Monday, February 26, 2018

SIRUVACHUR MADHURAKALI AMMAN

சிறுவாச்சூர் மதுரை காளி அம்மன்   J. K. SIVAN

தவறு செய்த பாண்டியன் அரசவையிலேயே மாண்டான். அவன் மனைவியும் அவனை விண்ணுலகில் அடைந்தாள். நிரபராதி கணவனை திருடன் என்று கொன்ற தவறு செய்த பாண்டியன் நெடுஞ்செழியனை தண்டித்ததுடன் அவளது கோபம் தீரவில்லை. அவன் ஊரையே எரித்தாள்.கொஞ்சம் கொஞ்சமாக ஆத்திரம் அடங்கிய நிலையில் திருச்சிவரை நடந்தாள்.அதன் அருகே ஒரு கிராமம் மனத்தை கொஞ்சம் சாந்தபடுத்தியது. அங்கேயே தங்கிவிட்டாள் . சிறுவாச்சூர் இன்னும் அழகாகத்தான் இருக்கிறது. எங்கும் வயல்வெளிகள். பச்சை பசேலென்று. மண் வாசனை தூக்கலாக இருக்கிறது. பெரம்பலூர் ஜில்லாவை சேர்ந்தது.

அந்த ஊரார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு கோவில் கட்டி அங்கே செல்லியம்மனை வணங்கிவந்தார்கள். செல்லி யம்மன் பக்தன் ஒரு தாந்த்ரீகன் அவளது சக்தியை தவறான அழிவுப்பாதையில் உபயோகித்த நேரம் அது. அப்போது தான் கண்ணகி மதுரையிலிருந்து வந்தாள் . ஆம் மேலே நான் சொன்னது மதுரையை எரித்த, பாண்டியனால் தவறாக திருடன் என்று தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோவலன் மனைவி கண்ணகியே தான். அவள் வந்து தங்கிய ஊர் தான் சிறுவாச்சூர். அங்கு அவள் வந்து தங்கியது செல்லியம்மனோடு. அவள் பெயர் அங்கு மதுரை காளி அம்மன். மதுரை வந்த கண்ணகி செல்லியம்மன் தனது சக்தியை ஒரு மந்திரவாதி யினால் இழந்துவருவதை அறிந்து அந்த மாந்த்ரீகனை கொல்கிறாள். செல்லியம்மன் மகிழ்ந்து '' மதுரகாளி, இனி இங்கே நீ என் இடத்தில் இருந்து மக்களை ரக்ஷி. நான் அருகே பெரியசாமி மலைக்கு செல்கிறேன்'' என்று மதுரகாளியிடம் விடை பெற்று செல்கிறாள். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் மதுரகாளி என்பதை அவளது எண்ணற்ற பக்தர்கள் கண்ணை மூடிக்கொண்டு தலையை ஆமாம் என்று ஆட்டுவதில் இருந்து அறியலாம்.

திருச்சியில் இருந்து சென்னை திரும்பும் பாதையில் சிறுவாச்சூரில் மதுரகாளியை தரிசித்து சென்றோம் .இந்த கோயில் வெள்ளியும் திங்களும் தான் திறந்திருக்கும். நான் அங்கே சென்றது ஒரு திங்கள் கிழமை. விடலாமா சந்தர்ப்பத்தை? ,மற்ற ஐந்து நாள் மதுரை காளி செல்லியம்மனோடு பெரியசாமி மலையில் அவளோடு சேர்ந்து இருக்கிறாள்.

நான் சென்ற திங்கட் கிழமை நிறைய பெண்கள் அங்கு மாவிளக்கு இடித்து , மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வணங்கினார்கள். பிரகாரத்தில் அங்கப்ரதக்ஷிணம் வரிசையாக ஆணும் பெண்ணும் உருண்டு வேண்டுதல் கழிக்கிறார்கள். ஆண்களோடு பெண்களும் இங்கே முடி காணிக்கை செலுத்துவதும் வழக்கம். சதாசிவ ப்ரம்மேந்த்ர மஹான் இங்கே ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செயதிருக்கிறார். நான்கு கரங்களோடு நாலு நாலரை அடி உயரத்தில் கருணாம்பிகையாக மதுரை காளி அருள்பாலிக்கிறாள்.

சென்னையை அடுத்த திருமழிசை-திருவள்ளூர் சாலையில் நேமம் ஒரு பிரபலமான பெயர் கொண்ட ஊர். அதை அடுத்து ஒரு தடவை கோடம்பாக்கம் என்ற ஊர் பெயரைப் பார்த்து அதிசயித்தேன் இங்கேயும் ஒரு கோடம்பாக்கமா என்று. அங்கே தான் ஒருவர் என்னை ''இப்படித்தானே மதுரை காளி அம்மன் கோவில் போகவேண்டும்?'' என்று கேட்டார்.

''நாங்களும் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்'' என்று சொன்னதும் அவரும் எங்களோடு சேர்ந்து கொண்டு அருகே ஒரு உள்ளூர் மனிதர் வழிகாட்ட தொடர்ந்தோம். சிறிய பாதை ஒன்றிரெண்டு கி.மீ தூரத்தில் கிராமத்துக்குள் அழைத்து சென்றது.

உள்ளே சென்றால் அழகிய வட சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் ஆலயம் வரும். அங்கு ஒரு மா மனிதர் தன்னை அம்பாளின் கைங்கர்யத்துக்கு ஈடுபடுத்திகொண்டிருக்கிறார். பெயர் சந்திரசேகரர். எவ்வளவு பொருத்தமான பெயர்!. ரயில்வேயில் ரிடையர் ஆனவர் என்று சொன்னதாக ஞாபகம். தனிமனிதனாக அவர் இந்த கோவிலை பராமரித்து வருகிறார். அழகான மதுரை காளி .அந்த ஊருக்கு வட சிறுவாச்சூர் என்று பெயர். அந்த பக்கம் செல்பவர்கள் கோபமில்லாத சாந்தமான மதுரை காளியை தரிசித்து குங்குமம் பெறலாம். வாழ்க்கையில் நெடுஞ்செழியன் மாதிரி தப்பு செய்யமாட்டோம்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...