Tuesday, March 27, 2018

sundarar

சுந்தரமூர்த்தி நாயனார்  

                                                       சிவனின் திருமண தூது 

சுந்தரர் தான் நிறையவே  நடந்து சிவன் கோயில்களை பார்த்தவர் என்று யாராவது கின்னஸ் புஸ்தகத்தில் போட்டிருக்கலாம்.  ஒவ்வொருத்தர்  நடையாக நடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க அலைகிறார்களே 

எதிரே நீண்ட சாலை. இருமருங்கும் நிழல் தரு  மரங்கள்.எங்கும் பச்சை பசேல் என்று நெல்வயல்கள். காய்கறி தோட்டங்கள். வண்டுகள் ரீங்காரம், பறவைகள் இனிய கானம் குளிர்ந்த காற்று, மண் தரையில் நடந்து கொண்டிருந்த சுந்தரருக்கு ஆனந்தத்தை தந்தன. அவர் தான் ஏற்கனவே வாய் நிறைய  ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திர பேரானந்தத்தில் திளைத்தவாறு நடக்கிறாரே. ஆனாலும் வயிறு ஞாபகப்படுத்தியது. பசியும் தாகமும் .  சிவனுக்கு தெரியாத சுந்தரர் நிலைமை.  தூர ஒரு மரநிழலில் ஒரு ஓலைக்குடிசை வாசலில் திண்ணையில்  சில மண் பாத்திரங்களில் நீர் மோர், குடிநீர் பணியாரங்களுடன் ஒரு பிராமணர் கண்ணில் பட்டார்.  சிறிய தண்ணீர்பந்தல்.

''அப்பாடா   ஓம் நமசிவாயம் '' என்று சுந்தரர் அந்த திண்ணையில் அமர்ந்தார்.  பிராமணர் உள்ளே சென்று விசிறி எடுத்து வந்து விசிறினார்.  

''சாப்பிடுங்கள் இங்கே'' , பிராமணர்  ஒரு தட்டு ஒரு பாத்திரம் நிறைய  அன்னம்,  சில பாத்திரங்களில் நிரம்ப உணவு பதார்த்தங்கள் எடுத்து வந்து பரிமாறினார்.   சுந்தரர் பிராமணரின் உபச்சாரத்தை மனமுவந்து ஏற்று உணவேற்றார். திண்ணையில் சற்று படுத்தார்.  ஏதோ ஒன்று சுந்தரர் கவனத்தை ஈர்த்தது.  பாத்திரத்தில் இருந்த உணவு எல்லாமே  சுந்தரர் முழுதும் சாப்பிட்டு முடித்தும் கூட அதே அளவு எப்படி  மீண்டும் நிறைந்தது?   விருட்டென எழுந்து உள்ளே பிராமணரை தேடினார்.  அந்த வீடு காலியாக எவருமின்றி இருந்தது. சுவற்றில் பார்வதி பரமேஸ்வரன் ரிஷபவாகனத்தோடு தரிசனம். அதிசயத்துடன் வெளியே வந்தால் திண்ணையில் தண்ணீர்பந்தல் காணோமே. 

''ஆஹா   பசுபதி அல்லவோ பசி தீர்த்திருக்கிறான். விசிறியிருக்கிறான்?''  நன்றியுணர்ச்சில் பதிகம் பிறந்தது. 

ஒரு தடவை  சுந்தரர்  திருக்கச்சூர்  என்ற ஸ்தலத்துக்கு சிஷ்யர்கள் புடை சூழ நடந்து சென்றார். சிவ தர்சனம் அபூர்வமாக இருந்து தன்னை இழந்தார். களைப்பாக  இருந்ததால் கோவில் வாசலிலே அமர்ந்தார்கள்.  சிவன் கோயில் சென்றால் சிறிது அமராமல் திரும்பக்கூடாது.  வழக்கம் போல் பசி. உச்சி வெய்யில் நேரம்.  இங்கேயும்  ஒரு பிராமணர் அந்த நேரம் வந்தார்!!! 

''என்ன சிவ பக்தர்களே , ஊருக்கு புதுசா? களைச்சு உட்கார்ந்துட்டீர்கள் . போஜனம் ஆயிட்டுதா? இல்லேன்னா எங்க கிரஹத்துக்கு வரணும்.ரொம்ப தூரம். அது. வேண்டாம். இங்கேயே  இருங்கோ . நான் ஏற்பாடு பண்ணி எடுத்துண்டு வரேன்  ''  சுந்தரரின் பதிலுக்கு காத்திராமல் அந்த பிராமணர் சென்றார். அந்த உஞ்ச      வ்ருத்தி  பிராமணர் பல வீடுகளில் சென்று உணவு சேகரித்து சுந்தரரையும் அவர் சிஷ்யர்களை பசியாற செய்தார்.  அவர்கள் பசியாறி முடியும் சமயம் பிராமணர் மறைந்துவிட்டார்.  இதைப்பற்றியும் சுந்தரர் அற்புதமாக ஒரு பாடல் இயற்றியுள்ளார். அதில் சிவனின் கருணை கொப்புளிக்காமல் என்ன செய்யும்?

சுந்தரர்தி விஜயம் செய்ய  நமது திருவொற்றியூர்  பாக்யம் செய்திருக்கிறதே.  சிலகாலம் இங்கே வசித்தார். பார்வதியின் தோழி ஒருவள்  கைலாசத்தில்  ஹாலால சுந்தரர் மீது மையல் கொண்டு அவரை மணக்க விரும்பி பரமேஸ்வரன் அவளை பூமியில் பிறக்க கட்டளையிட்டு அவள் இங்கே வந்து பிறந்தாள்.  அவள் பெயர் இப்போது சங்கிலி.   சுந்தரருடன் தொடர்பு சங்கிலி போல் இருந்ததால் இப்படி ஒரு பெயரா? ஞாயிறு என்று ஒரு ஊர்  இருக்கிறது.  நான் அங்கே சென்றிருக்கிறேன்.  ரெட் ஹில்ஸ் என்று சொல்கிறோமே  செங்குன்றம் அதற்கு போகும் வழியில் ஒரு சிறு கிராமம் அது.  அங்கே தான் ஞாயிறு கிழார் என்கிற வேளாளர் பெண் சங்கிலி. கோவூர் கிழார், சேக்கிழார், என்று கிழார் என்ற பெயர் வழக்கத்தில் இருந்த காலம்.தூய சிவபக்தரான  அவர் பெண் சங்கிலியும் சிவபக்தையாக இருந்ததில் ஆச்சர்யமில்லை.  கல்யாணம் என்றாலே பிடிக்காது. அவளை கல்யாணம் சம்பந்தம்  செய்ய வந்த சில வேளாளர்கள் குடும்பம் உடனே மரணமடைந்தது.  அதற்கப்புறம் கிழார் அவள் திருமணம் பேச்சே எடுப்பதில்லை. திருவொற்றியூரில் ஒரு இடம் பிடித்து அங்கே ஆஸ்ரமத்தில் தங்கினாள் . 

தினமும் நிறைய மலர்கள் தொடுத்து திருவொற்றியூர்  தியாகராஜனுக்கு மலர் மாலை சூட்டுவது  சங்கிலிக்கு  பிடித்த வேலை.  ஒருநாள் சிவனுக்கு மாலை சூட்ட ஆலயம் வந்தவள் அங்கே சுந்தரரை பார்க்கிறாள்.  சுந்தரரும்  அவளை கண்ணிமைக்காமல் சிலையாக நின்று பார்க்கிறார்..... எங்கேயோ பார்த்த முகம்.... இருவருக்கும்  மனதில் சுனாமி... கைலாச தொடர்பு மெதுவாக தலையெடுக்கிறது.

''தியாகராஜா  இவளே நான் விரும்பும் மனைவி. உன்னருளால் அது நிறைவேற வேண்டும்.''.  பரமேஸ்வரனுக்கு தரகர் வேலை நிச்சயமாகிவிட்டது. 
அன்றிரவு சங்கிலி கனவு கண்டாள் :  ''பெண்ணே, என்  சிறந்த பக்தன் சுந்தரன். உனக்கு ஏற்றவன். என் தோழன். உன்னை மணக்க அவனுக்கும் விருப்பம் என தெரிவித்தான். நீ அவனை மணக்க வேண்டும்.உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று அவனிடம் வாக்குறுதி பெற்றுக்கொள்  ''

''அவ்வாறே'' என சிவனின் கட்டளையை மீறாமல் சங்கிலி  ஏற்கிறாள்.

சிவன் சுந்தரரின் கனவிலும்'' சுந்தரா, இந்த சங்கிலியை நீ பிரியக்கூடாது.'' என்கிறார்.  
''பரமேஸ்வரா, நான் உன்னை எந்தெந்த ஊரிலோ எல்லாம் சென்று தரிசிக்கும் யாத்ரீகன். ஒரு இடத்தில் எப்படி இருப்பேன்.   நீ எனக்கு ஒரு வாக்கு தருகிறாயா? நீ லிங்கத்திலிருந்து விடுபட்டு என்னெதிரில் இருக்கும் ஒரு மரத்தில் உன் தரிசனத்தை தருவாயா. நான் இங்கேயே இருக்கிறேன்.''

''சரி'' என்கிறான் சர்வேஸ்வரன் 

தரகன் தியாகராஜன்  மீண்டும் சங்கிலியிடம் சென்று ''இதோ பார் சங்கிலி,  சுந்தரனிடம் சென்று உன்னை மணக்க ஏற்பாடு பண்ணி விட்டேன்.  அவன்  உனக்கு உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று சத்யம் செய்வான்.  நீ அப்போது  சிவலிங்கம் சாட்சியாக என்று சொல்லாதே. இதோ இந்த மரத்தில் சிவன் சாட்சி சொல்லட்டும் என்று அவன் எதிரில் நிற்கும் ஒரு மரத்தை காட்டி சத்தியம் செய்யச் சொல்''  என்று  அறிவுரை கூறுகிறார்.

அடுத்த நாள் வழக்கம்போல் சங்கிலி திருவொற்றியூஊர் தியாகராஜன் சந்நிதியில் நிற்கிறாள்.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...