Friday, March 30, 2018

pesum deivam



பேசும் தெய்வம்:

                             பெரியவா நீங்க சொல்லுங்கோ: 

எங்கள் வீட்டில் யாரும் இல்லை.  நானும் வாசலில் உள்ள  தூங்கு மூஞ்சி மரமும் தான் அசைகிறோம். வீடு நிசப்தம். வழக்கமாக சண்டை போடும் கருப்பு நாயும் அதன் நண்பனா,  நண்பியா  ஒரு பிரவுன் நாய்  அது ரெண்டையும் காணோம். சாப்பிட்டுவிட்டு என் வீட்டு கேட் அருகே  நிழலில் ஏதாவது ரகளை பண்ணிக்கொண்டிருக்கும்.  வெயிலுக்கு எங்கே ஜிலு ஜிலு வாசமோ!!

எனது அறையில் எதிரே மகா பெரியவர். என் பார்வை அவரிடம் போகிறது. அபய  ஹஸ்தம் எப்போதும் எனக்கு தெம்பளிக்கும். என் மனதை குளிர்விக்கும். என்னை மகிழச்செய்யும்  சந்தோஷ முகம். 

''என்னடா பாக்கிறே ?''

''இல்லே பெரியவா உங்களை சில கேள்விகள் கேட்டு ரொம்ப நாளாச்சே ன்னு யோசித்தேன்''

''என்னை கேள்வி கேட்க நாளு  கிழமை பாக்கணுமா நீ?''

''மனிதனும் மிருகமும் ஒரே மாதிரி இருக்காளா,  அறிவு தான் ஐந்து ஆறு என்று யாரோ நேரில் எண்ணி பார்த்ததைப்போல கணக்கு போட்டு சொல்றா? என்ன கணக்கோ?'' சில சமயம்  மிருகங்களை கவனிக்கும்போது நமக்கு தான் ஐந்து அறிவோ என்று தோன்றுகிறது எனக்கு பெரியவா''
பெ:  ''மிருகங்கள் குறுக்குவாட்டில் (horizontal) வளர்றது.  அதாலே   அதுக்கு  ‘திர்யக்’ என்று  பேர்.  மனுஷன் உசரமா  மேல்நோக்கி (vertical) வளர்ரான் .  அதனாலே  மனிதன் மற்றப் பிராணிகளை விட உசந்த நோக்கத்தைப் பெறணும் இல்லையா?   அப்படி பண்ணினால்   மனுஷன் தான் சகல ஜீவ ராசிகளையும் விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம்.   ஆனால்  PRACTICAL லா  நடைமுறையில் பார்த்தா மிருகங்களை விட மனிஷன் தான்  ரொம்ப  துக்கத்தை  அநுபவிக்கிறான். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனைக் கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் எதுவுமே  இல்லை.  இதெல்லாம் விட  அதுகளுக்கு  பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கிறோம்.

யோசிச்சு பார்.  மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் றார். நமக்குக் கொம்பும் இல்லை. நகமும் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் கம்பளி மாதிரி போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.''

''வாஸ்தவம் பெரியவா.  ஆனா  நமக்கு புத்தி இருக்கு  இல்லையா. அது பெரிய  உதவி இல்லையா சொல்லுங்கோ ''

பெ:  ''கேள். ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.  அது சரி தான்.
அந்த புத்தியை அவன் எப்படி உபயோகிக்கிறான் என்று கவனித்தாயா?

குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான்; கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

''ஆமாம் பெரியவா.  மனுஷன் உலகத்திலே  சௌகரியமாக தான் வாழறான்''

பெ:  ''மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு  இடத்திலே தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது.  பனிக்கட்டி இருக்கிற இடத்திலே சுகமாக உலவும். இங்குள்ள யானை அங்கே  ஒரு நிமிஷம் கூட  வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் எங்கே வேணுமானாலும்  போய்  வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று சுவாமி அவனை  இஷ்டப்படி சுற்ற  விட்டிருக்கிறார்.

''ஆனா  மனுஷன் தன்னுடைய  புத்தியை சரியாக உபயோகிக்கிறதில்லையே பெரியவா''

பெ:   ''ஆமா,  இந்த உயர்ந்த புத்தியை கொடுத்தும்  கூட  மனிஷன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான்; பிறந்து விட்டதாலே  இவ்வளவு கஷ்டம்; இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக இத்தனை கசையடி, சவுக்கு அடி,  வாங்க வேண்டும் என்று விதி. ஆகவே  இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதனாலே ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

''பெரியவா  மனுஷன் இப்படி ஆசைபடக்  காரணம் என்ன?''

பெ:  '' நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் தானே  அதனிடம் ஆசை வருகிறது. வளருகிறது. உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.
ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். அதை  இன்னொரு மனிதனாகவா அவன் நினைக்கிறான்? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.''

''ஆஹா  அற்புதம் . பெரியவா நீங்க பெரியவாள் தான் இன்னொருத்தரை ஈடாக சொல்ல வாய்ப்பில்லை எனக்கு . நீங்க சொன்னேளே  அந்த இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது?''

'பெ:  '' நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.
புரியும்படியாக இன்னொருதடவை சொல்றேன் கேட்டுக்கோ: எல்லோர்கிட்டையும் சொல்லு: அதுக்கு தான் உனக்கு சொல்றேன் புரியறதா?''

''முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது; இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...