Monday, February 11, 2019

SRI VAISHNAVAM


  வைஷ்ணவ மஹநீயர்கள் 
ஆளவந்தார் 

                                                           '' ஆளவந்த  பூபதி''

ஸ்ரீ ராமானுஜர் தான்  வைஷ்ணவ மதத்தை ஸ்தாபித்தவர்  என்று சிலரிடம்  அறியாமையால் ஒரு  தவறான கருத்து நிலவுகிறது.  அவருக்கு முன்பே அநேக  வைஷ்ணவ மகான்கள் இருந்தார்கள்.

ஸ்ரீ  வைஷ்ணவம் தோன்றியது முதலில்  ஸ்ரீ லக்ஷ்மியிடமிருந்து  தான்.

ஸ்ரீ ராமானுஜர் ஒரு சிறந்த சிந்தனையாளர்.கல்விமான், பக்திமான். அவரது பக்தி பூர்வமான  சரணாகதி தத்வங்கள், விசிஷ்டாத்வைத உபதேசங்கள்  சற்று  வேறுபட்டாலும் அவருக்கு முன்பிருந்த  ஒன்பது ஆழ்வார்களின் பாசுரங்கள்  அவரை வெகுவாக ஈர்த்து வைஷ்ணவ பாதையில்  வழி நடத்திச் சென்றதை அறிய முடிகிறது என்றாலும் ஸ்ரீ வைஷ்ணவம்  என்றால் முதலில் கண் முன்னே, நினைவில் தோன்றுபவர் ஸ்ரீ ராமானுஜர்  ஒருவரே. பெருமை வாய்ந்தவர்.

''ஆளவந்தார்'' (நம்மை வெற்றி கொண்டவர்)  என்றும் யாமுனாசார்யார்  என்றும்  பெயர் கொண்டு வாழ்ந்த  ஒரு சிறந்த விஷ்ணு பக்தரை ஸ்ரீ ராமானுஜர் தனது பக்திக்கும் மதிப்புக்குமுரிய  மானசீக  குருவாக ஏற்று , ஆச்சார்யனாக  பாவித்தார். இருவரும் சந்தித்ததே  இல்லை. அந்த மஹான் மிக ஸ்ரேஷ்டமான   ''ஸ்தோத்ர ரத்னா''  இயற்றியவர்.  கி.பி. 918ல் மதுரையில் பிறந்தவர்.  ஆளவந்தாரின்  தாத்தா  ஸ்ரீ நாதமுனிகள்  சிறந்த அஷ்டாங்க யோக சித்த புருஷர். நம்மாழ்வாரின் பாசுரங்களை இசைபட வெளி கொணர்ந்தவர். 


ஸ்ரீ நாதமுனிகளின் மகன் ஸ்ரீ ஈஸ்வர முனி தந்தையைப் போல கல்வி கேள்விகளிலும்  வைஷ்ணவ சம்பிரதாய கோட்பாடுகளிலும் வல்லவர்.

வடக்கே  கிருஷ்ண க்ஷேத்திர யாத்ரை சென்ற  ஈஸ்வரமுனி தம்பதிகளுக்கு ஒரு குழந்த பிறந்ததும்  நாதமுனிகள் அந்த குழந்தைக்கு   யமுனைத் துறைவன் கிருஷ்ணன் நினைவாக யாமுனாசார்யன்   என்று பெயரிட்டார்.  தனது மகன் ஈஸ்வரமுனி இளம் வயதிலேயே  அகால மரணமடைந்ததில் மனமுடைந்து நாதமுனிகள் சன்யாசம் மேற்கொண்டதோடு  ஸ்ரீ விஷ்ணு பரமாக வாழ்ந்தார்.  எனவே யாமுனாச்சர்யர்  ஏழைத் தாய், பாட்டி வசம் வளர்ந்தார்.

யாமுனாசார்யாரை  ஐந்து வயதில்  பாஷ்யாச்சார்யார் என்ற குருவின்  பாடசாலையில் சேர்த்தார்கள்.
பனிரெண்டு வயதுவரையில்  தனது நற்குணத்தால்,  அறிவு மிகுதியால், சிறந்த மாணவனாக  குருவின் நன்மதிப்பைப் பெற்றார்.

அப்போதெல்லாம் கல்வியில் சிறந்த பல  பண்டிதர்கள் அரசர்கள்  ஜமீன்தார்கள்,  பெரிய பிரபுக்களின்
சபையில் சென்று  வாதம் செய்து யார் சிறந்தவர்  என்று பெயரும்  பட்டமும், பதவியும்  பெறுவார்கள்.  ஆகவே,   பாண்டியன் அரசவையில்  கோலாஹலன் என்று ஒரு பண்டிதன்இருந்தான். .அவனை எவரும் வாதத்தில்  வென்றதில்லை. அவனிடம் தோற்றவர்கள் அவனுக்கு வருஷா வருஷம் கப்பம் கட்ட அரசன் அனுமதித்தான்.  கப்பம் கட்டாத  தோற்ற பண்டிதர்கள்  மரண தண்டனை பெற்றார்கள். 

 யாமுனாச்சர்யாரின் குரு பாஷ்யாச்சாரியாரும் அவ்வாறு  கோலாஹலனிடம் தோற்று கப்பம் கட்டிவந்தார். ஏழ்மையால் ரெண்டு வருஷங்கள் அவரால் கப்பம் கட்ட முடியவில்லை.

ஒருநாள்   பாஷ்யாச்சாரியாரின்  வீட்டில்  யாருமில்லை. தனியே  யாமுனாச்சாரியார் மட்டும்  பாடசாலையில் இருந்த போது  கோலாஹலன்  ஆட்கள்  கப்பம் வசூலிக்க வந்தனர்.  சிறுவன்   யாமுனாச்சார்யரிடம் கேட்டார்கள்.

''எங்கே உன் குரு  பாஷ்யாச்சரியார்?''
''நீங்கள் யார், எதற்கு வந்திருக்கிறீர்கள், யார் அனுப்பியது?''
''என்னடா, சிறுவா,  நாங்கள் யார் என்று தெரியவில்லையா?  
'' ஐயா நீங்கள் யார்என்று தெரியாததால்  தானே  கேட்கிறேன்''
பாண்டிய நாட்டு  அரசவை பண்டிதர்   புகழ்  பெற்ற கோலாஹலன் பெயர் கூட தெரியாதவனே,  அவர்  சிஷ்யர்கள் நாங்கள். உன் குருவுக்கு சித்தம் கலங்கி விட்டதா?  கப்பம் பாக்கி வைத்திருக்கிறாரே, உயிரை இழக்க எண்ணமா ?  அல்லது மீண்டும் ஒருமுறை எங்கள் ஆசானோடு மோத திட்டமா?  விளக்கில் விழுந்து மாயும் விட்டில் பூச்சியாகி விடுவார்.  ஜாக்ரதை''

யாமுனாசார்யர்  மென்மையானவர். எல்லோரையும் மதிப்பவர். அமைதியாக பதில் சொன்னார்.

''ஐயா, உங்கள் குருவுக்கு ஞானம் போதாதோ என்று அஞ்சுகிறேன். எனவே தான் அவர்  உங்களைப் போன்ற மமதை, கர்வம், அஹங்காரம் கொண்டவர்களை சிஷ்யர்களாக வளர்த்திருக்கிறார்?  ஒரு நல்ல குரு இத்தகைய குணங்களை தனது  சிஷ்யர்கள் மனத்திலிருந்து நீக்கியிருக்க வேண்டுமே?  எதற்காக என் அருமை குருநாதர்  தன்னுடைய பொன்னான நேரத்தை உங்கள் குரு போன்ற அறிவிலிகளோடு வாதம் செய்து வீணடிக்கவேண்டும்? . உடனே சென்று உங்கள் குருவிடம்,  ஸ்ரீ பாஷ்யாசாரியாரின் கடை நிலை சீடன் ஒருவனோடு முதலில் அவரை வாதம் செய்ய  முடியுமா, தயாரா என்று கேளுங்கள்? தைரியம் இருந்தால் என்னிடம் வாருங்கள் '' என்றார் யாமுனாச்சார்யர்.

வெகுண்டு கோபத்தோடு திரும்பின சிஷ்யர்களிடம் விஷயமறிந்தான் கோலாஹலன்.

''என்ன பனிரெண்டு வயது பையனா....?'' என்று  வாய்விட்டு சிரித்தான்  கோலாஹலன்.  ஒருவேளை பாவம் பைத்தியமோ, என்று இன்னொரு சிஷ்யனை அனுப்பினான்.  கையோடு அழைத்து வரச் சொன்னான். யாமுனாச்சார்யர் அவர்களை சந்திக்கிறார்.

''ஒ பாண்டிய மன்னரே அனுப்பினாரா உங்களை. உங்கள் குருவிற்கு சரி சமானமாக வாதம் செய்பவன் என்பதால் இப்படியா வந்து அழைப்பது?   என்னை த்தக்க  வாஹனம், பரிவாரங்கள், மரியாதைகளோடு  வந்து அழைத்துச் செல்ல வேண்டுமே. போய்ச் சொல்லுங்கள்''

பல்லக்கும், நூறு  ஆட்களும் புடைசூழ யாமுனாச்சார்யார் மதுரை சென்றார். காட்டுத் தீ போல் செய்தி எல்லா இடமும் பரவியது.   வெளியூர் சென்றிருந்த  பாஷ்யாசார்யார் செவியிலும் விழுந்து, ''ஐயகோ, என் அருமைச் சீடன் யாமுனாசார்யனுக்கா இந்த பேராபத்து, அதுவும் என்னால்,'' என்று தவித்தார்.

ஆஸ்ரமம் திரும்பிய  குருவின் பாத கமலங்களில் விழுந்து ஆசி பெற்றார் யாமுனாச்சார்யார். ''குருநாதா  சற்றும் கவலை வேண்டாம். உங்கள் நல்லாசியோடு  கோலாஹலனை முறியடித்து வெற்றியோடு திரும்புவேன்''  என்று புறப்பட்டார். 

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...