Sunday, June 24, 2018



ஐந்தாம் வேதம்       J.K. SIVAN 

                                                                                             
                          42.  
 தீர்த்த யாத்திரையில் திருமணங்கள் 


ஜனமேஜயன்  திறந்த வாய் மூடாமல்  தனது முன்னோர்கள் பாண்டவர்களின் சரித்திரத்தை வைசம்பாயனர் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்பதை மறக்ககூடாது.  அவன் கேட்பதைத்தான் நாம் அறிகிறோம். 

''பேச்சு வாக்கில் சொல்வதாக இருந்தால்,  சுந்தன், உபசுந்தன் எனும்  ராக்ஷஸ சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து  ரிஷிகளை, தேவர்களை, மற்றவர்களை துன்புறுத்தி வந்தவர்கள்.   ஒரே படுக்கையில் படுத்து, ஒன்றாகவே எதையும் செய்து, அன்போடு ஒரே தட்டில் சாப்பிட்டு  வாழ்ந்தவர்கள் .  இப்படி வாழ்ந்தவர்கள்  ஒருவரை ஒருவர்  கொன்று மாண்டதே, திலோத்தமை  என்ற  ஒரு பெண்  விவகாரத்தால் தான்  என்று  நாரதர்  யுதிஷ்டிரனுக்கு ஒரு கதையும் சொன்னார். 

திரௌபதியோடு பாண்டவ சகோதரர்கள் ஐவரும் ஒற்றுமையாக  வாழ்வதன் அவசியத்தை உணர்த்தினார்.  பாண்டவர்கள்  தங்களுக்குள் ஒரு  தீர்மானத்தைச்   செய்து கொண்டார்கள். பாண்டவர்கள் ஐவரில்  யாராவது ஒருவர்  திரௌபதியுடன் தனிமையில் இருக்கும்போது மற்ற நால்வரும் அங்கே இருக்க கூடாது. மீறி  எவராவது அப்படி த்ரௌபதியோடு ஒருவன் தனித்திருக்கும்போது  காண நேரிட்டால் அந்த  பாபத்திற்கு தோஷத்துக்கு பரிகாரமாக  பன்னிரண்டு வருஷங்கள்  காட்டிற்கு சென்றுவிட வேண்டும்.  இப்படி அவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போது:

ஒரு நாள்  பாண்டவர்கள் அரண்மனை வாசலில் ஒரு கூக்குரல்.

ஒரு பிராமணன்  தனது  பசுக்களை  சில  கள்வர்கள்  அபகரித்து விட்டனர். அவர்களைத் தடுத்து  தனது செல்வத்தை மீட்டுக் கொடுக்கவேண்டும் என்று  கதறினான். அர்ஜுனன் காதில் இது விழுந்தது.  அவனது  ஆயுதங்கள்  ஒரு  அறையில் இருந்தன. அங்கு சென்று அவற்றை எடுத்துவர அவன் செல்லும்போது அங்கே  யுதிஷ்டிரனும் திரௌபதியும்  தனிமையில் பேசிக் கொண்டிருந்ததைக்  காண நேர்ந்தது.  யுதிஷ்டிரனை வணங்கி  வந்த காரணத்தை சொல்லி  ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அர்ஜுனன்  பிராமணனோடு சென்று  கள்வர்களை எதிர்கொண்டு வீழ்த்தி அவர்கள் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டான்.  பிறகு  அரண்மனை திரும்பிய அவன்  யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு  கேட்டு  தீர்மானத்தின் படி பன்னிரண்டு வருஷங்கள்  வனவாசம் மேற்கொள்ள  கிளம்பினான்.

'அர்ஜுனா,   நீ  ஒரு  அரசனுக்குரிய கடமையை செய்ய  முற்படும்போது எங்களைக் காண நேர்ந்ததால்  இதில் தவறில்லை நீ  வனவாசம் மேற்கொள்ளவேண்டாம்'' என்று தடுத்தும் சத்திய பிரமாணம் செய்து அதிலிருந்து பிறழக்கூடது என்று  அர்ஜுனன்  வனவாசத்திற்கு ஆயத்தமானான்.

வனவாசம் மேற்கொண்ட அர்ஜுனன் ஒரு நாள்  கங்கையில்  குளித்து தனது  பிரார்த்தனைகளை செலுத்திக்கொண்டிருந்தபோது  நாகலோக ராணியின் மகள் உலுபி  அவனது அழகில் மயங்கி அவனை  நதியின் அடியில்  நாக லோகத்துக்கு  இழுத்துச் சென்றாள்.  நாகலோகத்தில்  அர்ஜுனனை  மணக்கிறாள்.   சிறிது காலம்  அவளுடன்  தங்கிய   அர்ஜுனன் தனது   யாத்திரை தொடர்ந்து மணிப்பூர் செல்கிறான் அங்கு  சித்ரவாஹனன் என்கிற அரசன் தனது மகள்  சித்ராங்கதாவை  அர்ஜுனனுக்கு மணமுடிக்கிறான்.

அர்ஜுனன் பிறகு  தனது யாத்திரை தொடங்கி  தெற்கு நோக்கி செல்லும்போது ஒரு  நதியில்  சில முதலைகள்  அங்கு வசிக்கும்  ரிஷிகளுக்கு இடையூறாக  இருந்ததை அறிகிறான்.  சௌபத்ரா  என்கிற அந்த  நதியில் அவன்  ஸ்நானம் செய்யும்போது ஒரு முதலை அவனை  இழுக்கிறது. அதோடு போராடி கொன்று அதை கரையில் தூக்கி எறிகிறான்.  அந்த முதலையின் உடலிலிருந்து ஒரு தேவலோக  கன்னிகை தோன்ற  ''நீ யார்  அம்மா ?''   என்று கேட்கிறான்.

''நான் ஒரு அப்சரஸ் என் பெயர்  வர்கா. ஒ  ரு காட்டில்  நானும் என்  தோழிகளும்  ஒரு பிராமண ரிஷி தவம் செய்யும் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தோம். அவர்  தவம் கலைந்ததால் எங்களை  முதலைகளாக  100 ஆண்டுகள் வாடும்படி சபித்தார் . என்னை விடுவித்தது போல் என்  தோழிகளையும் தாங்கள் விடுவிக்கவேண்டும் என்று  அவள்  அர்ஜுனனைக் கேட்டுக்கொள்ள  அவன்  இதர முதலைகளையும் கொன்று அப்சரஸ்கள் அனைவரும் மகிழ்கிறார்கள்.   அர்ஜுனன் அங்கிருந்து கோகர்ணம் செல்கிறான்.

பின்னர்  பிரபாச க்ஷேத்ரம் செல்லும்போது கிருஷ்ணனைச்  சந்திக்கிறான்.  நண்பர்கள் நர நாராயணர்கள் அல்லவா? அர்ஜுனனின் அனுபவங்களை கிருஷ்ணன் ஆவலோடு கேட்டுக்கொண்டு இருவரும் துவாரகை அடைகிறார்கள். போஜர்கள், வ்ருஷ்ணிகள், யாதவர்கள் அனைவரும் அர்ஜுனனை வரவேற்க  பலராமனையும் சாத்யகியையும்,   அங்கு பார்க்கிறான்  அர்ஜுனன். அவர்கள் அனைவரும் கேளிக்கைகளில் மூழ்கி  விருந்தும் உபசாரமுமாக  இருக்கும்போது தான் வசுதேவர் மகள் சுபத்ரை அர்ஜுனன் கண்களில் தென்படுகிறாள். அவளது கொள்ளை அழகு அர்ஜுனனை அடிமை கொள்ள செய்கிறது. அவளை மனைவியாக்கி கொள்ள மனம் விழைகிறது.

குறிப்பறிந்த கிருஷ்ணன்  ''அர்ஜுனா அவள்  என் சகோதரி சுபத்திரை ''

''நண்பா  அவளை  நான்  எப்படி  மணப்பது?''

''அந்த பெண்ணின் மன நிலை தெரியாத போது  அவளுக்கு  நிச்சயிக்கப்பட்டிருக்கும்  ஸ்வயம்வரத்தில் நீ அவளை  அடைவது ஒருவேளை முடியாத காரியமாகலாம்.  க்ஷத்ரியர்கள் தான்  கடத்திச் சென்று கல்யாணம் செய்துகொள்ளலாமே. நீ  அதை வேண்டுமானால் முயற்சிக்கலாம்''  என்று சிரித்துக்கொண்டே சொல்கிறான் கிருஷ்ணன்.

 நடந்ததை எல்லாம்  அர்ஜுனன்  யுதிஷ்டிரனுக்கு ஒற்றன் மூலம் செய்தி அனுப்ப  யுதிஷ்டிரன் சந்தோஷித்து  அர்ஜுனன்  சுபத்ராவை கடத்திக் கல்யாணம் செய்துகொள்ள  அனுமதிக்கிறான்.

கிருஷ்ணனோடு சேர்ந்து பேசி  தீட்டிய  திட்டப்படி  ஒருநாள்  சுபத்ரா  ரைவதக  பர்வதத்தில் வழிபாட்டுக்கு சென்று அங்கு பிராமணர்களுக்கு நிறைய தானங்கள் கொடுத்துவிட்டு  மலையைச்   சுற்றி வரும்போது அவளைக் கடத்தி தனது தேரில் வைத்துக்கொண்டு திரும்புகிறான். அவளுக்கு  காவலாக வந்தவர்கள் அவனை எதிர்த்து  தோற்று  சுபத்ராவை மீட்க முடியாமல்  உயிர் தப்பி  துவாரகை ஓடுகிறார்கள். விஷயம் வெளியே வருகிறது. துவாரகை அரண்மனையில் விவாதம் நடக்கிறது. பலராமன் கூட  அர்ஜுனன் செய்தது தவறு என்று சொல்கிறான். அனைவரும்  போருக்கு ஆயத்தமாகி அர்ஜுனனை வென்று  கொன்று சுபத்ராவை மீட்க வேண்டும் என்று  பேசிக் கொண்டிருக் கையில் பலராமன் கவனம் கிருஷ்ணன் மேல் திரும்புகிறது.  ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்த கிருஷ்ணனை நோக்கி

 ''கிருஷ்ணா  என்ன பேசாமல் இருக்கிறாய்?  அர்ஜூனன்  உன் நண்பன், நீ தான் அவனை இங்கு அழைத்தவன். அவன் செயல் பற்றி அமைதியாக இருக்க காரணம் என்ன?'' என்கிறான் பலராமன்

''அண்ணா,  அர்ஜுனன்  க்ஷத்ரியன்,  குந்தி போஜ வம்சம், சந்தனு வம்சாவளியில் வந்தவன்.  போரில் மகாதேவனைத்  தவிர எவராலும் ஈடு கொடுக்க முடியாத  மா வீரன். ஒரு வேளை  அறியாமல்  சுபத்ரா வேறு ஒருவனை ஸ்வயம்வரத்தில் நிச்சயித்து விடுவாளோ என்று கவலை கொண்டு அவளை வீரத்தால் கவர்ந்தவன்.  இது க்ஷத்ரிய தர்மம்.  உங்களில் யாராலும் அவனை வெல்ல முடியாது. வீணாக உயிரிழக்க வேண்டாமே. அர்ஜுனனை திருமணம் மூலம் நெருங்கிய உறவினனாக செய்துகொள்வது யாதவர்களுக்கு அனுகூலம் என்றும் அறிந்துகொள்ளுங்கள்''  என அறிவுரை கூறுகிறான் கிருஷ்ணன்.  அவ்வாறே முடிவாகி  சுபத்திரை அர்ஜுனன் மனைவியாக ஏற்கப்படுகிறாள்.

அர்ஜுனன்  சுபத்ரையோடு  த்வாரகையில்  ஒரு வருஷம் போல  இருந்துவிட்டு  கிளம்பினான்.  புஷ்கரம் சென்றான். 12 வருஷ வனவாசம் முடிந்தது.  கிருஷ்ணனும் பலராமனும்  அவனோடும்  சுபத்ராவுடனும்  காண்டவப்ரஸ்தம் திரும்புகிறார்கள். காலம் செல்கிறது. அர்ஜுனன் மகனாக  சுபத்ரைக்கு அபிமன்யு பிறக்கிறான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...