Tuesday, February 26, 2019

KRISHNA STORY



"நான்" வேண்டாம் J K SIVAN

கிருஷ்ணனைப் பற்றி கதை ஏதாவது எழுதுங்கள் என்று எனக்கு ஸ்ரீ சுந்தரம் ராமச்சந்திரன் அன்புக் கட்டளை இட்ட போது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி பிறக்கவில்லை. 2013 மத்தியில் அந்த கிருஷ்ண பக்தர் ISKCON DEVOTEE கேட்கும்போது எப்படி முடியாது என்று சொல்லமுடியும்.அதே நேரம் என் தகுதி பற்றி எனக்கல்லவா தெரியும். சிறிது நாட்கள் தள்ளிப்போட்டேன். அவரோ மறக்கவில்லை, என்னை விடவு மில்லை. சில நாட்கள் இரவுகள் எடுத்துக்கொண்டு ஒரு கதை காமாசோமா என்று எழுதிக் கொடுத்ததை அவருடைய YOUIANDKRISHNA என்ற இணைய பக்கத்தில் போட்டார். கொஞ்சம் ரிப்பேர் செய்து இருப்பாரோ என்னவோ?. அநேக நண்பர்கள் அதை ஆர்வமுடன் ஏற்று என்னை மேலும் எழுத ஊக்குவித்தார். நானும் என் சில (கையடக்கமான) நண்பர்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பினதற்கும் நல்ல வரவேற்பு இருந்ததால் என் கால்கள் தரையில் பதிய மறுக்க காற்றில் மிதந்தேன். மேலும் சில கட்டுரைகள் கதைகள் கேட்டார். நானும் ஒருவாறு எழுதினேன். எனக்கு கொஞ்சம் தெம்பு , நம்பிக்கை, என் மேல் வந்துவிட்டது. எல்லாம் அந்த கிருஷ்ணன் செயல் தான். கிருஷ்ணனை பற்றிய விஷயங்கள் எழுத வேண்டுமே என்பதற்காகவே க்ரிஷ்ணனைப்பற்றி விடாமல் மனது அடிக்கடி சிந்தித்தது.

அடுத்து கிருஷ்ணன் சரித்ததிரத்தை எழுதுங்கள் என்றார். ''நான் நிறைய படிக்கவேண்டும். தெய்வத்தை பற்றி எழுத நான் தயாராக வேண்டாமா'' என்றேன். நிறைய புத்தகங்களை கையில் ஏந்தியும், கம்ப்யூட்டர் ஏந்தியும் படித்தேன். கிருஷ்ணன் லீலைகள் என்னை எங்கோ கொண்டு சென்றது. உள்ளே இதற்கு முன் 75 வருஷங்கள் இல்லாத ஒரு அற்புத உணர்வு பிறந்தது. ஊக்கம் வளர்ந்தது. நூறு கதைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் சுருக்கமாக எழுதினேன். '' 2013 இறுதியில் கிருஷ்ண ஜெயந்தி வருகிறதே. இதை புத்தகமாக்கி போடலாமே.நிறைய பேர் ஆர்வமாக படிக்கிறார்களே'' என்றார் சு.ரா. நமக்கு புத்தகம் பிரசுரிக்கும் வெளியிடும் அனுபவம் கிடையாதே. பணமும் செலவாகும் எங்கே போவது? இதற்குள் முகநூலில் J.K.Sivan என்கிற பக்கத்தை விடாமல் படிக்கும் நண்பர்கள் ஐநூறுக்கு மேல் சேர்ந்துவிட்டார்கள். அவர்களுக்கு எங்கள் மனதில் இருந்த கண்ணன் சரித்திரத்தை புத்தகமாக்கும் யோசனையை கூறி நாங்கள் விசாரித்து அறிந்த குறைந்த பக்ஷ estimate 45000 ரூபாய் க்கு விவரங்கள் முகநூலில் கொடுத்தோம். யாராவது முன்வருவார்களா என்று கேட்டோம்.நாலே நாளில் முன் பின் அறிந்திராத நால்வர் பணத்தை அனுப்ப முன் வந்தார்கள். எதற்கு நமது பேரில் ரூபாய் 45000 பெற வேண்டும் என்று தான் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி பிறந்து city union வங்கிகணக்கு தொட ங்கினோம். நல்லவர்கள் நாலு பேர் கொடுத்ததால் கிடைத்த புத்தகத்திற்கு விலை போடக்கூடாது என்று தீர்மானித்து பள்ளியில் குழந்தைகளுக்கு போட்டிகள் வைத்து பரிசாக இந்த புத்தகம் அளிக்க திட்டமிட்டோம். மேலும் சிலர் நன்கொடை அனுப்ப தொடங்கினார்கள். எங்கள் முதல் புத்தகம் ''விஸ்வரூபனின் வாமன கதைகள் '' இரு பதிப்பு கண்டு விட்டது. 2000 புத்தகங்கள் கிட்டத்தட்ட விநியோகமாகி இனி மூன்றாவது பதிப்பு ஆயிரம் காப்பிகள் போட வேண்டிய நிலைமை. இதுவரை SKSS 35-40 புத்தகங்கள் வெளியிட்டுவிட்டது. எதற்கும் விலை குறிக்கவில்லை. குறைந்த பக்ஷம் காகித, DTP கூலிக்கான தொகையை மட்டும் நன்கொடையாக வசூல் செய்து ரசீது கொடுத்து வங்கியில் இருந்து அச்சுக்கூலி DTP இதர செலவுகள் அனைத்தையும் அதிலிருந்து சந்திக்கிறோம். வருஷா வருஷம் கிருஷ்ணன் நாட்காட்டி ஒன்று இலவசமாக எல்லோருக்கும் பிரசுரித்து தருகிறோம்.

2013 மத்தியிலிருந்து இன்றிரவு வரை கிருஷ்ணன் என்னை ஒருநாளைக்கு ஒருதரமாவது அவனைப்பற்றி நினைக்க, எழுத வைக்கிறானே அது தான் எனக்கு கிடைத்த பெரும் பாக்யம். நிறைய இடங்களில் கிருஷ்ணனை பற்றி கதை சொல்ல அழைக்கிறார்கள். பல பள்ளிகளில் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு இதெல்லாம் சொல்லி கொடுத்து புத்தகங்களை பரிசாக கொடுக்கிறோம். முதியோர் இல்லங்களில், அரசு நூல் நிலையங்களில், பள்ளி நூலகங்களுக்கு, எல்லாம் படிப்போருக்கு இலவசமாக புத்தகங்களை அளிக்கிறோம்.
இன்றைய கிருஷ்ணன் கதை இனி தொடரட்டும்:
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை தெற்கு நோக்கி சென்றபோது தான் ராமருக்காக வானர சைன்யம் கட்டிய சேது பாலத்தை பார்த்தான். காற்று கடற்கரையில் பலமாக வீச, எதிரே கடலில் ஓ வென்ற அலை சப்தம். அர்ஜுனன் சிந்தனைக் குதிரையை தட்டி எழுப்ப அது வேகமாக ஓடியது.

ஸ்ரீ ராமன் என்னைப்போலவே சிறந்த வில்லாளி. அவனால் தனது அம்புகளை கொண்டே சிறந்த பாலம் அமைக்க முடியுமே? ஏன் வானர சைன்யத்தின் உதவி நாடினான்? என்னாலேயே இத்தகைய பாலத்தை சரங்களால் அமைக்கமுடியுமே? எதற்கு .வானரங்களின் உதவி? ஒருவேளை ராமனுக்கு என்னளவு வில்வித்தையில் நம்பிக்கை குறைவோ? இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

யோசித்துக்கொண்டே அர்ஜுனன் ராமேஸ்வரம் வரை நடந்து சென்றவன் ஒரு காட்டில் ஒரு சிறு கோவிலி லிருந்து ராம நாம ஜபம் கேட்டு உள்ளே நுழைந்தான். என்ன ஆச்சர்யம்!. அவனுக்காகவே அங்கு காத்திருந்தது போல ஆஞ்சநேயர் அமர்ந்துகொண்டு ராம நாம ஜபம் செய்து கொண்டிருந்தார். அவரே தக்க ஆசாமி என்று தன்னுடைய கேள்வியை அவரிடம் கேட்க. அவர் சிரித்துக்கொண்டே

“அர்ஜுனா, ஏன் ராமர் அம்பு பாலம் கட்டவில்லை என்று கேட்டாயே அது வானர சைன்யங்களின் பலத்தை தாங்க கூடியதில்லை!!.

“ஆஞ்சநேயா, நான் கட்டும் அம்பு பாலம் எந்த பாரத்தையும் தாங்கக்கூடியது. எத்தனை வானர சைன்யங்களும் அதன் மீது செல்லலாம்?

“ உன் வார்த்தையை நான் நம்பவில்லை, அர்ஜுனா!”.

“என்ன போட்டி உனக்கும் எனக்கும். நான் கட்டிய அம்பு பாலம் நொறுங்கினால் நான் உடனே தீ மூட்டி அதில் மாள்கிறேன். நீ தோற்றால் உனக்கும் அதே விதி. அதே கதி. சரியா?? சவால் விட்டான் அர்ஜுனன். ஆஞ்சநேயர் ஒப்புக்கொண்ட பின் அர்ஜுனன் வில்லை எடுத்தான். சரமாரியாக அம்புகளை தொடுத்தான். என்ன அதிசயம். கண நேரத்தில் ஒரு பாலம் அமைத்தான். \

''பார்த்தீர்களா ஹனுமான்?''
“இந்த சீட்டு கட்டு பாலம் என் ஒருவனையே தாங்காதே எப்படி ராமரின் வானர சைன்யத்தை தாங்க முடியும்? இதோ பார்''
“ஜெய் ஸ்ரீ ராம்” என்று ஆஞ்சநேயன் தன் வாலால் அந்த பாலத்தை ஒரு தட்டு தட்ட அது பொடிப் பொடியாய் நொறுங்கியது. தோல்வியை ஒப்புக்கொண்ட அர்ஜுனன் தீ மூட்ட தொடங்கினான்.
அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. அப்போது தான் கிருஷ்ணனை நினைத்தான்.

“கிருஷ்ணா, நான் தோல்வியடைந்து உன்னை இனி பார்க்க எனக்கு முகமே இல்லை” .என்று தீயில் குதிக்கு முன் அங்கு ஒரு பெரியவர் வந்தார்

“என்ன நடக்கிறது இங்கே?” என்று ஆஞ்சநேயரை கேட்க அவன் நடந்ததைச் சொல்ல
“இது தவறு, உங்கள் போட்டிக்கு யார் சாட்சி?” என்கிறார் பெரியவர்.
“ஒருவருமில்லை”
“சாட்சியில்லாத போட்டி செல்லாது. நீங்கள் மீண்டும் போட்டி போடுங்கள் நானே வேண்டுமானால் சாட்சியாக இருக்கிறேன்”

“சரி, என்று இருவரும் ஒப்புக்கொண்டு அர்ஜுனன் மீண்டும் அம்பு பாலம் அமைக்க ரெடியானான் . நடுங்கின. அவன் உள் மனதில் தோல்வி நிச்சயம் என்று பட்டது.

“ஹரே, கிருஷ்ணா உன்னை வணங்கி ஏதோ ஆரம்பிக்கிறேன் தோற்றால், அடுத்த ஜன்மத்தில் சந்திப்போம்” சரசரவென்று அம்புகள் மழையாக பொழிய, அர்ஜுனன் சரங்களால் பாலம் கட்டிவிட்டான். ஆஞ்சநேயன் சிரித்து கொண்டே அதன் மீது தன் வாலால் முன்போல் தட்டினான். அசையவில்லை. காலால் உதைத்தான். கால் தான் வலித்தது. அதன் மீது ஏறி முழு பலத்துடன் குதித்தான். பாலம் இம்மியும் அசையவில்லை. ஆஞ்சநேயன் ஆச்சர்யமுடனும் அதிர்ச்சியுடனும் முகம் கவிழ்ந்து யோசித்தான். எப்படி என் பலம் குறைந்தது ஓ ராமா? மனம் ராமனை நினைத்தது.

பெரியவர் முடிவை கூறி விட்டார்: .

“அர்ஜுனனால் இப்போது பாலம் கட்ட முடிந்தது. அப்போது ஆஞ்சநேயனால் பாலம் நொறுக்க முடிந்தது காரணம் என்ன தெரியுமா?. அர்ஜுனன் தன் வில் வித்தை கர்வத்தால் கட்டிய பாலம் ஆஞ்சநேயன் ஸ்ரீ ராமனின் நாமத்தை சொல்லி வாலாலேயே நொறுக்க முடிந்தது. இப்போது ஆஞ்சநேயன் தன் பலத்தின் மீது இருந்த கர்வத்தால் அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டி அமைத்த பாலத்தை நொறுக்க முயற்சித்தது தோற்றது. இவ்வளவே.”

இருவரும் பெரியவர் காலில் விழுந்து வணங்கி எழுந்தபோது எங்கே அந்த பெரியவர்? காணோமே. அட
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா எப்போது இங்கு வந்தார். இருவரையும் அனைத்து “என் இரு கண்கள் நீங்கள் அகம்பாவம் வேண்டாம் உங்களுக்கு” என்று அருளினார்

கிருஷ்ணனின் அறிவுரை '' நமக்காக'' அவர்களை நோக்கி சொன்னது என்று புரிந்து கொள்வோமா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...