Thursday, October 27, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  - #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
செய்ய வேண்டிய கடமை.

ஒரு  காலத்தில்திருவல்லிக்கேணி  நாகப்பய்யர் தெருவிலிருந்து  குடுவாஞ்சேரி  காயரம்பேடு கிராமம் வரை பச்சை கலர்  லேடிஸ் சைக்கிளில்  பறந்தவன், முழு குடும்பம்  4 பேரோடும் அதில் சென்னையில் பல இடங்களில் பயணித்தவன் இப்போது சைக்கிளில்   ஏற  பயப்படுகிறேன். விழுந்துவிடுவேனோ?  இந்த ஜென் மத்தில் இனி  லாகவமாக   வலது காலைத் தூக்கி சைக்கிளின் மறுபுறம் போட முடியாதோ?  ஸ்கூட்டர் பல வருஷங்களாக   ஒட்டி  எங்கும் சர்வ வியாபியாக இருந்தவன் இப்போது அதைத் தொட  யோசிக்கிறேன்.  தெருக்களில் ட்ராபிக்  அதிகரித்துவிட்டது.  ஹெல்மெட் போட்டால் கண் மறைக்கிறதோ?  84ல் பிராண பயம்.  கால் நடையாகிவிட்டேன். ஆனால் மைல் கணக்காக நடக்க முடியாது.

எங்கள் தெருவில்   எதிர் சாரியில்  ரெண்டு  வீடுகள் தள்ளி  ஒரு பழைய  அழுக்கு  அடுக்கு வீடு.  ஆறு ஆறு  குடும்பங்களாக  ரெண்டு வரிசையிலும்  நிறைய  தண்ணீருக்கும் , கரண்டுக்கும்  குப்பை  கூடைகளுக் கும்  பொது   இட  உபயோகத்துக்கும் , வாசலில்  பெருக்குவதற்கும்  விடாது தினமும்  சண்டை  போடும் ஜனங்கள்.  விடியற்காலையிலே   கெட்ட வார்த்தை காதில் தவறாமல்  கேட்கும்.  அதற்கு  அடுத்த  வீட்டு மாடியில்  தான்  பையா குட்டி  அய்யர் வாடகைக்கு  வசித்து வந்தார்.

 நாலரை அடி உயரம்.  முன் வழுக்கை பின்னாலே  MKT   ஜில்பா.  காதில்  கடுக்கன்.   முகத்தில்  கத்தி.   ஏறக் குறைய  பத்து நாளைக்கு ஒரு தடவை உறவாடும் என்பதால்  உப்பும்  மிளகும்  கலந்த  வளர்ச்சி.   அரைக்கை   காலரில்லாத  கதர்  காவி  ஜிப்பா  வயிற்றை இழுத்து பிடித்துக்கொண்டு  இருக்கும்.  தொப்பை பெரிதாயிற்றே. அழுக்கு வேஷ்டி.

காஞ்சி பெரியவா கிட்டே  அமோக  பக்தி.  எப்போதும அவரைப் பற்றியே  பேசுவார்.  ஒருநாள்  காலை அவரோடு தான்  பிரஹலாதன் பற்றி பேசிக்கொண் டிருந்தேன்.

''இதோ பாருங்கோ மாமா. சுவாமி எங்கும் தான் இருக்கிறார்.  எனக்கு தெரியும்'' --  பையா குட்டி.
ஆச்சர்யமாக  பார்த்தேன் அவரை.

''எப்படி  அவ்வளவு கச்சிதமாக  உறுதியாக சொல்ல  முடிகிறது உங்களால். ஒருவேளை சொந்த அனுபவமோ?''

''என் அனுபவம் எதற்கு?  மஹா பெரியவா  அனுபவம் இருந்தாலே  அது  எல்லோருடைய அனுபவம் ஆகுமே.
''பையா குட்டி,  நீங்க நிறைய பெரியவா பத்தி  தெரிஞ்சவர். நான் உங்க கிட்டே தெரிஞ்சிக்கணும். பெரியவா சுவாமி பத்தி என்ன சொல்லியிருக்கிறார். சொல்லுங்கள்''

இது தான்  பெரியவா  வாக்கு:
''வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் – என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு சென்று நமஸ்காரம் செய்கிறோம்.
ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம்செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று வைஷ்ணவர்கள் சொல்வது  போல் கைலாஸத் தில் இருக்கிறார் என்றும்,  சைவப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வைகுண்டம் என்பது பரமபதம்.    ''தத் விஷ்ணோ; பரமம் பதம்'' என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகிவிட்டால்   ‘ பரம பதத்திற்கு ஏகி விட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார், வைகுண்ட பிராப்தி  என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு. ‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் தான்  ‘பெருமாள்’ என  அவர் பெயர்.  புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; ''புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன்'' பெருமாள்.

வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள். மற்றவர்கள்  ஸ்வாமி என்றே சொல் லுகிறார்கள்;   ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடை மை என்று இலக்கணமாகச் சொல்லலாம். 'ஸ்வம்' உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம் தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத் தாக உடையவர்’ என்று அர்த்தம்.

சொந்தமாக  சம்பாதித்தது  தான் ''ஸ்வ ஆர்ஜிதம்''   முன்னோர் மூலம் அடைந்த சொத்து  ''பித்ரு ஆர்ஜிதம்'' அதனால் தான் ''ஏண்டா கோபு  உன் வீடு ஸ்வாயார் ஜிதமா பிதுரார்ஜிதமா''  என்று கேட்கிறோம்.  

''போங்கோ அண்ணா, இது நான் எல் ஐ சிஇலே லோன் போட்டு  அங்கே இங்கே கடன் வாங்கி கட்டினது.  பிதுரார்ஜித சொத்து  மாந்தோப்பு மேலே இருக்கிற கடன் மூவாயிரம்  சொச்சம்  தான். நாலு வட்டி.. அண்ணாவும்,  அக்காவும்  கட்ட மாட்டேங்கிறா. என் தலை எழுத்து.''

மனித அறிவின் எல்லையை மீறி அகண்டமாக (எல்லையற்றவர்களாக) ஆனவர்களே மஹரிஷிகள்.  உலகத்திற்கு அவர்கள் மூலமே வேதமந்திரங்கள்  வந்திருக்கின்றன.

நல்ல எண்ணங்கள் மக்களுக்கு உண்டாகிறது என்றால், அதை உண்டாக்குகின்ற சலனங்கள் (நுண் செயல்கள்) இருக்க வேண்டும்.  அவற்றிற்கான சப்தங்களும் இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட சப்தங்களை   VIBRATIONS   நாம் உண்டாக்க முடியுமானால் உலகத்தில் உள்ள மக்களுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.  அதன் மூலமாக சாதனைகளும், வெற்றி களும், மனசாந்திகளும் பெருகிக்கொண்டே இருக்கும். இதைவிட உலகத்திற்கு பெரிய க்ஷேமம் என்ன இருக்கிறது ?  அப்படி எண்ணுவதற்கு அவர்களை தூண்டுகிற சக்தியை பெற்ற சப்தங்கள் தான் வேதமந்திரங்கள்.  இந்த வேத மந்திரங்களில் விசேஷம் என்னவென்றால்,  அர்த்தம் இல்லாமல், வெறும் சப்தரூபத்திலேயே அவை உலகத்திற்கு க்ஷேமத்தைச் செய்கின்றன.  இது மட்டுமில்லை,  அவற்றிற்கு உயர்ந்த அர்த்தமும் இருக்கிறது.   சகல வேதங்களும், பரம தாத்பர்யமாக, “ஒரே சத்யம் தான் இத்தனையாகவும் தோன்றியிருக்கிறது” என்று சொல்கின்றன.  இது தவிர, அவை சப்தங்களாக இருக்கும்போதே அந்தந்த சப்தத்திற்குறிய தேவதா ரூபங்களாகவும் இருந்து அந்தந்த தேவதையின் சாக்ஷாத்காரத்தையும் அநுக்ரஹத்தையும் நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றன.    அப்படிப்பட்ட வேதங்களை (மந்திரங்களை) உலகத்தில் நிலைத்திருக்கும்படியாகச்   செய்வதில் எல்லோரும் இதயபூர்வமாக முனைந்து செயலில் இறங்க வேண்டும்.  இது இப்போதுள்ள ஜன சமூகம் முழுவதற்கும்,  பிராம் மண ஜாதிக்கு மட்டுமல்ல,  சமஸ்த லோகத்திலும் உள்ள அதனை கோடி ஜீவராசிகளுக்கும் க்ஷேமம் உண்டா வதற்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமை.   தெய்வத்தால் விதிக்கப்பட்ட கடமை.  அதுவே தெய்வீகமான கடமையும் (Divine Duty) ஆகும்.

அப்படிப்பட்ட வேதத்தை அழிய விடக் கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேத ரக்ஷணத்திற்கு  எதாவது ஏற்பாடு பண்ணுமாறு செய்ய வேண்டும் என்று தான் உங்களைக் கேட்க வந்திருக்கின்றேன்.  எனக்காக, உங்களுக்காக என்று வித்யாசம் எதற்கு?  நான், நீங்கள் எல்லாம் ஒன்றுதான்.  என் கார்யம் உங்கள் கார்யம். “வேதத்தை ரக்ஷித்து விட்டால்”அதுதான் எல்லோருக்கும் பரம ஸ்ரேயஸ்ஸை தருகிற ஒரே கார்யம். இதை செய்வதால் க்ஷேமம் உங்களுக்கு.  பெயர் எனக்கு.  –காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா  பரமாச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...