Wednesday, March 7, 2018

WOMEN'S DAY



​​ ​ ​இன்று பெண்கள் தினம் -- ஒரு அறிவியல் ஆராய்ச்சி-- J.K. SIVAN எல்லோருக்கும் மூளை மூன்றரை அவுன்ஸ் என்று சொன்னாலும். பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்கிறது.உன்னால் முடியாது தம்பி. டிவி யில் சண்டையைப் பார்த்துக்கொண்டே செல் போனில் கையை ஆட்டிக்கொண்டு காரசாரமாக பேசியும், சமையல் வேலை (சாம்பாரில் உப்பு போடாமல்) செய்யவும், குழந்தை குட்டிகளை விரட்டிக்கொண்டும், கணவனை கடித்துக்கொண்டும் முடிந்தபோது பணிவிடையையும் செய்ய முடியும். (எல்லோர் வீட்டிலும் ​​இப்படித்தானே?) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்வதால் தான் அவனுக்கு இத்தனை ஆபத்து. அவனால் டிவி பார்க்க முடியாது, முடிந்தாலும், செல்லில் யாரோடும் பேச முடியாது (''யாருடன் அப்படி இளிஞ்சுண்டு ஈஷிண்டு பேசறேள்?'') டிவியில் கவனம் இருப்பதால் செல்லில் உளறுவான்.சாதாரணமாகவே உளறுபவன் என்று தானே பட்டம். பெண்ணால் சுலபத்தில் எல்லா பாஷையையும் கற்றுக்கொண்டு பேசமுடிகிறதே எப்படி? சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர்​ ​பெண்களாக இருக்கின்ற காரணம் இது தானோ. பத்து வருஷம் பம்பாய் போய் வந்தாலும் இந்தி தெரியாமல் ​ பச்சை ​மிளகாயை கையில் எடுத்துகொண்டு போய் கடைக் காரனுக்கு காட்டி இது வேணும் என்று கேட்கும் ஆண்கள் இருக்கிறார்கள். ஒரு மூணு நாலு வயது குழந்தைகளில் ஆணை விட பெண் குழந்தை பொட்டுக் கூடை பேச்சு சீக்கிரமே பேசும். ஆண் குழந்தை​ அப்போதிலிருந்தே தலையை ஆட்ட பழகும். ஒரு முக்யமான விஷயம். ஏதாவது பிரச்சினை​ ​மட்டும்​ இல்லை பல பிரச்சினைகளை அலசி எப்படி அதை சமாளிப்பது என்று யோசிப்பதிலும் முடிவெடுப்பதிலும் ஆண்களின் மூளையில் ரொம்ப இடம் இருக்கிறது. அதனால் தான் அவனால் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய ப்ளான் போட முடிகிறது. ஆனால் பெண்களின் மூளைக்கு இதை செய்வதில் வலுவில்லையாம்.​ பெண்களால் ஆண்கள் முடிவெடுத்த SOLUTION தீர்மானத்தையும் சட்டென்று உணர்ந்துகொள்ள முடியாதாம். -- இதை நான் சொல்லவில்லை. யாரோ சில ஆராய்ச்சியாளர்களின் முடிவு இது. இன்னொரு விஷயம் . ரெண்டுச்சக்கரமோ, நாலு சக்கரமோ வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது , தூரத்தில் வரும் ஒரு வண்டியின் வேகம், வரும் திசை, அந்த வண்டி எப்படி திரும்பும் என்பது போன்ற மாற்றங்களை (SIGNAL முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு​ ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடிகிறது.​ ​​பெண்களின் ​ மூளை கொஞ்சம் தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளு​மா​ம். என்ன காரணம், ஆண்களின்​ “ஒருவேலை மட்டுமே செய்யக்கூடிய மூளைத்திறன்” தான் . பார்த்திருப்பீர்களே, வண்டியை ஓட்டிக்கொண்டே FM , CD போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவ​னம் ட்ரைவிங்கில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் நிறைய பேர் கஷ்டப் படுகிறார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள்​ ஜாக்கிரதை​ . இந்த மாதிரி ஒட்டிக்கொண்டு வருபவர்களை கண்டால் ஆண்கள் ஓரமாக ஒதுங்குவது புத்திசாலித்தனம் ). ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்களால் ​ அந்த ​​ஆசாமியை லபக்கென்று பிடித்துவிட முடிகிறதே. ஆனால், பெண்கள் ஆண்களிடம் சர மாரியாக பொய் பேசினாலும் ஆண்களால் 'ஆ''​ வென்று வாயைப் பிளந்துகொண்டு கேட்க தான், நம்ப மட்டுமே முடிகிறது. பொய்யென்று அதை உணர முடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்று​ காலை இதை நான் எழுதும்வரை இப்படித்தான் நம்பி கொண்டு இருகிறார்கள் ) ​அதனால் தானே என்றால் ​எதனால் ? பெண்கள் பேசும் போது 70% முக மொழியையும் (FACIAL EXPRESSION ) 20% உடல் மொழிகளையும் (BODY LANGUAGE ) 10% வாய் மொழியையும் (SPEECH ) உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை! பல பிரச்சனைகளை மண்டைக்குள் திணித்து வைத்திருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி SOLUTION விடையை படிப்படியாக அடையாளம் கொள்ளும். அதனால் தான் அவன் தனியாக எங்காவது உட்கார்ந்து மோட்டுவளையை பார்க்கிறான். தனிமையில் தமது சிக்கலுக்கு விடை தேடுகிறான். ஆனால், இதே அளவு நிறைய பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது ​பிரச்சனை களை தனித்தனியாக பிரித்துப் பார்க்காமல் …. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்ச​ ​னைகளையும் வாய்மூலமாக கொட்டி தீர்த்து விடுகிறாள். ''மாமா உங்க கிட்ட சொன்னா மனசு பாரம் எல்லாம் குறைஞ்ஜா மாதிரி திருப்தியா இருக்கு ''. பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அப்படிக் கொட்டியபின் அவர்களால் நிம்மதியாக தூங்கமுடியும்.​ ​நம்மால் புரண்டு புரண்டு தான் படுக்க முடியும். கௌரவம், மதிப்பு, வெற்றி, பிரச்சனை சமாளித்தல், முடிவுகள், பெரிய செயல்கள் என்பவை போன்ற வகையில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும். அதே​ சமயம் எல்லோருடனும் உறவு, நட்பு, குடும்பம் என்ற வழிகளில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும். ஒரு பெண்ணிற்கு தனது காதல்/உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவனம் செலுத்த முடியுமாம். ஏதோ கொஞ்சம் புளி உப்பு காரம், சக்கரை கூடவோ கம்மியோ ஆகும். வேறு வழியின்றி குறை​ ​கூறாமல் ஆண்கள் சாப்பிட்​டே ​ ஆகவேண்டும். ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவனம் செலுத்த முடியாதாம். பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை (indirect ) அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே​ (direct ) பயன்படுத்துவார்கள். தேதிகள், வருஷம் நம்பர்கள் ஆகியவற்றை ஆண்கள் அதிகம் ஞாபகத்தில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள கூட தலையை சொரிவான்.​ மாட்டிக்கொண்டு இடி படுபவன். அவன் நிறைய தடவை அகப்பட்டுக்கொண்டு அவஸ்தை படுவதே இத​ நாள், பிறந்தநாள், குழந்தை பிறந்தநாள் மறந்துபோ னதால் தான். (அம்ம​ணிகளே, கணவன் உங்களது பிறந்த நாளை​ ,​ திருமண நாளை மறந்து விட்டால் பெரிய​ மனது பண்ணி சாதரணமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய் என துன்புறுத்த வேண்டாம்.) பெண்கள் தனது பள்ளி நண்பன்,நண்பி அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில் வைத்துக்கொண்டு இருப்பாள். அது இயற்கையாகவே அவளுக்கு சுலபமானது. பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!​ இப்போது தெரிகிறதா, புரிகிறதா, குடும்பத்தில் ஆண் பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான ஆதார அடிப்படை காரணம். இது அறிவியல் கண்டுபிடிப்பு .என் கற்பனை என்று நினைத்து இந்த பெண்கள் தினத்தில் எனக்கு வசை மாலை வேண்டாம். ​''சின்ன சின்ன பிரச்னைகளை என் மனைவி பார்த்துக் கொள்வாள். நான் பெரிய விவகாரங்களை மட்டும் கவனித்துக்கொள்வேன். அதில் அவள் குறுக்கிட மாட்டாள். அவளுடைய சின்ன சின்ன விஷயங்களில் நான் தலையை நீட்டமாட்டேன் என்பது எங்களுக்கிடையே ஒப்பந்தம்.'' '' ஓ பரவாயில்லையே. என்னென்ன சின்ன, பெரிய பிரச்னைகள்?'' அப்பாவியாக கேட்ட சோமையாஜுலு. ''ஒண்ணுமில்லை. என் சம்பளம், அதில் செலவு, ஷாப்பிங், என்ன சமையல், எங்கெங்கு எப்போ போகணும், யார் யார் வீட்டுக்கு போகணும், யார்லாம் வரலாம், யார் கூட பேசறது, யாரை பார்த்த முகத்தை திருப்பிக்கறது, நான் என்னென்ன பேசறேன், யாரோட ... இதுமாதிரி அல்ப விஷயங்களை அவள் கிட்டே விட்டுடுவேன். 3ஜி, 4ஜி, நாட்டின் தலைமை, பார்லிமென்ட், சட்டசபை, ஒழுங்கு பிரச்னை, அரசியல் தலைவர்களின் நடத்தை, உலக க்ரூட் ஆயில் விலை, நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி, அமெரிக்காவின் இந்திய பிரச்னை, அடுத்த தேர்தல் , உலக பொருளாதாரம் இதெல்லாம் நான் அலசுவேன், ஆக்கிரோஷமாக பேசி என் அபிப்ராயத்தை சொல்வேன். அவள் தலையிட மாட்டாள். ஏன் காது கொடுத்து கூட கேட்டு தொந்தரவு பண்ணமாட்டாள்....'' இது தப்பு என்று எந்த பெண்ணாவது தீர்மானித்தால் இந்த புனிதமான உலக மகளிர் தினத்தில் என்னை திட்ட வேண்டாம். ''வாழு, வாழ விடு'' என வாழ்த்துக்கள் உலக மகளிருக்கு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...