Monday, June 25, 2018

WEDDING RITES


   

டும் டும் டும்  கல்யாணம் - 3    J.K. SIVAN 

கல்யாணம்  என்பது  ஒரு பெரிய கூட்டு வியாபாரமாக போய்விட்டது.  கல்யாண மண்டபங்கள், பூ  விளக்கு அலங்கார வியாபாரிகள், சமையல் கான்டராக்ட், நாதஸ்வரம், வீடியோ, வைதிகர்கள் குழுவோடு ஒட்டுமொத்தமாக    அ முதல் அக்  வரை ஒன்றரை நாளுக்கு  இவ்வளவு என்று பேசி கறந்து விடுகிறார்கள். 
வேறு ஆட்களை கொண்டுவரமுடியாது.  வேறு வழியில்லாத போது  தலையை ஆட்டுவதை விட வேறென்ன செய்யமுடியும். பல லக்ஷங்கள் கழண்டு விடும்.

கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கிறது.  பிள்ளையின் கையில் தேங்காய்கள்  கொடுத்து  அவன்  குழுமியிருக்கும் பெரியோருக்கு  வைதிக சாஸ்திரிகளுக்கு நமஸ்காரம் பண்ணி ஆசிர்வாதம் பெறுவான். அதற்கு அப்புறம்  விநாயகருக்கு  விக்னம் ஒன்றுமில்லாம் கல்யாண காரியங்கள் முடிய பிரார்த்தனை. புத்ரஸந்தானம் சந்ததி வளர பிரார்த்தனை.

மீண்டும் வரப்ரெஷ்னம் - சோமன் சூர்யா காதை சொன்னேனே ஞாபகம் இருக்கிறதா?.  பையன் வந்திருக்கும் பிராமணர்கள்  ரெண்டு மூன்று பேரிடம் ''எனக்கு பொருத்தமான ஒரு பெண்ணை  என் குடும்ப ஸ்திரீயாக  நிச்சயம் பண்ணுங்கள்'' என்று கேட்பது. அந்த பிராமணர்கள் பெண்ணின் தகப்பனாரை  உங்கள் பெண்ணை திருமணம் செய்வித்து குடும்பம் அபிவிருத்தியாகட்டும் என்று மந்திரம்.  பெண்ணின் தகப்பனார்  ''ஆஹா  அப்படியே ஆகட்டும்'' என்பது.எல்லாம் மந்திரங்கள்.  அர்த்தம் புரியாமலே சொல்கிறோம். இதற்கு முன்பாக பெண்வீட்டு வாத்யார், தகப்பனாரை உட்காரவைத்து 
 பெண் பிறந்ததுமுதல் பேர் வைத்தது போன்ற ஜாதகர்மா சடங்கு மந்திரங்கள் சொல்ல  வைத்திருப்பார். அப்புறம் புண்யாஹவாசனம் செயது எல்லாம் பைசுத்தமாக்கப்படும். 

அடுத்தது ''வர'' பூஜை.  மாப்பிள்ளையை  மஹாவிஷ்ணுவாகி பாவித்து பெண்ணின் தகப்பனார் வணங்குவர். வாத்யார் சொல்லித்த்தரும் மந்திரம் திரும்பிச் சொல்லுவார். 
   
அடுத்த கட்டம்:  கன்யா தானம் --
பெண்ணின் அப்பா கிழக்கு பார்த்து உட்கார  மணப்பெண் அவர் மடியில் அமர்கிறாள். எதிரே மாப்பிள்ளை நிற்கிறான். இன்னார்வம்சம் ,கோத்ரம், ரிஷிகள்,  சூத்ரம், எந்த சாகை வேதம், யார் பௌத்ரன், யார் புத்ரன் அவன் பெயர் என்ன என்று சொல்லி அறிமுகம். அதே போல் பெண் வீட்டு விபரங்கள் அறிவிக்கிறார்கள். இதற்கு  ''ப்ரவரம்''  (வம்சாவளி)  என்று பெயர். இந்த மந்திரங்களை பெற்றோர்கள்  பெண்ணை பிள்ளைக்கு தரும் அவரவர் மந்திரமாக சொல்வார்கள். 

பெண்ணின் தகப்பனார் அர்த்தம் தெரியாமல் சொல்லும் மந்திரத்தில் இப்படி வரும்:  "எனக்கு ப்ரம்ம லோகம் அடைய ஆர்வத்தில் என் பெண்ணை சர்வாலங்கார பூஷணியாக நகை நட்டு எல்லாம் போட்டு, மஹா விஷ்ணுவாகிய உங்களுக்கு, என்று பையனைப் பார்த்து , கன்யா தானம் செய்கிறேன். இதற்கு வானுலகில் உள்ள சகல தேவதைகளும், கடவுள்களும், இந்த உலகின் அனைத்து ஜீவராசிகளும் சாக்ஷி. என் பெண்ணை உங்களுக்கு தானம் செய்வதன் மூலம் என் முன்னோர்களுக்கான கடன்களை நீங்கள் செய்வீர்கள் என்பதால் திருப்தியடைந்து உங்களை ஆசிர்வதித்து  மோக்ஷம் செல்வார்கள். என் பெண்ணை தானம் செய்வதன் மூலம் நானும் பரகதி பெறுவேன். வம்ச வருத்தி அடைந்து  லௌகிக,  வைதீக தெய்வ சடங்குகளை செய்து நீங்கள் சுபிக்ஷமாகவாழ்வீர்களாக" . இப்படிச் சொல்லி பெண்ணின் கரங்களை பையன் கரங்களில் சேர்ப்பிக்கிறார்.  இந்த நேரத்தில் மொபைல் போனில்  யாரிடமோ பேசுவதோ, எவரையோ பார்த்து கையாட்டுவதோ, சிரிப்பதோ வேண்டாமே!  அப்படிச் செய்வதெல்லாம் அறியாமையின் கொடுமை.  லக்ஷக்கணக்கில் பணம் செலவழித்து பிரயாசைப்பட்டு எவ்வளவோ நாட்களாக திட்டமிட்டு ஒரு கல்யாணம் பண்ணும்போது அதன் அர்த்தம் தெரிந்துகொண்டு மந்திரங்களை சொல்லும்போது எவ்வளவு பெருமிதமாக இருக்கும்.

பெண்ணின் வலக்கரத்தை பையன் வலக்கரத்தால் பிடித்துக் கொள்கிறான். இருவரும் அமர்ந்து மேற்கொண்டு சடங்குகளை மந்திரம் ஜபித்து தொடர்கிறார்கள். 

ரிக்வேத யஜுர்வேதகாரர்களுக்கு  இந்த கல்யாணத்தில்  ஒரு சடங்கு உண்டு. பெண்ணின் தலையில் சிறிய மரத்தாலான ஒரு நுகத்தடி வைப்பார்கள். அதன் ஒரு துளையில் திருமாங்கல்யத்தை வைத்து  அந்த துளைவழியாக  திருமாங்கல்யத்தில் பட்டு துளித்துளியாக  ஜலம் பெண்ணின் தலையில் சொட்டும். 
இதற்கு ஒரு கதை அஸ்திவாரம். அதை சொல்லட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...