Saturday, October 22, 2022

PESUM DEIVAM

 தீபாவளி விஷயம் -   #நங்கநல்லூர_J_K_SIVAN

 
விடிந்தால்  தீபாவளி.   ஆஹா  இந்த தீபாவளி விடியற் காலைக்காக  எத்தனை  ஆர்வமாக  எத்தனை வருஷங்கள்  காத்திருந்திருக்கிறேன். காலண்டர்  கிடையாது வீட்டில் அப்போதெல்லாம்.   21  நாள், 20 நாள், 19 நாள்  இன்னும்  இருக்கிறது என்று ஒவ்வொரு  நாளும் கழித்துக்கொண்டே  எதிர்பார்த்திருந்த நாள்.
எங்களுக்கு  பள்ளிக்கூடத்தில் சீருடை என்கிற யூனிபார்ம்  கிடையாது.  தீபாவளிக்கு தீபாவளி  புது ட்ரெஸ். அது தான் பள்ளிக்கூடம் போகும்போது போட்டுக் கொள்ளும் டிராயர் , சட்டை.  இதுவரை  அனுபவித்த  83 தீபாவளிகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி சந்தோஷத்தை கொடுத்தவை
.அதைச் சொல்ல இந்த ஜென்மம் போதாது.

வாசலில் மழை நின்று போயிருக்கிறது.  பால்காரன் வந்து போயாச்சு. காக்கா சத்தமும் காணோம். என் அறையில் நான்  எதிரே  பெரியவா.    எதிரே  மஹா பெரியவா சிரித்துக்கொண்டே  என்னை வேடிக்கை பார்க்கிறார். மெல்லிசாக ஒரு தீபம் சுடர் விடுகிறது.  

''பெரியவா,   தீபாவளி பற்றி நீங்கள் ஏதாவது சொல்
றீளா?

''என்னை எதுக்குடா  கேக்கறே?

'''ஏனா?  உங்க  ஒவ்வொரு வார்த்தையும் லக்ஷம் பெறுமே , அக்ஷர லக்ஷ அறிவுரை அது  என்று எங்களுக்
கு தெரியாதா?  உம்ம்,  சொல்லுங்கோ?

'''சரி சொல்றேன் கேளு'
'''தீபாவளின்னாலே  பூமாதேவியை நினைக்காம இருக்க முடியாது. கங்கை சிவ ஸம்பந்தமா, விஷ்ணு ஸம்பந்தமா என்று  பூமாதேவி நினைக்கலை. சைவ-வைஷ்ணவ வித்யாஸமில்லாமல் ஸமஸ்த ஜனங்களும் புண்ய தீர்த்தங்களுக்குள் அக்ர (முதன்மை) ஸ்தானம் தருவது கங்கைக்குத் தானே? அதனால் தீபாவளி ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நான பலன் ஏற்படவேண்டும் என்று வரம்கேட்டாள் .

ஸாதாரணமாக எந்த க்ஷேத்திரத்தையும்  ஸ்தல புராணங்கள்  ‘இது காசிக்கு ஸமமானது; அல்லது காசியையும் விட உசந்தது’ என்றே சொல்லும்.  இப்படி ஒரு க்ஷேத்திரத்தை   வேறே  எந்த க்ஷேத்திரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத் திரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசிதான் க்ஷேத்ரங்களுக்கு எல்லாம்  ராஜா.  அதேபோல  தான்   மற்ற  புண்ய தீர்த்தங்களைப் பற்றியும்  புராணங்கள்  ‘இது கங்கா மாதிரி துல்யமானது’. ‘கங்கையை விட விசேஷமானது’ என்று சொல்லும்.  ஆகவே  கங்கை   தீர்த்தங்களில் ராஜா  என்று  ‘ப்ரூவ்’ ஆகிறது. 

பஜகோவிந்தம் பாடும்போது நம் ஆசார்யாளே ''பகவத்
கீதா கிஞ்சித் அதீதா கங்கா ஜலலவ கணிகா பீதா
ஸக்ருதபி ஏன முராரி ஸமர்ச்சா க்ரியதே தஸ்ய யமேந சர்ச்சா'' என்கிறாரே . 

‘எவன் கொஞ்சமாவது கீதை  பாராயணம் பண்ணி, துளியாவது கங்கா தீர்த்தத்தைப் பானம் பண்ணி, ஒரு தடவையாவது முராரிக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ அவனுக்கு யமனிடம் வியவஹாரம் ஒன்றுமில்லை – அதாவது யமலோகத்துக்கு, நரகத்துக்குப் போகாமல்,  நேரா  புண்ய லோகத்துக்கு அவன் போகிறான்’ என்று அர்த்தம். “நமனை அஞ்சோம்” என்று அப்பர் ஸ்வாமி களும், “நலியும் நரகும் நைந்த; நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை” என்று நம்மாழ்வாரும் சொன்ன மாதிரி, கங்கா தீர்த்த பானம் பண்ணினவனிடம் யமனுக்கு ‘ஜூரிஸ்டிக்‌ஷன்’ (ஆணையைல்லை) இல்லை என்று பகவத்பாதாள் சொல்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் என்ன ஆச்சரியம்என்றால்  இதில் சொல்லியிருக்கிற கீதை, கங்கை, முராரி, யமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி ஸம்பந்தம் இருப்பதுதான்!

கீதையை நான் தீபாவளியின் தம்பி என்று சொல்றது வழக்கம். ஏன்? தீபாவளிக்கு என்ன சிறப்பு?

சற்றும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில், அதாவது மஹத்தான புத்ர சோகத்தின் மத்தியில் இப்படிப்பட்ட கோலாஹலமான பண்டிகையை ஒரு  அம்மாக்காரி  உருவாக்கிக் கொடுத்ததாலே  தீபாவளி  எல்லா பண்டிகைகளுக்கும்  ராஜா. 

இதே மாதிரிதான், எத்தனை மதப் புஸ்தகங்கள், தத்வ சாஸ்திரங்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் சிகரமாக இருக்கிறது ‘கீதை’.   கீதையும் தீபாவளி மாதிரியேதான்.   கொஞ்சமும் எதிர்பார்க்க முடியாத சந்தர்ப்பத்தில் பிறந்த தியாக சக்தியிலிருந்து தோன்றியது. ஸாதாரண
மாகத் தத்வோபதேசம் என்றால் விச்ராந்தியான ஆசிரமத்திலே வயஸான குரு, வயஸில் சின்னவனான சிஷ்யனுக்குச் செய்வதாக இருக்கும்.  ஆனால் இந்த பகவத்கீதையோ நேர்மாறாக யுத்த பூமியில், கோரமான ரணகளத்தில் பிறந்தது. அர்ஜுனன் தனக்கு ஸம வயஸினனான கிருஷ்ணரிடம், தான் யஜமானனா யிருந்து, அவர் வண்டிக்காரனாகத் தேரோட்டுகிறபோது பெற்றுக் கொண்ட உபதேசம். அடுத்த க்ஷணமே தன் தலை போனாலும் போகக் கூடும் என்கிற ஆபத்தான ஸந்தர்ப்பத்தில் பிராணனை விட ஸத்யத்தைத் தெரிந்து கொள்வதுதான் பெரிசு என்ற தியாக புத்தியுடன் அர்ஜுனன் பகவானிடம், ‘சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்’ - 
 ”சிஷ்யனாக நான் உன்னிடம் சரணாகதி பண்ணி விட்டேன். எனக்கு உபதேச ரூபமாக உத்தரவு போடு” என்று நமஸ்காரம் செய்த போது கீதை பிறந்தது. இதனால்தான்  பண்டிகைகளில் தீபாவளி மாதிரி புஸ்தகங்களில் கீதை உசத்தியா  உச்சியிலே  இருக்கு.  தீபாவளி, கீதை இரண்டையும் கிருஷ்ணரே தான் கொடுத்திருக்கிறார்.

கங்கைக்கும் தீபாவளிக்கும் உள்ள ‘கனெக்‌ஷன்’ இத்த னை நாழி பார்த்தோம்.

மூணாவதாக  முராரியை ஏன்  அர்ச்சிக்கணும்  என்கிற விஷயம்.  பகவானுக்கு எத்தனையோ  பேர்  இருக்கு.  ‘முராரி ஸமர்ச்சா’ ன்னு  ஏன் சொல்றார்.  நரகாஸுரனின் ஸகா  முரன்.  முரனைக் கொன்றதால்  முராரி ஆனார் கிருஷ்ணன். 

கடைசியில் ஆசார்யாள் யமனைப் பற்றிச் சொல்கிறார். நரகன் என்றவுடனேயே நரகம் ஞாபகத்துக்கு வருது இல்லையா?  யமதர்மராஜா ராஜ்ஜியம் அது.

 தீபாவளியன்று யமனுக்குத் தர்ப்பணம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. வட தேசத்தில் தீபாவளிக்கு முதல் நாள் ‘யம தீபம்’ என்றே போடுகிறார்கள்.

போதுமா  தீபாவளி விஷயம்.  போய்ட்டு அப்புறம் வா.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...