Tuesday, April 19, 2022

LIFE LESSONS.

 

மனதில் பதியட்டும்  - 12  -  நங்கநல்லூர்  J  K  SIVAN


அசைவ  உணவு  வேண்டாம்,  காய்கறிகள் சிறப்பு  என்பது ஏன்? 
சைவ உணவு  தான் சாந்த குணத்தை தருகிறது என்று  எல்லோரும் சொல்வதால் தான். அப்படி சைவ உணவு சாப்பிடுபவராலுக்கும்  கோபம் வராமல் இல்லை.  இந்த கோபம் வேறு,  அசைவ உணவால் வரும்  த்வேஷம்.  ஒரு குழந்தையின் கோபமும்  முரடனின் கோபமும் வேறு வேறு அல்லவா ?  சைவ உணவினால்  வரும் கோப உணர்ச்சி  அதில் சேரும்  காரம், புளிப்பு  இவை உண்டாக்கும், தூண்டிவிடும், ராக்ஷஸ  உணர்வினால் தான்.  

பழைய ஆறின உணவு வகைகள் சாப்பிடவேண்டாம்  என்று சொல்வது எதற்காக என்றால், அவை   தாம்ச (சோம்பல்) குணத்தை வளர்ப்பவை. பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கை போன்ற உணவுகள் சத்வ குணத்துக்கு  விரோதமானவை என்பதால்  பல  குடும்பங்களில்   இந்த  வகை உணவு பண்டங்களை  உபயோகிப்பது இல்லை. 

இன்னொரு  எல்லோருக்கும் தெரிந்த விஷயம் .  ருசிக்காக சாப்பிடும்போது தான் அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டி வருகிறது. பசி என்ற ஒன்றை நினைவில் நிறுத்தி, பசியை தீர்க்க மட்டும்  உணவை உண்ணத் தொடங்கினால் சாப்பிடும் அளவில் நிதானத்தைக் கடைபிடிக்கலாம். அஜீரணம், மனதில் அசுத்தம் போன்றவற்றை  கிட்டே நெருங்காது. மஹான்கள்  யோகிகள்,  பசிக்கு ஒரு கவளம் கிடைத்ததை உண்பவர்கள். ருசி தேடாதவர்கள்.

அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன. நான்  அரை வயிற்றுக்கு சாப்பிடும் பழக்கத்தை வெகு காலமாக  கொண்டிருப்பதால் இதுவரை வயிறு தொந்தரவு கொடுக்கவே இல்லை. ஒரே நாளைக்கு மூன்று கல்யாணத்தில் சென்று சாப்பிட்டிருக்கிறேன். அங்கங்கே ஏதாவது ஒன்றிரண்டு சின்ன அயிட்டத்தோடு நிறுத்திக் கொண்டவன்.

ஒரு பொருளை சுற்றி கயிறால் கட்டி இருக்கிறது.  எப்படி அவிழ்க்கிறோம்? எப்படி சுற்றி இருக்கிறதோ அப்படியே  எதிராக சுற்றி  திருப்பி, அவிழ்க்கும்போது சுலபமாக விடுபடுகிறது.
அது போலவே தான், தவறான செயல்களை நற் செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங் களினாலும் பொறுமையாக  செய்து  அவற்றிலிருந்து  விடுபட முடியும். 

 தானம், தர்மம், கடமை புரிதல், பகவந் நாமாக்களை (தெய்வப் பெயர்கள்) உச்சரித்தல், கோவில் களைத் தரிசித்தல் ஆகிய நல்ல செயல்கள் எல்லாம்,  நமது மனதில்  ஒரு  அமைதியை கொடுத்து, எண்ணங்கள் சீர்பட்டு, பாவம் தொலைக்க வழி கோலுகின்றன.

மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும், கைகள், கால் களால் செய்த பாவங்களை அந்தந்த உறுப்பு களினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.

வெளியில் இருந்து வரும் பொருள்களில் மட்டுமே மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் போகும். தனக்குள்ளே ஆனந்தம் இருப்பதை மனிதன் மறந்து விடுகிறான். அதனால் தான்  ஏமாற்றம், துயரம், கோபம்,  பொறாமை எல்லாம் உண்டாகி அவனை அல்லல் படுத்துகிறது.

 நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம் மாதிரி.   பதவி, பணம், பெயர், புகழ் என்று வெளியில் நாம் எதிர்பார்க்கும் எல்லாமே கோடைகாலத்தில்  குழாயில் சொட்டும்  தண்ணீருக்கு சமமானது. இதை முற்றிலும் உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் தேடி அலைவதில்லை.

மனிதனாகப் பிறந்தவனுக்கு வாழ்வில் உண்டாகும் பாக்கியங்களிலேயே மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. சேவை என்றால் என்னவென்று தெரியாமல், அவரவரும் தமது குடும்பத் திற்காக மட்டுமே சேவை செய்கிறோம். அதோடு, நமக்கு சம்பந்தம் இல்லாத பிறருக்கும் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும். இதைத்தான்  தன்னலமற்ற சேவை  என்பது.

தினமும்  நமக்குச் சமைப்பதற்காக பானையில்  தளதளவென்று  கொதிக்கும்  நீரில் அரிசியைப்  போடும் போது, பகவானை நினைத்துக் கொண்டு  ''இது  ஏழைகளுக்கு'' என்று ஒருபிடி அரிசியை தனியாக  ஒரு பானையிலோ, பாத்திரத்திலோ போட்டு விட வேண்டும்.  இப்படி சேர்ந்த அந்த அரிசியை, பருப்பை,  மொத்தமாக ஒருநாளில் சேகரித்து, சமைத்து அந்தந்த பகுதி கோவில்களில் ஏழைகளுக்கு அன்னமிட வேண்டும்.  எப்படி இந்த பிடியரிசி திட்டம்?  மஹா பெரியவாளின் கற்பனையில் உதித்த அருமையான எல்லோராலும் முடிந்த  தர்ம கார்யம்.

தினமும்  ஏதாவரது ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல்லோ அல்லது அகத்திக்கீரையோ கொடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்காக கிணறு, குளம் வெட்டுவது, அன்னதானம் செய்வது, ஆத்ம  க்ஷேமத்திற்காக கோவில் கட்டுவது, பூஜைக்காக நந்தவனம் அமைப்பது போன்றவையும் தர்மங்களே. இதை தனவந்தர்களால் மட்டுமே செய்யமுடியும்.  மேலே சொன்னதெல்லாம் நம்மால் முடிந்தவை.

யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவசம் முதலிய இந்த உலகம் மட்டுமின்றி மற்ற உலகங்களில் இருப்பவர்களுக்கும்,  நம்  முன்னோர்களுக்கும்  நாம் செய்யும் சேவை நம் தர்மமாகும்.  கடமையும் கூட.  ஸ்ரத்ததையாக  திருப்தியாக  நாம்  செய்யவேண்டிய  காரியம். 

ஒரு மருந்தை வாங்கி உபயோகிக்காமல் நாளைக் கடத்திக் கொண்டிருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும்.  எக்ஸ்பைரி  டேட்  என்று  அதில் போட்டு இருக்கும் தேதி வந்துவிடும்.  அது போல வேதான்  நாம்  உச்சரிக்கவேண்டிய  மந்திரங்களை அப்பியாசம்(பயிற்சி) செய்யாமல் இருந்தால் அந்த மந்திரங்களின் வீரிய சக்தி குறைந்து விடும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...