Tuesday, April 16, 2019



 ஐந்தாம் வேதம்  J K  SIVAN 

மஹா பாரதம்.

                                                                   86  ''  பதினெட்டு''

 மகா பாரதம் ஒரு பெரிய பால் கடல். அதை அப்படியே  கடைந்தால் திரண்டு வரும் வெண்ணை தான்  கீதை. கீதம் என்றால்  பாடல், இன்னிசை, காதுக்கு கேட்க இனிமையானது  கீதம் பேச்சல்ல. பகவானின் வார்த்தைகள் தேன் சிந்தும் கீதமாக  இருப்பதால் அது பகவத் கீதை. 

வேதங்கள் மொத்தம் நாலு தான். வேத வியாசரை  தொகுத்து இயற்றியது.  மகாபாரதமும்   தான்.  நான்கு வேதங்களுடன்  அதை  ஐந்தானது. சகலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சிறந்த ''ஐந்தாவது வேதம்'' என்ற உன்னத  ஸ்திதி பெற்றது.  அதற்கு  பஞ்சம வேதம் (ஐந்தாம் மறை) என்று  வடமொழியில் பெயர்.

மஹா பாரதம் மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு.   மனிதனைப் பற்றிய என்சைக்ளோபீடியா.  பாரதத்தில் காணும் குணாதிசயங்கள் இல்லாத ஒரு மனிதனும் இந்த உலகில் இல்லை. அதை புராணம் என்று, அதாவது ஏதோ பழங்கதை என்று ஒதுக்குபவர் பாவம் அறியாதவர்கள். அவர்களை  அப்படியே விட்டுவிடுவோம்.

‘पुरा नवं भवती   பழைய விஷயமானாலும் எது  அதை புதிதாக சொல்வதோ , என்றும்  எப்போதும்  புதியதோ  அது புராணம்.  பாரதம் அப்படிப் பட்டது.

இதற்கு சிறப்பு தந்த ரகசியம் பதினெட்டு.   என்ன  பாரதமா? பதினெட்டா? என்ன சொல்கிறாய்?

பாரதம் ஒரு சுரங்கமய்யா?  "yad ihasti tad anyatra yan nehasti na tat kvacit"   இதிலுள்ளது தான் எதிலேயும்.உள்ளது.  இதிலில்லாதது எதிலும் இல்லாதது.

 பாரதத்தில் கடைந்தெடுத்த வெண்ணை என்றேனே அந்த கீதை தான் சகல சாஸ்திரங்களிலும் தேர்ந்தெடுக்

கப்பட்ட  மிக முக்ய மூன்றில் ஒன்று.  பிரஸ்தான த்ரயம்  என்று  சொல்லப் படும்  உபநிஷதங்கள்,  வேதாந்த சூத்ரங்கள்,   பகவத் கீதை. -  வேதாந்தத்தை சாறாகப் பிழிந்தது தான் உபநிஷத்.  அந்த   உபநிஷத்களில் தேர்ந்தெடுக்கப் பட்ட முக்ய வாக்யங்கள் சூத்ரங்கள்.   அவற்றில் முதன்மையானது பகவத் கீதை.
வியாசர் ஒப்பிடமுடியாதவர்.   அவர் எழுதிய பாரதத்தில், அதில் மிளிரும் கீதையில் கிருஷ்ணன்   '' முனிவரில் நான் வியாசன்''  என்று சொல்லும்போதே  வியாசர் எப்படிப் பட்டவர் என்று புரிகிறதா.  பாரதத்தில் நல்லதும் கெட்டதும் மட்டும் சொல்லவில்லை, நல்லதிலும் கெட்டது, கெட்டதிலும் நல்லது  இருக்கும்   என்பதை அழகாக எடுத்துக் காட் டியிருக்கிறார். யுதிஷ்டிரன் தர்மவான், சத்யமானவன், நல்லவன், எனினும் அவன் செய்த தவறுகள் சில காட்டப் பட்டிருக்கிறது.  பீஷ்மன் சத்யவான், வைராக்யன், தியாகி. எனினும் அவன் செய்த தவறுகள் மறைக்கப் படவில்லை.  துரியோதனன் கர்ணன் ஆகியோர் கெட்டவர்கள், நம்பியார்கள், வீரப்பாக்கள்  எனும் வில்லன்கள். ஆனாலும் அவர்களிடம் இருந்த அருமையான சில குணங்கள் சீர் தூக்கிச் சொல்லப் படுகிறதே.

அது சரி அது என்ன ''பதினெட்டு''?   
 மகா பாரதத்தில்  மொத்தம் 18 பர்வங்கள். 
 பகவத் கீதையிலும் 18 அத்யாயங்கள். 
 மகா பாரத யுத்தம் நடந்தது 18 நாள். 
 மொத்த சேனைகள்  இருபக்கமும் சேர்ந்து  18 அக்ஷோவ்ணி.  அதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது.  ஒரு அக்ஷோவ்ணி யில்  1215 யானைப்படை, 1215 குதிரை படை, 1215 தேர்கள், 60750 காலாட்படை, (6+7+5=18). அதை விடுங்கள். எல்லாவற்றையும் கூட்டினால் 97200 உருப்படி. அதாவது 18! (9+7+2). இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா.  
மகாபாரதத்தின் உண்மையான  முதல் பெயர்  என்ன தெரியுமா ''ஜெயா'' . வியாசர் இந்த பெயர் தான் அதற்கு வைத்தார். ஸம்ஸ்க்ரிதத்தில் 'ஜெயா'' வின் கூட்டு எண்  18 !
பதினெட்டின் குடும்பத்தை பாருங்களேன்  எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது  !   18, 108, 1008 !!  ஹிந்துக்களுக்கு 108 பற்றியோ  1008 பற்றியோ தனியாக நான் சொல்லவேண்டுமா?  அஷ்டோத்ரங்கள்  108ஆகத்தான் இருக்கிறது,  சஹஸ்ரநாமங்கள்  1008ஆக இல்லையா?    18 = 9  (1+8). நவம்  என்று அறியும் ஒன்பதின் மகிமை எல்லோரும் அறிந்ததே. அதைப்பற்றி எழுதப் போனால்  நான் மஹா பாரதத்தை என்று எழுதி முடிப்பது?

அன்றாட வாழ்வில்  கூட நாம்  அடிக்கடி   ''ஏண்டா கோபு  இதை நீ  செய்யலேன்னு கேட்டா 1008 காரணம் சொல்றே ?''  என்கிறோம். 

இனி யுத்தத்தில் நாம் சேனைகளோடு சேர்ந்து விட்டோம். 
யுத்தத்தில் தயாராக இருந்த  இரு சைன்யத் தலைவர்களும் தத்தம் சங்கங்களை முழங்கினார்கள். கிஷ்ணன்  பாஞ்சஜன்யத்தை, அர்ஜுனன் தேவதத்தத்தை, பீமன் பவுண்ட்ரத்தை , யுதிஷ்டிரன்  அனந்தவிஜயத்தை , நகுல சகாதேவர்கள் சுகோஷம், மணி புஷ்பகத்தை , மற்றும் அனேக சேனாதிபதிகளும் அவர்கள் சங்கங்களை ஒலித்தனர்.  ஆகாயம் பூரா எதிரொலித்த அந்த கம்பீர நாதம் கௌரவர்களை  கலக்கியது.

அர்ஜுனன்  கிருஷ்ணனை பார்த்து  '' கிருஷ்ணா  நமது தேரை  இரு சேனைகளின் மத்தியில் கொண்டு நிறுத்து. நான்  எல்லோரையும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்றவன் தேர் இரு சேனைகளுக்கும் மத்தியில் நிறுத்தப் பட்டதும்  எல்லோரையும் ஒரு முறை கூர்ந்து பார்க்கிறான். யார் அவர்கள்? அடடா, இது வரை தோன்றாதது இப்போது தோன்றி உள்ளதே,  ''உறவு"  'சுற்றம்'???   எப்படி  அதுவும்  கிருஷ்ண ரஹஸ்யமோ?  
ஐயோ, இவர்கள் என் தாத்தா, சிற்றப்பா, பெரியப்பா,  பெரிய தாத்தா, சின்ன தாத்தா, மாமன், மாமனார், சகலை,  தங்கை அக்காள் புருஷன்,  மைத்துனன், ஒன்றுவிட்ட மருமகன், பிள்ளை முறை, பெண்ணின் கணவன் இன்னும் எத்தனையோ உறவுகள்.............. இத்தனை நாள் மறந்தது இப்போது எப்படி நினைவில் வந்தது. -- சீ இவர்களையா நான் கொல்லப்போகிறேன் ? 
இனி நாம் பகவத் கீதையை  அறியப்போகிறோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...