Friday, July 24, 2020

SELF MEDICATION



       
    இதை  படிக்காமல் விடவே  கூடாது.   J K  SIVAN

யாரும்  சுப்பண்ணாவை  பின்பற்றாதீர்கள்.   நூறு வயது வாழ்வது எப்படி என்று புத்தகம் வாங்கி  பிரவுன் அட்டை போட்டு குங்குமம் சந்தனம் தடவி அலமாரியில் வைத்திருந்தான். அதில்  ஒரு பக்கம் கூட இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை..  அதற்க்குள்  அவசரமாக  தானாகவே  வைகுண்டமோ, கைலாசமோ, நரகமோ சென்றுவிட்டான்.  52 வயது அடுத்த மாதம் முடிகிறது.

ஏன் சுப்பண்ணா  மறைந்தான்?  ஒன்றா இரண்டா எத்தனையோ தப்புகள் பண்ணுவான்.  ஒரு சில சொல்கிறேன். கவனமாக  அதை செய்யாதீர்கள்.

நிறைய டாக்டர்களிடம் ஒரே சமயம் போவான். அது தப்பு.  ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சிலவேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.
சுண்டுவிரலில்  சுளுக்கு என்றாலும்  பெயின் கில்லர், வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விழுங்குவான்.  அது குடல் புண்ணுக்கு விருந்து வைக்கும்.

தனக்கு என்ன நோய், அதற்கு எது மருந்து, அதன் தன்மை என்ன, பக்க விளைவு உண்டா, என்று கூகிள் மாமாவை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

சொந்தமாகவே  நண்பன் பார்மசியில்  மாத்திரை வாங்கி விழுங்குவான். டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் எந்த மருந்தும் சாப்பிடவோ, குடிக்கவோ  கூடாது.  உயிரைக் குடித்துவிடும்.  

சிலருக்கு  சில மருந்துகள் கொடுக்க கூடாது.  கூட சிலதை சேர்த்து கொடுக்கவேண்டும்.  மருந்தின் அளவு  வயது எடைக்கு தக்கபடி மாறும்.  அம்மா சாப்பிட்டாள்  என்று அத்தைக்கு அதே அளவு கொடுக்க கூடாது. கட்டை நீட்டிவிடுவாள்.

ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரை குறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.  அதேசமயம்  எதற்கெடுத்தாலும்   ஆன்டி பயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுப்பதால்  பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல் படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன.

மருந்துகள் டானிக் ஊட்டச்சத்து அல்ல. தேவையின்றி உடலில் ஏற்றிக் கொள்ளக் கூடாது.

இங்கிலிஷ் மருந்து அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நீங்களாக சாப்பிடாதீர்கள்.

நோயாளிக்கு  தெரிந்தது நோய்க் குறி மட்டும்  தான்.   அதை வைத்து ருந்தை தீர்மானிக்கக் கூடாது. ஒரு மருத்துவர் சரியாக ஆராய்ந்து, சில பரிசோதனைகள், செய்து நோயை தீர்மானித்து அப்புறம் அதற்கான மருந்து சாப்பிடவேண்டும்.

 காலாவதியான மருந்துக்களை தூக்கி எறிந்து விடுங்கள். ஒரு முறை  ஓபன் பண்ணிய, திறந்த குப்பி மருந்துகளை நீண்ட நாள் உபயோகிக்ககூடாது. குளிர் பதன பெட்டியில் வைத்தால் கூட இரு வாரங்களில் செயல் திறன் இழக்கும் .

மருந்து கொடுக்க சமையல் கரண்டிகள்  வேண்டாம்.  அளவு மாறிவிடும். . ஒருவர் உபயோகித்த மருந்தை இன்னொருவருக்குக் கொடுக்க கூடாது.   வரட்டு இருமலுக்கு கொடுத்த மருந்தை சளி இருமலுக்கு கொடுக்க கூடாது. சளியை வெளி்யேற்ற வேறு மருந்து உண்டு.

எப்போதோ  ஜுரம் வந்து   உபயோகித்த ஆன்டி-பயாடிக் மாத்திரைகளை அடுத்த தடவை ஜுரம் வந்தால்  கொடுக்காதீர்கள்.  சில மருந்துகளின் பலன் உடனே தெரிவதில்லை. நோய் சீக்கிரம் குணமாக வேண்டி அதிக அளவு மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியும். குடல் புண்ணாகி விடும்

அனேக ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது பின்  தான்  சாப்பிட வேண்டும்.

மருந்தை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடாமல் தண்ணீருடன் மட்டுமே சாப்பிடவும்.

மருந்துக்கள் குழநதைகள்  கை எட்டும்படி வைக்க வேண்டாம். மற்றவர்களின் மருந்துகளுடன் சேர்த்து வைக்க கூடாது.

ஏற்கனவே எதாவது மருந்து சாப்பிட்டுக்கொண்டு வந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள் . அதற்கேற்றபடி  மருந்துகள் தருவார்.

ஒரே சமயம்  பல  மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள்.  பல்வலிக்கு பல் டாக்டர் ஒரு வலி நிவாரணி எழுதி தந்து அதை சாப்பிட்டு வரும்போது, மூட்டு வலி  டாக்டரின் போனால்  அவர் கொடுக்கும் வலி நிவாரணி மருந்தும் ஒரே சமயம் வாங்கி  சாப்பிட்டால்  உடம்பில் மருந்து ஓவர் டோஸ் ஆகிவிடும்.  அப்புறம் சுப்பண்ணா தான்.

டாக்டர்  கொடுக்கும் மருந்தை  அதே  அளவில் அதே நேரத்தில் சாப்பிடவும். கொஞ்சம் நோய்  குணம் என்று கருதி  பாதியில் மருந்துக்களை நிறுத்தக் கூடாது.

டாக்டர்  உப்பு குறை, கத்திரிக்காய், முருங்கைக்காய் வேண்டாம், ஆரஞ்சு தக்காளி  சாப்பிடு என்றால் அதை நல்ல பிள்ளையாக கேட்கவேண்டும். வெறுமே தலை மட்டும் ஆட்டிவிட்டு ஆறு  அடை சாப்பிடுவது ஆபத்தில் முடியும். .

கூடுமானவரை  ஊசி வழியாக  உள்ளே செலுத்துவதை விட வாய் வழி மருந்து விழுங்குவது தான் பாதுகாப்பு.

டாக்டர்  எழுதிய மருந்தை வாங்கி அவரிடம் ஒருமுறை காட்டிவிட்டு  சாப்பிடுவது நல்லது. போலி மருந்துகள் நிறைய மார்க்கெட்டில் உள்ளன.ஜாக்கிரதை. .

விலையுர்ந்த சில கம்பனி மருந்துக்களை டாக்டர் எழுதித்தந்தால் அதற்கு நிகரான ஜெனெரிக் மருந்துகள் உண்டா? என்று கேளுங்கள். ஜெனெரிக் மருந்துகள் பொதுவாக மிகவும் விலை குறைவாக கிடைக்கும். இரண்டிலும் ஒரே மருந்து தான் இருக்கும். உதாரணமாக "பனடால்” என்ற காய்ச்சல், வலி நிவாரண மாத்திரைக்கு நிகரான ஜெனெரிக் மாத்திரை "பேராசிட்டமால்". பனடாலில் இருப்பது பேராசிட்டமால் தான். இது பெரும் பணத்தை மிச்சப்படுத்தும்.

 மூன்று வேளை மாத்திரை சாப்பிடச் சொன்னால் செலவு  மிச்சம் பிடிக்க  ரெண்டு வேளை மாத்திரை போதும் என்று  தானாக  முடிவெடுப்பது ஆபத்து.

இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு தொடர்ந்து நீங்கள் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவரிடம் கேளாமல் திடீரெனெ நிறுத்துவது ரொம்ப  தப்பு.  ஆபத்து. .

மூன்று வேளை  மருந்தில் ஒரு வேளை  சாப்பிட தவறிவிட்டால், அடுத்தவேளை சேர்த்து  சாப்பிடக்கூடாது.

இதற்கெல்லாம் மேலே  டாக்டர் கிருஷ்ணனை வேண்டிக்கொள்ளுங்கள், எனக்கு வியாதி வரவேண்டாம். வெளியே எதையும் சாப்பிடமாட்டேன்,  மாதத்தில் ஒருநாள் உபவாசம், ஏகாதசி, கிருத்திகை, சஷ்டி,பின்பற்றுவேன்.  ஒவ்வொருவேளையும்   குறைத்தே சாப்பிடுவேன் அதிகம்  உணவு மேல் பாசம்  ஆசை வைக்கமாட்டேன்.  உண்பதை விரும்பி, உடம்புக்கு ஏற்றதாக, ருசியை பார்க்காமல் சாப்பிடுவேன் என்று உறுதி கொண்டால்  நல்லது.  பசித்தால் மட்டுமே சாப்பாடு நல்லது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...