. நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய், மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம் வண்மை யாவும் மறந்தன னாகிப் பஞ்சை யாமொரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப் பானாய்க் கொஞ்ச நேரத்திற் பாதகத் தோடு கூடி யேஉற வெய்திநின் றானால். யாது நேரினும் எவ்வகை யானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வைத் தீது செய்து மடித்திட எண்ணிச் செய்கை யொன்றறி யான்திகைப் பெய்திச் சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமனத் தான்சர ணெய்தி, ‘ஏது செய்வம்’ எனச்சொல்லி நைந்தான், எண்ணத் துள்ளன யாவும் உரைத்தே. மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மாம கத்தினில் வந்து பொழிந்த சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும், தோற்றங் கண்டும் மதிப்பினைக் கண்டும், என்ன பட்டது தன்னுளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம் முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...