Thursday, April 7, 2022

VAINAVA VINNOLI



வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கூரத்தாழ்வான்.        

''அருமையான குருவும் அபிமான சிஷ்யனும் ''- 4 

ஒரு நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு வைஷ்ணவர் ராமானுஜர்  எங்கிருக்கிறார் என்று தேடி அலைந்து மேல்கோட்டை  திருநாராயணபுரம் வருகிறார்.  

ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஒரு வைணவ பக்தர் உங்களை தரிசிக்க வந்திருக்கிறார் என்று அறிந்ததும், அவரை ஆர்வத்துடன் ஓடி வந்து வரவேற்கிறார்.

மூச்சு விடாமல் ” ஸ்வாமி  சொல்லுங்கள், என் உயிரான ஸ்ரீரங்கம் எவ்வாறு இருக்கிறது. என் பிள்ளைகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாம் அங்கே  நலமா?”

“ குருநாதா, நீங்கள் இல்லை என்கிற  ஒரு குறை தவிர எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது அங்கு” என்றார் வைஷ்ணவர்.

”என் கூரேசன் எப்படி இருக்கிறார்? அவரை  இழந்து நான் தனியனாகிவிட்டேனே!!! “ என்று ஆதங்கத்தோடு கேட்டார் ஆசார்யன்.

 கண்களில் நீர் பெருக, நா தழுதழுக்க ஸ்ரீ வைஷ்ணவர் சொன்னார்:
"சுவாமி,  தங்களை ஜாக்ரதையாக  இங்கே  அனுப்பிவிட்டு கூரேசரும் மஹா பூரணரும் சோழ ராஜா   ஆணைக்குக் கட்டுப் பட்டு கங்கை கொண்ட சோழ புரம் அழைத்து செல்லப்பட்டனர். ராஜா அவர்களிடம்  கட்டளையிட்டான்.

 "சிவனைக்  காட்டிலும் பெரிதொன்றும் தெய்வம்  இல்லை" என சம்மதித்து  இருவரும் ஓலையில்
 எழுதிக் கொடுங்கள்'' என்றான். கூரேசன் மறுத்தார். வேதம் சாஸ்த்ரம், உபநிஷத் ஸ்ம்ரிதி புராணம் இவற்றிலிருந்து எல்லாம் மேற்கோள் காட்டி நாராயணனே மேலானவன் போற்றத் தக்கவன் என நிருபணம் செய்தார். ஏற்க மறுத்தான் சோழன். 

''கையொப்பமிட்டுக்  கொடு இல்லாவிட்டால் உன் கண் இங்கே பிடுங்கப்படும்''  என ஆணையிட்டான். 
”கெடுமதி கொண்ட அரசனே, உன் விருப்பம் நிறைவேறாது. உனக்கு வேலை மிச்சம் பண்ணுகிறேன். நானே என் கண்களை பிடுங்கிக்  கொள்கிறேன்'' என்று அவன் நீட்டிய எழுத்தாணியால்  தனது  கண் விழி கோளங்களை வெளிக்  கொணர்ந்து அவன் காலடியில் எறிந்தார். உன்னைப்  பார்த்ததால் அந்த கண்கள் செய்த பாவத்திற்கு இது தண்டனையாகட்டும்''.

“நீ யும்  கையொப்பமிடு''   என மஹா பூர்ணர் நம்பிகளை ஆணையிட்டு அவரும் மறுக்கவே அரசனின் சேவகர்கள் அவர் நேத்ரங்களை அழித்தனர். கூரேசர் வயதில் இளையவராதளால் நம்பிகளைத்  தாங்கி வர ரத்தம் பீறிட வழியெல்லாம் ஆறாகப்  பெருக அரண்மனை விட்டு வெளி யேறினர். கங்கை கொண்ட சோழபுரம் தாண்டி வந்தவுடன் நம்பிகளின் பெண் அத்துழாய் பிராட்டி அவருக்காகக்  காத்திருந்தவள் கண்ணற்ற தந்தையைக்  கட்டிக்கொண்டு கதறினாள். நம்பிகளால் மேற் கொண்டு நகர இயலவில்லை. கூரேசன் மடியில் தலையும் அத்துழாய் மடியில் காலுமாக சோழ மண்ணிலே சாய்ந்தார்.

”சுவாமி!! ரங்கனை விட்டு பிரிந்ததும், ஸ்ரீரங்கத்தை பிரிந்ததும், ராமானுஜரை பிரிந்ததும் எங்கோ கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வெளியே ஒரு காட்டு பிரதேசத்தில் வாழ்வு முடிவதால் உங்களுக்கு மனமொடிந்து விட்டதா?” என்று  நம்பிகளிடம்  கூரேசன் கேட்டார்.

“கூரேசா!!! நீ அறியாததா?? ஒரு வைஷ்ணவனின் அந்திம நேரத்தில் நாராயணனே அருகில் இருப்பான். ஜடாயுக்கு ஸ்ரீ ராமன் அருகில் வந்து அருள வில்லையா ? இதில் காடென்ன நாடென்ன? மேலும் கேள் , ஒரு சுத்த ஸ்ரீ வைஷ்ணவன் மடியிலோ வீட்டிலோ மரணம் சம்பவித்தால் அதற்கு மேல் எது சிலாக்கியம்? நான் ஸ்ரீரங்கத்தில் மரணமடைந்தால் அனைவரும் ஸ்ரீ ரங்கத்தில் மரணம் தான் வைஷ்ணவனுக்கு சிறந்தது என நினைப்பரே!. நமது ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் என்ன சொல் கிறது? பெருமாளிடம் பிரபத்தி சரணாகதி பண்ணினவனுக்கு எங்கு மரணம் சம்பவித்தாலும் நாராயணன் அருகில் இருப்பது சத்ய வாக்காயிற்றே!. இதென்ன அனாமதேய இடமா?   இதுவல்லவோ,   என் குருநாதர்கள் நாதமுனிகளும் குருகை காவலப்பனும் வைகுண்ட ப்ராப்தி பெற்ற இடம். விசனப்படாதே. நான் மகிழ்ச்சியோடு விடை பெறுகிறேன்”.
மஹா பூர்ணர் பெரிய நம்பிகள் மறைந்தார்.”

வைஷ்ணவர் இவ்வாறு சொல்லியதும்  நிகழ்ந்ததைப்  பூரா கேட்ட ராமனுஜரின் கண்களில் பிரவாகம். தனது குரு பெரிய நம்பிகளுக்கு தான் எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்று நினைவு கூர்ந்தார். தனக்காக அவர் உயிர்த்  தியாகம் செய்தது ராமானுஜரை வாட்டியது. ''அந்திம நேரத்தில் அருகிருந்து மஹா பூர்ணருக்கு சேவை செய்யும்  பாக்கியம் எனக்கு  கிட்டவில்லையே'' என நொந்தார். ''பெருமாளே,  என்ன பாக்கியம் கூரேசனுக்கு? என்னால் முடியாததை அவர்  நிறைவேற் றினாரே , அவர
ல்லவோ குருவை மிஞ்சிய சீடன்?"

கூரேசன் ஸ்ரீரங்கம் திரும்பினார். திருக்கோஷ்டி நம்பிகள், திருமலை ஆண்டான் , திருவரங்க பெருமாள் அரையர் என்று ஒவ்வொருவராக மஹா புருஷர்கள் எல்லாம் மறையலானார்கள். திருப்பதியில் ராமானுஜரின் நெருங்கிய உறவினர் ஸ்ரீ சைல  பூரணரும் திரு கச்சி நம்பிகளும் விண் எய்தினர். கூரேசருக்கு ஸ்ரீ ரங்கம் வெறிச்சோடியது போல் தோன்றியது. தனிப்பட்டு விட்டோமோ?

கண்ணற்ற கூரேசர் ரங்கநாதனே கதி என்று தனிமையில் மன வியாகூலத்தை ரங்கனிடம் கொட்ட ஆலயம் சென்றபோது காவலர்கள் தடுத்தனர். அரசனின் ஆணை, " யார் ராமானுஜரை தம்முடைய குரு அல்ல என ஒப்புக்  கொள்கிறார்களோ அவர்கள் மட்டும் ஆலயத்தில் அனுமதிக்கபடுவர்".

“ஐயா,  உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் ராமானுஜரை இகழ்ந்து புறக்கணித்துவிட்டு கூரேசனுக்கு ரங்கன் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல வரும் ஜென்மத்திலும் தேவையில்லை”

கூரேசர் வீடு திரும்பினார். 
“ஆண்டாள், பசங்களைக்  கூப்பிடு இனி ஸ்ரீரங்கம் நமக்கில்லை. வேறெங்காவது செல்வோம்” . அவர்கள் அவ்வாறே திருமாலிருஞ்சோலைக்கு  (மதுரை அருகே) குடியேறி தனிமையில் வாழ்ந்தனர். காலம் மாறியது. கிருமி கண்ட சோழன் மாண்டான். கொடிய ஆட்சி விலகியது. பல வருஷங்கள் சென்றது. நூறு வயதான ராமானுஜரும் ஸ்ரீரங்கம் மீண்டார். கோலாகல வரவேற்பு பிரபந்தங்கள் பாசுரங்கள் எதிரொலிக்க ஸ்ரீவைஷ்ணவ பக்த கோடிகள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். அவர் கண்களோ கூரேசனை தேடியது. கூரேசர் வீட்டு வாசலை அடைந்தார்.

கூரேசர் இருந்த  திருமாலிருஞ்சோலைக்கு  விரைந்தார். கண்ணிழந்த கன்று தாய் பசுவை ஆர்வமாக நாடியது. தன் வீடு தேடி ஆசார்யன் வந்தார் என கேட்டு புளகாங்கிதம் அடைந்தார் கூரேசன், ஆச்சர்யனும் பிரதம சீடனும் பல வருஷங்கள் கழித்து சந்தித்தனர். நா எழவில்லை இருவருக்கும். எண்ணங்கள் ஓடின, காஞ்சியில், ஸ்ரீரங்கத்தில், காஷ்மீரில் ஸ்ரீபாஷ்யம் எழுதியது என்று எத்தனை யோ எண்ண ஓட்டத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை எத்தனை இடையூறுகள், இன்னல்கள், 
,எதிப்புகள், விவாதங்கள், இதெல்லாவற்றையும்  ஒன்றாக அல்லவா எல்லாம் கடந்தோம். 

ராமானுஜர் கண்களில் காவேரி கூரேசருக்கோ கண்ணே இல்லையே.!! விழி யற்று பேச்சற்று தடுமாறித்  தத்தி ராமானுஜரின் கால்களில் விழுந்தா.  குருவின் பாத கமலங்களை கெட்டியாக இரு கரங்களாலும் பிடித்து கொண்டார். அமைதி நிலவியது. பாசத்தோடு கூரேசனை தொட்டுத்  தூக்கி மார்போடு அணைத்து கொண்டார் ராமானுஜர்.

 “என் குழந்தாய்!!! என்ன செய்தாய் நீ , எனக்காகவும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்காகவும் உன் கண்களையே தியாகம் செய்தாயே””!!!

பன்னிரண்டு வருஷங்கள் கழித்து மீண்டும் ஆச்சர்யனின் அமுத குரலை கேட்ட கூரேசர் வானில் பறந்தார்.

“சுவாமி நான் எங்கோ எப்போதோ யாரோ ஒரு சிறந்த ஸ்ரீ வைஷ்ணவனின் நெற்றியை பார்த்து இவன் எவ்வளவு அலங்கோலமாக ஊர்த்வ புண்ட்ரம் சாத்திக் கொண்டிருக்கிறான் பார்”” என்று கேலி செய்திருப்பேனோ என்னவோ. அந்த பாவத்துக்கு   பிராயச்சித்தமாக எனக்கு விழிகள் இழக்கும் தண்டனை கிடைத்ததாக கருதுகிறேன்”’

” நீயாவது பாவம் செய்வதாவது!!!. குழந்தாய்!, நான் செய்த பாபத்திற்காக தான் உனக்கு இந்த தண்டனை. நடந்ததெல்லாம் போகட்டும் என்னோடு வா. நீயும் நானும் செய்ய வேண்டியது அநேகம் இன்னும் உள்ளது” . கையைப்  பிடித்து கூரேசனை ஆசார்யன் கூட்டி சென்றார், நிஜமும் நிழலும் ரங்கநாதர் ஆலயம் அடைந்தது. ஸ்ரீ வைஷ்ணவம் மீண்டும் துளிர்த்தது. கிருமி கண்ட சோழன் ஆலயத்தையும், ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தமான அனைத்து பள்ளிகள், மடங்கள் நூலகம் எல்லாம் நாசமாக்கியிருந்தான். இருவரும் தவறுகளை எல்லாம் திருத்துவதில் முனைந்தனர். ராமானுஜர் ஆதிசேஷன் அவதாரம். லக்ஷ்மண பெருமாளாக ராமருக்கு அவர் ஆற்றிய தொண்டு ராமரை நெகிழ வைத்து எப்படி கைம்மாறு செய்வது என தோன்றி கூறேசனாக அவதரித்து ராமானுஜருக்கு சேவை செய்வதன் மூலம் கடனை தீர்த்து கொண்டார் என சொல்வதுண்டு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...