Saturday, April 27, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்    J K  SIVAN 
பகவத் கீதை 

                                                
          செயலாலும் செயலின்றியும்  சுகானுபவம்

எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை சொல்வது  ரொம்ப  சௌகர்யம்.   சுலபமும் கூட.  அப்படிப்பட்ட  ஒரு விஷயம் சொல்லட்டுமா.  புத்தர், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர்,  காஞ்சி பெரியவா

பரமாச்சார்யார், ராகவேந்த்ரர் போன்றவர் படங்களை வீட்டில் வைத்து இருந்தாலே அவர்களை பார்க்கும்போது, மனதில் ஒரு புத்துணர்ச்சி ஈடுபடுவதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் அந்த ஆனந்தம். எத்தனையோ வருஷங்களுக்கு முன் இருந்த ஞானிகள் அவர்கள்.  அவர்களை பற்றி நாம்  பார்க்கும்  படங்கள் கூட  அநேகமாக  யாருடைய கற்பனையோ.  ஏனென்றால்  தத்ரூபமாக  காட்டும்  புகைப்பட  கருவி இல்லாத காலம்.  யாரோ ஒரு  ஓவியன்  பார்த்து  வரைந்த சித்திரமா, கேட்டு, தெரிந்து, அறிந்து தன்னுடைய சுய  விருப்பத்தில் வரைந்த உருவமா என்று சொல்லக்கூட வழியில்லை.  அப்படி இருந்தும்  எனினும்  அந்த  ஓவியங்களும், வரைந்த படங்களுக்கும்  பரம  சக்தி இருக்கிறது.  நம்முடைய மனதில் ஒரு பலத்தை, புத்துணர்ச்சியை, நம்பிக்கையை வளர்க்கிறது.    சாதாரண  படம், புகைப்படம், இதைப் பார்க்கும்போதே இத்தனை  புனிதம் நம்முள் தோன்றுகிறதே. அவ்வளவும் பக்தி அன்பு . அந்த துறவிகள் கர்மம் தொலைந்தவர்கள். அகர்மாவில் சிறந்தவர்கள். கர்மம் எதுவுமே செய்யாமல் எல்லாக் கர்மங்களையும் செய்தவர்கள். சன்யாசிகள். யோகிகள். 

ஆஹா    இத்தகைய மகான்களை நேரில் சந்தித்தால்  எத்தனை புண்யம் நமக்கு கிடைத்திருக்கும். நம் முன்னோர்கள்  அதனால் தான்  பாக்கியசாலிகள்.

தாயுமானவரின் குரு மௌனகுரு சுவாமிகள் முன்பு  தாயுமானவர் அடிக்கடி நின்று  உபதேசம் செய்ய காத்திருந்தார்.  பலநாள் பதில் சொல்லாத  குரு, ஒருநாள்  ''சும்மா இரு'' என்று உபதேசம் செய்தார்.  சும்மா   இருத்தல் சுகமே என்று நிறைய  பாடல்கள் தாயுமானவர் எழுதிஇருக்கிறார்.  சும்மாயிருத்தல் முடியாத காரியம்!   தாயுமானவரின்  ரெண்டு   ''சும்மா இருத்தல்''  உபதேசம் பற்றிய  பாடல்கள் மட்டும் சொல்கிறேன். அப்புறம்  கீதை தொடர கால தாமதமாகும்.

''தேகச் செயல்தானுஞ் சிந்தையுட னேகுழையில்
யோகநிலை ஞானிகளுக் கொப்புவதோ-மோகநிலை
அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீயற்ற
எல்லையிலே சும்மா இரு''

அம்மாஈ ததிசயந்தான் அன்றோ அன்றோ
      அண்டநிலை யாக்கிஎன்னை அறிவாம் வண்ணஞ்
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே
      சுகமயமாய் இருப்பதல்லாற் சொல்வான் என்னே. .

ஏதாவதொரு கர்மத்தில் ஈடுபட்டு, அதில் மனமும் பூரணமாக கலந்து, கர்மம் செய்கிறோம்  என்ற  நினைவே  அழிந்து  சுகானுபவத்தில் இருப்பது தான்  சுலபம்.   உடனே  முடியாவிட்டாலும் போகப் போக  இது சாத்தியம்.  இது தான்  ''செய்தும் செய்யாமல்' இருக்கும்  கர்மயோகம்.  இதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தவே திரும்பவும்  ஒரு கதை சொல்கிறேன்.

பாண்டுரங்க பக்தர்  ஸ்ரீ ஞானதேவுக்கு சாங்கதேவ்  ஒரு கடிதம் எழுத துவங்கினான்.  யோசித்தான். .  எப்படி ஆரம்பீப்பது?  ஸ்ரீ மான்..... .. இல்லை இல்லை. ஞானதேவ் வயதில் சிறியவர்... ஏன் இப்படி ஆரம்பித்தால்  ''சிரஞ்சீவி......''  ச்சே ச்சே. வயதா முக்கியம்?  எவ்வளவு ஞானஸ்தர்..    அவருக்கு நான் பெரியவன் போல் காட்டிக்கொண்டு    ஏதோ  ஆசீர்வாதம் பண்ணுவது போல்   இப்படி எழுதலாமா?.
 கடைசியில் வெறும்  வெற்றுக் காகிதம் மட்டுமே  ஞானதேவுக்கு சென்றது.  அதை பார்த்த முக்தாபாய், நிவ்ரிதி நாத்  ஆகியோர், ''என்ன இந்த சாங்க தேவ்  இவ்வளவு பெரிய ஆளாக இருந்தும்  வெற்று ஆளாக இருக்கிறானே'' என்று தான் நினைத்தார்கள்.  ஞானதேவ் அந்த வெற்று  காகிதத்தை பார்த்தார்.  ''முழுதும் படித்து'' விட்டு   சாங்கதேவுக்கு  65  விருத்தங்கள் கொண்ட பதில் எழுதினார் . (சாங்கதேவ் பாசஷ்டி'' என்று மராத்தியில் இது  ரொம்ப  பிரபலமானது). 

இதை  எதற்கு சொல்கிறேன் என்றால் எழுதியதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். எழுதாததை படிக்க ஞானம் தேவை.  மௌனம் அப்படிப் பட்டது.  'சர்வார்த்த சாதகம்''.  அதேபோல். கர்மம் செய்யாமல் செய்வது கஷ்டமானது. அது தான் ''சும்மா   இருத்தல்''.    எனவே  கிருஷ்ணன்  அர்ஜுனனுக்கு சொல்வது  இரண்டு முறைகளும்  அதாவது  கர்ம யோகமும் சன்யாச யோகமும் ஒன்றே.   ஒருகோட்பாடு  (formula)  நினைவில் கொள்வோமா?      ஞானம் +கர்மம் = ஞானம் + கர்மமின்மை.

ஆழ்வார்  திருவாய் மொழியில்      

 ''நன்றாய்  ஞானம் கடந்து போய்,  
          நல்லித் திரியும்  எல்லாம் ஈர்த்து,  
ஒன்றாய்க் கிடந்த  அரும் பெரும் பாழ், 
        உலப்பில் அதனை  உணர்ந்துணர்ந்து, 
சென்றாங்கு இன்ப துன்பங்கள், செற்றுக் 
     களைந்து பசையற்றால்,  
அன்றே அப்போதே வீடு,  அதுவே  வீடாமே'' . 

சர்வ சங்க பரித்யாகம்  செய்து,  இன்ப துன்பம் எல்லாம் ஒட்டாமல், எல்லாமே  ஒன்றான  அறிய பெரிய  பரந்த வெளியில் உணர்வு கொண்டவன் அங்கேயே  அப்போதே முக்தி அடைந்தவன்! என்கிறார் ஆழ்வார்.

இனி அர்ஜுனனுக்கு  கண்ணன் உரைத்த  கீதையின்  ஆறாம் அத்தியாயத்தில் அடியெடுத்து வைப்போம். ஒரு வார்த்தை.  கீதை புரிவது எளிதல்ல. மெதுவாக சிந்தித்து பொருள்  உணர்ந்தால், அது கெட்டியாக சிமெண்ட் போட்ட தரை மாதிரி மனதில் ஒட்டிக் கொள்ளும்.  சிமெண்ட் ஈரம் காய அவகாசம் கொடுக்க வேண்டாமா?

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...