Monday, July 13, 2020

THEVITTADHA VITTALA



                                   குதிரை வீரன்    J K  SIVAN 


சிவாஜி   போஸ்லே  என்றால் யாருக்கும் தெரியாது. சிவாஜி மஹாராஜா என்றால் குழந்தைக்கு கூட தெரியும். நாம் செய்த புண்யத்தால்  பாரதத்தாய் பெற்ற  இணையற்ற வீர மகன்.  ஒரு மராத்திய வீர புருஷன். சிவாஜி ஹிந்து வெறியன் அல்ல. அவருடைய ஒன்றரை லக்ஷம் வீரர்கள் படையில் பாதிக்கு மேல் முஸ்லிம்கள்!. சிவநேரி என்ற கோட்டையில் பிறந்ததாலும், குலதெய்வம் சிவை என்பதாலும்  அவருடைய  தாய்  ஜீஜாபாய்  அவருக்கு  சிவாஜி என்று பெயர் வைத்தாள் . 


தனது மராத்திய சாம்ராஜ்யத்தை பாதுகாக்க சிவாஜி மேற்கொண்ட  தந்திரம், சாமர்த்யம், திட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இளம் வயதிலேயே, பாலகனாக இருந்தபோதே சிவாஜி ஒரு கோட்டையை கைப்பற்றினார்.  நன்றாக செயல்படும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட படை எவ்வளவு அவசியம் என்று தெரிந்து, தனது வீரர்களை பழக்கி அனுபவங்கள் கொடுத்து ஒரு சக்தி வாய்ந்த படையைக் கொண்டவராக இருந்தார்.    தனது எதிரியாக இருந்தாலும் ஒளரங்க சீப்புக்கு உதவ முன்வந்தவர்.

பலம் வாய்ந்த எதிரி அப்ஸல் கானை புலி நகங்கள் அணிந்து அவன் துரோகமாக தன்னைக் கொல்லும் முன்பு தனி ஒருவனாக அவனை தீர்த்து கட்டிய தைரியசாலி. முள்ளை முள்ளாலே தானே எடுக்கமுடியும். கடலை ஒட்டி கோட்டைகள் கட்டி இயற்கை அரணை உபயோகித்துக் கொண்ட புத்திசாலி.  அவரது வீரம் புத்தி கூர்மை முகலாய அரசர்களை யும், அடில் ஷா வம்சத்தினரையும், நவாப், சுல்தான் களையும் வெற்றி கொள்ள செய்தது.     எல்லோரிடமும் அன்பும் பண்பும் கொண்ட அவரது குணம் அவருடைய வெற்றிக்கு அவரோடு கூட இருந்தவர்களின் ஒத்துழைப்பை கொடுத்தது.

அனைவருடனும் சேர்ந்து இருக்கும் குணம் எல்லோரையும் அவரோடு இணைத்தது. தர்ம தானங்கள் நிறைய செயது எல்லோர் மனதையும் கவர்ந்தார். புராதன சின்னங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் எதையும் அவர் எதிரிகள் அழிக்க விடாமல் காப்பாற்றியவர்.அவர்களை நெருங்க விட வில்லை.

சிவாஜி பெண்களை மதித்தவர். இஸ்லாமிய, பிறமத பெண்களை சிறைபிடிக்கவோ துன்புறுத்தவோ இல்லை. அவர்களை பாதுகாத்தவர். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்ற தடை விதிக்கவில்லை. ஹிந்து மதத்தை அழிக்கவோ, ஆலயங்கள், விக்ரஹங்களை சிதைக்கவோ துணிந்தால் அவரது வாள் பேசும்.  அதில் துளியும் இரக்கம் காட்டாதவர்.  தைர்யம், உதார குணம், கருணை உள்ளம் எல்லாம் அவரது தாய் ஜீஜா பாயிடமிருந்து தான் அவருடைய  குணங்களாகியது.   அந்த சிவாஜி  பாண்டுரங்க பக்தன்.  சமர்த்தராமதாஸ் சீடன்.   எழுந்து நின்று ஒருமுறை சிவாஜியை மனதார  நினைத்து வணங்குவோம்.  

''உனக்கு   துக்காராம் தெரியுமா?''  என்று குருநாதர் கேட்டபோது  ''தெரியாதே  குருநாதா'' என்கிறார் சிவாஜி.  '

'தேஹு என்கிற கிராமத்திற்கு போ  அவரை தரிசித்து விட்டு வா. அப்புறம் அவரைப் பற்றி என்னிடம் சொல்லு''

ஒருநாள் காலை  குதிரை மீது  நீண்ட பயணம் கொண்ட சிவாஜி தேஹு கிராமத்தை மாலை அடைகிறார்.  ஒரு பழைய  ஓலைக்கொட்டகை. அது தான் ஆஸ்ரமம். உள்ளே  நுழைகிறார்.  துக்காராம்  பாண்டுரங்கன் பஜனையில்  ஈடுபட்டிருக்கிறார். எதிரே சில பக்தர்கள்  அமர்ந்திருக்கிறார்கள். 

தலைகள்  ஆனந்த பக்தி பரவசத்தில்   ஆடின.  சிறிய அந்த  கூடத்தில் விட்டலன்  இடுப்பில்  கையோடு துக்காராமின் அபங்கத்தில்  திளைத்துக்  கொண்டிருந்தான். முகலாய சாம்ரஜ்யத்திற்கே  சிம்ம சொப்பனமாக  இருந்த  மகாவீரன் சத்ரபதி  சிவாஜி மகாராஜாவும்  அந்த  கூட்டத்தில்  தன்னை மறந்து அவர்களோடு  சேர்ந்து  பாடிக்கொண்டு  விட்டல்  நாம சங்கீர்த்தனத்தில்  மூழ்கிகொண்டிருந்த போது அவருடன் வந்த   ஒரு ஒற்றன் , மெதுவாக  கூட்டத்தில்  இடித்து முன்னேறி  சிவாஜி அருகில்  அவர்  காதில்  ஒரு சேதி சொன்னான்.  முகலாயர்  படை  வந்துகொண்டிருக்கிறது.  நீங்கள்  இங்கிருப்பதை   எப்படியோ   தெரிந்து   வந்து கொண்டிருக்கிறார்கள். 

சிவாஜி  சற்று யோசித்துவிட்டு  எழுந்து மெதுவாக  துக்காராம் அருகே செல்கிறார். கைகட்டி மெதுவாக பேசுகிறார். 

"துக்காராம்  சுவாமிஜி,   இந்த  இடத்தின்  தூய்மையும்  அமைதியும்  கெட  விரும்பவில்லை.  நான்  உடனே  புறப்படுகிறேன்."

"மகாராஜ்,   விடோபாவின்  அபங்கத்தில்  பாதியில் நிறுத்தி  வெளியேற கூடாது.  முடியும்  வரை  சற்று காத்திருக்கலாமே."  

தன்னுடைய  உயிருக்கு வந்த  ஆபத்தை எப்படி அந்த நேரம்  துக்காராம் ஸ்வாமிகளுக்கு தெரியப்படுத்துவது.  பக்தியில் திளைத்துக்கொண்டிருக்கிறாரே?. 

''  கேவலம் என் உயிர் ஒரு முக்கியமான விஷயமா அவர் அமைதியை பக்தியைக்  கெடுக்க ?''

"அவ்வாறே  சுவாமிஜி"  என்றார்  சிவாஜி. 

 விட்டல் அபங்கத்தில்  ருசியும்,  தன்னுயிர் போகும்போது  இறைவன்  நாமத்திலே போகட்டுமே  என்ற எண்ணம் தான்  சிவாஜிக்கு. எந்த எதிர்ப்பும்  இல்லாமல்  முகலாயர் படையிடம்  தன்னை ஒப்புவித்தால்  மற்ற பக்தர்களுக்கு  எந்த  இடையூறும்  இருக்காதல்லவா."   சிவாஜி  மீண்டும்  அபங்க  பஜனையில்  கவலையின்றி  ஈடுபட்டார்.

தேஹு  ஊர்  எல்லையில் என்ன நடந்தது?   
முகலாய படைத் தலைவன்  குதிரைப் படையுடன் 2000  ஆயுதம் தாங்கிய  வீரர்களோடு   ஊருக்குள்   நுழைந்தான்.  வெகுகாலமாக  பிடிக்க  முடியாத  சிவாஜி   தேஹூவில்   இன்று  வசமாக சிக்கிக்கொண்டான்.   இன்று  கட்டாயம்  உயிரோடோ  அல்லது  பிணமாகவோ   அவனைப் பிடிப்பது நிச்சயம்.    

ஆனால்   ஊர்  எல்லையிலேயே தக்க  தருணத்தில்  சிவாஜியின்  படை  அவர்களை  எதிர் பார்த்து  காத்திருந்தது.  அவர்கள் நடுவே  ஒரு  குதிரையின்  மேல்  சிவாஜி  உருவிய  வாளுடன் கண்கள் கோபத்தில் சிவக்க   அவர்களை  மோதி  மின்னல் வேகத்தில் தாக்கி  அழிப்பதை கண்டு  அனைத்து  முகலாய  படைகளும்  சிவாஜியின்  குதிரையை மட்டுமே  குறி வைத்தன.   விரைவில்  தனி ஒருவனாக  அவர்களை  எதிர்ப்பது  அறிவின்மை  என்று  உணர்ந்த  சிவாஜி தன்  படை வீரர்களை  காப்பாற்ற,  அவர்களிட மிருந்து  விலகி    மலைகள் நிரம்பிய  காட்டுப்பாதையில்  குதிரையை  விரட்டவே  அவரைப்   தொடர்ந்து  முகலாய வீரர்கள் சென்றனர் . 

மின்னல்  வேகத்தில்  செல்லும்  சிவாஜியை  எவ்வளளோ  முயன்றும்  சுல்தான்  படை  நெருங்க முடியவில்லை. நேரம்  நழுவியது.  சூரியன் அஸ்தமனம்  ஆகும்  சமயம்.  

சிவாஜிக்கு  மலை எலி  என்று  பெயர்.  அந்த  பகுதியின் அனைத்து  மலைதொடர்களும்  அத்துபடி. அதன்  கணவாய்கள்,  குகைகள்  அனைத்தும்  அறிந்த  சிவாஜி  எங்கு  சென்றார்  எப்படி மாயமாக  மறைந்தார்  என்று  தெரியாமல்  ஏமாற்றத்தோடு  படை வீரர்கள்  திரும்பி சுல்தான் முன்  தலையை  தொங்க போட்டுகொண்டு நிற்க

" வெட்கமாயில்லை! நீங்கள் எல்லாம்  வீரர்களா? 2000  பேர்  சிறந்த  குதிரை படை  வீரர்கள்  என்று  சொல்லிக் கொள்கிறீர்கள்,  ஒரு தனி மனிதனைப்   பிடிக்க  யோக்யதை இல்லை   அவமான சின்னங்களா"   என்று  திட்டினான்  சுல்தான் தளபதி. 

தேஹு  துக்காராம் ஸ்வாமிகள் ஆஸ்ரமத்தில்  அபங்கம்  முடிந்து  அனைவரும்  பிரசாதம்  பெற்று சந்தோஷமாக  அந்த  பஜனை கூடத்திலிருந்து  வெளியேறினர்.  சிவாஜி  துக்காராம்  காலில்  விழுந்து வணங்கி எழுந்தபோது  முன்பு வந்த  அதே  ஒற்றன்  ஓடோடி வந்து சிவாஜி எதிரில் அவரை  ஏற  இறங்க பார்த்தான்.  

''மகாராஜ்,   உங்கள் வீரத்தின் முன்  முகலாய படை சுருண்டு ஓடி  எங்கோ  மலைப்பாதையில்  சென்று விட்டது.  உங்கள்  குதிரையை  அவர்களால் பிடிக்க முடியவில்லை. எப்படி அதற்குள்  இங்கு  வந்துவிட்டீர்கள்.  நீங்கள்  மின்னலைக்   காட்டிலும்  வேகமான தலைவர்”  என்று  புகழ்ந்தான். 

 சிவாஜி  திகைத்தார்.   '' நான் முகலாயர் படையோடு  எதிர் நின்று  அவர்களை விரட்டினேனா?''   சிறந்த புத்திசாலியான சிவாஜிக்கு நடந்தது புரிந்துவிட்டது. 

அவரது  இரு கரங்களும்  விட்டலனை  வணங்கின.  கண்களில்  கண்ணீர்  பெருக்கு  நன்றி பெருக்காக வழிந்தது.    

விட்டலன்  இடுப்பில்  கைகளை ஊன்றி அவரைப் பார்த்து   சிரித்தான்.  அவனைத்தான்  சிவாஜி ரூபத்தில் குதிரை வீரர்கள் இன்னமும்  மலைகளுக் கிடையில்    தேடிக் கொண்டி ருக்கிறார்களே!  .  
நம்பினார்  கெடுவதில்லை.  (எனது  ''தெவிட்டாத விட்டலா''  என்ற  100 பாண்டுரங்கன் கதைகள் கொண்ட புத்தகத்தில் இதை முதல் கதையாக எழுதினேன். அதுவே  ஆங்கிலத்தில் ''VITOBA THE  NECTAR '' என்று ஆங்கில புத்தகமாகவும் வெளி வந்தது.)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...