Saturday, February 24, 2018

MANICKA VACHAGAR 4

மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள்  4  
அரிமர்த்தன  பாண்டியனின் அதிசய குதிரைகள்

நாம்  வாழ்க்கையில் நிறைய கஷ்டம் அனுபவிக்கிறோம் என்று அழுகிறோமே.. மகா பெரிய பக்தர்கள், கடவுளையே நேரில் காண்பவர்கள், கண்டவர்கள்,  பட்ட, அனுபவித்த துன்பங்களுக்கு முன்னால் நமது கஷ்டங்கள் தூசிக்கு சமானம்.
அரசன்  கட்டளைப்படி மணிவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தி பணம் என்னாயிற்று என்று துறுவினார்கள். தன்னலம்  கருதாத  ஞானிகளுக்கே  அந்தக்காலத்தில் இந்த கதி.  இப்போதோ   பல ஆயிரம் கோடி ..மோசடி   பட்டப்பகலில் .. ஈடுபட்டாலும், அவர்களுக்கு  எங்கோ சுகமாக ஆனந்த வாழ்க்கை. அதற்கு உறுதுணையாகல் சட்டம், உச்ச  மேலிடத்து  அதிகார உதவி .... உதவ பலர்...கருப்பு  கோட்டுகள்  காசுக்கு அவர்களை  ஹரிச்சந்திரனாக்கிவிடுகிறதே. ! சே. உலகம் எப்படி மாறிவிட்டது!   சித்தத்தை சிவன் பால் வைத்து மணிவாசகர் அமைதியாக வாய் திறவாமல் துன்பங்களை  ஏற்றார். அவர் மேல் விழுந்த அடிகளை பெருந்துறை ஆத்மநாதன் வாங்கிக்கொண்டதால் மணிவாசகருக்கு எந்த  வலியும் தெரியவில்லை. ஆகவே ராஜாவின் ஆட்கள் சித்திரவதையை அதிகமாக்கினார்கள். பாவம் ஆத்மநாதன் தான் அவ்வளவையும் வாங்கிக்கொண்டான்.

ஆவணி மூலம் வந்தது.  சூரியன் உச்சிக்கு வந்தபோதும் வாசலில் குதிரை சப்தம் எங்கும் கேட்கவில்லை. சுற்றுவட்டாரத்தில் கூட 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தி  பாண்டியனை ருத்ரனாக்கியது.

'வாதவூரரே ,  இன்றைக்கு சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு  குதிரைகள் வராவிட்டால்  உமக்கு முடிவு நேரிடும் '--- ராஜா ஆணையிட்டான்.  எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிடுக்கியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் ''ஹர ஹர மகாதேவா. பெருந்துறை ஈஸா''.   சிவனை மனதால் தஞ்சம் அடைந்தார்.

ஆத்மநாதன் சும்மாவா இருப்பான்.  ''சிவகணங்களா, நீங்கள் தான்  குதிரை வீரர்கள், இதோ இந்தப்பக்கத்தில் உள்ள  காடுகளிலுள்ள  நரிகளை  உயர்ந்த ரக குதிரைகளாக  ஏற்கனவே மாற்றியாகி விட்டது.  அவற்றை மதுரைக்கு  இழுத்துச் செல்லுங்கள்.  சற்று நேரம் கழித்து  நானே குதிரைப் படையின்  காவலனாக, தலைவனாக வந்து பாண்டியனை சந்திக்கிறேன்.''  குதிரை மேல் வந்த சிவனுக்கு  '' பரி மேல் அழகர் ''என்று ஒரு பெயர் இந்த கதையைப் பின்னணியாக கொண்டது.

சூரியன்  மெதுவாக மேலை வானத்திற்கு நகர்ந்த சமயம்  குதிரைகள் கனைக்கும் பெருத்த சப்தம்,  கண்ணுக்கெட்டிய  தூரம் வேகமாக குதிரைகள் புழுதியை வாரி வீசி ஓடிவந்தன. பாண்டியனுக்கு செய்தி போனது.  ஒரே ஆச்சர்யம்.  ''அடாடா நிரபராதியான முதல்  அமைச்சரைத் தண்டித்தேனே'' என வருந்தினான்.

குதிரை அணி மதுரை அரண்மனையை நெருங்கியது.   அணித்தலைவன்  ''பாண்டிய மன்னா, நீ விரும்பிய குதிரைகளை பார்வையிடு.   குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உடல் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை கொடுத்த பணத்திற்கு அதிகமாகவே''  என்று கூறி ஒப்படைத்தான்.    பெரு மதிப்பு பெற்ற பீதாம்பரம் ஒன்றை பாண்டியன் அவனுக்குப் பரிசாக அளித்தான்.    அந்த இளம் வீரனோ சிரித்துக்கொண்டே  பாண்டியன்  அளித்த விலையுயர்ந்த பீதாம்பரத்தை கையிலிருந்த குச்சியால் வாங்கி எடுத்து முதல் குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். ராஜா குதிரைகளை மற்ற குதிரைகளோடு சேர்த்து  கொட்டகையில்  அடைத்தான்.

ராஜாவுக்கு பயங்கரமான ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  அன்றிரவே புதிதாக வந்த அத்தனை குதிரைகளும்  ஏன் எப்படி காட்டு நரிகளாக மாறியது?  அந்தக் கொட்டடியில் இருந்த மற்ற குதிரைகளையும் கடித்துவிட்டு காட்டை நோக்கி ஓடி விட்டனவே. இது என்ன மந்திர மாயம். எல்லாம் வாதவூரன் திட்டமிட்டு செய்தது.  அரிமர்த்தன பாண்டியன் மீண்டும் மிகவும் கோபம் கொள்ளமாட்டானா ? கொடுத்த பொற்காசுகளை திரும்ப ராஜாங்கத்துக்கு கட்டும் வரையில் வாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிற்க வையுங்கள்.''

வாதவூராருக்கு நடந்தது எதுவும் தெரியாது.  விஷயம் அறிந்தபோது  ''எல்லாம் பெருந்துறை ஈசன் செயலே. அவனன்றி ஓரணுவும் அசையாதே'' என்றிருந்தார். 


பாண்டியன் கட்டளைப்படி மணிவாசகரைக் கட்டி, வைகை சுடுமணலில் நிறுத்தினார்கள் . மறுப்பு எதுவுமின்றி அவர் அங்கே நின்று பெருந்துறை பெம்மானே  அருளாளா  என்று மன நிறைவோடு பாடினார்.   சுடுமணல் நிரம்பியிருந்த வைகையில் எங்கிருந்து காலம தப்பி கடுங்கோடையில்  இவ்வளவு பெருவெள்ளம் திடீரென்று கடல் போல நிரம்பியது.. வெள்ளம்....  வெள்ளம்...கணத்திற்கு கணம் .. வெள்ளம்  அதிகரிக்கிறதே ......

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...