Saturday, April 23, 2022

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN


''தங்கையின்  நேர்த்தி கடனை பூர்த்தி செய்த அண்ணா''.


ஆண்டாளையும்  அவள் தந்த  முப்பது திருப்பாவை பாசுரங்களையும் அறியாதவர் இல்லை.   பக்தி ரசம் தோய்ந்த  நேர்த்தியான  பாமாலை அது.  தமிழறிந்தவர்கள் திருப்பாவையை ரசிக்காமல் இருக்க முடியாது.

வருஷா வருஷம் மார்கழி மாதம் முழுதும் ஆண்டாள் சரித்திரத்தை  எழுதி வருகிறேன். என்னுடைய  ''பாவையும் பரமனும்'' எனும்  புத்தகம் அநேக நண்பர்களை சென்றடைந்திருக்கிறது என்பது என்னால்  இயன்ற ஒரு சிறிய சேவை.   திருப்பாவை 30 பாசுரங்களையும் ஆண்டாள் எழுதியபோது தன்னை கண்ணன் ஆயர்பாடியில் இருந்த காலத்தில் அந்த ஊர் சிறுமிகளில் ஒருவளாக உருவகப் படுத்தி பாவை நோன்பு நோற்றபோது அவள் கிருஷ்ணனின் பெருமையை உணர்த்தியது அதில் வெளிப்படும்.

கொஞ்சமாக  சொட்டு சொட்டென்று  நனைந்து கொண்டே நடக்க இன்பமாக இருக்கும்  மழை. குளிர்ந்த அமைதி. எங்குமே எவரின் நடமாட்டமும் இல்லாத விடியற் காலை வேளை. வேறு ஒரு வேலையும் இல்லாத மார்கழி மாதம் இறைவனுக்கென்றே, இறை சிந்தனைக்கென்றே ஒதுக்கப்பட்டது. மார்கழியில் சுப லௌகீக நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டன. காரணம் மார்கழி அசுப மாதம் என்பதால் அல்ல. மோட்சம் தரும் மாதம் என்பதால் மாத முழுதும் நாராயணன் நினைவுக்காகவே அவன் அருளைப் பெற பிரத்யேகமான சிறந்த மாதமாக மார்கழி ஏற்றுக் கொள்ளப்பட்டது ''மாஸானாம் மார்கசீர்ஷாம்'' ; மாதங்களில் அவன் மார்கழியானதால் தான்.

கிருஷ்ணன், ராமர், போன்றோர் கூட அவதாரம் எடுக்கும்போது ஒரு மானிட பெண்ணின் கர்ப்ப வாசம் அவசியமானது. தாயாருக்கோ நினைத்த மாத்திரத்தில் மானிட ஜென்மம் சாபல்யமாயிற்று. சீதை அவ்வாறு தான் ஜனகனால் கண்டெடுக்கப் பட்டாள். பூமா தேவியோ கோதையாக அவதரிக்கையில் துளசிவனத்தில் தான் பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்டாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மார்கழி முழுதும் கிருஷ்ணன் நினைவிலேயே ஈடுபட வைப்பது. எனவே சிறந்த கிருஷ்ணானுபவம் பெற திருப்பாவை உசிதமானது.

ஆண்டாள் என்று நினைக்கும்போதே இப்படியும் ஒரு அசாத்திய பெண்ணா என்று ஆச்சர்ய பட வைப்பவள். ஒரே பெண் ஆழ்வார் அவள்.   முப்பது திருப்பாவையும் 143 பாசுரங்கள் அடங்கிய நாச்சியார் திருமொழியும் எழுதி நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் நமது மனத்திலும் நீங்காத இடம் பெற்றவள். மற்ற ஆழ்வார்கள் தங்களை பெண்ணாக பாவித்து பரகால நாச்சியார், பராங்குச நாச்சியார் என்றெல்லாம் நாயக நாயகி ரூபத்தில் பக்தியை கண்ணனிடம் காட்டினாலும் அவன் மனைவியாகவே தன்னை பாவித்து அவனைத் தன் மணாளனாக ஏற்றுக்கொண்டு பாடி அவனில் கலந்த ஆழ்வார்  ஆண்டாள் எனும் கோதை  ஒருவளே. தன்னை கண்ணன் வாழ்ந்த ஆயர்பாடி கோபியரில் ஒருவளாக உருவகித்து அவனை நேரில் கண்டு அவனிடம் அருள் பெற்றவள். அவனை ஆண்டு நம்மையும் ஆண்டருள்பவள் அந்த ஆண்டாள் என்ற கோதை ஒருத்தியே.

நாச்சியார் திருமொழி ஒரு மகத்தான காவியம் எனலாம். கிருஷ்ணனை அடைய கோதை விழைவதை எளிய தமிழில் தரும் மனதை கவரும் பாசுரங்கள். ஒரு சிறப்பான விஷயம். முதலில் திருப்பாவை ''மார்கழி'' என்று தொடங்குகிறது. முதல் பாசுரம் ''மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் '' என்று ஆண்டாள் தொடங்கியவள் அடுத்த தனது படைப்பான நாச்சியார் திருமொழியில் முதல் அடியாகவே '' தை ஒரு திங்கள் '' என்று கல்யாண மாசத்தில் ஆரம்பிக்கிறாள். மார்கழியில் காத்யாயனி விரதம் இருந்து நோன்பு நோற்றவள் விரத பலன் கை கூடி அந்த அரங்கனையே மணாளனாக அடைந்து விமரிசையாக திருமணம் நடப்பதாக கனா காண்கிறாள். வாரண மாயிரம் என்ற அருமையான வர்ணனை மிக்க பாசுர தொகுப்பு படிக்க படிக்க கண் முன்னே ஆண்டாள் திருக் கல்யாண கோலம் காட்சியை சுவையாக தருகிறது.

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆண்டாளை பொறுமையின் பூஷணமான பூமி தேவியாகவும், கருணை பொழியும் ஸ்ரீ லக்ஷ்மி தேவியாகவும் போற்றுகிறார்.

 ''साक्षात् क्षमां करुणया कमलामिवान्यां  गोदामनन्यशरणः शरणं प्रपद्ये ॥१॥     
சாக்ஷாத் க்ஷமம் காருண்ய கமலம் இவண்யம்'' என்கிறார் கோதாஸ்துதியில்.

யாராவது பகவானுக்கு என்று பிரத்யேகமாக சாற்றுவதற்கு வைக்கப்பட்ட மாலையைத்  தொட முடியுமா, அணிய முடியுமா?'' ஆனால் அவள் அணிந்த மாலை தான் வேண்டும் என்று அந்த அரங்கனே விரும்பிக்கேட்ட பெருமையும் புகழும் கோதைக்கன்றி வேறு யாருக்காவது உண்டா? உரிமையோடு கிருஷ்ணனை ''கருப்பா'' என்று கூப்பிட்டவள் அவள் ஒருவள் தான். ஏனெனில் அவனும் மகிழ்ந்து அதை ஏற்றுக்கொண்டவன் தானே. ஆண்டாளின் தமிழ் என்ன சாமான்யமானதா?. அதன் புகழ் மறந்து விட்டதா ? ''வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்'' என்ற பெயர் பெற்றதல்லவா அவள் எழுத்து.

ஸ்ரீ ராமானுஜருக்கே திருப்பாவை ஜீயர் என்று ஒரு பெயர். அந்த பெயரை வைத்ததே அவரது ஆசார்யனான பெரிய நம்பிகள். இதற்கு என்ன காரணம் தெரியுமா. ஸ்ரீ ராமானுஜருக்கு திருப்பாவையின் உள்ளர்த்தங்களில் பொதிந்த வேத சாஸ்திர சாரமும் அதன் பொருட் செறிவும், தெள்ளிய நடையும் அதைப்பாடும்போது கிடைக்கும் நாவின் சுவையும். அடிக்கடி ஆண்டாள் பாசுரங்களை பாடிக்கொண்டே செல்வார். அதுவும் முக்யமாக பிக்ஷைக்கு அவர் வெறுங்காலோடு பாதரக்ஷை அணியாமல் செல்வது வழக்கம். அவரை மிகவும் ஈர்த்த பாசுரம் ''உந்து மதக் களிற்றின்'' என தொடங்கும் பாசுரம். 

ஒரு முறை திருக்கோஷ்டியூரில் இவ்வாறு வெறுங்காலுடன் உந்து மதக்களிற்றின் பாசுரம் பாடிக்கொண்டே தனது ஆசார்யன் வீட்டு வாசலில் பிக்ஷைக்கு நின்றார். அவர் இந்த பாசுரத்தை முழங்கிக்கொண்டு நின்ற சமயம் அவரது ஆசார்யனின் பெண் வாசல் கதவை திறந்தாள். அந்த க்ஷணம் ராமானுஜர் பாசுரத்தின் மற்றொரு அடியான ''செந்தாமரைக் கையாள் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்'' என்ற வரியை பாடிக்கொண்டிருந்தார். வளை ஒலிப்ப என்று சொல்லும் நேரம் அந்தப் பெண் கையில் வளைகள் அணிந்து வந்து, கதவைத் திறந்ததும் ஆண்டாளே பிரத்யக்ஷமாக தோன்றியதாக எடுத்துக்கொண்டு அந்த ஆனந்த அநுபவத்தில் ராமானுஜர் மூர்ச்சையானார். ஆச்சர்யருக்கு விஷயம் சென்றது.
என்ன நடந்தது அம்மா ? என்கிறார் குரு.
வாசலில் பிக்ஷைக்கு யாரோ ஒருவர் வந்திருக்கிறாரே என்று கதவைத் திறந்தேன். என்னைக் கண்ட அடுத்த வினாடி அவர் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார் அப்பா. ''
என்ன ஆச்சு அவருக்கு. என்ன பண்ணிக்கொண்டிருந்தார் அப்படி கீழே விழ? யார் அவர்?
''உங்கள் சிஷ்யர் ராமானுஜர் தான். ஏதோ ஒரு பாசுரம் பாடிக்கொண்டிருந்தார் நான் பார்க்கும்போது ஏதோ '' சீரார் வளை'' என்ற வார்த்தை என் காதில் விழுந்தது.''
ஓஹோ ராமானுஜன் உந்து மதக்களிற்றான் பாசுரத்தை பாடிக்கொண்டு வந்திருக்கிறான் போலும். வளைக்கரங்களோடு நீ கதவை திறந்தது அவன் பாடிய பாசுரத்தில் வந்தபடி ஆண்டாளே கதவைத் திறந்ததாக ராமானுஜனுக்கு தோன்றியிருக்கலாம்'' என்று ஊகித்தார். அதனால் தான் அவருக்கு திருப்பாவை ஜீயர் என்ற பெயரும் இட்டார். 
அது சரி ஏன் ராமானுஜர் திருப்பாவை பாடல்கள் பாடும்போது பாத ரக்ஷை அணிவதில்லை? 
 காரணம், ஆண்டாள் பூமி தேவி. அவளது சாக்ஷாத் அவதாரம். அவளைப் பாடும்போது செருப்பு அணிந்து பூமியின் மீது நடப்பது தாயாருக்கு செய்யும் அபசாரம், அவமரியாதை அல்லவா? என்று எண்ணினவர். என்னே அவர் பக்தி!!

ஒரு வேடிக்கையான சம்பவம். இது நிகழ்ந்த இடம் திருமாலிருஞ்சோலை. ஆண்டாளின் தமிழ், அவளது பாசுரங்கள் எப்போதுமே ஸ்ரீ ராமானுஜருக்கு பிடித்தமானவை. திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார். அவளைத் தனது இளைய சகோதரி என்பார். ''கோதாக்ரஜா'' என்று சொல்வது வழக்கம். ஆண்டாளின் திருமொழியில் ஒரு அழகான பாசுரம் படிக்கவேண்டியது அவசியம். ஆண்டாள் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் சுந்தரராஜ பெருமாள் மீது ஒரு பாசுரம் பாடுகிறாள்.

''நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்;
ஏறு திருவுடையான் அவை கொள்ளுங்கொலோ?''

''சுந்தரராஜ பெருமாளே, உமக்கு நான் ஒரு விருந்து வைக்கப்போகிறேன். அவை உமக்கு பிடித்த பண்டங்கள் தாம். வெண்ணை உண்ட கண்ணன் நீர் தானே.  உமக்குப் பிடித்த பசு வெண்ணெய் நூறு தடாக்களில் (பெரிய வாயகன்ற இரு புறமும் பிடி வைத்த பாத்திரம் இன்னும் சில கோவில்களில் காணப்படுகிறது.) விளிம்பு வரை நிரம்ப கொண்டு வந்து தருகிறேன். வெறும் வெண்ணேய் எப்படி உமக்கு போதும்? கூடவே இன்னொரு நூறு தடாக்கள் நிறைய நெய் கம கம வென மணக்கும் அக்கார அடிசில் ரெடியாக கொண்டு வந்து தர ஏற்பாடும் .செய்து விட்டேன். உடனே வந்து அவற்றை ஏற்றுக்கொண்டு உண்டு களிக்க வாருங்களேன் ?''  
என்று ஆண்டாள்  கூப்பிடுகிறாள்.

மேற் சொன்ன பாடலை பாடிக்கொண்டே நடந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீ ராமானுஜர். 
அவர் போய்க்கொண்டிருப்பது ஆண்டாளின் ஸ்தலமான வில்லிப்புத்தூரை நோக்கி. போகும் வழியில் திருமாலிருஞ்சோலை வந்தது. இந்த பாட்டும் அவரை சிந்திக்க வைத்தது.
அவருக்கு திடீரென்று ஒரு கவலை வந்து விட்டது. ஸ்தம்பித்து நின்று விட்டார். 
ஆண்டாள் என் தங்கை ஆயிற்றே?. மனிதர்களுக்கு கொடுத்த வாக்கையே நாம்  மீறக்கூடாது. அப்படியிருக்க பகவானுக்கு ஒரு வாக்கு கொடுத்துவிட்டு மீறினால் பெரிய அபசாரம், பாப கார்யம் ஆயிற்றே. இப்படி ஒரு பெரிய கைங்கர்யம் செய்ய போவதாக என் தங்கை ஆண்டாள் என்கிற கோதை வாக்களித்து விட்டாளே . அதை நிறைவேற்றினாளா? ஒருவேளை மறந்து போய்விட்டிருப்பாளோ?
'ஆண்டாள் வருவாள் தருவாள் '' என என் அப்பன் அதற்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறானோ? 
தங்கை ஒருவேளை செய்யாதிருந்தால்...?
 அதை நிறைவேற்றுவது அண்ணன் என் கடமை அல்லவா?

ராமானுஜர்  உடனே எங்கெங்கோ அலைந்து தேடி பலர் உதவியோடு நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார அடிசில் தயார் செய்து தானே முன் நின்று சுந்தரராஜ பெருமாளுக்கு நைவேத்யம் செய்தாராம். 
ஆண்டாள் ஒருவேளை தனது பிரார்த்தனையை நிறைவேற்றி இருந்தால் சுந்தரராஜ பெருமாளுக்கு ரெட்டை அதிர்ஷ்டம்! அதுவும் இரண்டு சிறந்த பக்தர்களிடமிருந்து.

சில நாட்கள் அவர்  நடந்தபிறகு  ஸ்ரீ வில்லிப்புத்தூர் சென்றடைந்தார்.  ராமானுஜருக்கு அங்கே  ஒரு ஆச்சர்யம்  காத்திருந்தது.
 ஆலயத்தில் நுழைந்தவரை  வரவேற்க  அர்த்த மண்டபத்தில் ஆண்டாளே காத்திருந்தாள்.
 '' நன்றி அண்ணா. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நான் நிறைவேற்றத் தவறிய ப்ரார்த்தனையை நீ முடித்துக் கொடுத்து விட்டாய். எனக்கு திருப்தியாக இருக்கிறது'' என்றாள். 

இந்த நிகழ்ச்சிக்கு அப்பறம் ஆண்டாள் மூல கர்பக்ரஹத்துக்குள் திரும்பச் செல்லவில்லை. ராமானுஜரை சந்தித்த அர்த்த மண்டபத்திலேயே தங்கி இன்றும் நமக்கு காட்சி தருகிறாள். வில்லிப்புத்தூர் சென்றால் இதை மறக்காமல் காணவும். ராமானுஜ ஸ்தோத்ரத்தில் ஒரு இடத்தில் ராமாநுஜரைப் பற்றி  ''கோதா அபீஷ்ட ப்ரபுரகா'' (கோதையின் விருப்பத்தை பூர்த்தி செய்தவரே) என்று வருகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...