Tuesday, July 21, 2020

OLD TAMIL POEM



யாரிந்த கவிஞர்?  J K  SIVAN  


ஒரு  சின்ன  சிந்தனை.   விவேக சூடாமணி தெரியுமா?   ஆதி சங்கரர்  சமஸ்க்ரிதத்தில் எழுதிய  வேதாந்த நூல். அது ஆங்கிலம் மற்றும்  பிற மொழிகளில் வெளி வந்துள்ளது.    
இன்னொரு கேள்வி:  சீவக சிந்தாமணி தெரியுமா? 
 இது திருத்தக்க தேவர்  என்பவர்  எழுதிய  ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று.  

கடைசியாக ஒரு கேள்வி.  விவேக சிந்தாமணி தெரியுமா ? 
 அற்புதமான பாடல்கள் எளிய தமிழில் இருக்கிறதே,  இதை யார் எழுதியது... கேள்விக்கு பதில் இன்னும் தெரியவில்லை?

யாராக இருந்தால் என்ன. நன்றாகவே எழுதி இருக்கிறார். அதில் சில பாடல்களை இனிமேல் சொல்வதாக இருக்கிறேன். 

பெண்களை  உயர்வாக  மதித்து  போற்றி  எழுதிய  பாடல்கள் தெரியும். இந்த விவேக சிந்தாமணி ஆசிரியர்  தான்  யார்  என்று கட்டிக்கொள்ளாததால் ஏதோ  தைரியத்தோடு  ''பெண்களை நம்பாதே  கண்களே  பெண்களை நம்பாதே''..... என்று அல்லவோ  பாடுகிறார்.   பாடல் எழுதிய விதத்தை மட்டும்  நாம் ரசிப்போம்.  நாம் பெண்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் தயவு இல்லாமல் ஒன்றுமே  நடக்காது.   அடுத்த வேளை  சாப்பிட வேண்டாமா? இப்போது கொரோனா  சமயத்தில் வெளியேயும் எதுவும் கிடைக்காதே. போகவும் முடியாதே.


''மங்கை கைகை (கைகேயி) சொற்கேட்டு மன்னர்
புகழ் தசரதனும் மரணம் ஆனான்
செங்கமலச் சீதை சொல்லை ஸ்ரீராமன்
கேட்டவுடன் சென்றான் மான் பின்;
தங்கை அவள் சொல்லைக் கேட்டு இராவணனும்
கிளையோடும் தானும் மாண்டான்
நங்கையற் சொற் கேட்பதெல்லாம் கேடுதரும்
பேர் உலகோர் நகைப்பர்தாமே.

 ஆண்களே  ஜாக்கிரதை ,  பெண்கள் ஏதாவது சொன்னால்  ஆஹா  இதோ  என்று  சொல்லி விட்டு  ஓடிவிடுங்கள். அவர்கள் பேச்சை கேட்டு  எதையாவது செய்து  எக்கச்சக்கமாக  மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு முன்னே  இப்படி  அகப்பட்ட சில  அசடுகள் பெயர்கள் சொல்கிறேன். உங்களுக்கும் தெரிந்தவர்கள்  தான்.    கைகேயி  ''நாதா  எனக்கு  ரெண்டு வரம் தருவதாக சொன்னீர்களே, கொடுக்கிறீர்களா  என்றதும்,  அதற்கென்ன கண்ணே, நீ கேட்டு நான்  இல்லை என்பேனா என்று சொன்னவன்  அவள் வரத்தால் உயிரையே இழந்தான் ..  சீதையும்  சும்மா இருந்த ராமனிடம், ''நாதா  அந்த  அழகிய மான் குட்டியை பிடித்து தாருங்கள் என்று சொல்ல, மானைத்தேடி ஓடி, மனைவியை இழந்து,  இலங்கை எரிந்து, நிறைய பேர் மடிந்து போனார்கள்.  பத்து தலையில் பத்து மூளை இருந்தும் முட்டாள்  ராவணன். ''அண்ணா உனக்கேற்றவள் அந்த சீதை, பேரழகி , அவளை யாரோ ஒரு மானுடன் மனைவியாக  கொள்வது எவ்வளவு அநியாயம், உடனே சென்று அவளை உங்களவளாக்கிக்  கொள்ளுங்கள்  என்றதால் சாமியார் வேஷத்தில் சென்று சாம்ராஜ்யம், உயிர் எல்லாவற்றையும் இழந்தான்.  ஆகவே தான் சொல்கிறேன் பெண்ணின் பேச்சை கேட்காதே .

 ஊர் உலகமெல்லாம் உன்னை பார்த்து சிரிக்கும்''   (அம்மணிகளே , இது நான் சொல்லவில்லை... யாரோ பேர் தெரியாத  விவேக சிந்தாமணி எழுதிய கவிஞர்  சொன்னது என்று முன்பே சொல்லி இருக்கிறேன்).

  
பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரெனும்
குணம் மூடப் பேடி லோபர்
முண்டைகளுக்கு இணையில்லா முனை வீரர்
புருடரென மொழியொணாதே
உண்டுலகம் உதிர்ப்பாருள் கீர்த்தியறம்
இன்ன தென உணர்வே யில்லார்
அண்டினவர் தமைக் கொடுப்பா ர் அழிவழக்கே
செய்வதவர் அறிவுதானே

ஸாரி . இதை  கொஞ்சம்  ஸ்ட்ராங்காக,  சற்று விரசமாக கூட  எழுதியிருக்கிறார் கவிஞர்.  

பெண்டாட்டி  பேச்சுக்கு தலையாட்டுபவன் மனுசனா? குணம் கெட்டவன், முட்டாள், கருமி. விதவன்,(விதவைக்கு  ஆப்போசிட் ஆக எடுத்துக் கொள்ளவும்)  ஆம்பளையே இல்லை. அலி,  உலகத்தில் வீரம் தர்மம் , கம்பீரம் எதுவென்று தெரியாத அறிவற்றவன். அநீதிக்கு துணை போகிறவன்.  அவனிடம் உதவிக்கு போகிறவனை ஆழமாக குழியில் தள்ளுபவன்.....   (கவிஞருக்கு பெண்கள் மேல் என்ன கோபமோ, வார்த்தைகள் கடினமாக இருக்கிறது)

.ஆலகால விடத்தையும் நம்பலாம்
ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம்
கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடும் தூதரை நம்பலாம்
கள்ள வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே.

ஐயா, நான் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்,   இது அனுபவ அறிவுரை:
''ஆலகால கொடிய விஷத்தை கண்ணை மூடிக்கொண்டு நம்புங்கள்.  ஆழமான ஆற்றை நம்புங்கள், பெரும் சூறாவளி காற்றை தாராளமாக நம்புங்கள்.  மஹா பெரிய  மதம் பிடித்த யானையை நம்புங்கள், ஒன்றும் செய்யாது.  அட  யானையை விடுமய்யா.  வரிப்புலி இருக்கிறதே  அதை  வாடா தம்பி  என்று கொஞ்சி நம்புங்கள்,  கையில்  பாசக்கயிற்றை எடுத்துக்கொண்டு நாய் பிடிப்பது போல் உங்களை பிடிக்க வருகிறான்  எம தூதன் அவனை முதலில்  நம்புங்கள்,   திருடன் கொள்ளைக்காரன், குருவிக்கறான் எவனை வேணுமானாலும் நம்புங்கள், ஆனால் ஆனால் ஆனால்  சேலை கட்டிக்கொண்டு உங்கள் முன் நிற்கிறாளே , தெருவில் போகிறாளே , கண்ணில் படுகிறாள், சிரித்துக்கொண்டு... ஐயய்யோ , அவளை மட்டும் நம்பவே  நம்பாதீர்கள். அவ்வளவு தான்  நீங்கள்.....   ( இதை சினிமாவில் பழைய படத்தில்  TMS  பாடியிருக்கிறார். எந்த கவிஞன் கண்ணில் இந்த பாட்டு பட்டதோ, காசு பண்ணி விட்டான்).


இந்த மூன்று இப்போதைக்கு போதும்.  இன்னும் சிலது இருக்கிறது.  அது  பெண்கள் கோப ஜுரம் நிற்காவிட்டால் அடுத்த டோஸ்  நாளைக்கு தருகிறேன்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...