Friday, October 14, 2022

mambattiyan


 ஒரு கொடியவன் கதை -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 


எப்போதுமே  நான்  நல்லவர்களைபற்றியே,  ஆன்மீகத் தைப் பற்றியே எழுதுகிறேன், ஒரு  மாறுதலாக கெட்ட வன் ஒருவனைப் பற்றியும் இன்று எழுதுகிறேன்.  
நான் 1965 சேலம் ஜில்லா மேட்டூர் முனைப்பகுதியை சேர்ந்த கருமலைக் கூடல் என்ற கிராமத்துக்கு
மாப்பிள்ளையாக முதல் முறை மாமனார் வீடு சென்றேன்.  அப்போது தான் ஒரு கொடியவனைப் பற்றி பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது. விறுவிறுப்பான விஷயங்கள் அறிந்து கொண்டேன்.   

சேலம் ஜில்லா மேட்டூர் அணையை ஒட்டிய  கருமலைக்கூடல்  என்ற பகுதியில் என் மாமனார் வீடு.  அரசாங்க நீர் வளத்துறை என்ஜினீயர்.   கருமலைக் கூடலில் இருந்து மேட்டூர் அணை  நீர் பல மைல்கள்  தூரம் உள்ள  கிராமங்களுக்கு செல்ல  குழாய்கள்  மூலம்  அங்கிருந்து  நீர் போக்குவரத்து  அவரது கட்டுப்பாட்டில் ஓடியது.   தனி காம்பௌண்டில் வீடு.  கிட்டத்தட்ட  அறுபது வருஷங்களுக்கு முன்பு  அது  ஒரு ஒதுக்குப்புறமான தனிமையான  காட்டு பிரதேசம் என்பதால் ஒரு புது அனுபவம். 

அந்த  வீட்டிலிருந்து பின்புறம்  மலைத்தொடர்கள்.  அந்த மலைகளில் தான் ''மம்புட்டியான்'' நடமாட்டம் இருந்தது என்று சொல்வார்கள்.  மம்பட்டியான் என்பவன் வீரப்ப னை விட பல மடங்கு பொல்லாதவன். மலையூர் மம்பட் டியான் என்றும் மேச்சேரி மம்பட்டியான்  என்றும்  அவனைச்  சொல்வார்கள். அவனைப் பற்றிய திரைப்படம் கூட வந்தது.   பரமபாதகன்; பெண்பித்தன்.  சினிமாவில் அவன் நல்லவனாக காட்டப்பட்டான். 
மம்பட்டியான்  போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவன். அவனைக்கண்டு பயப்படாதவர்கள் இல்லை.  27 கொள்ளை, 9 கொலை வழக்குகள்  அவன் மேல்.  போலீஸ் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு மலை, காடுகளில் 5 ஆண்டு காலம் தலைமறை வாக வாழ்ந்தவன்.  ஏதோ  காதல் மோக உருவில் எமன் அவனுடைய உயிரை பறித்துக்கொண்டான். 

மம்பட்டியானின்  உண்மைபெயர்  அய்யாத்துரை
 சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் சரகம் கொல்காரனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன்.  அவன் அப்பாவின் திருநாமம்  மொட்டையன்.

மம்பட்டியானுக்கு 2 மனைவிகள். மூத்த மனைவியின் பெயர் சின்னப்பிள்ளை என்கிற நல்லம்மாள். இவளுக்கு நல்லப்பன் என்ற மகனும், பாப்பா என்ற மகளும் இருந்தனர்.

2_வது மனைவி மாந்தியம்மாள். இவளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தார்கள். அவனுக்கு சகோதரனும் இருந்தான். அவனுடைய பெயர் ஊமையன்.

மம்பட்டியான் நெடுஞ்சாலைத்துறையில் கூலி வேலை செய்து வந்தவன். எப்போதும் தோளில் மண் வெட்டியை சுமந்தபடியே திரிவான். அவனது முகத்தில் கீழ் தாடை பகுதியும், மண்வெட்டி போல குவிந்திருக்கும். இவை  அய்யாத்துரையை  மம்பட்டியானாக மாற்றிவிட்டது. போலீஸ் ரிகார்டுகளிலும் இதே பெயர். அவனைச்சுற்றி ஒரு பெரிய  பட்டாளம். 

சாதாரண தொழிலாளியாக குடும்பஸ்தனாக  இருந்த வன் தடம் புரண்டது. அடிதடி _ மோதல், போலீஸ் வழக்கு என்று சிக்குண்டு  அவனை கொலைகாரன், வழிப்பறி கொள்ளைக்காரன் என்ற நிலைக்கு கொண்டு போய் விட்டது.

அவன் இருந்த  ஊரில்  மாரிமுத்துசாமி, முத்து சாமி என்ற மிராசுதாரர்கள் இருந்தார்கள். ரெண்டு பேரும்  சொந்தக்காரர்கள். அடுத்தடுத்து  பண்ணை நிலம்  வயல்கள், வீடுகள். 

அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேச்சேரி என்ற ஊர். ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா  கோலாகலமாக இருக்கும். ஊர் ஜனங்கள் திரள்வார்கள்.  திருவிழாவில் “வண்டி வேஷம்” என்ற நிகழ்ச்சி  பிரபலம். அலங்கரிக்கப்பட்ட  மாட்டு வண்டிகளில்  “ராமாயணம்”, “மகாபாரதம்” போன்ற வைகளில் வரும் கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு செல்வார்கள்.  இதற்கான ஏற்பாடுகளை  மாரிமுத்து சாமி முத்துச்சாமி  இருவருமே செய்பவர்கள்.   திருவிழா சமயங்களில்  முத்துசாமி பெட்டிக்கடை போட்டு  தின் பண்டம், வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் விற்பார். நல்ல வியாபாரம். பணம் குவிந்ததால் அவருக்கும்  மாரிமுத்து சாமிக்கும்  மனஸ்தாபம். பொறாமை, கோபம், மனக்கசப்பு.  நட்பு உடைந்து இருவரும் பிரிந்து தனி தனி கோஷ்டியாக செயல் பட்டார்கள்.  மாரிமுத்து சாமிக்கு மம்பட்டியானும், அவனது அண்ணன் ஊமையன், தந்தை மொட்டையன் ஆகியோர்  சப்போர்ட். ஆதரவு.

1956_ம் ஆண்டு திருவிழாவுக்கு முத்துசாமியும் ஆதரவாளர்களும் புறப்பட்டு சென்றபோது மாரி முத்துசாமியின் கோஷ்டி வழி மறித்து கற்களை வீசி தாக்கியது. இதனால் அந்தப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டார்கள்.  பதற்றம் கலவரம் ஏற்படக்கூடாது என்பதற்காக போலீஸ் 
 விழாவில் பெரிய மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் 144 தடை உத்தரவு போட்டது.மாட்டு வண்டியில் வேஷம் கட்டி  ஆடுவதற்கு  ரெண்டு தரப்புக்கும்  தடை போட்டது.  பகை வளர்ந்து சூடு பிடித்து  புகைய ஆரம்பித்தது.

முத்துசாமியின் பெரிய பிள்ளை பழனி கவுண்டன்  தென்னந் தோப்புக்குப்  போகும் வழியில் மம்பட்டியான் கும்பல் தாக்கியது.  மம்பட்டியான் உள்பட 17 பேர் மீது போலீஸ் கேஸ். அவர்கள்  அனைவரும் விடுதலை யானார்கள். 

30_5_1957 அன்று கோர்ட்டில் இருந்து திரும்பும்போது மம்பட்டியானின் தந்தை மொட்டையன் மற்றும் உறவினர் பொன்னு கவுண்டர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முத்துசாமி கோஷ்டி யைச் சேர்ந்த 9 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தந்தை கொலையுண்டதால் மம்பட்டியான் ஆத்திரத்துடன் திரிந்தான்.

இந்த நிலையில் 2_8_1959 அன்று முத்துசாமியும், அவனது மகன்களும் மேச்சேரியில் கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கு திரளாக கூட்டம் இருந்தது.

காலை சுமார் 11 மணி அளவில் திடீரென்று அங்கே  மம்பட்டியானும், அவனது கோஷ்டியும் பயங்கர ஆயுதங் களுடன் வந்து  கடையில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டினார்கள். இதில் முத்துசாமி, அவரது மகன்கள் வேலாயுதம், சின்னக்குட்டி, வைத்தி ஆகிய 4 பேரும்   ஸ்தலத்திலேயே  ரத்தம் கொட்டி துடிதுடித்து  மாண்டார்கள்.   இன்னொரு மகன் பரமசிவம் வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பி ஓடி அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தார். அவரை மம்பட்டியான் கோஷ்டி விரட்டிச்சென்று தேடியது. அந்த வீடு முழுவதும் சோதனை போட்டது. அந்த வீட்டுக்காரப்பெண் தந்திரமாக பரமசிவத்தை ஒரு பெரிய பாத்திரத்தை போட்டு மூடி வைத்துவிட்டாள். இதனால் பரம சிவம் கொலைகாரக் கும்பலிடம் இருந்து உயிர் தப்பினார். 

பிறகு மம்பட்டியான், அவனுடைய அண்ணன் ஊமை யன் உள்பட 7 பேர் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்று முத்துசாமியின் உறவினர்களை வீடு வீடாக புகுந்து தாக்கினார்கள். சுப்பிரமணியம் என்பவரை தாக்கி கொன்றனர்.  அவர் இருந்த தறி கொட்டகையையும் தீ வைத்து கொளுத்தினர். பிணம் தீயில் எரிந்து கரிக் கட்டையானது. அயுண்டன், பச்சான் மேலும் 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்தில் 9 பேரை கொன்று மம்பட்டியான் பழிக்குப்பழி தீர்த்தான். கொலை படலத்தை முடித்ததும் மம்பட்டியான் கோஷ்டி காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டது.

இந்த படுகொலை சேலம் மாவட்டத்தையே உலுக்கியது. சம்பவ இடத்தை கலெக்டர் போலீஸ் அதிகாரி ஏ.சி. ஆகியோர் சென்று பார்வையிட்டார்கள். மம்பட்டியான் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடினார்கள்.

காட்டில் மறைந்து வாழ்ந்த அந்த சமயத்தில் மம் பட்டியான் கொள்ளைக்காரனாக மாறினான். மேச்சேரி, பெண்ணாகரம், கொல்லேகால் ஆகிய பகுதிகளில் ஊருக்கு வெளியே இருக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தான். தனியாக வரும் ஆட்களை மிரட்டி வழிப்பறி கொள்ளை நடத்தினான்.

இப்படி 2 ஆண்டுகள் வரை மம்பட்டியானும், அவனது அண்ணன் ஊமையனும் ஒன்றாக காட்டில் திரிந்தனர். திடீரென்று அண்ணன் _ தம்பிக்குள் மோதல் ஏற்பட்டது. மம்பட்டியானை விட்டு ஊமையன் பிரிந்தான்.

இந்த தகவலை அறிந்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். 6_3_1961 அன்று சப்_இன்ஸ் பெக்டர்கள் தவுலத் அலி, நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மேச்சேரி அருகில் காட்டுக்குள் நுழைந்து தேடினர். அங்கு பதுங்கி இருந்து ஊமையனைச் சுற்றி வளைத்தனர். அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் ஊமையன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மேட்டூர் பகுதியில் மம்பட்டியான் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 8_7_1963 அன்று சப்_இன்ஸ்பெக் டர் மயில் சாமி தலைமையில் போலீஸ் படை மேட்டூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தண்டைக்காய் மலைக்கு சென்றனர்.   அங்கு மம்பட்டியான் கோஷ்டி சமையல் செய்து கொண்டி ருந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மம்பட்டியானின் கோஷ்டியைச் சேர்ந்த கண்ணு போயன், கோவிந்தன் ஆகியோர் கொல்லப்பட்டனர். சப்_இன்ஸ் பெக்டர் மயில்சாமி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார்.

மம்பட்டியானும், வேறு சிலரும் ஓடினார்கள். போலீசார் விரட்டிச்சென்று 2 பேரை பிடித்தார்கள். ஆனால் மம் பட்டியான் போலீசிடம் சிக்காமல் தப்பி விட்டான்.

மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை வீசினார்கள். இதனால், “தேடுதல் வேட்டை” முடுக்கி விடப்பட்டது.

காடுகளில் சென்று தேடும் விசேஷ பயிற்சியைப்பெற்ற மலபார் சிறப்பு போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ஆயுதப்படை போலீசார் விரைந்தனர்.

மைசூர் போலீஸ் உதவியும் கேட்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் கிரி தலைமையில் இந்த அதிரடிப்படை செயல் பட தொடங்கியது. மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பெண்ணாகரம் காட்டுப்பகுதிக்குள் மம்பட்டியான் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். அப்போது சிக்கல்ராம்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவன் மம்பட் டியானின் நண்பன் ஆனான். அவன் கள்ளச்சாராயம் விற்பவன். சில சமயம் அவனைத்தேடி அவன் வீட்டிற்கே மம்பட்டியான் சென்றான்.

கருப்பண்ணனுக்கு 2 தங்கைகள். மூத்த தங்கை, கணவனை இழந்த விதவை. அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பில் மம்பட்டியானுக்கும், அவளுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் கருப்பண்ணனின் 2_வது தங்கை நல்லம்மாள் ஒரு நாள் மம்பட்டியானின் கண்ணில் பட்டுவிட்டாள். அவள் நல்ல அழகி. அவளையும் அடைந்துவிட வேண்டும் என்று மம்பட்டியான் ஆசைப்பட்டான்.

போலீசாரின் வேட்டை தீவிரம் அடைந்ததை உணர்ந்த மம்பட்டி யான், தன்னுடைய இருப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டான். நல்லம்மாளையும் தன்னுடன் அழைத் துச்சென்று விடவேண்டும் என்று நினைத்தான்.
தன்னுடைய இந்த விருப்பத்தை கருப்பண்ணனிடமும், அவரது தந்தை பொன்னப்ப கவுண்டரிடமும் கூறினான். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.

“ஏற்கனவே விதவைத் தங்கையுடன் தொடர்பு வைத்தி ருக் கிறாயே! அவளையே கல்யாணம் செய்து அழைத்துக் கொண்டு போ! 2_வது தங்கையை தரமாட்டேன்” என்று கருப்பண்ணன் அடித்துச் சொல்லிவிட்டான். இதனால் மம்பட்டியானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

“நல்லம்மாளைதான் திருமணம் செய்வேன். அவளை என்னுடன் அனுப்பு. ரூ.1,000 தருகிறேன். நீ சம்மதிக்கா விட்டால் அவளைத் தூக்கிக் கொண்டு போய்விடுவேன்” என்று கூறிவிட்டு மம்பட்டியான் காட்டுக்குள் சென்று விட்டான்.

தங்கைகளின் பிரச்சினையால் மனக்குழப்பம் அடைந்த கருப்பண்ணன், போலீஸ் உதவியை நாடினான். பெண் ணாகரம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று சப்_ இன்ஸ்பெக்டரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தான். அவர் மூத்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உதவி செய்வதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு கருப்பண்ணனை சந்தித்த ஒரு அதிகாரி, “மம்பட்டியானுடன் மோதி உன்னால் ஜெயிக்க முடியாது. விஷத்தைக் கொடுத்து அவனைக் கொல்ல முயற்சி செய்” என்று ஆலோசனை கூறினார்.

27_3_1964 அன்று கருப்பண்ணன் கையில் துப்பாக்கி யுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மம்பட்டியான் அவன் முன் வந்து நின்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

“நீ என்னை போலீசில் காட்டிக் கொடுக்கப்போவதாக சொன்னாயாமே! எங்கே காட்டிக்கொடு பார்ப்போம்” என்று கூறிக்கொண்டே, மம்பட்டியான் கருப்பண்ண னை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால், குறி தவறியது.

உடனே கருப்பண்ணன் தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மம்பட்டியானை நோக்கி 2 முறை சுட்டான். மம்பட்டியான் வயிற்றில் ஒரு குண்டும் இடுப்பில் ஒரு குண்டும் பாய்ந்தன.

மம்பட்டியான் கீழே விழுந்தான். கருப்பண்ணன் ஓடிப்போய் மம்பட்டியான் கையில் இருந்த துப்பாக் கியைப் பிடுங்கிக்கொண்டு மீண்டும் ஒரு முறை சுட்டான். மம்பட்டியான் அதே இடத்தில் செத்தான். இதுவே அதிகாரபூர்வ தகவலாகும்.

இது தவிர அதிகாரபூர்வமற்ற முறையில் மற்றொரு தகவல் உலவியது. நல்லம்மாளை கூப்பிடுவதற்காக மம்பட்டியான் சம்பவ தினத்தன்று கருப்பண்ணன் வீட்டிற்கு சென்றான். மம்பட்டியானுக்கு வீட்டில் விருந்து கொடுத்தான்.

அந்த சமயத்தில் தர்பூசணியில் விஷத்தை ஏற்றி கொடுத்தான். அதை சாப்பிட்ட மம்பட்டியான் சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தான். உடனே மம்பட்டியானை கருப்பண்ணன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டான். இவ்வாறு பரவலாக பேசப்பட்டது.  எது எப்படியோ, மம்பட்டியானை கருப்பண்ணன் தீர்த்து கட்டிவிட்டான்.

தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் அதிகாரி கிருஷ்ணராஜ், உதவி சூப்பிரண்டு வி.பொன்னையா, பெண்ணாகரம் சப்_ இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். 

மம்பட்டியானுக்கு வயது சுமார் 30 இருக்கும். 5 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் இருந்தான். முறுக்கு மீசை வைத்திருந்தான். ராணுவ வீரரை போல உடை அணிந்திருந்தான். இடுப்பில் பெரிய `பெல்டு’ கட்டியி ருந்தான். அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.

அவன் கையில் 2 அடி நீள பெரிய கத்தி இருந்தது. கையில் கெடிகாரம் கட்டியிருந்தான். கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தான். அதில் புலி நகம் கோர்க்கப் பட்டிருந்தது.

ஒரு கட்டுச்சோறு மூட்டையும் வைத்திருந்தான். அதில் மான் கறி குழம்பும், சோறும் கலந்த சாப்பாடு இருந்தது. மம்பட்டியானின் உடல் பரி சோதனைக்காக தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது.

பிரேத பரிசோதனைக்குப்பிறகு மம்பட்டியான் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ஆஸ்பத்திரியில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலை வாங்க உறவினர்கள் யாராவது வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் வரவில்லை.

இதனால் உடலை போலீஸ் லாரியில் ஏற்றி தர்மபுரி குமாரசாமிபேட்டை சுடுகாட்டுக்கு கொண்டுபோய் தகனம் செய்தனர். அங்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தார்கள். மம்பட்டி யான் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப் படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மம்பட்டியானை கொன்ற கருப்பண்ணனுக்கு பரிசு வழங்க போலீஸ் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். இதனை தொடர்ந்து கருப்பண்ணனுக்கு ரொக்கப்பணம் 2 ஆயிரமும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. அதோடு தற்காப்பிற்காக அவனுக்கு லைசென்சு (அனுமதி) பெற்ற துப்பாக்கியும் கொடுக்கப்பட்டது.

மம்பட்டியான் கோஷ்டியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர், கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த 5 பேர்களில், சுப்பிர மணி, சாமியண்ணன், சின்னண்ணன், நல்லப்ப கவுண்டர் என்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஒருவன் சிறுவனாக இருந்ததால், சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

புரட்டாசி சனிக்கிழமை நன்னாளில் இந்த புண்ய கதையை சொன்னவன்,  கேட்டவர்கள்  படித்தவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி உண்டா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...