Wednesday, April 27, 2022

faith

 


ஆன்மீக வாழ்க்கை ஆனந்த வாழ்க்கை 
நங்கநல்லூர்  J K  SIVAN 
 
கடவுளோடு   எந்த விதத்திலாவது சம்பந்தத்தோடு  நடத்தும் வாழ்க்கை தான் நமது லக்ஷ்ய, சுதந்திர வாழ்க்கை. இது ஒருவரின் தனி சுதந்திரம்.  இதில் பிறரின் விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை.

எந்த நல்ல எண்ணமும்,செயலும், வார்த்தையும் நன்மையைத்  தான் பயக்கும். வாழ்வில் அமைதி இருந்தால், அது நம்மோடு மட்டுமின்றி சுற்றிலும் மற்றோருக்கும் பரவும்.  எப்படி  கொரோனா தீங்கு விளைக்கிறதோ  அதைவிட வேகமாக  நல்ல எண்ணங்கள், செய்கைகள் பிறரைத் தன்வயப்  படுத்தி, நன்மை பயக்கும்.  உதாரண புருஷன்  என்று  இப்படி நடப்பவர்களை உலகம் சொல்லும். 

உலக வாழ்க்கை என்பது  இயற்கையோடு, உலகில் மற்றவர்களோடு  நாம்   செயல்படும், உறவாடும் ஒரு செயற்கை நாடகம். நிறைய பேர்  நடிக்கும்  சுவாரஸ்யமான  டிராமா.  பிடித்தது, பிடிக்காதது, விருப்பு வெறுப்பு, காதல், கீதல், கோபம்,  கீபம்,   சுகம்  துக்கம் எல்லாம் கலந்தது.   புதிது புதிதாக  காட்சிகள் ஒவ்வொரு காட்சியிலும் மாறி மாறி  வரும்.

 இதற்கு முக்கிய காரணம் ஒருவருடைய விருப்பு வெறுப்பும் அடுத்தவருடையதிலிருந்து வேறுபடுவது தான்.   ஒருவரின் விருப்பம், வெறுப்பு, எப்போதும், எல்லோருக்கும்,  பிடிக்கும், பிடிக்கவேண்டும் என்று ஒரு நிமிஷம் கூட எதிர்பார்த்து  நாம் வாழ  முடியாதல்லவா?. சகிப்பு தன்மை, பொறுமை, வாழ்க்கையில் அதனால்  ரொம்ப அத்யாவஸ்யம்.

நமக்கு ஒரு பொற்காலம் ஏற்படுத்திக்   கொள்ள நாம் செய்யவேண்டியது ஒவ்வொருவரிடத்திலும் உள்ள நல்ல குணம், நல்ல செய்கை, நல்ல வார்த்தையை மட்டுமே மதிப்பது.   மற்றதை அறவே புறக்கணிக்க வேண்டும். அன்னம்  பாலை மட்டும் குடித்து விட்டு நீரை அப்படியே பாத்திரத்தில் விட்டு விடுவது போல.   
இதால் எல்லோரிட மும் அன்பு வளரும். அன்பு நிறைந்த இடத்தில் அணு சக்தியின்  அழிவு எதற்கு தேவை?. அதற்கென்ற அவசியம் காணாமல் போய்விடும். பகவான் மீது அன்பை செலுத்துவோம் . சக மனிதரை நேசிப்போம்..
 ''அவனுக்கு  குழந்தை மனசுடா. கள்ளம் கபடு கிடையாது, எளிமையானவன்''.  இது தான் அன்பு வழி.

உடல் வளர்ச்சி போல் மன வளர்ச்சி, உள்ள வளர்ச்சியும் தேவை. ஒன்றாம் வகுப்பிலிருந்து நேரே அடுத்த ஜூன் மாதம் காலேஜில் போய்  உட்கார  முடியுமா. அதே போல் உள்ள அமைதி, பொறுமை, சகிப்பு தன்மை, எல்லாமே  கொஞ்சம் கொஞ்சமாக தான் விருத்தி அடையும். விடாது முயற்சி செய்ய வேண்டும். முக்யமாக பொறுமை வேண்டும். ஒரே நாள் ராத்திரியில் அடையும் சமாசாரம் அல்ல இது.  காலேஜில் அமெரிக்கா போய் படிப்பதால்  கிடைக்காதது.

ஒரு மந்திரம் தெரிந்து கொள்வோம். நம்மை அது தக்க சமயத்தில் காக்கும். ''யாரையும் தூக்கி எறிந்து நிந்தித்து, மனம் வருந்தும் படி, பேச  வேண்டாம். அப்போது தான் நம்மை யாரும் நிந்திக்க மாட்டார்கள்.''

வாழ்க்கையில் ''அடி'' படாததால் '' ( அனுபவ முதிர்ச்சி இல்லாததால்) கஷ்டங்களை அநேகர் எதிர்கொள்ளவேண்டி அமைகிறது. குழந்தைகள் எப்படி பெரியவர்கள் ஆகிறார்களோ அப்படித்தான் வாழ்வில் அனுபவம் (maturity ) ஏற்ப டும். நாம் நம்மை ஆள எவ்வளவு தலைவர்களை நம்பி பதவியில் அமர்த்துகிறோம். அப்பறம் தானே    ''அனுபவித்து '' உணர்கிறோம். இதையே வாழ்க்கையில் ''பாடம் '' என்று கற்றுக்  கொள்கிறோம்.

நம்மை விட ஏதோ ஒரு மேலான சக்தி நிச்சயம் உள்ளது. சந்தேகமே வேண்டாம். அது நம்முள் குடிகொண்டு நம்மை ஆட்டுவிக்கிறது மட்டும் அல்ல, எங்கும் எதிலும் பரவி அங்கிங்கெனாதபடி எங்கும் எதிலும் நிறைந்திருக்கிரது என்கிற எண்ணம் விடாமல் இருக்க வேண்டும். கடவுள் என்று அதை எந்த பிடித்த பெயராலும் அழைப்போம். அன்பை எல்லோரிடத்திலும் செலுத்தி முழுமையாக இதை  உணர முடியும். உள்ளத்தின் அமைதியில் அவனைக் காணலாம். ஒரு தனி ஆனந்தம் உள்ளே உருவாவதை அனுபவிக்க முடியும்.    நல்லதை, நன்மைகளை எதிர்பாராமல்  செய்பவன்,  அமோகமாக பிரதிபலன் பெறுவான்.  தனக்கு நல்லது என்று தெரிந்ததை, அறிந்ததை, செயல்படுத்தி மற்றோருக்கும் உதவுபவன் ஸ்ரேஷ்டன்.

''பகவானே உன் செயல் '' என்று எதையும் தன்னாலியன்றவரை சிறப்பாக செய்பவன் நல்ல பலனையே பெறுவான்.
எல்லோரும் நல்லவரே, எல்லோரும் என்னவரே என்று எவன் அன்போடு பழகுகிறானோ அவன் பலமடங்கு அன்பை பெறுபவன்.

நமக்கு வரும் கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாமுமே நாம் நம்மை செலுத்தும் அந்த பரம சக்தி காட்டும் வழியை புறக்கணிப்பதால் தான்.

மனதில் எப்போது அமைதி தோன்றுகிறதோ, ஆன்மீக வளர்ச்சியில் நீ தொடர்கிறாய் என்று அறியலாம். காரணம் என்னவென்றால் நாம் நம்முள் நம்மை செலுத்தும் அந்த அதீத சக்தியை உணர ஆரம்பித்து விட்டதால் தான். .

பிறரிடம் மாற்றத்தை எதற்கு எதிர் பார்க்க வேண்டும்? முதலில் நாம் மாறினாலே அவர்களிடம் மாற்றம் தானாக தெரியும்.   உலகம்  மற்றவர்கள் கண்ணாடி மாதிரி, நம்மையே  பிரதிபலிப்பவை.  நமது பிம்பம் தான் அது.

கடவுள் மீது நம்பிக்கையும், பக்தியும் உள்ளவனுக்கு எதிலும் பயம் தோன்றாது. அவன் தான் எதையும் எவரையும் அன்பினால் சொந்தம் கொள்கிறானே. பயம் எங்கிருந்து வரும்?

நமக்கு கஷ்டங்களும் துன்பங்களும் வருவது கூட ஒரு விதத்தில் அந்த நேரங்களில் நம்மை அவனை நினைக்கச் செய்வதால் நன்மையே என்று கூட தோன்றுகிறது. கஷ்டம் வந்தால் தான் நாம்  பயந்து, கடவுளை நாடுகிறோம். யாமிருக்க பயமேன் என்று  ஆதரவளிக்கும்,  ஷீர்டி பாபா, மஹா பெரியவா,  போன்ற மகான்களை 
வணங்கு
கிறோம். கம்சன்  சதா கிருஷ்ணனையே இரவு பகலாக பல வருஷங்கள்  தூக்கமின்றி நினைக்க காரணம், க்ரிஷ்ணனால் அவனுக்கு மரணம் வரும் என்ற பயத்தில்.  குந்தி தேவி  கிருஷ்ணா,  எனக்கு  கஷ்டங்கள் நிறைய கொடு அப்போது தான் உன்னையே  நினைத்து தேடுவேன், நீ வருவாய்  துயர் தீர்ப்பாய்  என்று  வேண்டியவள் .

உடலில் தோன்றும் உபாதைகள் அது அழிவுள்ளது என்று நினைவூட்டுவதற்காகவே தான்.  பழைய சட்டையை தூக்கிப் போட நேரம் நெருங்கி வருகிறது. புதியது நமக்கு எங்கோ தயாராகி  வருகிறது என்று உணர்த்தவே.

மற்றவரின் செய்கைகள் தவறு, சரி என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை.   அவர்கள் தாமாகவே தம்மை ஆராய்ந்து கொள்ள  சரியான பாதையில்  செல்ல நீ உதவினால் இறைவன் உனக்கிட்ட பணியை கொஞ்சமாவது செய்து வருகிறாய் என்று அர்த்தம்.

ஒரு விஷயம் கவனப்படுத்துகிறேன். மனம் எப்போது இறைவனின் தொடர்பில் ஈடுபட்டுவிட்டதோ, அந்தக் கணம் முதல் நீ தனியாக இல்லை. அவனது அழகிய ''நெட் வொர்க்'' திட்டங்கள், நேர்த்தியான செயல்கள் உனக்கு பலன ளிக்க தொடங்கிவிட்டது என புரியும். எப்போது மனதில் அமைதி குடி புகுந்ததோ, அப்போது உனக்கு வெளியே இருந்து ஒரு புத்துணர்ச்சி வந்து சேரும். களைப்பு,  அலுப்பு என்பதே காணாமல் போகும்.

எப்போது நீ அவனை நினைக்க ஆரம்பித்து  விட்டாயோ, நீ வெளிச்சம் தேடி வேறு விளக்கொளி நாட தேவையே இல்லை. நீ தான் சூரியனை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாயே,  வேறொரு விளக்கொளி வெளிச்சம் அவசியமில்லை.

உண்ணும் உணவு உடலை நன்றாக செயல் பட தேவையானதாக மட்டும் இருக்கட்டுமே. அது தான் ஆரோக்கியம். வாழ்வதற்கு தான் உணவே தவிர உண்பது தான் வாழ்க்கை அல்ல. இன்னும் வேண்டும் என்ற எண்ணம் வரும்போது உண்பதை நிறுத்திக்கொள்ள பழகினால் டாக்டர் வீடு அட்ரஸ் தெரியாமல் போகும். வாழ்க்கை இதால் முழுமை பெரும்.

நமது நல்ல எண்ணங்களும் நற்செய்கைகளும் நமக்கு மட்டுமல்ல பிறர்க்கும் உதவுகிறது என்பதை விட முதலில் நாம் உள்ளும் புறமும் தூய்மையடைகிறோம் என்று  அறியவேண்டும்.  அப்படி இருந்தால், அவன் தானே நம்முள் வந்து அமர்வானே. குப்பையிலா ஒருவன் வசிப்பான்? ஒரு இனிய சங்கீதம் மனதை வருடவில்லையா?. அது போல் இதயம் இதால் குளிரும்.    உள்ளே நின்று அவன் வழி காட்டும்போது  தப்பான பாதையில் எப்படி போகமுடியும்?. கல் முள் எதுவும் இல்லாத சீரான பாதை அல்லவா அது.?   பயணம் - ஒரு சுற்று பயணம் ஆகிறது - சுற்றி சுற்றி அவனையே அல்லவா சேர்கிறோம்.

கடவுள் ஏதோ ரொம்ப படித்த, யாகம் செய்த, தானம் செய்த, தனவந்தனுக்கு, ஆயிரம் கோவில் குளங்கள் சென்றவனுக்கு மட்டும்  தான்  அருள் புரிவார்  என்பது ராங் அட்ரஸ். ஒரு கணம் மட்டுமே போதும்.   சுத்தமாக கலப்படமில்லாத மனத்தால் அவனை நினைத்தால் அவனை  எவராலும்  உணரமுடியும். 
அவனை அடைந்து விட்டோம் என்று எப்படி  அறிவது.? அன்பு உன்னிடமிருந்து எதனிடமும் எவரிடமும் பெருகி விட்டதல்லவா? அதே.    

கடவுள் நமக்காக காத்திருக்கிறான். நாம் தான் எதிர் திசையில் போய்க் கொண்டிருக்கிறோம். அவன் உள்ளே இருக்கும் போது, நம் இதயத்தை பூரணமாக ஆக்ரமித்தபோது, '' நான், எனது ''    எப்படி தோன்றும்? . வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு   '' இது எனது என்று  சொல்லலாமா,? ''நான்'' அங்கு வசிக்கமுடியுமா'' ?

ஒரு காற்றின் சுகத்தில், நீரின் தெளிவில், பூவின் மணத்தில், பறவையின் குரலில், நிலவின் ஒளியில், உலகத்தின் இயக்கத்தில், விடியல் அமைதியில், நிசப்தத்தில், எதில் வேணுமானாலும் கிருஷ்ணனை  உணர முடியுமே. கும்பலாக சப்தம் இட்டுக்கொண்டு, ஸ்பெஷல் டிக்கெட் தேவையில்லை. கண்ணை முடி உள்ளே நோக்கினால் ''நான் இங்கே தான் இருக்கிறேன்'' என்று குரல் கொடுக்கிறானே. ஆரவாரத்தில் அமைதியை தேடலாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...