Saturday, October 8, 2022

DAMODHARA ASHTAKAM

 தாமோதர அஷ்டகம் - நங்கநல்லூர் J K SIVAN


பத்ம புராணத்தில் வேத வியாசர் எழுதி, நாரதரிடமும், சௌனக ரிஷியிடமும் சத்யவ்ரத முனி சம்பாஷிப் பதாக வரும் தாமோதர அஷ்டகம் கீழே தந்துள்ளேன். ஹரி பக்தி விலாசம் மோக்ஷம் கிடைக்க இது வழி என்கிறது. (Shri Hari-bhakti-vilasa 2.16.198)

नमामीश्वरं सच्चिदानंदरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानं
यशोदाभियोलूखलाद्धावमानं परामृष्टमत्यं ततो द्रुत्य गोप्या ॥ १॥

namamishvaram sac-cid-ananda-rupam lasat-kundalam gokule bhrajamanam
Yashoda-bhiyolukhalad dhavamanam paramrishtam atyantato drutya gopya

நமாமீஶ்வரம் ஸச்சிதா³நந்த³ரூபம் லஸத்குண்ட³லம் கோ³குலே ப்⁴ராஜமாநம் ।
யஶோதா³பி⁴யோலூக²லாத்³தா⁴வமாநம் பராம்ருஷ்டமத்யந்ததோ த்³ருத்ய கோ³ப்யா ॥ 1 ॥

''ப்ரபஞ்ச நாயகா, கோகுல பாலகா, உன் காதில் மகர குண்டலம் பளிச் பளிச் என்று இப்படியும் அப்படியும் ஆடுகிறதே, நீயே சத் சித் ஆனந்த மயமானவன், கோபியர் அசந்த வேளையில் எப்படியோ திட்டமிட்டு நண்பர்களோடு மேலே உறியில் கட்டி தொங்கும் வெண்ணை சட்டியை உடைத்து, வெண்ணெய் திருடியவா, அம்மா யசோதை பார்த்துவிட்டாளே என்று உரல் பின்னால் ஓடி அவளிடம் வகையாக கையும் களவுமாக பிடிபட்டவனே, தாமோதரா, பரம ப்ரபு, உனக்கு எண்ணற்ற நமஸ்காரங்கள்.

रुदन्तं मुहुर्नेत्रयुग्मं मृजन्तम् कराम्भोज-युग्मेन सातङ्क-नेत्रम्
मुहुः श्वास-कम्प-त्रिरेखाङ्क-कण्ठ स्थित-ग्रैवं दामोदरं भक्ति-बद्धम् ॥ २॥

rudantam muhur netra-yugmam mrjantam karambhoja-yugmena satanka-netram
muhu shvasa-kampa-trirekhanka-kantha- sthita-graivam damodaram bhakti-baddham

ருத³ந்தம் முஹுர்நேத்ரயுக்³மம் ம்ருஜந்தம் கராம்போ⁴ஜயுக்³மேந ஸாதங்கநேத்ரம் ।
முஹு꞉ ஶ்வாஸகம்பத்ரிரேகா²ங்ககண்ட²- ஸ்தி²தக்³ரைவ-தா³மோத³ரம் ப⁴க்திப³த்³த⁴ம் ॥ 2 ॥

' இதோ சத்தம் கேட்டு யசோதை வந்துவிட்டாள் . கையில் கம்பு, கண்ணில் கோபம்.
'ஐயோ, அம்மா யசோதையின் கை பிரம்பு ஒங்குகிறதே, முதுகில் அடி சரியாக விழுமே என்று கண்களில் வெள்ளமாக நீர் கசிய, கலங்கி அழுது, கண்ணில் கருப்பு மை கரைந்து கன்னமெல்லாம் கருப்பாக, கண்ணைக் கசக்கிக் கொண்டு, அவை சிவந்து, சிறிய இரு தாமரைக் கரங்களும் சிவக்க, கண்களில் பயமும் கண்ணீரும் நிரம்பி, பயத்தினால் மார்பு பட பட வென்று துடிக்க, அதனால் கழுத்தில் தொங்கிய மணியாரங்கள், மேலும் கீழும் குலுங்க காட்சி தந்த தெய்வமே, தாமோதரா, உன் இடையில் தாம்புக் கயிற்றோடு நின்றவனே, நீ கட்டுண்டது உன் அன்புத் தாயின் மீது நீ கொண்ட கருணையாலும் பாசத்தாலும் அளவற்ற அன்பினாலும் அல்லவா? எங்கள் மனம் நிறைந்த நமஸ்காரங்களை ஏற்றுக்கொள்..


इतीदृक् स्वलीलाभिरानंद कुण्डे स्व-घोषं निमज्जन्तम् आख्यापयन्तम्
तदीयेशितज्ञेषु भक्तिर्जितत्वम पुनः प्रेमतस्तं शतावृत्ति वन्दे ॥ ३॥

itidrk sva-lilabhir ananda-kunde sva-ghoisham nimajjantam akhyapayantam
tadiyeishita-gyeishu bhaktair jitatvam puna prematas tam shatavrtti vande

இதீத்³ருக் ஸ்வலீலாபி⁴ராநந்த³குண்டே³ ஸ்வகோ⁴ஷம் நிமஜ்ஜந்தமாக்²யாபயந்தம் ।
ததீ³யேஷிதாஜ்ஞேஷு ப⁴க்தைர்ஜிதத்வம் புந꞉ ப்ரேமதஸ்தம் ஶதாவ்ருத்தி வந்தே³ ॥ 3 ॥

கிருஷ்ணா, தாமோதரா, உன் பால்ய சேஷ்டிதங் களால் வ்ரஜ பூமி மக்கள் எல்லோரையும், பிருந்தாவன ஜீவன்கள் அனைத்தையும், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தவனே, உன்னை எவரால் வெல்ல முடியும், கயிறால் கட்ட முடியும்? உன் பக்தர்களின் அன்பே, உன் தாய்ப்பாசம் உன்னைக் கட்ட முடியும் என்று காட்டியவனே, பரமாத்மா, அதிசய உருவே, ஆனந்த ரூபமே, பக்தியின் உச்சமே, நூறு நூறு முறை உன்னை விழுந்து வணங்குகிறோம் தாமோதரா. ரட்சிப்பாய்..

वरं देव! मोक्षं न मोक्षावधिं वा न चान्यं वृणेऽहं वरेशादपीह
इदं ते वपुर्नाथ गोपाल बालं सदा मे मनस्याविरास्तां किमन्यैः ॥ ४॥

varam deva mokisham na mokishavadhim va na canyam Vrine ’ham vareishad apiha
idam te vapur natha gopala-balam sada me manasy avirastam kim anyai

வரம் தே³வ மோக்ஷம் ந மோக்ஷாவதி⁴ம் வா ந சாந்யம் வ்ருணே(அ)ஹம் வரேஷாத³பீஹ ।
இத³ம் தே வபுர்நாத² கோ³பாலபா³லம் ஸதா³ மே மநஸ்யாவிராஸ்தாம் கிமந்யை꞉ ॥ 4 ॥

''தாமோதரா, மண்ணரசும் விண்ணரசும் யான் வேண்டேன், இந்திரலோகம் ஆளும் அச்சுவை வேண்டேன். வைகுண்டத்தில் எனக்கு இடம் வேண்டாம். நான் எந்த வரமும் நான் கேட்கவில்லை, மோக்ஷமே கூட வேண்டாம், எனக்கு வேண்டியதெல்லாம் உன்னுடைய இந்த சிறிய பால கோபாலனாக பிருந்தாவனத்தில் நந்தகுமாரனாக நீ அளித்த இந்த தரிசனம் ஒன்றே என்றும் அழியாமல் என் நெஞ்சில் , இதயத்தில் பதிந்து பளிச்சிட வேண்டும் என்ற ஒன்றே தான். இதைத் தவிர வேறே எந்த சிறந்த வரம் இருக்கிறது கேட்பதற்கு?

इदं ते मुखाम्भोजम् अत्यन्त-नीलैः वृतं कुन्तलैः स्निग्ध-रक्तैश्च गोप्या
मुहुश्चुम्बितं बिम्बरक्ताधरं मे मनस्याविरास्तामलं लक्षलाभैः ॥ ५॥

idam te mukhambhojam atyanta-nilair vrtam kuntalai snigdha-raktaish ca gopya
muhush cumbitam bimba-raktadharam me manasy avirastam alam lakisha-labhai

இத³ம் தே முகா²ம்போ⁴ஜமத்யந்தநீலைர்- வ்ருதம் குந்தலை꞉ ஸ்நிக்³த⁴-ரக்தைஶ்ச கோ³ப்யா ।
முஹுஶ்சும்பி³தம் பி³ம்ப³ரக்தத⁴ரம் மே மநஸ்யாவிராஸ்தாம் அலம் லக்ஷலாபை⁴꞉ ॥ 5 ॥

''தாமோதரா, எனக்கு பிடித்த ஒரு காட்சி சொல்லட்டுமா? உன்னுடைய அழகிய கறுப்பான தாமரை மலர் முகத்தின் இரு கன்னங்களிலும் சுற்றிலும் சுருள் சுருளாக, அழகிய, கரிய குழல்கள் சூழ்ந்து கரு மேகம் வானத்தை மறைப்பது போல் மறைக்கிறதே. அவ்வபபோது நடு நடுவே மேகங்களுக்கு இடையே வானம் தெரிவது போல், உன் தாய் யசோதை குழல் மறைக்கும் கன்னங்களில் குழலை ஒதுக்கி விட்டு மாற்றி மாற்றி இரு கன்னங்களிலும் முத்தமாரி பொழிந்து அதனால் வேறு சிவந்த உன் கன்னங்கள், சிவந்த தேன் சிந்தும் இதழ்கள், --ஆஹா மேலே சொல்ல முடியவில்லையே , கை கம்பியூட்டரில் நகர மாட்டேன் என்கிறதே!!. என்ன திவ்ய தரிசனம் இது1 என் இதயத்தில் அச்சாக பதிந்துவிட்டதே. லக்ஷக்கணக்கான எந்த லாபமும் இதற்கு சமமாகுமா? அப்படி இருந்தாலும் இதைவிட அது எனக்கு தேவையே இல்லை.

नमो देव दामोदरानन्त विष्णो प्रभो दुःख-जालाब्धि-मग्नम्
कृपा-दृष्टि-वृष्ट्याति-दीनं बतानु गृहाणेष मामज्ञमेध्यक्षिदृश्यः ॥ ६॥

namo deva damodarananta viishno prasida prabho dukha-jalabdhi-magnam
krpa-drishti-vrishtyati-dinam batanu grhaneisha mam agyam edhy akishi-drshy

நமோ தே³வ தா³மோத³ராநந்த விஷ்ணோ ப்ரஸீத³ ப்ரபோ⁴ து³꞉க²ஜாலாப்³தி⁴மக்³நம் ।
க்ருபாத்³ருஷ்டிவ்ருஷ்ட்யாதிதீ³நம் ப³தாநு க்³ருஹாணேஶ மாம் அஜ்ஞமேத்⁴யக்ஷித்³ருஶ்ய꞉ ॥ 6 ॥


''ஓ தாமோதரா, கோடி நமஸ்காரங்கள் உனக்கு. ஆனந்தா, அலகிலா விளையாட்டுடைய மஹா விஷ்ணுவே, கிருஷ்ணா, தேவாதி தேவா, பிரபோ, எனக்கு உன் கருணாகடாக்ஷம் கொடு. தயை புரி . உன் கடைக்கண் பார்வை ஒன்றே அது போதுமே. இந்த பாபியை, அஞ்ஞானத்தில் இருந்து, உலக சம்சார துக்க சாகரத்தி லிருந்து மீட்க என் கண் முன்னே தோன்றிடுவாய்..

कुबेरात्मजौ बद्ध-मूर्त्यैव यद्वत् त्वया मोचितौ भक्ति-भाजौ कृतौ च
तथा प्रेम-भक्तिं स्वकां मे प्रयच्छ न मोक्षे ग्रहो मेऽस्ति दामोदरेह ॥ ७॥

kuveratmajau baddha-murtyaiva yadvat vaya mocitau bhakti-bhajau krtau ca
tatha prema-bhaktim svakam me prayaccha na mokishe graho me ‘sti damodareha

குவேராத்மஜௌ ப³த்³த⁴மூர்த்யைவ யத்³வத் த்வயா மோசிதௌ ப⁴க்திபா⁴ஜௌ க்ருதௌ ச ।
ததா² ப்ரேமப⁴க்திம் ஸ்வகம் மே ப்ரயச்ச² ந மோக்ஷே க்³ரஹோ மே(அ)ஸ்தி தா³மோத³ரேஹ ॥ 7 ॥ ॥

நீ ஒன்றும் காரணமில்லாமல் கட்டுண்ட மாயன் அல்ல. குபேரனின் புத்ரர்கள் மணிக்ரீவன் , நள கூபரன் ஆகியோருக்கு சாப விமோசனம் தருவதற்காக, கட்டுண்டவன். வ்ரஜபூமியில், பிருந்தாவனத்தில் மர உரலில் கயிற்றால் கட்டுண்ட சிறுவன். சம்சார பந்தங்களிலும் பாபங்களில் கட்டுண்ட என்னையும் விடுவித்து உன் என்னைக் கட்டித்தான் போடவேண்டும் என்றால் உன் மேல் ப்ரேம பக்தி கயிறால் கட்டிப்போடேன். வேறொன்றும் வேண்டேன் மாமாயனே.

नमस्तेऽस्तु दाम्ने स्फुरद्-दीप्ति-धाम्ने त्वदीयोदरायाथ विश्वस्य धाम्ने
नमो राधिकायै त्वदीय-प्रियायै नमोऽनन्त-लीलाय देवाय तुभ्यम् ॥ ८॥

namas te ’stu damne sphurad-dipti-dhamne tvadiyodarayatha vishvasya dhamne
namo radhikayai tvadiya-priyayai namo ’nanta-lilaya devaya tubhyam

நமஸ்தே(அ)ஸ்து தா³ம்நே ஸ்பு²ரத்³தீ³ப்திதா⁴ம்நே த்வதீ³யோத³ராயாத² விஶ்வஸ்ய தா⁴ம்நே ।
நமோ ராதி⁴காயை த்வதீ³யப்ரியாயை நமோ(அ)நந்தலீலாய தே³வாய துப்⁴யம் ॥ 8 ॥

ஒ தாமோதரா, என் முதல் வணக்கம் உனக்கல்ல. உன் அழகிய சிறு வயிற்றை இறுகக் கட்டிய அந்த கயிற்றுக்கு. அது சிறு வயிறா?? சர்வ பிரபஞ்சமே தன்னுள் அடக்கியதல்லவா. சர்வ சிருஷ்டி கர்த்தா பிரம்மாவே தாமரைக்கொடியில் தோன்றிய நாபி அல்லவா? அதனால் தானே நீ பத்மநாபன். அதை கட்டிய கயிறு என்னே பாக்கியம் செய்தது? எனவே தான் அதற்கு முதல் நமஸ்காரம். அடுத்தது உன் அன்னை யசோதைக்கு, என்ன தவம் செய்தவள் அவள்!. அடுத்தது அந்த ராதா ராணிக்கு. அவள் உன்னைக் கண்ணாலேயே கட்டிப் போட்டவள் அல்லவா. அதற்காக. பிறகு பிறகு, உனக்கு. நீ என்னைக் கட்டிப் போட்டவன் அல்லவா?

தாமோதர மாதத்தில் பக்தி சிரத்தையுடன் விளக்கேற்றி ஸ்ரீ பாலகிருஷ்ணனையும், பால பருவ பரமாத்மாவின் திரு லீலா வினோதங்களையும் உள்ளம் உருகி பாடுவதால் நிச்சயம் நற்கதி கிடைக்கும். உலகெங்கும் வைஷ்ணவ பக்தர்கள் இம்மாதத்தில் தாமோதர அஷ்டகம் மற்றும் கஜேந்திர மோக்ஷம் ஸ்தோத்ரங்களை பாடுவது வழக்கமாக உள்ளது.

“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே”

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...