Monday, February 25, 2019

YAKSHAPRASNAM



மகா பாரதம்        J K SIVAN 
யக்ஷ ப்ரச்னம் 

யக்ஷன் யுதிஷ்டிரனை கேள்விகள் கேட்பது பொழுது போக்குக்காக இல்லை. இது  ''கௌன் பனேகா க்ரோர் பதி''   சமாச்சாரம் இல்லை. பரிக்ஷையில் மார்க்குக்காக அளிக்கும் பதிலும் அல்ல. வாழ்க்கையின் பிரதிபலிப்பு. யுதிஷ்டிரனின் பதிலில் தான் அவனது வீராதி வீர சகோதரர்களின் உயிர் தொக்கி நிற்கிறது. மேலும் அவன் மரண தாகத்தில் இருக்கிறான். இன்னும் அவன் தாகத்திற்கு பருக நீர் கிடைக்க வில்லை. இந்த நேரத்திலும் நிதானம் இழக்காமல் யக்ஷன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறான். 

இந்த கேள்விகளும் பதில்களும் ஒரு பக்கம் டிவியில் ரெண்டு மாமிகள் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட அதை வாயைப் பிளந்து கொண்டு ஆர்வமாக பார்த்துக்கொண்டு தினத்தந்தி படிக்கும் விஷயமில்லை. கச முசா விஷயம்  விகடன் குமுதங்களில்  படிப்பதுபோல் ஊஞ்சலில் காலை ஆட்டிக்கொண்டு படிப்பதும் இல்லை. 

ஒவ்வொரு வார்த்தையின் பின்னும், சொல்லின் பின்னும் உள்ள அர்த்தத்தை உள்வாங்கி படிக்கவேண்டும். இப்போது புரியாவிட்டாலும் பசுவை போல் புல் தின்று பின்னால் அசைபோடும்போது புரியும். ருசிக்கும்.
46. சரியாக ஒரு செயல் நடக்க எது காரணம் ?.
புத்திசாலித்தனம் .

47. புகழ் எதில் அடக்கம்?
செய்யும் தர்மத்தில் .

48. சுவர்க்கம் எதில் ஆதாரம்?
சத்தியத்தில்.

49. சந்தோஷம் எதில் உள்ளது ?
நற்குணத்தில், நன்னடத்தையில்.

50. மனிதன் ஒருவனின் ஆன்மா என்று யாரைச் சொல்லலாம் ?
அவனால் தோன்றிய மகன்.

51. கடவுள் தந்த துணை யார்?
அவன் மனைவி. ( இது யுதிஷ்டிரன் சொன்னது . நானல்ல )

52. உயிர் வாழ அத்தியாவசியம் எது ?
மழை .

53. ஒருவன் வாழ்க்கை முடிவை நிர்ணயிப்பது எது?
அவனது தர்மம்

54. அவனை கடைசியில் சுகப்படுத்துவது?
அவனது ஈகை, நற்செயல்கள்

55. ஒருவனுக்கு செல்வம் சேர்வது எதால் ?
அயராது உழைப்பு ஒன்றே அவனுக்கு விரும்பியதைப் பெற உதவும்

56. உலகத்தில் ஒருவன் தேடிப்பெறும் வஸ்துக்களில் மிகச் சிறப்பானது எது?
கற்றோரிடமும், அறிவாளிகளிடமும் ஒருவன் பெரும் ஞானம்

56. ஒருவனுக்கு உலகில் கிடைக்கும் மிகச்சிறந்த ஆசி என்ன?
"நோய் நொடியின்றி ஆரோக்யமாக வாழ்வாயாக" என்ற ஆசி.

57. ஒருவனின் சந்தோஷத்தில் மிகச்சிறந்தது யாது?
"திருப்தி அடைவது" ஒன்று தான் ஒருவனை மிகவும் மகிழ்விக்கும்.

58 . ஒருவன் செய்யும் செய்கையிலே மிக பாராட்டக்கூடிய செயல்.
அஹிம்சை நிரம்பிய மென்மையான செயல்.

59. எதில் ஈடுபட்டு ஒருவன் வேண்டியதைப் பெறமுடியும்?
முத்தீ வளர்த்து மனமார ஈடுபட்ட வேள்வி.

60 எதை அடக்கி ஒருவன் துயரத்தை தவிர்க்கலாம்?
மனத்தை எவன் அடக்க முடிகிறதோ அவனுக்கு துயரமோ துன்பமோ கிடையாது.

சபாஷ் யுதிஷ்டிரா நீ எவ்வளவு புத்திசாலி என்று வியக்கிறோம். தொடர்ந்து உன்னை ரசிக்கிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...