Tuesday, April 9, 2019

GEETHA GOVINDHAM



கீத கோவிந்தம் J K SIVAN
ஜெயதேவர்
தசாவதார கடவுள் வாழ்த்து.

எல்லா கவிஞர்களும், புலவர்களும் கடவுள் வாழ்த்து பாடிவிட்டு தமது செய்யுளை ஆரம்பிப்பார்கள். ஜெயதேவர் முதலில் ராதையும் கிருஷ்ணனும் பிருந்தாவனத்தில் ''வீட்டுக்குப் போ '' என்று நந்தகோபனால் அனுப்பப்பட்டு வீடு திரும்பாமல் யமுனாநதி தீரத்தில் மரச்சோலையில் விளையாடுகிறார்கள் என்று ஆரம்பித்துவிட்டு பிறகு புதுவிதமாக ஸ்ரீமந் நாராயணனின் தசாவதாரங்களை போற்றி புகழ்கிறார். அது தான் அவரது கீத கோவிந்தத்தில் கடவுள் வாழ்த்து! இந்த தசாவதார ஸ்லோகம் எனக்கு ரொம்ப பரிச்சயமானது. நான் பாடி அல்ல. என் தந்தை கிருஷ்ணய்யர் நித்யம் ஸ்னானம் பூஜை முடித்து பஞ்சகச்சம், ஜிப்பா அணிந்து தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு இந்த ஸ்லோகத்தை பாடிக்கொண்டே பள்ளிக்கூடத்துக்கு கிளம்புவார். எனக்கு 10-11 வயதிருக்கலாம். அவர் நுங்கம்பாக்கத்தில் கார்பொரேஷன் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர். JK வகுப்பு என்றாலே எல்லா பிள்ளைகளுக்கும் கொண்டாட்டம். ஆங்கிலம், சரித்திரம் எல்லாம் போதிப்பார். நான் அவர் வகுப்பில் மாணவனாக படிக்கவில்லையே என்ற குறை நெஞ்சில் ஒரு வடு.

वाग्देवता चरितचित्रितचित्तसद्मा
पद्मावतीचरणचारणचक्रवर्ती।
श्रीवासुदेवरतिकेलिकथा समेतं
एतं करोति जयदेवकविः प्रबन्धम्॥

ஜெயதேவரின் நாக்கில் சரஸ்வதி வாசம் செய்தாளோ? ராதை கிருஷ்ணன் ஆகியோரின் பரம பக்தன் அவர்.

प्रलयपयोधिजले धृतवानसि वेदम्
विहितवहित्रचरित्रमखेदं।
केशव! धृत
मीनशरीर जय जगदीश हरे ॥१॥

கேசவா, சர்வலோக நாயகனே, உன் அவதாரங்களை எப்படி ஆரம்பித்தாய் நினைவிருக்கிறதா? எங்கும் ஜல மயம் . பிரளயம். ஒளியற்ற இருள்மயம். நிசப்தம். உயிர்கள் ஒன்றும் தென்படவில்லை. ஒரு பெரிய மீனாக நீ வந்தாய், அத்தனை வேதங்களையும் அழியாமல் நீரில் மூழ்கி கொண்டுவந்தாய். காப்பாற்றினவன்.வேதமூர்த்தி. உனக்கு ஜெயமுண்டாகட்டும்.

क्षितिरतिविपुलतरे तव तिष्ठति पृष्ठे
धरणिधरणकिणचक्रगरिष्ठे
केशव! धृतकच्छपरूप
जय जगदीश हरे ॥२॥

அப்புறம் என்ன செய்தாய் சொல்கிறேன் கேள். கேசவா, லோகரக்ஷகா, அடுத்து ஒரு பெரிய ஆமை வடிவானாய். உனது மா பெரும் முதுகு ஓடு தான் கான்க்ரீட் போட்ட அஸ்திவாரம். அதன் மேல் தேவர்கள் மந்திரமலையை ஸ்தாபிதம் செய்கிறார்கள். அது தான் மத்து. வாசுகியை கயிறாக்கி வடவரையை மத்தாக்கி.....பாற்கடலை தேவர்களும் ராக்ஷஸர்களை கடையப்போகிறார்கள். அடேயப்பா உன் பங்கு தான் .எவ்வளவு முக்கியம்? ஜெயவிஜயீபவ . ஹரி உன்னை வணங்குகிறேன்.

वसति दशनशिखरे धरणी तव लग्ना
शशिनि कलङ्ककलेव निमग्ना
केशव! धृत
सूकररूप जय जगदीश हरे ॥३॥

கேசவா, நீ எடுத்த இன்னொரு அவதாரம் மிகப்பெரிய வராகமாக. காட்டுப் பன்றி உருவில். உன் முகத்தில் இரு வலுவானகோரைப்பற்கள். அலாக்காக, அப்படியே நிமிஷத்தில் இந்த பூமியையே உன்னிரு கோரைப்பார்களால் தூக்கி எடுத்து பூமியை கடலடியிலிருந்து மீட்டவன் நீ அல்லவா? நீ பூமியை உன் கோரைப் பற்களால் தூக்கியதை நினைக்கும்போது வெள்ளி மய முழு நிலவில் சில கருந் திட்டுகள் தெரிவது போல் தோன்றுகிறது. ஜெயவிஜயீபவ'' என்கிறார் ஜெயதேவர்.

तव करकमलवरे नखमद्भुतशृङ्गं
दलित हिरण्यकशिपु तनुभृङ्गम्।
केशव! धृत
नरहरिरूप जय जगदीश हरे ॥४॥

ஓ கேசவா, அப்பப்பா நீ பாதி நரனாகவும் பாதி சிம்மமாகவும் எடுத்த அவதாரம் ஆச்சர்யமானது. சர்வ லோகநாயகா, எவ்வளவு பொருத்தமாக ஒரு உருவத்தை எடுத்தாய். எப்படி ஹிரண்ய கசிபுவின் வரத்தை மீறாமல் அதே நேரம் அவன் வரத்தால் மறுக்கப்படாத ஒரு உருவாக நீ இப்படி ஒரு அவதாரம் எடுத்து அவனை உன் கூறிய நகங்களால் கிழித்து கொன்றாய். உன் மடியில் அவனை பார்க்கும்போது ஒரு மலர்ந்த ரோஜாமலரின் மேல் ஒரு கருவண்டு போல் இருந்தது. ஜெயவிஜயீபவ .

छलयसि विक्रमणे बलिमद्भुत वामन
पदनखनीरजनितजनपावन
केशव धृत वामनरूप जय जगदीश हरे ॥५॥

ஒரு மனிதன் உயரமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. குள்ளமாக இருந்தாலும் அவனால் சாதிக்க முடியும் என்பதை மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்று ஒரு வாமனனாக அவதரித்து நிரூபித்தாய். கேசவா, அகில லோக நாயகா, ஜெயவிஜயீபவ . குள்ளமாக இருந்தாலும் வெள்ளமாக மனதை அபகரித்து விட்டாயே என்கிறார் ஜெயதேவர்.

क्षत्रियरुधिरमये जगदपगतपापं
स्नपयसि पयसि शमित भवतापम्
केशव! धृत
भृगुपतिरूप जय जगदीश हरे ॥६॥

க்ஷத்ரியர்கள் பலத்தினால், அதிகார துஷ்ப்ரயோகம் செய்வதை கண்டிக்க, அவர்களது செருக்கை அடக்க, நீ பரசுராமனாக அவதரித்தாய். ரிஷி புத்திரனாக. கோடாலியை ஆயுதமாக கொண்டு... என்ன விசித்ரம் இது. லோகநாயகா, உலகில் கொடுமை புரிந்து இம்சித்த க்ஷத்ரியர்களை ஒடுக்க பிருகுவம்ச பரசுராமனாக அவதரித்து நீ இந்த பூலோகத்தையே க்ஷத்ரிய ரத்த வெள்ளத்தால் குளிப்பாட்டியவன் அல்லவா. கேசவா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, ஜெயவிஜயீ பவ .

वितरसि दिक्षु रणे दिक्पति कमनीयं
दशमुखमौलिबलिं रमणीयम्
केशव! धृत
रघुपतिरूप जय जगदीश हरे ॥७॥

முற்றிலும் மாறாக, அமைதி தவழும் சாந்த ஸ்வரூபியாக, தசரத ராமனாக ஒரு அவதாரம் எடுத்தாய். கொடிய தசகண்ட ராவணனை தனிமனிதனாக சென்று வென்று கொன்றாய். தர்மத்தை , பித்ரு வாக்ய பரிபாலனத்தை கடைப்பிடித்து உதாரண புருஷோத்தமனாக அவதரித்தாய். கேசவா சர்வ லோக நாயகா. ஜெயவிஜயீபவ .


वहसि वपुषि विशदे वसनं जलदाभं
हलहतिभीतिमिलितयमुनाभम्
केशव! धृत
हलधररूप जय जगदीश हरे ॥८॥

உன்னில் ஒரு பங்காக, பலராமனை தோற்றுவித்தாய். நிறத்தில் அவனை வெண்ணிறமாகவும் உன்னை கருநீலவண்ணனாகவும் காட்டினாய். கேசவா, நீயும் அவனும் சகோதரனாக ஒரே காலத்தில் இருந்ததாக காட்டினாய். கலப்பை ஆயுதபாணி அவன். நீ வெறும் புல்லாங்குழல் ஆசாமி. சர்வலோக நாயகா, கேசவா, ஜெயவிஜயீபவ .''

निन्दसि यज्ञविधेरहह श्रुतिजातं
सदय हृदय दर्शितपशुघातम्
केशव! धृत
बुद्धशरीर जय जगदीश हरे ॥९॥

கேசவா, என்னை பொறுத்தவரை நீ தான் புத்தனாக அவதரித்தவன் . சர்வ லோக நாயகா, இல்லாவிட்டால் இவ்வளவு கருணை யார் மனதிலாவது நிறைந்து காணுமா? அஹிம்சா எண்ணம் உறுதியாக மனதில் தோன்றுமா? கேசவா ஜெயவிஜயீபவ

म्लेच्छनिवहनिधने कलयसि करवालं
धूमकेतुमिव किमपि करालं
केशव! धृत
कल्किशरीर जय जगदीश हरे ॥१०॥

எல்லோரும் அடுத்து உன்னை எதிர்பார்ப்பது எப்படி தெரியுமா கேசவா, இந்த கலியுகத்தில் நீ ஒருநாள் கல்கி எனும் அவதாரமாகத்தான் வரப்போகிறாய். அமைதியான மேகமற்ற கரு வானத்தில் நெருப்பு துண்டம் போல பளிச்சென்று படு வேகமாக தோன்றும் எரி நக்ஷத்ரம் போல், நீ திடீரென்று வருவாய் கேசவா. உன் கரத்தில் சக்திவாய்ந்த கூர்மையான வாள் இருக்கும். அதற்கு தீனி வேதங்களை பழிக்கு, அவமதிக்கும் கொடியவர்கள் ரத்தம். கோடானுகோடி அக்ரமக்கார மிலேச்சர்கள் உன் வாளுக்கு இவ்வாறு பலியாகலாம். ஜெயவிஜயீபவ

श्रीजयदेवकवेरिदमुदितमुदारं
शृ सुखदं शुभदं भवसारम्
केशव! धृत
दशविधरूप जय जगदीश हरे ॥११॥

என்னப்பனே , கேசவா, இவ்விதமாகத்தானே, நீ அற்புதமாக பத்து விதமான அவதாரங்களை எடுத்தவன். சர்வமண்டல நாயகா, நான் தொடுத்த இந்த பாமணிகளால் கோர்த்த மாலையை சூடிக்கொள்கிறாயா? இந்த ஜெயதேவன் மனம் நிறைந்து அளிக்கமுடிந்தது இதுதான். சந்தோஷத்தையும், நிம்மதியையும் உலகுக்கு அருள்வாய் ஜெயவிஜயீபவ .
ஒன்று கவனித்தீர்களா, ஜெயதேவர் கிருஷ்ணாவதாரம் என்று ஒன்றை குறிப்பிடவில்லையே!! ஆமாம் அவருக்கு தான் தெரியுமே. எல்லாம் எதுவும், எப்போதும் கிருஷ்ணனாகவே இருக்கும்போது ''கிருஷ்ணனாக'' ஒரு அவதாரம் தேவையா??

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...