Tuesday, February 26, 2019

OBUL REDDY



ஓபுல்  ரெட்டியின்  குறை    J K SIVAN

 தவறினாலும் தவறும். வருஷாவருஷம்  மழைக்காலத்தில்   சூறாவளி புயல் விடா மழை ஆந்திரமாநிலத்து கிழக்கு கரை, நெல்லூர் பகுதி, தமிழகத்தில்  கடலூர், நாகப்பட்டினம் விஜயம் செய்ய தவறாது.  அங்கிருக்கும் ஜனங்களுக்கும்  இது தெரிந்து தயாராக எதிர்கொள்வார்கள்.

நெல்லூர் அருகே கடற்கரை கிராமம் ஒன்றில்  வசித்த ஓபுல்  ரெட்டி  ஒரு  கிருஷ்ணபிரியன்.  கண்ணன் மீது அபார பக்தி.   தெலுங்கு, மலையாள, தமிழ், ஹிந்தி போன்ற மொழி  சினிமாவில்  யாராவது  ஒரு   கொழுக்கட்டை ஆசாமி மீசையோடு, கண்ணாடி போட்டுக்கொண்டு  கிருஷ்ண வேஷத்திலிருந்தாலும்  அந்த படத்தை  வெட்டி   மேசையில்   ஒட்டி கண்ணாடி கீழே  வைத்து கொள்பவன்.

ஐப்பசி  அடைமழை  ஒருநாள்.   ஜோ வென்று வானம் பொத்துக்கொண்டு சுனாமியாக மழை.தெருவே நிரம்பி, வீடு  நிரம்பி ஏரியும் உடைந்து எல்லோரும்  ஊரைவிட்டு ஓடின போது  "அடே  ஓபுல்,  நெல்லூரில்  புயல்  வீசப்போகிறது. இந்த வருஷம்  சுனாமி கணக்காக இருக்குமாம். உடனே வீட்டை காலி பண்ணிக்கொண்டு ஓடி வா. தண்ணியே இல்லாத தமிழ் நாட்டு  ஊர்  எதற்காவது போவோம்". என்று அவன் அடுத்த வீட்டுக்கார நண்பன் கோபாலநாயுடு  சொன்னான்.
“கிருஷ்ணன் என்னைக் காப்பாற்றுவான்  நீ ஓடு''.
 எதிர்பார்த்த  மழை கொட்ட ஆரம்பித்தது. புயல் சீற்றம் ஆரம்பமானது.  நிறைய  அரசாங்க வண்டிகள் மக்களை அப்புறப்படுத்த வந்தன. அவனைக் காப்பாற்ற வந்த ஒரு  ஜீப் வண்டியையும் திருப்பி அனுப்பினான் ஓபுல்ரெட்டி.
மழை விடாமல் பெய்து  வீடெல்லாம் மூழ்கி கழுத்தளவு தண்ணீரில் இருந்தபோதும் காப்பாற்ற வந்த  ராணுவ
படகு க்காரனை " போ அப்பனே, என் கிருஷ்ணன் இருக்கவே இருக்கிறான்  என்னை காப்பாற்றுவான் . நீ உன்னை முதலில் காப்பாற்றிக்கொள் " என்று விரட்டினான் ஓபுல் ரெட்டி.
இன்னும் நீர் மட்டம் ஏறி வீடு மூழ்கியது. கூரையின் மீது ஏறி நின்று கொண்டிருந்த ஓபுல்ரெட்டிக்கு ஹெலிகாப்ட்டர் ஏணியை இறக்கியது. கையை ஆட்டி "ஏறிக்கொள்" என்றபோதும் முடியாது கிருஷ்ணன் இருக்கிறான்'' என்று அவனுக்காக காத்திருந்தான்.

எல்லாம் முடிந்து விட்டது.

நீரில் மூழ்கி மூக்கை சிந்திக்கொண்டு  வைகுண்டத்தில்  ஓபுல் ரெட்டி  கிருஷ்ணனை கோபமாக கேட்டான்:
"உன் மீது அபார நம்பிக்கையுடன் நீ வருவாய் காப்பாற்றுவாய் என நம்பினேனே??!  ஏன் ஏமாற்றினாய் ?
" அடே,  முட்டாளே,   கோபால நாய்டு,  அரசாங்க ஜீப்பையும், படகையும், ஹெலிகாப்டரையும் கொண்டுவந்து உன்னை கூப்பிட்டது யாரென்று நீ எண்ணினாய்.?"

பதில் சொல்ல தெரியாத  ரெட்டிக்கு  தும்மல் தான் வந்தது.\


நீதி:  கடவுளை நம்பினோர் கைவிடப்  படார். கடவுள்  சங்கு சக்கரத்துடன் கிரீடத்தோடு  புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு தான்  வரவேண்டும்  என்று காத்திருந்தால்  அவர்  எந்த ரூபத்திலும்  வந்து உதவுவதை இழப்பாய்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...