Monday, February 18, 2019

YATHRA VIBARAM. KUMBH MELA

                                              கும்ப மேளாக்கள் J.K. SIVAN 

நம் எல்லோருக்குமே   நதிகளில், ஆறுகளில்  குளிக்க பிடிக்கும்.     நாங்கள் சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த கத்திரிக்காய் தோட்டத்தில் உள்ள ஒரு பெரிய கவலை அடிக்கும் கிணற்றில் குதித்து விளையாடுவோம்.ப்ரமாமாண்டமான துறவு கிணறு. சுற்றி சுற்றி உள்ளே  அங்கொன்றும் இங்கொன்றுமாக  கருங்கல் படிகள் கிணற்றில் உள்சுவர்களில் பதித்திருப்பார்கள். நீரும் வெயில் காலத்தில் குறைந்து கிணற்றில் அதிக ஆழமில்லை. ஆறடி இருந்தால் அதிகம். நீச்சல் கொஞ்சம் தெரிந்தாலே போதும். யாரும் மூழ்கியதில்லை. சில மணிநேரங்கள் அதில் விளையாடினாலும் திருப்தி அடையாமல் அரை மனதோடு வெளியே வருவோம். காரணம். நல்ல பசி எடுக்கும்.

கிணற்று குளியலே இப்படி திருப்தி அளிக்கும்போது புண்ய நதிகளில் நீராடுவது நமக்கு பாரம்பரிய சொத்து. வடக்கே ஹரித்துவார் கும்பமேளாவுக்கு ஜேஜே என்று எங்கிருந்தெல்லாமோ கூட்டம் அம்மும். நெரிசல் ஏற்பட்டு பல பேர் மிதிபட்டு இறந்ததும் உண்டு. கோலாகலமாக திருவிழாக்கள், சந்தைகள் , கண்காட்சிகள் நடக்கும்.
எத்தனையோ காலமாக கும்பமேளா நடக்கிறது. சீனாக்காரன் ஹ்யுவான்சாங் கூட பார்த்து எழுதி வைத்திருக்கிறான். தானும் இறங்கி குளித்து புண்யம் சேர்த்துக் கொண்டதாக சொல்லவில்லை. ஆதி சங்கரர் கூட ஒரு கும்பமேளாவை துவக்கி வைத்திருக்கிறார்.

1760ல் சைவ கோசாயிகளுக்கும் வைணவ பைராகிகளுக்குமிடையே யார் முதலில் ஸ்நானம் செய்யவேண்டும் என்று தோன்றிய பூசலில் நூற்றுக்கணக்கானவர் மிதிபட்டு இறந்தனர். 1789ல் ஒரு மராத்தா பேஷ்வா செப்பேடு சொல்வதைப் பார்த்தால் 12000 பக்தர்கள் சைவ வைணவ போராட்டத்தில் நாசிக் த்ரியம்பக கும்ப மேளாவின் போது இந்த காரணத்துக்காக உயிர் விட்டதாக தெரிகிறது. நாம் இன்னும் திருந்தவில்லையோ என்றும் பயமாக இருக்கிறது. எத்தனையோ பேர் தொலைந்து போவது வழக்கமாகி விட்டது.

வெள்ளைக்காரன் காலத்தில் நிறைய ஜனங்கள் வருவதால் கும்ப மேளாவின் போது எங்கு பார்த்தாலும் என்னென்னவோ வியாபாரங்கள் நடந்தது. வெளிநாட்டு வியாபாரிகள் வழக்கமாக வருவார்கள். குதிரைகள் யானைகள் கூட விற்றார்கள். நிறைய வசூல். சுகாதாரம் இருக்குமா இவ்வளவு பேர் நாட்கணக்காக, மாதக் கணக்காக புழங்கும் இடங்களில். காலரா நோயும் வழக்கமாக விஜயம் செய்து ஜனத்தொகையை கணிசமாக குறைத்தது.

பல்வேறு மக்களோடு, ஆண் பெண் குழந்தைகளோடு, மூட்டை முடிச்சோடு, நிர்வாண சாமியார்கள், யோகிகள், ரிஷிகள், எங்கிருந்தெல்லாமோ வந்து சேரும் ஒரு பெரிய விழா கும்பமேளா.  
  

நமது  பாரத தேசத்தின் ஒரு முக்கிய  விழா கும்பமேளா (கிண்ணத் திருவிழா) (Kumbh Mela).  நிறைய பேர்  காணாமல் தொலைந்து போகும் ஒரு பெரிய விழா.    பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில்  கும்ப மேளா கொண்டாடுகிறோம்.  அலஹாபாத்,  ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக்  ஆகிய  இந்த நான்கு ஊர்களில் உள்ள ஆற்றகரைகளில்  கோலாகலமாக நடக்கும் கூட்ட விழா.

திரிவேணி சங்கமம் என்றால் தெரியுமல்லவா?  கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்கு புலப்படாத ஸரஸ்வதி ஆறும்  கூடும் இடம். இந்த மூன்று  புண்ய நதிகளின் சங்கமம்  அலஹாபாத் (பிரயாகை)தில் நடக்கிறது. 
இங்கு வந்து ஸ்னானம் செய்யும் விழா தான்  கும்ப மேளா. 


ஹரித்துவாரில் ஆறு வருஷங்களுக்கு ஒரு முறை 'அர்த்த' (பாதி என்று அர்த்தம்) கும்பமேளா நடக்கிறது. மஹா கும்பமேளா என்று ஒன்று -- அடேயப்பா பன்னிரண்டாவது முழு (பூர்ண)கும்பமேளா அதாவது 12 X 12 :  144  ஆண்டுகளுக்கு ஒரு முறை
நடக்கும் கும்பமேளா தான்  மஹா  கும்பமேளா எனப்படும். .   உலகத்திலேயே   அதிகமாக மக்கள் கூடும் விழா. .அந்தப்பக்கமே நாம் செல்ல முடியாது. நினைத்தாலே கும்பலில்  மூச்சு திணறுகிறது அல்லவா? அந்த நினைப்பே கூட்ட நெரிசலில்  நசுங்கி சாக அடிக்கும் . 
 
விஷ்ணு என்ன செய்தார் தெரியுமா? பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை குடத்தில் (கும்பத்தில்) எடுத்து மோகினியாகச் செல்லும்போது சொம்பிலிருந்து நாலு சொட்டு நாலு இடத்தில் பூமியில் விழுந்த இடம் தான் மேலே சொன்ன நாலு கும்ப மேளா ஸ்தலங்கள்.   
சாகாவரம் தரக்கூடிய அம்ருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்)இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக ஐதீகம்.  ஆகவே  இந்த  நாலு இடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக,புற அழுக்குகளை நீக்கும் என்று  நாம் நம்புகிறோம். நம்பிக்கை வீண் போனதில்லை. 

ஹரித்வாரில், பால்குன் மற்றும் சைத்ரா ஆகிய மாதங்களில் (பெப்ரவரி / மார்ச் / ஏப்ரல்), சூரியன் மேஷ  ராசியில் செல்லும் பொழுது சந்திரன் தனுர் ராசியிலும்  குரு கும்ப ராசியிலும்  இருக்கும்போது  கும்பமேளா நடைபெறும்.   உஜ்ஜயினில் வைகாசி மாதத்தில் ( மே)  சூரியனையும் சந்திரனையும் தவிர மற்றைய கோள்கள் துலா ராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மேஷ ராசியிலும்  குரு சிம்ம ராசியிலும்  இருக்கும்.

நாசிக் - கும்பமேளா   ஸ்ராவண மாசம்  (ஜூலை)  சூரியனும் சந்திரனும் கடக ராசியில் உள்ளபோது  குரு விருச்சிக ராசியில் உள்ள போது  கொண்டாடுகிறார்கள்.

அலஹாபாத்  திரிவேணி சங்கமத்தில்  உடம்பு பூரா  விபூதி  பூசி வெறும்  மலர் மாலை மட்டுமே அணிந்த நிர்வாண நாகா சாதுக்கள்  நிறைய காணப்படுவார்கள்.   எங்கும்  ''ஹர ஹர மகாதேவா''  என்று உரக்க பஞ்சாக்ஷர  மந்திரங்கள்  உச்சரி த்துக்கொண்டு ஊர்வலம் வந்து கடும் குளிரிலும்  நதியில் ஸ்னானம் செய்வார்கள்.  குளிர் லக்ஷியம் செய்யாத உடம்பு.
 சாதுக்கள் பின்னர் ஆற்றில் வெண்கல நாணயங்களை எறியும்பொழுது  நிறையபேர் கூட்டமாக நீரில் பாய்ந்து அந்த நாணயங்களைப் பெற முட்டி மோதும்போது  உயிரிழப்பு கூட நடக்கும்.   காரணம் அந்த   நாணயங்களில் அபார தெய்வீக சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை. 

இன்னும் கூட  சில விஷயங்கள் இருக்கிறது. அதை அடுத்ததில் எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...