Wednesday, April 10, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்      J K SIVAN 

மஹாபாரதம்                                       
                                 
                                கர்ணனும் கண்ணனும் 

பாண்டவர்களுக்கு  நீதி கேட்டு  நெடும் பயணமாக  ஹஸ்தினாபுரத்துக்கு வந்து கிருஷ்ணன்  இனி துவாரகைக்கு திரும்பவேண்டும்.

கிருஷ்ணன் ஊர் திரும்புவது  மழை மேகங்களுக்கு பிடிக்கவில்லையோ?  கண்ணீர் துளிகள் போல்  விடாமல்  நீர்த்துளிகள்  சிறு சிறு தூறலாக  பெய்து கொண்டே இருந்தது.   கிருஷ்ணன் தேரில் ஏறுவதற்கு முன் மின்னல் போல் அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.   ''ஆம்  மிக முக்கியமான இதை எப்படி  தள்ளிப் போட முடியும்? என்று  தனக்குத்  தானே  முணுமுத்துக்கொண்டான் கிருஷ்ணன். அதன் விளைவை சிந்திக்கும்போது ஒரு புன் சிரிப்பு  அவனது  இதழ் ஓரத்தில் தோன்றியது. 

''என்ன கிருஷ்ணா  யோசிக்கிறாய். கிளம்பலாமா?  என்றான்  சாத்யகி.

''இல்லை சாத்யகி, ஒரு முக்கியமான வேலை பாக்கி இருக்கிறது. நொடியில் அதை முடித்து விட்டு வரும் வரை காத்திரு '' என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் விடுவிடு வென்று ஹஸ்தினாபுரம் அரண்மனைக்குள் ராஜ மாதா தங்கியிருக்கும் பகுதிக்கு நடந்தான்.  

குந்தி தேவி அவள் அறையில் இருந்தாள்.  கண் மூடி  த்யானத்தில் இருந்தவள் முன் கிருஷ்ணன் நின்றான்.
''ஹா  கிருஷ்ணா,  உன்னை அல்லவோ நினைத்துக் கொண்டிருந்தேன். ப்ரத்யக்ஷமாகி விட்டாயே''
''ஓஹோ அப்படியா  அத்தை, என்னை எதற்கு நினைத்தாய்?''
''கிருஷ்ணா,  எங்களை காத்தருள்பவன் அல்லவா நீ. உன்னை நினைக்காமல் ஒரு கணமாவது என்னால் வாழமுடியுமா? . நீ  அவசர  ராஜாங்க விஷயமாக  வந்திருக்கிறாய்  என்று தெரிந்தும் உன்னோடு ஒரு சில நேரமாவது கண்டு பேசலாம் என்று ஆசைப்பட்டேன். ராஜாங்க விஷயமாக வந்தவனுக்கு  என்னை சந்திக்க நேரம் இருக்குமோ இல்லையோ என்று சந்தேகமாக இருந்தது.'' 

''அத்தை  நான் வந்த காரியம் முடிந்தது. உன்னை ஒரு நிமிட நேரமாவது பார்த்து வணங்காமல் போவேனா. சொல்?   நான் போய் வரட்டுமா?''

''கிருஷ்ணா, எனக்கு  இப்போதெல்லாம்  காரணம் புரியாமல்  ஏதோ ஒரு  மிகப்பெரிய வெள்ளத்தில் நாங்கள் எல்லோரும் மூழ்கி அடித்துச் செல்லப்படுவது போல் அடிக்கடி தோன்றுகிறது. மிகப் பெரிய உற்பாதம் ஒன்று பயங்கரமாக  நடைபெறப் போகிறது. உறவு பகை எல்லோருமே அழிவோம் என்ற ஒரு பயம் ஒன்று அடிக்கடி வந்து வாட்டுகிறது.  உறக்கத்தை அலறுகிறேன்.  உடல் நடுங்குகிறது.  அப்போதெல்லாம் உன்னை நினைக்கும்போது  சற்று  தெம்பு வருகிறது.   அரசவையில் நடப்பதெல்லாம் அரசல் புரசலாக  காதில் விழுந்தது. 
 யுத்தம் நிச்சயம்  வரும்  என்று அறிந்தேன்.  சமாதானமாக ஒற்றுமையாக வாழ வழி இல்லை என்று தெரிந்ததும் மனம் வாடுகிறது.  ஒரு தாயாக என் மக்களுக்கு நான் தைரியம் ஊட்ட வேண்டும். எனவே நீ யுதிஷ்டிரனிடம் நான் விதுலாவை போன்று அவனுக்கு  தைர்யம் சொன்னதாக சொல்''

''அது யார் அத்தை விதுலா என்று சிரித்துக் கொண்டே கேட்டான் கிருஷ்ணன்.

''சொல்கிறேன். இளவரசி விதுலா ஒரு தீர்க்க தரிசி. க்ஷத்ரியப் பெண். எல்லா ராஜாக்களுக்கும் தெரிந்தவள். அவள் மகன் ஒரு போரில் தோற்று வாடினான்.

 'அடே,  உன் பேரே சஞ்ஜயன். (ஜெயிப்பவன்). தோல்வியால் துவளாதே '' அவள் அவனை  முதுகில் தட்டிக் கொடுத்து  ஊக்குவித்து எதிரிகளோடு மீண்டும் போர் புரிய தயார் படுத்தினாள் . நண்பர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்து படை தயார் செய்து கொண்டு தக்க நேரத்தில் எதிரிகளை அவன்  வீழ்த்தி வெற்றி பெற்றான். இது தான் விதுலா கதை. நான் விதுலா போல் ஒரு அன்னை என்று அவனுக்கு சொல்.''

அர்ஜுனனிடம்  ''நான் அவனைப் பெற்றபோது, அசரீரி சொல்லியது. இவன் ஆயிரம் கண்ணுடைய தெய்வத்தையே வெல்வான். கௌரவர்களை முறியடிப்பான். பீமனோடு சேர்ந்து எதிரிகளை த்வம்சம் செய்வான். தெய்வத்தோடு இனைந்து செயல் புரிவான்.'' என்றது.    நீ தான் கிருஷ்ணா அந்த தெய்வம். அவனுக்கு துணைவன். உன்னோடு இனைந்து தான் அவன் புகழ் பெறுவான்'' என்று சொன்னேன் என்று அவனிடம் கூறு.

''திரௌபதியின் துயர் தீர  என் மக்கள்  பாண்டவர்கள் வெற்றி பெறட்டும். அவர்கள் தாய் நான் நலமாக உள்ளேன். அவர்கள் வெற்றிச் செய்திக்காக காத்திருக்கிறேன் என்று சொல்.''

கிருஷ்ணன் அவளிடம்  இருந்து விடை பெற்று போகும்போது  சற்று தூரத்தில்  கர்ணனை சந்திக்கிறான்.  அவனைத் தனியே கூப்பிட்டான். 
''கர்ணா, என்னோடு சற்று வருகிறாயா?
''கிருஷ்ணா  நீ  என் எதிரி அல்ல. சந்தோஷமாக உன்னோடு வருகிறேன். நீ எங்கள் விருந்தாளி ''
கர்ணனை தன்னுடைய தேரில் கிருஷ்ணன் அமர்த்திக் கொண்டான். இருவரும் பேசினர் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...