Friday, July 10, 2020

PESUM DEIVAM


பேசும் தெய்வம் J K SIVAN

அதிசயத்தின் மறு பெயர் மஹா பெரியவா . ''என்ன வாய் ஓயாமல் இருமுகிறீர்களே. உடம்பை தூக்கி தூக்கி போடுகிறதே'' என்று என் மேல் தரிசனமாக கேட்டவர் கல்யாணராமன். புதுக்கோட்டை பக்கம். பிசிக்ஸ் ப்ரொபஸர். ரிடையர் ஆகி ஏழெட்டு மாசம்.
இந்த இருமல் பற்றி அவர் கேட்டது இப்போது கொரோனா சமயத்தில் இல்லை. இப்பவாக இருந்தால் ஒரேயடியாக வீட்டை அடைத்துவிட்டு என்னை தூக்கிக்கொண்டு போயிருப்பார்கள். இது சில மாதங்கள் முன்பு. ''கல்யாணம், வயசானாலே இதெல்லாம் கூடவே வளருகின்ற விஷயம் தான். சாதாரண சுளுக்கு கூட எலும்பு முறிவாகிவிடும். வியாதிக்கு காரணமா வேண்டும்? எல்லாமே எதுவுமே ஒரு காரணம் தான். கொஞ்சம் கொஞ்சமாக ஆளை விழுங்குகிற விவகாரம் தான் நோய். அதைப்பற்றி அதிகம் கவலையோ லட்சியமோ பண்ணாமல் இருப்பது தான் விவேகம். இன்னிக்கு ஒரு பெரியவா பற்றிய பழைய சம்பவம் ஒன்றை நீங்கள் எழுதியதை உங்கள் பேரன் கொண்டு வந்து காட்டினான். படித்தேன். ஆச்சர்யமாக இருந்தது எதைப் பற்றி? மகா பெரியவாளின் ஞான திருஷ்டி பற்றி. '' ஓ அதிசயத்துக்கு டிக்ஷனரி மீனிங் என்ன தெரியுமா உங்களுக்கு? . மஹா பெரியவா. அடடா, அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒன்றா, இரண்டா? கடல் அளவு இருக்கிறதே. எத்தனையோ பக்தர்கள் அனுபவிச்சு சொன்னதே பத்து புஸ்தம் தலைகாணி தலைகாணியா எழுதற அளவுக்கு இருக்கே கல்யாணம் ' என்றேன். கை நீட்டி அவர் கொடுத்த அந்த XEROX காப்பி வாங்கி படித்தேன். ஆமாம் ஒரு அனுஷத்துக்கு என்னிடம் வந்து ஒரு நண்பர் கேட்டு நான் படித்ததை எழுதிக் கொடுத்த சம்பவம். கல்யாணம் படித்ததை நண்பர்களே உங்களுக்கும் மீண்டும் தருகிறேன். மகா பெரியவா விஷயம் எவ்வளவு படித்தாலும் திகட்டுமா என்ன? ++ இது பல வருஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒருநாள் காஞ்சி மடத்தில் ஒரு வயசான தம்பதிகள் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர். நகர்ந்துமுன்னேறி பெரியவா அருகே வந்ததும், நமஸ்கரித்தனர். பெரியவா அருகே வந்ததும் வெளியூரிலிருந்து வந்த அந்த மனிதர் நாலு பக்கமும் அமர்த்தலாக பார்த்தார். மிடுக்கும் கர்வம் கொப்புளித்து. செல்வ செழிப்பு கழுத்தில் சங்கிலி, காதில் வைர பளிச் கடுக்கன், . தங்கம் போர்த்திய ருத்ராக்ஷம் தங்க கம்பியில் கோர்த்து. உயர்ந்த ஜாதி ஜரிகை வேஷ்டி. கையில் விலையுயர்ந்த கடிகாரம். விரல்களில் வைர நவரத்ன மோதிரங்கள்... பட்டு அங்கவஸ்திரம் இடுப்பில். கையில் ஒரு தட்டில் பழங்கள் கல்கண்டு முந்திரி பருப்பு. பெரியவாளின் எக்ஸ்ரே பார்வை அவர் மேல் பட்டது. அந்த மனிதர் பேசினார்: "பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து. ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்......னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்" பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி. ''ஏன் இந்த முடிவு உனக்கு?'' ''எதிலுமே பிடிப்பு இல்லை பெரியவா'' " என்ன சொல்றே நீ. உன் வாழ்க்கையிலே ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?" "ஆமா........." "எதாவது கார்யம் குடுத்தா பண்ணுவியா?" "உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்" ''உம்.' பெரியவா அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு மற்றவர்களை கவனிக்கலானார். '
ஜாடை காட்டியதில் பக்கத்தில் இருந்த மடத்து சிப்பந்தி இந்த தம்பதியரை ஒரு ஓரமாகச் சென்று நிற்க வைத்தனர். அவரை அப்படியே கொஞ்சம் பக்கமாக நகர்ந்து நிற்க வைத்து விட்டு ஒரு மணி நேரம் பெரியவா யார் யாரோ வந்தவர்களை எல்லாம் பார்த்து கவனித்து அனுப்பினார். வரிசையில் இன்னொரு தம்பதியிடம் பெரியவா குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார். அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள். "இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........." கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த '' பிடிப்பு இல்லாத " வெளியூர் மாமா நெளிந்து கொண்டே நின்று கொண்டு இதையெல்லாம் இத்தனைநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "நீ தானே ''எனக்கு பிடிப்பு இல்லை ...வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும். செய்வியா " "செஞ்சுடறேன். செஞ்சுடறேன்" என்று ''பிடிப்பு'' கீழே விழுந்து மகா பெரியவாளை வணங்கினார். திடீரென்று பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். ''பிடிப்புக்கு'' புரிந்தது........ "ஆமா,பெரியவா. இவ என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவிரமான மாறுதல்! "சரி........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............." "இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி ''அது'' தெரியும்? ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியாக வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............." ''பிடிப்பு''க்கு துக்கத்தால் குரல் அடைத்தது. "ம்ம்ம்ம்... பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ. இந்த பொண்ணுதான் ...ஒன்னோட காணாமப் போன சொந்த மூத்தாளுக்கு பிறந்த பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி! ''என்னது? இது சத்யம்... சத்யம்! அந்த பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்! அதிசயம் ஆனால் உண்மைதான்! பல வருஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும்,விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே அழைத்துச் சென்று வளர்த்து வருவதாக கூறினார்கள். மஹா பெரியவா என்ற தெய்வத்தின் சக்தியால் அனுக்கிரஹம் பெற்ற அந்த பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு தம்பதிகளும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.
இது நடந்ததா, இப்படி நடக்குமா, கதையில் தானே இப்படியெல்லாம் வரும் என்று நமது கொசு மூளையை கசக்கிக் கொள்ளவேண்டாம். தெய்வத்தின் மனித அவதாரத்துக்கு தெரியாமல் எதுவும் இருக்க முடியாது. ஆச்சர்யங்கள் அதிசயங்கள் எல்லாம் கூட எங்கோ யார் வாழ்விலோ நடந்தவை தான். இது ஒண்ணுமட்டும் இல்லை கல்யாணராமன். இது ஆயிரம் லக்ஷத்திலே ஒண்ணு.'' நிறைய பேர் தங்கள்குடும்பத்தில் நடந்த மஹா பெரியவா அனுபவத்தை வெளியிலே சொல்றதில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...