Tuesday, October 25, 2022

krishna story

 


நான்  வந்தேனே.....நங்கநல்லூர்  J.K. SIVAN

 பரந்தாமன் என்ற கிருஷ்ண பக்தன் பேசுகிறான்: கேட்போம்: 

பல மாதங்களாக  ஆவலுடன், ஆர்வமுடன் காத்திருந்த தீபாவளி இதோ வந்து ஒரே  ராத்திரி, ரெண்டே நாளில் வேகமாக ஓடிப்போய்விட்டது. போகும்போது வழக்கம்போல்  பலத்த  வெடி, பளிச்சென்று சீறி  வானத்தில் சென்று பட்டென்று வெடித்து பல வர்ணப்பூக்களாக சிதறும்  வானங்கள், நடுநடுவே  மழையோடு,தெருவெங்கும் குப்பையோடும்  சென்று விட்டது.  ஆனாலும்  தீபாவளியின் மகிழ்ச்சியும் , குதூகலத்தோடும் தான் இருக்கிறது. இருக்கும் இன்னும்  சில  நாள்  இப்படி.   தீபாவளி அன்று நடந்த ஒரு சம்பவத்தை நினைக்கிறேன்.

விடிகாலை வெந்நீரில் தான் எனக்கு கங்கா ஸ்னானம்.  ஒரு புது வேஷ்டி துண்டு. நிறைய  டெலிபோன் கால்.  பாதிக்கு மேல் புது குரல்கள். நேரில் பார்க்காத மனதில் அன்பு நிறைந்த  முகநூல்  வாட்ஸாப்ப் நண்பர்களின் வாழ்த்து.  எங்கேயோ இருக்கும் சிலர் என்னை நினைத்ததை உணரும்போது கிருஷ்ணா,உன்னால் சேர்ந்த நண்பர்கள் இவர்கள் என்று அவனுக்கு மனதார  நன்றி தெரிவித்தேன்.

எண்பத்து மூன்று  தீபாவளி பார்த்தாச்சு. (ஓஹோ  என்  வயதோ?) கிருஷ்ணா உன்னை மட்டும் தான் இன்னும் பார்க்கலே.  படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே? ''

எனக்கு கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணா கிருஷ்ணா என்று தான் வாய் எந்த பையனைப் பார்த்தாலும் கூப்பிடும்.    என்னை  எல்லோரும் என்னை கூப்பிடுவதே  ''கிருஷ்ணா மாமா''.  வீட்டில் ஒவ்வொரு கிருஷ்ணன் பொம்மைக்கும், படத்திற்கும்,  ஏதாவது ஒரு பெயர் உண்டு.  சிலது ஆசையோடு இப்படி கூட  இருக்கும்:  கருப்பண்ணன், குண்டு கோபு , கிட்டு, சுட்டி, கள்ளப்பயல், ப்ளூட்டுக்காரன், வெண்ணை திருடன், புளுகாண்டி என்னும் எத்தனையோ செல்லப்  பெயர்கள்.

கிருஷ்ணன் பேசுவானோ? பதில் சொல்வானோ? ஹுஹும் அதெல்லாம் சும்மா என்று தானே என் காது கேட்க பலர்  சொல்கிறார்கள்.  சொல்லிட்டு போகட்டுமே. ஆஹா,  அந்தப்பயல் கேட்டதெல்லாம் கொடுப்பவன் மட்டுமில்லே. கேட்டதுக்கு பதில் கொடுப்பவனும் கூட ''.

''கிருஷ்ணா உன்னை நான் பார்க்கணும். படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே? ''
 
" பரந்தாமா,  இன்னிக்கு தீபாவளி. இன்றே  உன் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்.காத்திரு. இதோ வருகிறேன்''-  கிருஷ்ணனின் பதில்  காதில்  விழுந்தது.

வீட்டில் ஒரே சத்தம். நிறைய  உறவினர்கள், நண்பர்கள் மாமிகள் கூட்டம்.  தீபாவளி கும்பல்.  பக்ஷண பைகள்  கை மாறியது. 
எனக்கு  கிருஷ்ணனைத்   தனியே காண விருப்பம். வீட்டின் பின் கொல்லைப்பக்கம்  சென்றேன்.  எப்போதோ எங்கப்பா கட்டிய  பெரிய பழைய  தனி வீடு. கொல்லையில் பச்சென்று செடி கொடி மரங்கள். துணி தோய்க்கும் கல் (பல வருஷங்களாகிறது. இப்போது யாரு துணியைக் கல்லில் அடித்து தோய்க்கிறார்கள்?. பழைய கிணற்றில் இன்னும் தண்ணீர் வற்றவில்லை. அமைதியாக காத்திருந்தேன். என்னைத் தவிர  அங்கே யாருமில்லை.  நிசப்தம்.
''கிருஷ்ணா.. முகுந்தா......'' என்று ஹரிதாசில் MKT பாடின பாட்டை  என்னையறியாமல் வாய்  முணுமுணுத்தது. 

ஒரு குயில் எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்து  எதிரே மாமரத்தில் ஒரு கிளையில்  கண்ணெதிரே உட்கார்ந்தது. பார்க்க அழகாக சின்னதாக கருப்பாக இருந்தது. மதுர குரலில் அது சில நிமிஷங்கள் ஏதோ இனிமையாக ஒரு ட்யூன் (tune) 
கூவிவிட்டு  என்ன தோன்றியதோ சட்டென்று பறந்தும் போயிற்று.  கிருஷ்ணன் எப்போ வருவான்??

பிசு பிசுவென்று  மழைத்தூத்தல்.  வானில்  சூரியனைக் காணோம்.  பனி மூட்டம் மாதிரி கருப்பு மேகங்களும்  எங்கோ ஒரு பேரிடி முழக்கமும். உள்ளே டிவியில்  காலையிலேயே  ''மழை பெய்யலாம்.  சில பகுதிகளில் கனத்த மழையாகவும் இருக்கலாம்''  வழக்கமாக ஆரூடம்  கேட்டு சிரிப்பு வந்தது. 

மழை பெய்தாலும் வீட்டுக்குள்  போகமாட்டேன். கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு தான் எல்லாம். மழையில் நனைந்தால் என்ன பரவாயில்லை.  வரேன் என்றவன்  இன்னும் ஏன் வரவில்லை?''  கிருஷ்ணா, உன்னைப் பார்க்க, கேட்க ஏன் தொட கூட முடியுமாமே? எங்கோ புஸ்தகத்தில்  எழுதி இருந்ததை படித்திருக்கிறேன். 

''ஐயா உங்களை எங்கே ல்லாம் தேடறது. இங்கே வந்து தனிச்சு  குந்திக்கிட்டிருக்கீங்க?
''யாரு?''   திரும்பிப்பார்த்தேன்.  பல வருஷங்களாக  வீட்டில் வேலை செய்யும் பெரியாயி ஒரு சிறு குழந்தையை பொட்டலமாக  மடியில்  அணைத்துக்கொண்டு அருகில் வந்தாள்.
''என்னம்மா வேணும் ?''
'' அம்மா கிட்டே புதுசா பொறந்த என் பேரனை த்தூக்கி யாந்து காட்டி ஆசீர்வாதம் கேட்டேன். ஐயா தோட்டத்திலே இருக்கார் அவர் கிட்டேயும் காட்டு ன்னு சொன்னாங்க.''

''ஆஹா! பேஷ் பேஷ். ஜாக்ரதையா சீக்ரம் உள்ளே எடுத்துண்டு போ. மழை வரும்போல இருக்கு..''  வாய் மட்டும் பேசியதே தவிர  மனம் கவனம் எல்லாம்  இன்னும் வராத கிருஷ்ணனின்  மேல்.  துணிப் பொட்டலத்தில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை  பார்க்கவே இல்லை. 

''எங்கிருந்தோ ஒருபாதி அணில் கடித்த கொய்யா பழம்  வலது தோளின்  மேல்   தொப்பென்று மரத்தின் மீதிலிருந்து விழுந்தது.  மேலே பார்த்தார். எப்படி காலம் ஓடறது?  இப்போது தான் செடி வைச்சமாதிரி இருக்கு  பதினைந்து 
வருஷத்தில் எப்படி கொய்யா மரம்  வளர்ந்துட்டுது.  

இன்னும்  வராத கிருஷ்ணன் மீது கொஞ்சம் கோபமும் வந்தது.வெகு நேரம் ஆகியும் ஏன் கிருஷ்ணன் வரவில்லை?  மஞ்சள் கருப்பு  புள்ளிகளோடு ஒரு பட்டாம்பூச்சி  முகத்திற்கு நேரே பறந்து வந்தது வந்தத. என்ன தையமோ?   ரெக்கையை அடித்துக்கொண்டு  வலது  கைமேல் வந்து உட்கார்ந்தது.   ஐ ஐ என்று  என்று அதை விரட்டி வெடுக்கென்று கையை உதறினேன்.  மழை சிறு தூற்றல் இப்போது பெரிய மழையாக வலுத்தது.  
மழை தூற்றல் ஆரம்பிக்கவே வீட்டுக்குள் சென்றார்.
பெரும் ஏமாற்றம்.''வரேன்'' என்று சொன்ன கிருஷ்ணன் வராவிட்டால் சந்தோஷமாகவா இருக்கும்?
உள்ளே இன்னும் கும்பல் . சிலர்  பாடினார்கள்  எதிரே  பெரிய ராதா கிருஷ்ணன் படம். நிறைய அலங்காரம் செய்து, மலர் மாலைகள் சூட்டி தூப தீபங்களோடு காட்சியளித்தது. தீபாவளி அல்லவா எதிரே தட்டுகளில் பக்ஷணங்கள் பழங்கள், நைவேத்யம். புல்லாங்குழல் ஊதிக்கொண்டு புன்னகைத்த கிருஷ்ணன் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
'' கிருஷ்ணா நீ இப்படி பண்ணலாமா? 'வரேன் என்று சொல்லி ஏன் வரவில்லை. எத்தனை நேரம் காத்திருந்தேன்? இவ்வளவு யுகம் ஆகியும் இன்னும் பொய் சொல்ற பழக்கம் உனக்கு போகலையா?''
கிருஷ்ணன் பேசாமல் சிரித்தான்
''கிருஷ்ணா , மாயாவி, என்னை ஏமாற்றியதில் உனக்கு இத்தனை சந்தோஷமா?''
கிருஷ்ணன் பேசினது காதில் விழுந்தது.
'என்னையா பொய் சொல்றவன் என்கிறாய் நீ . உன் கிட்ட உடனே வரேன் என்று சொல்லி விட்டு தான் நான் உடனேயே வந்தேனே.''
''ஹாஹாஹா... இது தான்டா  கிருஷ்ணா,   நீ சொன்னதில் எல்லாம் ரொம்ப பெரிய அண்ட புளுகு, ஆகாச புளுகு. எப்போது வந்தாய் நீ? நான் உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா ? உடனே ன்னா என்ன அர்த்தம் தெரியாதா உனக்கு?
''நான் தான் வந்தேனே . நீ என்னைப்  பார்த்தாய். என் குரல் கேட்டாய். நான்தான் அந்த கருப்பு சின்ன குயிலாய் வந்து உனக்கருகிலேயே அமர்ந்து பாடினேன். நீ கேட்கவில்லை.
''சரி ஒருவேளை காது கேட்கவில்லையோ என்று ஒரு பேரிடியாக சத்தம் போட்டேன். உன் டமார காதில் விழலியா? நீ எங்கே கேட்டாய்?
'' சரி,  அப்படி என்றால் ஒருவேளை என்னைப் பார்க்க மட்டும் தான் விருப்பமோ என்று ஒரு குழந்தையாய் உன்னிடம் வந்தேன். துளிக்கூட என்னை பார்க்க வில்லை நீ. தொடக்கூட இல்லை நீ. விரட்டி விட்டாய்.
''ஓஹோ,  நீ என்னைத் தொட விரும்பவில்லை நானாவது உன்னை தொடறேனே என்று தான் ஒரு அழகிய பட்டாம்பூச்சியாய் உன் கையைத் தொட்டேன். வெடுக்கென்று உதறி தள்ளிட்டியே என்னை.இவ்வளவையும் நீ செய்து விட்டு என்னை குறை சொல்கிறாயே? ஞாயமா பரந்தாமா?'
என் கண்களில்  குளம். கண்ணன் எங்கும் எதிலும் உள்ளான். அவனைக் காணலாமே, கேட்கலாமே, உணரலாமே!!  இது ஏன் புரியவில்லை?  வாயினால் மட்டும் He is omnipresent ,omniscient , omnipotent என்று சொல்லி படித்து என்ன லாபம்?  என்னுள்ளே காணாமல் வெளியே  தேடி என்ன பயன்? என்று புரிந்தது.
தீபாவளி வாழ்த்துக்கள் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...