Saturday, February 23, 2019

YAKSHA PRASNAM



ஐந்தாம் வேதம் 
யக்ஷ ப்ரச்னம் - மஹாபாரதம் 
                                                                                  
    1  அவசர  கேள்வியும் அவசிய பதிலும்.

அவசர கேள்வியும் அவசிய பதிலும்''  என்ற தலைப்பில் மஹா   யக்ஷ ப்ரச்னம் தொடர்கிறது. மகா பாரதம் ஒரு ஈடிணையற்ற காவியம் . அதில் எண்ணற்ற உப கதைகள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தாலும் சிலவற்றில் உயர்ந்த தத்துவங்களும் அறிவுரைகள் இன்றும் என்றும் புதிதானவை. பயனுள்ளவை. காலத்தால் அழியாதவை. ஒரு சம்பவம் அத்தகையது. அதையே இன்று தொடுகிறோம்;

பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். காட்டில் வாழ்ந்த அவர்கள் எண்ணற்ற துன்பங்களை எதிர்கொண்டனர். ஒருநாள் மான் வேட்டை ஆட சென்றபோது அந்த மாயமான் அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு மறைந்தது. ஆடி ஓடி அலைந்து களைத்து அவர்கள் ஆயாசம் மேலிட்டு ஒரு இடத்தில் களைப்பாறி னார்கள்.அனைவருக்குமே தாகமும் பசியும் வாட்டியது. தருமபுத்ரர் குடிக்க நீர் வேண்டியதால் சகா தேவன் நீர் தேடி சென்றவன் காட்டின் ஒரு அடர்ந்த பகுதியில் ஒரு சிறு குளத்தைப் பார்த்தான். அதில் இறங்கி தன இருகையாலும் நீர் மொண்டு குடிக்க முயன்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு நாரை "இந்த நீரைக்குடிக்காதே. இது நச்சுப்பொய்கை. என் கேள்விகளில் சிலவற்றுக்குப்பதில் சொன்னால் உனக்கு நல்ல குடிநீர் தருகிறேன் என்றது. " குடிக்க ஒரு மனிதன் தவிக்கின்றபோது வேலை கெட்டுப்போய் உனக்கு கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை" என்று அதைப் புறக்கணித்த சஹாதேவன் நீர் குடித்தான். மயங்கி விழுந்தான். மாண்டான்.

அடுத்ததாக அவனைத்தேடி வந்த நகுலனும் அவ்வாறே முடிந்தான். அர்ஜுனன் பீமன் இருவரும் கூட நாரையை அலட்சியம் செய்து நீர் குடித்து மாண்டனர். " எங்கே யாருமே திரும்ப வரவில்லையே" என கவலையோடு யுதிஷ்டிரர் அவர்களைத்தேடி நச்சுப்பொய்கை அடைந்து அங்கு அவர்களின் சடலங்களை பார்த்தார். நாரை அவரையும் எச்சரித்தது. 


"சரி சீக்கிரம் உன் கேள்விகளைக் கேள்" என்றார் யுதிஷ்டிரர்.     ஏன் அவசரம்?    தாகம் ஒருவனை வாட்டும்போது நிறைய  கேள்வி கேட்டு  பதில் சொன்னபிறகு தான்  நீர் குடிக்கலாம்  என்றால் சரி  சீக்கிரம் உன் கேள்வியை கேள் என்று தானே சொல்வான்.   அதே நேரம்  அவன் சொல்லும் பதிலில் தான் மற்ற 4 பேர் உயிரும் ஊசலாடுகிறது எனும்போது அவன் சொல்லும் பதில் அவசியமாகிவிடுகிறதல்லவா?. 

இது தான் சம்பவம். இது முக்யமல்ல. யக்ஷன் சட்டென கேட்ட கேள்வியும் அதற்கு உடனேயே தர்மன் பட்டென சொன்ன பதிலும் தான் ஆச்சர்யமானவை. சில கேள்விகளை காலத்துக்கு ஒவ்வாததென ஒதுக்கிவிட்டு மற்றவற்றையெல்லாம் சுருக்கி எனக்குத் தெரிந்த தமிழில் தந்திருக்கிறேன்.

1. யாரால் சூர்யன் உதிக்கிறான்?
அருவமான பிரம்மம் ஒன்றினாலேயே.

2. சூரியனின் இரு பக்கத்திலும் யார்?
விண்ணுலகில் வாழ் தேவர்கள்

3. யாரால் சூரியன் அஸ்தமிக்கிறான்?
தர்மம் ஒன்றினாலேயே சூர்யன் அன்றாடம் அஸ்தமிக்கிறான்.

4. சூர்யன் எதில் நிலையாக உள்ளான்?
சத்யம் ஒன்றுதான் சூரியனை நிலை நிறுத்துகிறது.  அதனால் தான்  சூரிய சந்திர சாட்க்ஷி  என்றார்கள் நம் முன்னோர்கள்.

5. எப்போது ஒருவன் வேதங்களில் நிபுணனாகலாம் ?
வேதங்களைக் கற்றும் ஒதியுமே அவன் வேதங்களை நன்கறியமுடியும்

6. எப்போது ஒருவன் மேன்மை பெற முடியும்?
நேம நியமங்களை விடாது கைப்பிடிக்கும்போது

7. எப்போது அவன் பாதுகாப்பாக இருக்க இயலும்?
தைர்யத்தை விடாமல் இருக்கும்போது அதுவே அவன் பாதுகாப்பு

8. எப்போது ஒருவன் அறிவாளி?
எவன் ஒருவன் அறிஞர்களையும் கற்றோரையும் சார்ந்திருக்கிறானோ அப்போது

9. பிராமணர்களுக்கு எது தெய்வீகம்?
வேதங்களை முறைப்படி கற்றுணர்ந்து தேறி ஓதுவதே அவர்களை உயர்த்துகிறது.

10. பிராமணனின் கடமை யாது?
வேத நெறிப்படி வாழ்வது ஒன்றே.

11. எப்போது பிராமணன் தெய்வீகத்திலிருந்து மானுடனாக தாழ்கிறான்?
கர்வம். சுயநலம் அவனை ஆட்கொண்டால் அவன் தாழ்கிறான்.

12. ஒரு பிராமணனுக்கு எது பாப கார்யம்?
மற்றவர்களிடம் குறை காண்பது

(பரவாயில்லையே யுதிஷ்டிரா இதுவரை நன்றாகவே பதிலளித்தாய். இப்போதுசொல்)

13,  ஒரு க்ஷத்திரியனுக்கு எது தெய்வீகமாகிறது?
அவன் கையாளும் ஆயுதங்களே அவனுக்கு தெய்வீகத்தை அளிக்கும்

14. ஒரு க்ஷத்திரியனுக்கு எது தர்மம்?
அக்னி தியாகம் செய்வதே க்ஷத்ரிய தர்மம்

15. க்ஷத்திரியனிடத்தில் எப்போது மானிடம் தெரிகிறது.?
ஒரு க்ஷத்திரியன் எப்போது பயத்தில் அஞ்சுகிறானோ அப்போதே அவன் சாதாரணனாகிவிடுகிறான்.

தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...