Thursday, July 30, 2020

VIVEKA CHINTHAMANI




விவேக சிந்தாமணி   2. J K  SIVAN  

               
ரெண்டு மணியான பாடல்கள் 

விவேக  சிந்தாமணி எனும் பழைய தமிழ் நூலைப்  படிக்க நேர்ந்தது. அதில் ஒன்றிரண்டு பாடல்களை உங்களுக்கு  எழுதியிருந்தேன்.  பலருக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லும்போது மேலும் சில பாடல்களை தரவேண்டும் என்று ஆவல் மேலிட்டு இன்றும்  ரெண்டு பாடல்களை விளக்கிச்  சொல்லத் தோன்றியது. 

இதை எழுதியவர் எந்த மஹானோ?  பெயர், விலாசம்,  காலம்,   ஒன்றும் தெரியவில்லை.   தமிழ் சினிமா கவிஞர்கள் பொல்லாத பேர்வழிகள். எப்படியோ இது போன்ற அனாதை பாடல்களை பிடித்து  கொஞ்சம் அங்கேயும் இங்கேயும் மட்டும் மாற்றி அவர்கள் எழுதியது போல்  பெரும் புகழும், கூடவே  அதிகம்  பணமும் சம்பாதிக்கிறார்கள்.  பிழைத்து விட்டுப்  போகட்டும் நமக்கு என்ன நஷ்டம். காசைக்  கொடுத்து சினிமா பார்ப்பவனுக்கு நல்ல பாடல்களாவது கிடைத்தால் சந்தோஷம் தான். 

குடும்பத்தில்  அப்பா அம்மாவுக்கு   பிறந்த  குழந்தை  ஆண்  என்று தெரிந்தால் ரெட்டிப்பு சந்தோஷம். குழந்தை வளர்ந்தான். கோலி பம்பரம்  விளையாடினான்.  பள்ளிக்கு போனான், படித்தான். சண்டை போட்டான். சட்டை  கிழிந்தது. காலேஜுக்கோ வேலைக்கோ போனான்.  கல்யாணம் ஆகியது. அவனுக்கு இப்போது ரெண்டு குழந்தைகள். அப்பா அம்மா  தாத்தா  பாட்டி.  வயோதிகர்கள்,  அமெரிக்காவில் இருப்பவன் அவர்களை லக்ஷியம் செய்வதில்லை. அப்பா பேச்சு  கொஞ்சமும் பிடிக்காது. போடா உனக்கென்ன தெரியும் ? என்கிறான். அப்பா  சொல்வதையா கேட்கப்போகிறான்?

மனைவி மட்டும் என்ன ஒசத்தி.  ஒருகாலத்தில் கல்யாணமான புதிதில் கட்டுப்பெட்டி. அப்புறம் குழந்தை குட்டி பெற்றாள் . அதிகாரம் தூள் பறக்கிறது. எது சொன்னாலும் எதிர் பேச்சு பேசுகிறாள். எங்கிருந்து கற்றாள்  இதெல்லாம்.?  

 கல்வி கற்பது  பற்றி  பேசும்போது இன்னொரு விஷயம்  ஞாபகம் வருகிறது.  சீடன்   ''அனா  ஆவன்னா '' தெரியாமல் வந்தவன் எல்லாம்  கற்றுக்கொண்டு அப்புறம்   குருவுடனேயே  தர்க்கம் வாதம் செய்கிறான்.  அவருக்கென்ன தெரியும்  என்கிறான்?  அவனுக்கிப்போது குரு  உதவாக்கரை.. 

உதவாக்கரை என்கிறபோது  ராமசுப்பு பண்டிதர் ஞாபகத்துக்கு வருகிறார்.  நல்ல மருத்துவர். எல்லா நோய்க்கும் ஒரே கலர் மாத்திரை,  கஷாயம்,    பிரவுன் கலர்  சூரணம் தேனில் கலந்து நாக்கில் தடவி  வியாதி குணமாகி விட்டது.  முன்பெல்லாம் ஏதாவது வியாதி இருந்தபோது  பண்டிதர் தேவைப்பட்டார். இப்போது அவர் வேண்டாம்.   அவர் பாட்டுக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்துவிட்டு  நீர் மோர் குடித்த்துவிட்டு  ரெண்டு வாழைக்காயையும் அரைப்படி அரிசியும் வாங்கிக்கொண்டு போகிறார். அவர் வைத்தியம் தேவையில்லை.  

இதெல்லாம் ஏதோ சிலர் வீட்டில் மட்டும் நடக்கிற விஷயம் இல்லை ஸார் .  இது தான்  பொதுவாக  எல்லா இடங்களிலும் நாட்டு நடப்பு. ஜனங்கள் குணம் அப்படித்தான் என்கிறது இந்த  விவேகசிந்தாமணி பாடல். படியுங்கள் மேலே சொன்ன அர்த்தம் புரியும். 

''பிள்ளை தான் வயதில் மூத்தால் பிதாவின்  சொல் புத்தி கேளான்
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் போராளி
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உளன்  நோய் பிணிகள் தீர்ந்தா  லுலகனார்பண் டிதரைத் தேடார்''

இன்னொரு சுகமான பாடலோடு நிறுத்திக்   கொள்கிறேன் 

டாமி,   ஜிம்மி, டைகர்,  மணி  என்று  நாய்களுக்கு  பெயர் வைத்து   கொஞ்சுகிறோம்.  ஒரே படுக்கையில்  படுக்கிறது.   . சரிதான்.   அடுத்த வீட்டுக்காரன்  புனுகுப்  பூனை கூண்டில் வைத்து வளர்க்கிறான்.  புனுகு  நல்ல விலைக்கு விற்கிறான். நல்ல சம்பாத்தியம். நமது டைகர், டாமியையும்  அப்படி வளர்த்தால் என்ன? 
 டாமியைப்  பிடித்து ஒரு கூண்டினில் வைத்து, வேளா  வேளைக்கு  புஷ்டியாக ஆகாராதிகள் கொடுத்து,  அதற்கு மஞ்சள்  பூசி குளிக்க வைத்து   சாம்பிராணி புகை பிடித்து, குங்குமம் தடவினால்  அது புனுகுப்பூனை  ஆகுமா?.  நாய் நாய் தான். பெரிய  பணக்கார  அரசியல் தலைவன்  வீட்டில்  ராஜா வீட்டில் வளர்பவனும் அவ்வாறே. அவன் பிறவி குணம் மாறாது என்கிறார்  பேர் தெரியா புலவர். 

''குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணஞ் செயதாலும் தான்
அக்குலம் வேற தாமோ வதனிடம் புனுகுண் டாமோ
குக்கலே குக்க லல்லாற் குலந்தனில் பெரியதாமோ''. 

இன்னும்  சொல்லட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...