Wednesday, October 5, 2022

VIJAYA DASAMI 2

 விஜய தசமி -2  நங்கநல்லூர்  J K SIVAN 

ஷீர்டி சாய்பாபா
 
விஜயதசமி என்றால்  எண்ணற்ற பாபா பக்தர்களுக்கு  ஒரு மறக்க முடியாத நாள்.  உலகமெங்கும்  
 அன்றும் இன்றும்   பாபாவை நம்பிக்கையோடு  வேண்டி பயன் பெற்ற அதிசய  அபூர்வ சம்பவங்களை சொல்கிறார்கள்.  அவற்றை எல்லாம் எழுத நூறு வருஷமாவது ஆகும்.  முடிவே இல்லாத விஷயம், முற்றுப் புள்ளி வைக்க முடியாதபடி தொடரும். யாராலும் முழுமையாக  சொல்லவோ எழுதவோ முடியாது.  மைலாப்பூரில் வியாழக்கிழமைகளில் தெருவில் ஒரு அங்குலம் இடைவெளி கூட கிடையாது. எண்ணற்ற சாய் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள். பார்க்கவே புளகாங்கிதம். ஏதோ ஒரு மந்திர சக்தி நம்மை பிணைக்கிறது. ஷீர்டி ஒரு புண்ய பூமி.

பாபா  பெரும்பாலும்  வெறும் காலோடு தான் நடந்தார்.   சில சமயம் மட்டும் காலணி அணிவார். நீள குர்தா  முழுக்கை யோடு, முழங்கால் தாண்டி கீழே பாதிக் கால் வரை. தலையை சுற்றி ஒரு துணி. 

ஒரு தரம் ஷீர்டி பக்கம் பெரும் புயல். மக்கள்  பீதியுடன்  ஓடிவந்தனர். பொருள், மாடு கன்று, விளைச்சல் சேதம். பாபாவிடம் முறையிட்டனர். பாபா என்ன செய்தார்  தெரியுமா?    ''ஏ புயலே என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?  நிறுத்து உன் அட்டகாசத்தை''  என்பது போல் கைகளை ஆட்டி  வானத்தை பார்த்து ஏதோ சொன்னார். அடுத்த சில நிமிஷங்களில் புயல் ஓய்ந்ததாம்.  இயற்கையைக் கட்டுப் படுத்தும் சக்தி  பாபா  போன்ற  மகான்களுக்கு உண்டு.

ஒருநாள்  சீடர் மஹல்ஸாபதியை கூப்பிட்டு  ''உன் குடும்பத்தில் ஒரு துரதிர்ஷ்டம் நேரப்போகிறது.ஆனால் அதற்காக கவலைப்படாதே. யாமிருக்க பயமேது ' என்கிறார்   சில நாள் கழித்து அந்த குடும்பத்தில் அனைவருமே நோய் வாய்ப்பட் டனர். அவர்களுக்கு   பல டாக்டர்கள் மருந்து கொடுக்க வந்தபோது பாபா   ''நோய் சில நாள் தான் பாதிக்கப்  போகிறது. உங்கள் மருந்து பயன் தராது .  போங்கள் '' என்கிறார். டாக்டர்கள் போய்விட்டார்கள்.  அப்புறம் பாபா தனது கையில் ஒரு கட்டையோ செங்கல்லோ வைத்துக்கொண்டு தான் இருந்த மசூதியை சுற்றி வந்தார்.

'ஏ   நோயே, என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய். உன்னால் இதை அணுக முடியுமா. ஓடு  இங்கிருந்து'' என்று தன்  கையில் இருந்த கல்லைக்  காட்டுகிறார். அடுத்த ரெண்டே நாளில்  மஹல்ஸாபதி வீட்டில் அனைவரும் குணமாகிறார்கள்.

 1918ல் அக்டோபர் 15  விஜயதசமி. அதற்கு ரெண்டு வருஷங்களுக்கு முன்பே 1916ல் ஷீர்டி சாய் பாபா ''நான் இன்னும் கொஞ்சம் காலத்தில் இதே தேதியில் மறைவேன் '' என ஜாடையாக உணர்த்தினார்.

அன்று சாயந்திரம் பக்தர்கள் சீமோலங்கன் கிராமத்திலிருந்து எல்லை கடந்து ஷீர்டிக்கு திரும்பி வந்தது பற்றி பாபாவுக்கு திடீரென்று ஏனோ ரொம்ப கோபம் வந்துவிட்டது. தலையை சுற்றி அணியும் துணியை எடுத்து விசிறினார். இடுப்பு துணி, நீண்ட குர்தா எல்லாவற்றையும் கழற்றி துண்டு துண்டாக எல்லாவற்றையும் கிழித்து அருகே எப்போதும் எரியும் அக்னி குண்டத்தில் (துனி) போட்டார். கண்கள் சிவக்க நின்றார். ''வாருங்கள் எல்லோரும். நான் இந்துவா முஸ்லிமா என்று சந்தேகம் தானே. வந்து பாருங்கள்'' என்று கத்தினார்.

அருகிலிருந்தோர் நடுங்கினார்கள். பயத்திலும் பக்தியிலும் யாரும் அவர் அருகே வரவில்லை. ஆடையின்றி நின்ற பாபாவின் அருகே மெதுவாக பாகோஜி ஷிண்டே எனும் குஷ்டரோகி பக்தர் சென்றார். தன் மீதிருந்த நீண்ட வஸ்திரத்தை பாபாவின் இடையில் சுற்றினார்.   
''பாபா என்ன ஆயிற்று?'' என்று கேட்டார். இன்று சிமோலங்கன் -- தசரா நாள் என்கிறார்
''ஆமாம் தசரா. இது என்னுடைய சீமோலங்கன் - தசரா என்று தரையில் ஒரு கம்பினால் அடிக்கிறார் பாபா. 

இரவு 11 மணி வரை பாபாவின் கோபம் ஏனோ அடங்கவில்லை. வழக்கமாக நடக்கும் சாவடி ஊர்வலம் அந்த இரவு நடக்குமா என்று பக்தர்கள் பயந்தனர். நடு இரவு 12 மணிக்கு பாபா வழக்கம்போல் சாந்தமாக காணப்பட்டார். வழக்கமாக அணியும் உடைகளை அணிந்தார். சாவடி ஊர்வலம் நடை பெற்றது. கூடவே வந்தார். தசரா தான் உலகைக் கடக்கும் நாள் என்று உணர்த்திய சம்பவம் இது.

ஒரு பக்தர். ராமச்சந்திர பாடில். உடல் நிலை ரொம்ப தீவிரமாக பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். வீட்டில் என்னென்னவோ மருந்து மாயம் பண்ணி பார்த்தும் குணமில்லை. சில நாட்களோ மணிகளோ தான்  அந்த மனிதரின்  பூலோக வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அந்த இரவு பாபா நள்ளிரவில் பாடிலின் படுக்கைக்கு அருகே வந்து நின்றார். பாடில் மெதுவாக எழுந்து பாபாவின் கால்களை பிடித்துக் கொண்டார்.

''இனிமே  எனக்கு நம்பிக்கை இல்ல பாபா. எப்ப கிளம்புவேன் நிச்சயமாக என்று சொல்லுங்க பாபா ''
” நீ எதுக்கு அலட்டிக்கிறே. உனக்கு ஒண்ணும் ஆகப்போறதில்லை. உன் சீட்டு கிழியாது. ஆனா தாதியா பாடில் பத்தி எதுவுமே  சொல்லமுடியாது. அவன் இன்னும் ரெண்டு வருஷத்தில் விஜயதசமி அன்னிக்கு போயிடுவான்''  என்கிறார்  பாபா.
அதற்கு அப்பறம், பாடீலுக்கு குணமாகி சைக்கிள் ஒட்டிக்கொண்டு சென்றார்.

பாபா  சொன்ன ரெண்டு வருஷம் ஓடியது. 1918 விஜயதசமி அன்று தாதியா பாடீலுக்கு உடம்பு சரியில்லாமல் படுத்தார். பாபாவுக்கும் நல்ல ஜுரம். தாதியா பாடில் பாபாவின் பரம பக்தர். அவர் உடல் நிலை மோசமாகிக்கொண்டு வந்தது. நெஞ்சில் பாபாவின் நினைவு மட்டும் இருந்தது அவருக்கு.

பாபா சொன்னது நினைவுக்கு வந்தது. ராமச்சந்திர தாதா, பாலா ஷிம்பி இருவருமே பாபா சொன்னது போல் நடக்கப் போகிறது என்று பயந்தார்கள். தாதியா பாட்டிலின் இறுதிக்கணம் நெருங்கியது. பாபா அவர் அருகே ஜுரத்தோடு வந்தார். அவரைத்  தொட்டு தடவிக்கொடுத்தார். பிறகு பாபா  மெதுவாக  ஜுரத்தோடு போய்  வழக்கமான  இடத்தில் அமர்ந்தார். படுத்தார். அப்போது  புதிதாக ஒரு வாடா அவருக்காக அமைத்துக் கொண்டிருந்தார்கள்.   எனக்கு  இந்த மசூதியிலிருப்பது சரிப்பட வில்லை. என்னைத்  தூக்கிக்கொண்டு போய்  அந்த புதிய தகடி வாடாவில் விடுங்கள் '' என்று சொன்னார். அப்படியே செய்தார்கள் பக்தர்கள். 

அங்கே தான் இன்றும் அவரது சமாதியை தரிசிக்கிறோம். அங்கே முரளிதரனை ஸ்தாபிதம் பண்ண உத்தேசமாக இருந்தது. தாதியா பாடில் பிழைத்தார். பாபா  தான் சொன்ன அதே  நேரத்தில் மறைந்தார்.    

'நான் இந்த சமாதியிலிருந்து உங்களோடு தொடர்பில் இருப்பேன்'' யாமிருக்க பயமேன்'' -- பாபாவின் இந்த  வாக்கு இன்றும் நிறைவேறிக்கொண்டு தானே வருகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...