Tuesday, June 26, 2018

ARUPATHTHU MOOVAR



அறுபத்துமூவர் J.K. SIVAN சிவனடியார்க்கு சரணாகதி அறுபத்தி மூவர் எனும் சிவனடியார்கள், நாயன்மார்களில் ஒருவர் ஏனாதி நாத நாயனார். மரமேறி, கள் இறக்கி வடிகட்டி விற்கின்ற வகுப்பை சேர்ந்தவர். சாணார் என்று சொல்வார்கள் அந்த காலத்தில். சோழ சாம்ராஜ்யத்தில் கும்பகோணத்திற்கு தென் கிழக்கே அரிசிலாற்றின் கரையில் உள்ள ஒரு சிறிய கிராமம் எயிநனூர். அந்த ஊரில் பிறந்தவர் ஏனாதிநாதர். காவேரி நதி தீரம் என்றால் வளமைக்கு கேட்கவேண்டுமா? எங்கும் பச்சைப் பசேலென்று கண்ணைப் பறிக்கும் குளுமையான பிரதேசம். ஏனாதி நாதர் என்றால் ஏனைய வீரர்களுக்குள் அதிபதி, சிறந்தவர் என்ற ஒரு அர்த்தம். வாள் போரில் நிபுணர். அதில் அதிக ஆர்வம் கொண்டு சிறந்த வீரர்களிடம் பயிற்சி பெற்று எவரும் எதிர்கொள்ளமுடியாத வாள் வீரர் ஆகிவிட்டதால் அரசர்களுக்கு, இளவரசர்களுக்கு எல்லாம் பயிற்சி தரும் அரசாங்க உத்யோகம் கிடைத்து ராஜாவின் அரண்மனை வாள் பயிற்சி ஆசிரியர் மட்டும் அல்ல சோழனின் படையில் ஒரு முக்கிய சேனாதிபதி. ஏனாதி நாதர் ஒரு உண்மையான சிவ பக்தர். பக்திக்கு குலமேது. சூரியன் தவறினாலும் ஏனாதிநாதர் சிவனை தொழாத நாள் கிடையாது. நெற்றியிலும் உடலிலும் பட்டை பட்டையாக விபூதி தான் அவர் ஆடை என்னும்படியாகி இருக்கும். கழுத்தில் ஒரு ருத்ராக்ஷம். எங்காவது யாருடைய நெற்றியில் விபூதியை பார்த்துவிட்டால் போதும் என்ன வேலையானாலும் அதை போட்டுவிட்டு அவரை அணுகி உபசரித்து வணங்கி ஆசி பெறுவார். சிவனடியார்களிடம் அவ்வளவு பிரேமை அவருக்கு. தனது உத்யோகத்தில் கிடைத்த பொருளை எல்லாம் சிவனடியார்களுக்கு உதவி செய்வதில் பெரும்பங்காக தான தர்மம் செய்தவ அவரது புகழும் பெருமையும், வீரமும் ராஜாவின் ஆதரவும் மற்றொரு வீரனான அதி சூரன் என்பவனுக்கு பொறாமையை உண்டாக்கியது ஆச்சர்யமில்லை. அவனிடம் போர் வித்தைகள் பயில ஆள் வருவதில்லை,வருமானமும் குறைந்து விட்டது. ஏனாதி நாதர் இருக்கும் வரை தனக்கு முக்யத்வம் கிடைக்காது என்று அவனுக்கு தூக்கமில்லை. நிறைய வீரர்களோடு போய் ஏனாதி நாதரை யுத்தத்துக்கு அழைத்தான். ஏனாதி நாதர் அவன் தன்னோடு மோதுவதற்கு வந்ததை அறிந்து தயாரானார். அவரோடு நிறைய வீரர்களும் சேர்ந்து கொண்டார்கள். அப்போது அதிசூரன் ஒரு கண்டிஷன் போட்டான். ''நாம் ஆற்றங்கரையில் வீரர்களோடு போர் புரிவோம், யார் வெற்றி பெறுவாரோ அவரே இனி படைத்தலைவராக இருக்கவேண்டும், மற்றவர்களுக்கு வாள் வித்தை கற்பிக்க வேண்டும். மற்றவர் தோற்றவர் அவற்றை விட்டுவிடவேண்டும்.'' ஏனாதி நாதர் ஒப்புக்கொண்டார். சண்டை துவங்கியது. ஏனாதிநாதரின் வீரமும், பலமும் திறமையும் வென்றது. அதிசூரன் வீரர்கள் உயிரிழந்தனர். அவன் உயிர்தப்பி ஓடினான். ஏநாதி நாதரை சிங்கம் என்றும் அதிசூரனை நரி என்றும் சேக்கிழார் பெரியபுராணத்தில் வர்ணிக்கிறார். இரவெல்லாம் தனது தோல்விக்கு வருந்திய அதிசூரன் தந்திரத்தால் ஏனாதிநாதரை வெல்ல திட்டம் வகுத்தான். ஒரு ஆளை தூது அனுப்பி ''நாம் இருவரும் தனியே மோதுவோம் வாள் கேடயம் மட்டும் உபயோகிப்போம். அதில் வெற்றிபெற்றால் நாம் ஒப்புக்கொண்டபடி இனி நடப்போம் '' என்று செய்தி அனுப்பினான். ஏனாதி நாதர் அதற்கும் ஒப்புக்கொண்டு இடமும் நேரமும் குறிக்கப்பட்டது. ஏனாதிநாதர் வாள் கேடயத்துடன் மட்டும் ஏந்தி அதிசூரனை சந்திக்கிறார். சண்டை துவங்குகிறது. முகத்தை முகமூடியால் பாதுகாத்து அதிசூரன் போர் புரிகிறான். அவனால் ஏனாதி நாதரை வெல்லமுடியவில்லை. அவனைக் கொல்லும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்து அவன் திட்டப்படி முகமூடியை திறக்கிறான். நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்திருப்பதை ஏனாதி நாதர் பார்த்து விட்டார். ''அடாடா என்ன தவறு செய்து விட்டேன். அதிசூரன் ஒரு சிவபக்தனாக மாறிவிட்டானா. இது வரை அவன் திருநீறணிந்து கண்டதில்லையே. திருநீறணிந்த ஒரு சிவனடியாரை எப்படி நான் எதிர்ப்பேன். அவனோடு யுத்தம் புரியாமல் வாளையும் கேடயத்தையும் கீழே போட்டுவிடலாம் என்று யோசிக்கிறார். அப்படிச்செய்வதால் அதிசூரன் தன்னை நிராயுதபாணியாக கொன்றதாக ஆகிவிடுமே அந்த பாபம் ஒரு சிவனடியாருக்கு நேரக்கூடாதே என்று வருந்துகிறார். எனவே வெறுமே கையில் வாளையும் கேடயத்தையும் தாங்கி அவனைத் தாக்காமல் நிற்கிறார். மனதால் அவனை வணங்குகிறார். அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளவோ எதிர்க்கவோ இல்லை என உணர்ந்த நரி இந்த சாதகமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சிங்கத்தை வெல்கிறது. அதிசூரன் ஏனாதி நாதர் மீது பாய்ந்து தாக்கி அவரைக் கொன்றுவிடுகிறான். ஒரு சிவபக்தன் கையால் மரணமடைவதை மனப்பூர்வமாக ஏற்கிறார் ஏனாதி நாதர். 13ம் நூற்றாண்டில் தெலுங்கரான பல்குருக்கி சோமநாதா என்ற சிவ பக்தர் பசவபுராணம் தெலுங்கில் எழுதி இருக்கிறார். அதில் இந்த ஏனாதி நாதர் கதை வருகிறது. சற்று மாற்றம். ஏனாதிநாதர் தனது பலததால் வாள் வீரத்தால் பலரை வென்று கப்பம் கட்ட வைக்கிறார். அந்த செல்வத்தை சிவபக்தர்களை ஆதரிக்கிறார். அவரை நேரடியாக எதிர்த்து வெல்லமுடியாத அரசன் சிவபக்தனான வேடம் தரித்த ஒருவனை ஆயுதங்களோடு அனுப்பி அவரோடு மோத அனுப்புகிறான். அவர் அவனை உபசரிக்கிறார். சிவபக்தனான ருத்ராக்ஷம் விபூதி தரித்த ஒருவனை எதிர்ப்பது என்பது கனவிலும் இல்லை என அவன் காலடியில் விழுந்து வணங்குகிறார். அவன் எளிதில் அவரைக் கொல்ல வாளை ஒங்க அது பூமாலையாக மாறி ஏனாதிநாதர் கழுத்தில் விழுகிறது. எல்லாம் சிவன் அருள். வந்தவன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறான். ஏனாதிநாதர் புகழ் உயர்கிறது. இது பெரியபுராணத்தில் வரும் ஏனாதிநாத நாயனார் கதையை விட கொஞ்சம் வேறுபட்டது. . சிவபக்திக்கு முன் தனது உயிர் லக்ஷியம் இல்லை என்ற சிறந்த கோட்பாடு கொண்ட சிறந்த வீரனான, விபூதி ருத்திராக்ஷத்துக்கு பெரு மதிப்பும் பக்தியும் தரும் தனது பக்தன் சிவனடியார்களில் சிறந்த ஏனாதிநாதர் ஒரு அற்பனின் வாளுக்கு தன்னை இரையாக துணிந்த செயல் சிவ பெருமான் அறியமாட்டாரா? ரிஷபாரூடராக ஏனாதி நாத நாயனார் முன் தோன்றி அவருக்கு ஆசியளித்து, அவரைத் தன்னுடன் கைலாயத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஏனாதிநாத நாயனார் கதை திருநீற்றின் மூன்று பட்டைகள் ஒருவன் தனது ஆத்ம முன்னேற்றத்துக்கு இடையூறாக விளங்கும் கர்ம மலம், மாயாமலம் , ஆணவமலத்துக்கு அடிமையாக கூடாது என்பதை அறிவுறுத்தும் குறி. எதுவும் சாஸ்வதம் இல்லை, உடல் முடிவில் சாம்பல் தான் என்று சதா நினைவு படுத்தத் தான் சாம்பலான திருநீறு பூசுவது. இதனால் லோகவாசனை எனும் உலகத்தில் காணும் பொருள்கள் மீதான ஆசை, பற்றுதல், அகம்பாவம் எனும் சுயநலம், ஆணவம், தேகவாசனை, சாஸ்வதமில்லாத அழியும் உடல் மீது பற்று, மாயாவாசனை அநித்யமான உலகவாழ்க்கை மீது பற்றுதல் எல்லாம் விலகவேண்டும் என்பது புரிகிறதா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...