Saturday, March 3, 2018

SENGALIPURAM DHEEKSHIDHAR


சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் -- J.K. SIVAN 

என் சிறுவயதில் நான் பார்த்து பிரமித்த ஒருவர் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர். அவரது குரல் கம்மலாக தான் இருந்தது என்றாலும், அவர் ஒவ்வொருவார்த்தையாக விட்டு விட்டு உ ச்சரித்து, கதை சொல்லும் தோரணை என்னை மயக்கிற்று. ராமாயண மஹாபாரத இதிகாசங்களை புரிந்து கொள்ளும் வயதில்லை அப்போது எனக்கு. 

அப்பா அண்ணாக்களோடு நடந்து போவேன். கோடம்பாக்கம் சூளைமேடு, ஆற்காட் ரோட்டிலிருந்து ரயில்வே லைனை கடந்து, தெற்கே பசுல்லா ரோடு கடந்து லைன் ஓரமாக சென்றால் கிரிஃபித் ரோடு வரும். அதில் சாரதா வித்யாலயா பெண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானம் வரும். அங்கு இல்லாவிட்டால் உஸ்மான் ரோட்டில் இப்போது தி.நகர் பேருந்து நிலையம் அருகே, சற்று முன்னாடி, சிவ விஷ்ணு ஆலயத்திலோ அவரது உபன்யாசம் நடந்து பலமுறை, பல சாயந்திரங்களில் கேட்டிருக்கிறேன். இரவு ஒன்பதுக்கு முடியும். பசியோடு நடந்து சூளைமேடு திரும்புவேன்.
ராஜாஜி வந்து உட்கார்ந்திருக்கிறார். வி.வி. கிரி, ராவல் கிருஷ்ணய்யர், ஜி.என்.பி., ஆனந்தவிகடன் தேவன், கல்கி சதாசிவம், எம்.எஸ். எஸ். அம்மா தம்பதியர் எல்லோரையும் அங்கே பார்த்த ஞாபகம் வருகிறது.

எல்லோரும் தரையில் தான் உட்காருவோம். ஜமுக்காளம் முழுதும் பரவி இருக்காது. துளி கூட அந்த கோவில் மண்டபத்தில் இடம் கிடைக்காது.அவ்வளவு கும்பல். கட்டை குட்டையாக தீக்ஷிதர், பட்டை பட்டையாக விபூதி, உருத்ராக்ஷமாலைகளோடு, குடுமியோடு இருப்பார். சமஸ்க்ரித ஸ்லோகங்கள் வெள்ளமாக அவர் வாயிலிருந்து புறப்பட்டு எல்லோரையும் ஆனந்த பக்தி சாகரத்தில் மூழ்கடிக்கும். அர்த்தங்களை ஜம்மென்று சொல்வார். காட்சிகளை கண்முன்னே கொண்டு நிறுத்துவார். நேரம்போவதே தெரியாது.
இனி அவரைப் பற்றி சில விவரங்கள்.
1903ல் தஞ்சாவூரில் சேங்காலிபுரம் கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரௌதி.உபன்யாச சக்ரவர்த்தி. அப்பா சுப்ரமணிய தீக்ஷிதரிடம் வேதம் கற்றவர். அக்ஷராப்யாசம் பருத்தியூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரியிடம். மாமனார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். வேதங்கள் சாஸ்திரங்கள் தெரிந்துகொண்டது விஷ்ணுபுரம் சுவாமிநாத சாஸ்திரிகள். இவர்தான் பரமாச்சார்யாளுக்கும் குருவாக போதித்தவர்.
தீக்ஷிதரிடம் நான் மயங்கினது நாராயணீயம் உபன்யாசத்தில் தான். கிருஷ்ணனை இளம் வயதில் என் நெஞ்சில் புகுத்திய ஒரு முக்கிய மனிதர் தீக்ஷிதர். இன்றும் கூட தீக்ஷிதரின் நாராயணீய, குருவாயூரப்ப ஸ்லோகங்கள் உலகத்தில் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகிறதே. அவருக்கென்றே ஒரு தனி குரல், ராகம். காந்தமென கவரும் பக்தி ரசம்.
அனந்தராம தீக்ஷிதர் நிறைய ஸ்லோகங்கள் இயற்றியிருக்கிறார். ''குருவாதபுருஷ பஞ்சரத்னம்.''
பூங்குன்னம் என்ற கிராமத்தில் ஒரு மலையாள பையன். அவனுக்கு விடாமல் தலைவலி. எந்த மருந்தாலும் குணமாகவில்லை. அவன் தாத்தா அவனை குருவாயூருக்கு அழைத்து சென்றார். மூன்று நாள் அங்கே வாசம். பிரார்த்தனை. மேலே சொன்ன ஸ்லோகத்தை விடாமல் பாராயணம் செய்தபின் தலைவலி எங்கே போயிற்று??

அனந்தராம தீக்ஷிதர் உபன்யாசங்கள், ஸ்லோகங்கள், புத்தகங்களாகவும், CD யாகவும் மலிந்து கிடைக்கிறது. அவரது ஜெயமங்கள ஸ்தோத்ரம் என்ற பூஜா விதான புஸ்தகம், இல்லாத பூஜை அறையோ, வீடோ கிடையாது.
தீக்ஷிதரின் மகிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தை ''அயிகிரி NANDHINI என்று உரக்க சொல்லிக்கொண்டே தெருவில் ஓடியிருக்கிறேன்.
பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் 66வயதில் சன்யாசம் பெற்று சித்தியடைந்தார். அவரது அதிஷ்டானம் சின்ன திருப்பதியில் சேலம் பட்டணத்தில் இருக்கிறது. யூட்யூபில் அவர் குரல் எப்போதும் கேட்கலாம். அதைமாதிரி குரல் முன்பும் கேட்டதில்லை, இனியும் கேட்கப்போவதில்லை.
அவரது நாராயணீயம் கதையை கொஞ்சம் இத்துடன் இணைத்துள்ள யூ ட்யூபில் கேளுங்கள்.  https://youtu.be/6dt1XrwAo8k

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...