Thursday, October 6, 2022

SRI RAGAVENDRA

 பூஜ்யாய  ஸ்ரீ ராகவேந்த்ராய - நங்கநல்லூர் J K  SIVAN 


ஸ்ரீமந்த்ராலய மஹான்

ஒரு இடத்தில் ஒரு இரவுக்கு மேல் தங்காத உண்மையான சந்நியாசி  ஸ்ரீ  ராகவேந்திரர். ஒருநாள் எங்கோ காட்டுப்பாதையில் போய்க் கொண்டிருக்கிறார். மிகவும் களைத்து பசி தாகத்தோடு ஒரு மரத்தடியில் அமர்கிறார். சுற்று வட்டாரத்தில்  வீடு வாசல், மனிதர் எவரும் இல்லை.  

அந்த பாதையருகே இருந்த வயலில் ஒரு ஆடு மேய்ப்பவன் அவரையே  பார்த்துக்கொண்டிருந்தான்.  தன்னை யறியாமல் அவர் மேல் மிகுந்த பக்தி தோன்றி வணங்கினான். குடிப்பதற்கு  அவருக்கு சுத்தமான நீர் ஒரு சொம்பில் கொண்டு வந்து கொடுத்தான்.  சில மரங்களிலிருந்து பழங்கள் கொண்டு வந்து அவர் எதிரே வைத்து கை கட்டி நின்றான்.  என்ன பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை.

''அப்பா, உன் உதவிக்கு மிக்க நன்றி. உனக்கு எப்போது தேவையோ என்னை நினை அப்போது'' என்று மட்டும் சொல்லி அவனை ஆசீர்வதிக்கிறார் ராகவேந்திரர். இது எவ்வளவு பெரிய உதவி அவனுக்கு என்று அப்போது கல்வியறிவில்லாத அந்த  ஆடு மேய்ப்பவன் உணர வாய்ப்பில்லை.

ஆதோனி என்ற பிரதேசத்துக்கு அப்போது நவாபாக இருந்தவன் மசூத் கான்.   அவன் பாரசீகன்.   கன்னடமோ. தெலுங்கோ , தெரியாதவன் . அந்த பிராந்தியத்தில் பேசும் மொழி அவைகள்.

ஒருநாள் மசூத்கான் குதிரையில்   ஏறி  அந்த பக்கத்தில்  பிரயாணம் செய்தபோது மேலே சொன்ன ஆடு மேய்ப்பவனை வழியில் கண்டான். அந்த நேரம் டெல்லி சுல்தானிடமிருந்து ஒரு கட்டளை உள்ளூர் பாஷையில் எழுதப்பட்டு மிக அவசரமாக  நவாப் மசூத் கானிடம்  தரப்பட்டது. அதிலென்ன வாசகம்  எழுதியிருக்கிறான் டில்லி பாதுஷா  என்று அறிய   அதை படித்துச்  சொல்ல  ஆள் தேடிக்கொண்டிருந்த  போது   மேலே சொன்ன ஆடு மேய்ப்பவன் கண்ணில் பட்டான்.   அவனை  மசூத்கான் கூப்பிட்டு  ''இதை உடனே படித்து இதில் என்ன எழுதியிருக்கிறது  என்று சொல்''  என  கட்டளையிட்டான்.   ஆடு மேய்ப்பவன் கல்வி அறிவு இல்லாதவன். எழுத்தறியாதவன். '' நவாபோ உடனே இதைப் படி'' என்கிறானே. என்ன செய்வது? அந்த  ஓலையைத்  திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான் ஆடு மேய்ப்பவன்.

நவாப் மசூத் கானுக்கு  கோபம் சுள்ளென்று வந்தது.

'' இந்த ஆள் வேண்டுமென்றே இதை எனக்கு படித்து சொல்லமாட்டேன் என்கிறான். இவன் படித்துச் சொல்லாவிட்டால் இவன் தலையைச் சீவுங்கள்'' என்று கோபமாக கட்டளையிட்டான்.

அதிர்ஷ்டவசமாக ஆடு மேய்ப்பவனுக்கு, வெகு நாள் முன்பு, ஒரு சந்நியாசி தன்னிடம் ''எப்போது தேவையோ என்னை நினை'' என்று சொன்னாரே என்பது நினைவுக்கு வந்தது. பயத்தில் நடுங்கினான். வியர்த்து கொட்டியது. உயிர் போவது நிச்சயம் என்று தோன்றும்போது தான் பளிச்சென்று ராகவேந்த்ரரை மனதில் கண்மூடி ஒரு வினாடி நினைத்தான். எதிரே நீட்டிய ஓலையை பார்த்தான். அதில் இருந்த எழுத்துக்கள் அவனுக்கு துல்லியமாக தெரிந்தது. படிக்க முடிந்தது. நவாபிடம் அதன் விவரம் புரியும்படியாக சொன்னான்.

அந்த ஓலையில் டில்லி பாதுஷா மசூத் கானை மெச்சி அவனுக்கு சாதகமாக எழுதியிருந்தான்.  எனவே மிக்க மகிழ்ச்சி அந்த அதோனி பிரதேச நவாபுக்கு.

''இந்த நிமிஷம் முதல் இந்த ஆள் தான் ஆதோனிக்கு திவான்'' என்று சந்தோஷத்தில் ஆடு மேய்ப்பவனை அணைத்தான். பெரிய உத்தியோகம் பதவி எல்லாம் ஆடு மேய்ப்பவனுக்கு வழங்கினான் .  

இதன் பிறகு அதே ஆதோனி நவாப் மசூத் கான் ஒருமுறை ராகவேந்திரரை சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் இந்த மனிதனைப்  புகழ்கிறார்கள். இவர் ஒரு வேளை போலி  சாமியாரா, சன்யாசியா என்று சோதிக்க வேண்டும் என்று நினைத்தான் நவாப். அவன் மனதில் ஒரு திட்டம் தீட்டி அதை நிறைவேற்ற கிளம்பினான். பரிவாரங்களோடு.  ராகவேந்திரரை நேரில் கண்டு வணங்கினான்.

''இந்தாருங்கள் பழங்கள்'' என்று ஒரு பாத்திரம்  நிறைய மாமிசங்களை  பூரா நிரப்பி மூடி,  வெள்ளைத் துணியால்  பாத்திரத்தை போர்த்தி  ராகவேந்திரர் முன்பு வைத்தான்.

மூல ராமனை வாயார மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் சொல்லி பாராயணம் செய்து கொண்டிருந்த ராகவேந்திரருக்கு ஒரு கணம் கண் மூடி தியானித்ததும் விஷயம் விளங்கி விட்டது.    கமண்டலத்திலிருந்து சிறிது தீர்த்தம் எடுத்து தன் எதிரே நவாப் வைத்து  மூடியிருந்த   பாத்திரத்தின்  மேல் ''ஸ்ரீ ராமா இது உனக்கே அர்ப்பணம்'' என தெளித்து மூல ராமருக்கு நைவேத்யமாக அர்ப்பணித்து விட்டு மூடியைத் திறந்தார் ராகவேந்திரர்.

பாத்திரம் நிறைய இருந்த மாமிசம் புத்தம் புது பழங்களாக மாறியிருந்தது. துளியும் மாமிச வாசனை அதில் இல்லை. மூடியைத்திறந்ததும் ராகவேந்திரர் மாமிசத்தைப் பார்த்து  திடுக்கிட்டு  துள்ளிக் குதிக்கப் போகிறார் என்று ஆவலாக எதிர்பார்த்த நவாப் அவை அத்தனையும் பழங்களாக மாறியிருந்ததைப்  பார்த்து ஆச்சரியத்தில் துள்ளி குதித்தான். அவனே மாமிசத்தை  பாத்திரத்தில் நிரப்பி தன் கையால் மூடிக்  கொண்டு வந்ததால் வேறு யாரும் பழங்களாக அதில் நிரப்பவில்லை என்று அவனுக்கு தெரியுமே.

இந்த நிகழ்ச்சி, அதிசயம், ராகவேந்திரரின் தூய்மை, நவாப் கொண்டு வந்த மாமிசம் பழமாக  மாறியது போல் அவனும் மாறினான்.  ராகவேந்திர பக்தனாக மாறிவிட்டான். செல்வங்களை வாரி வழங்கினான். ராகவேந்த்ரருக்கு செல்வத்தில் பற்றில்லை.  மாஞ்சாலி  கிராமத்தில்  ஒரு இடத்தில்  மத்வ  மடத்திற்கு ஒரு  காலி  மனை மட்டும் பெற்றுக் கொண்டார். அதுவே இப்போதுள்ள மந்த்ராலயம். மேலும் நிறைய தர ஆசைப்பட்டான் நவாப். ஆனால் துங்கபத்ரா நதிக்கரையில்  அந்த  வறண்ட பூமியே  போதும் என்றார் மகான்.

''குருநாதா, நல்ல இடம் நவாப் தருகிறேன் என்றபோது ஏன் இந்த வறண்ட நிலத்தை கேட்டு பெற்றீர்கள் என்று சில சிஷ்யர்கள் பின்னர் ஒரு சமயம் கேட்டார்கள்.

''இதுவா வறண்ட நிலம், இங்கு தான் ப்ரஹ்லாதன் யாகங்கள் செய்தான்'' என்று அந்த க்ஷேத்திர மகிமையை சொன்னார். மந்த்ராலயத்தில் ராகவேந்திரர் மடம் ஸ்தாபித்தார். அன்ன தானம் துவங்கி வைத்தார். இன்றும் அது தொடர்கிறது.

அருகில் பஞ்சமுகி என்ற ஒரு க்ஷேத்ரம். அங்கே ராகவேந்திரர் தவம் செய்தார். பஞ்ச முகத்தோடு ஹனுமான் அவருக்கு தரிசனம் கொடுத்தான். பக்தர்கள் ராகவேந்திரரை பிரஹலாதனின்   புனர் ஜென்மம், மறு பிறவி , என்று போற்றுவதுண்டு. ப்ரஹலாதனே சங்கு கர்ணன் என்கிற தேவன் அவதாரம் தானே. எனவே மந்தரா
லயத்தில் பிருந்தாவனம் தோன்றியது.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...