Wednesday, November 22, 2017

SUR SAGAR

சூர்  சாகரம்  J.K. SIVAN 


                                  நான்  பேச நினைப்பதெல்லாம்....

ஆஹா,  இந்த  சூர்தாஸ்  கண்ணில்லாதவர்  என்று நினைத்து  ஏமாந்து விட்டேனே.  ஆள்  பலே  ஆள் அவர்.  எப்படி சாமர்த்தியமாக  இந்த  கிருஷ்ணன்  ராதை மனதில் இருப்பதையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளும்போது   மூக்கின்  மேல் இல்லை,  முகத்தின் மேலேயே  கை வைத்துக்கொள்ள தோன்றுகிறது. 

சூர்தாஸ்  மனதில்  உருவான   ஒரு காட்சி.

ரெண்டுமே  இளசுகள்.  ஒன்றை ஒன்று அபரிமிதமாக தேடுபவர்கள்.  மனதை இன்னொருவரிடம் இழந்தவர்கள். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொருவரும்  மற்றவர் நினைவிலேயே  வாழ்பவர்கள்.

இப்போது மாதிரி  வாட்ஸாப்,  மெஸ்ஸெஞ்சர்,  sms,  ஈமெயில், வசதிகள்  இருந்தால் ஒன்றை ஒன்று காதாலேயே மொபைலில்  விழுங்கிக்கொண்டு  சதா சர்வகாலமும்  உலகை மறந்து ஒரு ஓரமாக  உட்கார்ந்து  இருக்கும்.  அப்போது பாவம்  குறிப்பாகத்தான்   தன்  மனதை மற்றவருக்கு  வெளிப்படுத்த  வேண்டி இருந்தது.  ஒருவர்  சொல்வது, ஜாடையாக  மற்றவருக்கு மட்டுமே  புரியவேண்டும்.  இதர ஆண்  பெண்ணுக்கு  காதில் விழுந்தாலும்  அர்த்தம் புரியக்கூடாது. சந்தேகமும் வரக்கூடாது. இது எவ்வளவு கஷ்டம். அடேயப்பா.  கண்ணனும்  ராதையும்  இதில்  கை  தேர்ந்த கில்லாடிகள் போல இருக்கிறது. 

 நிறைய பெண்கள்  தோழிகள்  சூழ  ராதை கண்ணன் வீட்டு டத்தில்  அமர்ந்திருக்கிறாள்.  வாசல் கதவு திறந்து இருக்கிறது.  எதிரே  மாமரம்  புன்னைமரத்துக்கும் இடையிலே  ஒரு  கிளையில்  பொன்னிற  கன்னுக்குட்டி கட்டி வைத்திருக்கிறான். 

அம்மா பசு சற்று தள்ளி ஓடும்  ஓடை கரையில் காற்று வாங்கிக்கொண்டு  வயிறு நிறைய தின்ற  இளம் புல்லை அரைக்கண் மூடி  சுவாரஸ்யமாக  அசை  போட்டுக்கொண்டிருக்கிறது. தலை ஆடும்போது அதன்  கழுத்து மணி கணீர் என்று ஒலிக்கிறது. வால் ஓய்வில்லாமல் அசைந்து ஈயை  ஒட்டிக்கொண்டிருக்கிறது. காதுகளும் அதற்கேற்ப அசைகிறது.

கிருஷ்ணன் பார்வை  ராதாவின் மேல் பதிந்தது.  அவள் கண்கள் மற்ற தோழிகளை ஜாடை 
யாக  பார்த்தது.  அவள்  என்ன சொல்ல நினைத்தாளோ அதை அவள் கண்கள் சொல்ல அவன் பூரணமாக அதை வார்த்தைகளில்லாமலேயே  புரிந்து கொண்டான்.

''இவர்கள் எதிரே இப்போது என்னோடு பேசாதே.''

புரிந்து கொண்ட  கிருஷ்ணன் குறுக்கும் நெடுக்கும்  ஏதோ வேலையாக இருப்பது போல்  நடமாடினவன் உரக்க அனைவர் காதும் கேட்க சொன்னான்.

' அடாடா  நேரமாகிக் கொண்டே போகிறதே.  அந்த புங்க மரத்தின் கீழே  காராம் பசு மடி நிறைய  பாலோடு எனக்காக   காத்துக்கொண்டிருக்கும். உடனே  நேராக  நான்  அங்கே தான் போகவேண்டும்.  யார்  என்னோடு வந்தாலும் வராவிட்டாலும்  நான்  போகவேண்டும் அங்கே.  ஒருமணி  நேரமாவது நான்  அங்கே  இருக்கவேண்டுமே.  

கையில்  மணிக்கயிறு, பால் கறக்கும்  நீளமான  வாயகன்ற  ஒரு காது வைத்த  பாத்திரம் எல்லாம் எடுத்துக் கொண்ட  கிருஷ்ணன் வேகமாக  நடக்க ஆரம்பித்தான்.  போகுமுன் கண்கள் ஒரு வீச்சு ராதையை நோக்கி பாய்ந்தது.  

தான் மட்டும்  தனியாக அங்கே இல்லை என்பதையும்  குறிப்பாக  ராதைக்கு உணர்த்தினானே  அது எப்படி தெரியுமா?  

''அப்பா  வேறு அங்கே பசுக்களை  வழக்கம்போல்  எண்ணி  எல்லாம்  சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பார்.  எல்லாவற்றையும்  திரும்பி அழைத்துக்கொண்டு வீடு திரும்புவதில் கவனமாக இருப்பார்;  அவரை தொந்தரவு பண்ணாமல் யமுனைக்கரைக்கு பசுக்களை அழைத்துக்கொண்டு சென்று குளிப்பாட்டவேண்டும். எப்படியும்  குறைந்தது ரெண்டு மணி நேரமாகவாவது அங்கே  இருக்கவேண்டுமே...'

ராதாவுக்கு  தான்  கிருஷ்ணனை எங்கு எப்போது எப்படி  எவ்வளவு நேரம்  குறைந்தது தனியாக  சந்திக்கலாம் என்ற செயதி போய் சேர்ந்தது.  

பசுவுமில்லை.பாலுமில்லை.   பால் கறக்கும்  பாத்திரம் மரத்தில் தொங்கியது.  நந்தகோபன் பசுக்களை எண்ண எங்கோ காட்டில் சுற்றிக்கொண்டிருந்தார்.....

கிருஷ்ணன்  போன  சில நிமிஷங்களில்   ..  அடடா  நான்  மறந்தே போனேன். உடனே  வீட்டுக்கு நீர் கொண்டு போக நினைத்தேன்.. உங்களோடு பேசிய சந்தோஷத்தில் மறந்துவிட்டது....  ஒரு குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு  ராதை வேகமாக வெளியேறினாள் ...

ப்ருந்தாவனமும்  நந்த குமாரனும்  .......  ஏனோ  ராதா.........யார் தான்  உன் அழகால்   மயங்காதவரோ.....  பாட்டு  ஒலிக்கிறது. 

வேணுகானம் கண்ணன்  விரலில் ஆட,  ராதா அபிநயகம் பிடிக்கிறாள் .....


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...