Saturday, July 18, 2020

ANDHAKA KAVI VEERARAGAVA KAVIRAYAR

அந்தகக் கவி  வீரராகவர்      J K   SIVAN  

                                         '' பெரிய'' பரிசு 


காஞ்சிபுரத்தில்  பூதூர் எனும் ஊரில்  வடுகநாதர் என்பவருக்கு  வீரராகவன் என்ற  ஒரு  பிள்ளை பிறவியிலேயே கண் பார்வை இன்றி பிறந்தது. வீரராகவன்  பெரும் கவிஞனாக தனது சொந்த முயற்சியால்  உருவானார்.   முதுகில் பாடம் எழுத சொல்லி அதை உணர்வினால் கற்று அறிந்தவர்.  அந்தகக்கவி என்று பெயர் பெற்றவர். தமிழ் உள்ள வரை அவரை மறக்க முடியாது. ராமாயணம், பல  ஆலயங்கள் பற்றியும் கோவைகள், உலாக்கள் ,பிள்ளைத் தமிழ்  பல  இயற்றிய  கவிஞர்.  பொன்விளைந்த களத்தூரில் வாழ்ந்தவர். இவர் இசையிலும் பயிற்சி உள்ள கவிஞர்..சிற்றரசர்கள் சமஸ்தான அதிபதிகள் மேல் பாடல் இயற்றி  பரிசு பொருள் பெற்று வாழ்ந்தவர். 

 இலங்கையை இவர் காலத்தில்  பர ராஜ சேகரன் என்ற மன்னன்  ஆண்டுவந்தான்.அவன் தமிழை ஆதரித்து புலவர்களுக்கு நிறைய  பரிசுகள் கொடுப்பவன் என அறிந்து அவனிடம் தனது சீடன் ஒருவன் உதவியுடன் கப்பல் ஏறி சென்று  சந்தித்து அவன் அவர் தமிழாற்றல் கண்டு வியந்து ஒரு யானையை  பரிசாக அளித்தான். 

இந்த  சம்பவத்தை ஒரு பாணன்-பாணி தம்பதியர் கவிதையில் அற்புதமாக இயற்றியவர்  அந்தகக்கவி வீரராகவ கவிராயர். 

’இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா?’ என்றாள் பாணி,
’வம்பதாம் களபம்’ என்றேன், ‘பூசும்’ என்றாள்.
‘மாதங்கம்’ என்றேன், ‘யாம் வாழ்ந்தேம்’ என்றாள்.
’பம்பு சீர் வேழம்’ என்றேன். ‘தின்னும்’ என்றாள்.
‘பகடு’ என்றேன், ‘உழும்’ என்றாள், பழனம் தன்னை
‘கம்ப மா’ என்றேன், ‘நல் களியாம்’ என்றாள்.
‘கைம்மா’ என்றேன், சும்மா கலங்கினாளே!

பாணன்  சொல்வதும்  பாணி புரிந்துகொண்டு பதில் சொல்வதுமாக அமைந்த அற்புத கவிதை இந்த தனிப்பாடல். எவ்வளவு தமிழ் ஞானம், கற்பனை பாருங்கள்   அ.க .வீரராகவருக்கு.

இது தான் பாடலின் சாராம்சம் : 

ஒரு பாணன் பாடல்கள் பாடுவதை தவிர  கவிகள் இயற்றுபவன்.  அவன் மனைவி தமிழறிவு படைத்த பாணி . வறுமையில் வாடும்  குடும்பம்.   அந்த ஊரில் பெரும்   பணக்காரன் ஒருவன். பெயர்  ராமன்.  அவனைச்  சந்தித்து அவனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற பாணன் சென்றான்.   ராமனுக்கு பாணனின் கவிதை ரொம்ப பிடித்து போய்விட்டதால் தனது பட்டத்து யானையையே  பரிசாக கொடுத்துவிட்டான். 

அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத பாணன், யானையை வைத்து எவ்வாறு வறுமையை சமாளிப்பான். யானையை வேண்டாம் என்று சொல்லவோ மனமில்லை. பரிசாக வந்தது.   வீட்டுக்கு யானையோடு வந்தான். உள்ளே  குடிசையில்  அடுப்பங்கரையில்   பாணி  வீட்டில்  இருக்கும் கம்பு கேழ்வரகு ஏதெல்லாமோ சேர்த்து கூழ் காய்ச்சுகிறாள். வாசலில் யானையை நிறுத்திவிட்டு அங்கிருந்தே குரல் கொடுக்கிறான் பாணன். 

''அட, அதற்குள் வந்துவிட்டீர்களா?  ராமன் என்ன பரிசு கொடுத்தான்? ''  என உள்ளிருந்துகொண்டே  வெளியே வராமல்   கேட்கிறாள்  பாணி. 

''''வம்பதாம் களபம் ''  கயிற்றில் கட்டப்பட்ட கயிறோடு  ஒரு யானை.'' என்கிறார். களபம்  என்றால் யானை, சந்தனம்  ரெண்டையும் குறிக்கும் அல்லவா. பாணி அதை சந்தனம் என்று எடுத்துக் கொண்டு   

''ஓஹோ,  நல்ல  வாசனையோடு கூடிய  சந்தனமா கொடுத்தான்.   நிறைய  நீரே உடம்பு பூரா  பூசிக் கொள்ளும்  ''

'' சந்தனம் இல்லை, பாணி  ''மாதங்கம்''   (யானைக்கு இப்படி ஒரு பெயர் )

''மா  தங்கம் ''  என்பதை விலை உயர்ந்த  தங்கம் என்று பாணி எடுத்துக் கொண்டதால்  '' ஓஹோ  தங்கம் கொடுத்தானா ,  எவ்வளவு  தாராளமான மனசு அவனுக்கு.   அப்பாடா, இனிமேல்  நமக்கு வறுமை துன்பம் தீரும்''  என்கிறாள்.

'' தங்கம் இல்லை, பாணி, '' பம்பு சீர் வேழம்'' (  எல்லோராலும்  புகழப்படும்  யானை.  வேழம் என்றால் யானை ளென்றும் கரும்பு என்றும் பொருள் )  கணவன் கரும்பைத்   தான்  பரிசாக கொண்டு வந்தான் என புரிந்து கொண்டு   ''அப்படின்னா, ரொம்ப நாளாச்சு கரும்பு கடித்து, கொண்டுவாரும்  உள்ளே, சாப்பிடலாம்'' என்கிறாள் 

''நான்  கரும்பை கொண்டு  வரவில்லை பெண்ணே,   ''பகடு''  என்கிறான் பாணன்.  பகடு ( யானை  எருமைக்கடா ரெண்டையும் குறிக்கும் சொல் )  

''என்ன சொல்கிறீர். ராமன்  உமது கவிதைக்கு பரிசாக   உமக்கு ஒரு  எருமைக்கடாவையா  கொடுத்தார்.  பரவாயில்லை, இனிமேல் வயலை உழுவதற்கு அதை பயன் படுத்துவோம்'' என்கிறாள். 

ஓய்ந்து போன  பாணன்  ''எருமையும் இல்லை, அருமையும் இல்லை,   பாணி,   ராமன் கொடுத்தது   ''கம்ப மா'' என்கிறான்.  அசைகின்ற  ஒரு யானை என்று பொருள்.

இதையும்  சாதாரணமான பொருளில் கம்பு அரைத்து இடிக்கப்பட்ட  மாவு என்று பாணி எடுத்துக்கொண்டு விட்டதால்,  ''ஏதோ  ராமனுக்கு அதையாவது கொடுக்க தோன்றியதே.  சிறிது நாட்கள் கம்பங்களி  சமைத்து பசியாறுவோம்.'' என்று பெருமூச்சு விடுகிறாள். 

பாணன் '' கம்புமில்லை சொம்புமில்லை.  '' கைம்மா'' கையை உடைய  மிருகம்'' என்கிறான். 

தும்பிக்கை உடைய ஒரே மிருகம்  யானை என்பதை அறிந்த பாணி சற்று வெளியே வந்து   வாசலில் தூர நிற்கும்  யானையைப்  பார்த்து விடுகிறாள்.  தலை சுற்றி கீழே விழுமுன் அவள்  கேட்ட கேள்வி  

''ஏனய்யா, இப்படி செய்துவிட்டீர்,  மூளை இருக்கிறதா உமக்கு?  நமக்கே சோற்றுக்கு வழியில்லை, இந்த யானையை   வேறு வாங்கி வந்து நிற்கிறீரே, அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது?  எப்படி அதற்கு ஆகாரம் கொடுப்பது?'' 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...