Thursday, November 2, 2017

பாட்டியின் பேருண்மைகள்

பாட்டியின்  பேருண்மைகள்  J.K.SIVAN 


நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை எது?  பாசம்  தான்  அனைவரையும்  கட்டி  அணைக்கிறது.  பணம் தான்  உறவைப்  பிளக்கிறது. அந்த பணம் தான்  சிலரை  ஒன்று சேர்க்கிறதும்  கூட.  பணமா  பாசமா  என்பது இப்போது நமது பிரச்னை  அல்ல. ஒரு  கஷ்டமான  நேரத்தில்  யார்  உதவுகிறார்கள்,  யாரால்  துன்பம்  வருகிறது  என்று  ஆராயும்போது  தான்  புரிகிறது  (ரொம்ப  லேட்டாக),  கூடப்பிறந்தவர்களும்,  நெருங்கிய  உறவினரும்  தானே   என்று  நாம்  அணைத்த  கரங்கள்  தான்  நம் கழுத்துக்கு கத்தியை  வீசின  என்கிற  உண்மை. இத்தகைய  நேரத்தில்  அந்த  ஆபத்தில்  யாரோ  ஒருவரால்  நாம்  காப்பாற்றப்படுவோம்.  அவர்  இறைவன் அனுப்பிவைத்த  முன் பின்  தெரியாதவர், அல்லது தெரிந்திருந்தாலும்  அதிகம்  பழகாதவர்,  நாம்  எதிர்பாராமல்  உதவி செய்த ஒரு  நண்பர் அல்லது  அவருக்குத் தெரிந்தவர்  என்று  இருக்கும்.  இது  நிறைய  பேர்  வாழ்வில்  நடப்பது.

 இது  எதைப்போல்  இருக்கிறது ? நாம்  மூன்று  வேளையும்  சாப்பிட்டு  வளர்த்த நம்  உடலின்  பாகங்களிலே  உள்ளே  நம்மாலேயே  பல வருஷங்கள்  சுகமாக வளர்ந்த வியாதிகள், நோய்கள்  தான்  ஒரு  சமயம் விஸ்வரூபம்  எடுத்து  நம்மையே  சாய்க்க முயல்கிறது.  அந்த நேரத்தில்  நம்மைக்காப்பாற்றுவது எது ? எங்கோ ஒரு  மலையில், ஒரு  தோட்டத்தில்,  ஒரு  மரத்தில், செடியில்,  உதித்த  ஒரு  தாவரத்தின்  சாறு, சக்கை, அதன் பொடி , லேஹியம், அல்லது  அதையே  மிஷினில் அரைத்து  மாத்திரை...  இது போல்  முன் பின்  சம்பந்தமில்லாத  ஒன்று.     ஆபத்துதவியாக  வந்த  அந்த நண்பர்கள்  சமய சஞ்ஜீவிகள்  இந்த மருந்து போன்றவர்கள்  -  இது  நான்  சொல்லவில்லை   ஒளவைக்கிழவி சொல்கிறாள்.

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.


அப்படி  எல்லாரையும் மதித்து, அன்போடு,  அவர்களுக்கு  வாரி வாரி வழங்கிய  ஒரு  நல்ல மனிதன்  ஒரு நாள் நலிந்து போனாலும்  பொருளின்றி வாடினாலும்  அவன் குணம்  மாறாதே. இருப்பதைக் கொடுக்கவும்  தயங்கமாட்டான்.  இன்சொல்  குறையாது.  அன்பு  குறையாது . கேட்டாலும்  மேன்மக்கள்  மேன்மக்களே  என்று  ஏற்கனவே  படித்தோமல்லவா.  அதே  தான்  இது. 


கெட்ட ஆசாமிகள் பற்றி ஒரு வார்த்தை சொல்லியாக  வேண்டுமே. அவனும்  எப்போதும் ஒரே மாதிரிதான்.  நல்ல நாளிலும் உதவாதவன் நலிந்து போனால் நாயும்  சீந்தாதவனாகி விடுவான்.

பாட்டியம்மாள்  இதை  ஒரு  உதாரணத்தோடு விளக்குகிறாள்.  பொன் குடம்  உடைந்தாலும்  அதற்கு மதிப்பு உயரலாமே தவிர குறையாது.   அதைப்பார்த்து  அருகே இருந்த  மண் பானை உடைந்தால்  வாரி  வெளியே கொட்டவேண்டியதுதான் அதன் நிலை.

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?

ஒரு ஆசாமியின்  உடை, பந்தா, பகட்டு, படாடோபம், வரட்டு  கவுரவம்  இதெல்லாம் அவனை மதிப்புக்குரியவனாக்காது.   

அமைதி, எளிமை,  இன்சொல்,  நாணயம்,  குறைந்த பேச்சு, இதுவே  அவனை உயர்ந்தவனாக்கும்.  இது  எதுபோலவாம்?

கற்றாழைக்கு  இலை  பெரியது.  வாசனை? நறுமணம்?   அதேசமயம் சிறிய  துளசி இலை  இருக்கிறதே அது  உருவில் சின்னது தான். ஆனால் அதன் மதிப்பு, மணம் , மேன்மை எவ்வளவு உயர்ந்தது.   எனவே  உருவத்தைப்பார்த்து  மயங்காதே. உள்ளே இருக்கும் விஷயத்தைப் பார்க்க கற்றுக்கொள் என்கிறாள்  பாட்டி.
ஒரு  அழகான  பொருத்தமான உதாரணம்  நச் சென்று  சொல்கிறாள்.  கடல்  எவ்வளவு  பெரிய அளவு நீர்  கொண்டது.  தாகத்திற்கு ஒரு டம்ளர்  குடிக்க முடியுமா?  கிராமத்தில் சின்ன  ஆறு. அது வரண்டுபோனாலும்  ஒரு  சிறு ஊற்றுக்கண்  மண்ணைத் தோண்டினால்  நீரைக் கொடுக்கிறதே.  அதன்  ருசி  அவ்வளவு பெரிய  கடலுக்கு உண்டா. மன்னார்குடியில் நாங்கள் குடி இருந்தபோது  ஹரித்திரா நதி ஆற்றுமண்ணில் ஊத்துப்பட்டை  எனும்  எவர் சில்வர்  அன்னவட்டில்   போன்ற ஒன்றினால் ஆழமாக  தோண்டி ஜலம் எடுத்து குடம் நிரப்பி  வீட்டுக்கு தூக்கிக் கொண்டு போனது ஞாபகம் வருகிறது. 

இது தான்  நல்லவனுக்கும்  தீயவனுக்கு  உள்ள  வேற்றுமை  என்கிறாள்.


மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்

நல்ல  நண்பர் யார்.  சமய  சந்தர்ப்பவாதிகள்  நண்பர்களாக  இருப்பவர்கள்  யார்  என்று தெரிந்துகொள்வது எப்படி?பார்த்துக்கொண்டே  இருப்பார்கள்,  எப்போது  இனிமேல்  ஒன்றும்  தேறாது  இவனிடம்  என்று  அறிந்துகொள்கிறார்களோ   அடுத்த கணமே  துளியும்  மனத்தில்  நன்றியின்றி  பழசை  மறந்து பறந்துவிடுவார்கள். இவர்களா  நண்பர்கள், உறவினர்கள் ?

இதை யோசித்த  கிழவி  ஒரு  தக்க  உதாரணம்  கொடுக்கிறாள்.  இதோ பார் அந்த குளத்தை.  ஒரு காலத்தில்  எவ்வளவு நீர்  இருந்தது.  அப்போதெல்லாம்  எத்தனை  பறவைகள்  வரும்,  மீன்கள் நிறைய, இருக்கும். மழையில்லை,  வானம் வரண்டது. வெப்பம் ஏறியது. எங்கும்  அனல்.  குளம் சுண்டி விட்டது.  இனி  பறவைகள்  அங்கு எதற்காக வரப்போகிறது.  அகப்பட்டதை எல்லாம்  எடுத்துக்கொண்டாகிவிட்டதே.  குளம்  தனியாகி விட்டதா?  இல்லை. கண்ணுக்கு  லட்சியமாக  இல்லாமல் அப்போதும்  இப்போதும்  சாஸ்வதமாக  குளத்தில்  இருப்பது  அதன் அடியில்  மண்ணில்  வளர்ந்த, படர்ந்த  கொட்டி,  ஆம்பல், நெய்தல்  போன்ற செடி கொடிகள்  தான்.  குளத்தில்  நிறைய நீர்  இருந்தபோதும்  இப்போது வரண்ட நிலையிலும்  துணையாக  உள்ளது அவைதான். நேசத்தை நட்பை  வறட்சி மாற்றவில்லையே.


அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

ஒளவையின்  தனிப்பாடல் ஒன்றுக்கு அர்த்தம் இன்று  எழுதினேன். 

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தி மிக
ஆடினாள் பாடினாள் ஆடிப்பழ முறத்தால்
சாடினாள் ஓடோடத்தான் !!!!

ஒளவை   துன்பத்தையும் நகைச்சுவையோடு  ஏற்கும் தன்மையள் .

ஒரு கணவனுக்கு  மிகவும் கொடிய, குணங்கெட்ட மனைவி. ஆங்காரி.  ஒவ்வொரு வேலைக்கும்  அவளை தாஜா பண்ணி தான் செய்யவைக்க வேண்டும்.

ஒரு நாள்  கணவனின் நண்பர்களோ , உறவினரோ எவரோ விருந்துக்கு எங்கள் இல்லம் வாருங்கள் என்று கூப்பிட்டு விட்டான்.

அவள் எப்படி நடந்துகொள்வாள் என்று ஓரளவுக்கு தெரியும் என்றாலும் முன்கூட்டியே அவளை சரியான கணிக்க முடியாது. எப்படியும் பொல்லாதவள்.

எனவே  அவளை தட்டிக்கொடுத்து வேலை வாங்க அவள் அருகே சென்று அவளுக்கு சிங்காரம் செய்ய ஒருதிதியை நியமித்து  அவளது முகத்தைத் துடைத்துத் திருத்தி, தலையிலுள்ள ஈரையும், பேனையும் எடுத்துவிட்டுக் கூந்தலைப் பின்னி, அவளுக்கு ஒப்பனை செய்து  வைத்து  அவள் கொஞ்சம்  சிரித்த முகமாக இருக்கும்போது

''அன்பே ‘வாசலில் விருந்தாளி வந்திருக்கிறார்!   நீதான் நன்றாக சமைப்பாயே, உடனே உள்ளே சென்று அவர் உண்ண உணவு ஏற்பாடு செய்வாயா? எனக் கூறினான் கணவன்.  அவளோ,

அதெல்லாம் என்னால் முடியாது. எனக்கு ஏற்கனவே  உடல் நோவு தாங்க முடியவில்லை.  யாரைக்கேட்டு அவர்களை அழைத்தாய்  நீ என்று  அவனை கண்ணால் எரித்தாள் .கோபப்பட்டு  பேயாட்டம் ஆடினாள்!
திட்டினாள்!  அப்படி ஆடிக்கொண்டே  கணவனை சாடும்போது அவள் கண்ணிலே  சுவற்றில் சார்த்தி வைத்திருந்த ஒரு பழைய முறம் கண்ணில் பட்டுவிட்டது.  வசதியாக போய்விட்டது. அதைக்கையில் எடுத்துக்கொண்டு, அவன் ஓட, அவன் பின்னே  தேடிக்கொண்டு துரத்தி, அவனை ஓடோட  விரட்டி அடித்தாள்!”

இதை எப்படியோ  ஒளவை  பார்த்துவிட்டாள் . அப்போது தான் இதைப் பாடினாள்:

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...