Thursday, April 28, 2022

SANKALPAM

 ஸங்கல்பம்    -   நங்கநல்லூர்   J K  SIVAN 


வீட்டில்  ஏதோ ஒரு நல்ல  ஒரு  சுப கார்யம். வாத்யார்  ''ரெடியா''  என்று கேட்டுக்கொண்டே  ஓடி வருகிறார். ஒரு காதில் யாருடனோ  மொபைலில் பேசிக்கொண்டே  இருக்கிறார்.   வாசலில்  ஸ்கூட்டரோ, காரோ  நிற்கிறது. அவருக்கு  உதவியாக ஒரு பட்டாளமே வைத்திருக்கிறார்.  ஒவ்வொருத்தருக்கும் எங்கெங்கோ ஜோலி.  நல்லது   கெட்டது  எல்லாத்துக்கும் அவர் ஒருவரே.  மொபைலில் ஆபீஸ் நடத்துபவர்.  முன்பெல்லாம் இடுப்பில்   சில்லரைக் காசாக  முடிந்து கொள்பவர்,  இப்போது ஜீ பே  GPAY அக்கௌன்ட்  வைத்திருக்கிறார். கொடுக்கல் வாங்கல் எல்லாம் அதில்  தான்  . தவிர  பையில் ஒரு பர்ஸ் வேறு   ஒரு  ரூபா  ஐந்து  பத்து ரூபா  நாணயங்கள்  தேவைப்படும் என்பதால் நிறைய  வைத்திருக்கிறார்.  

சில சங்கல்ப  அஷ்டோத்ர, ஸஹஸ்ர நாம, ஸ்தோத்ர, கர்மா மந்த்ரங்கள் எல்லாமே  மொபைலில் வைத்து பார்த்தும் சொல்கிறார். அவ்வளவு பிஸி .  

காலத்திற்கு ஏற்றவாறு சம்பிரதாயங்கள் மாறிவந்தாலும்  நமக்கு ஸ்ரத்தை இருப்பதில் மாறுதல் இருக்கவே கூடாது.  இடது கை  வலது தொடை மேலே, வலது கை மூடிண்டு  சொல்லுங்கோ.....
தரையில் உட்காரமுடியாத அவரை விட உயரமாக  ஒரு ஸ்டூலில் அமர்ந்திருக்கிறேன்.

 ''மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்........''
  அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா²ம் க³தோபிவா| ய:ஸ்மரேத் புண்ட³ரீகாக்ஷம்ʼ
   ஸ: பா³ஹ்யாப்⁴யந்தர: ஶுசி:|| மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஸ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரீ ராம-ராம-ராம||திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த ….

“ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ வித்யாபலம் தைவபலம் ததேவ கௌரீபதே (லக்‌ஷ்மீபதே)தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி”

இப்படித்தான் பல காரியங்களுக்கும் சங்கல்பம் ஆரம்பிக்கிறது. இதன் பொருளை பார்ப்பது நல்லது. ஏன் என்பது பின்னால் விளங்கும். இதற்கு அர்த்தம்  யாருக்கும் தெரியாமலே  சொல்கிறோம், சொல்வதையும் சரியாக சொல்லாமல் பாதி விழுங்கி விட்டு  பாதி தப்பாக சொல்கிறோம், நடுவில் யாருடனோ பேச்சு வேறு.... 

''நான் செய்த எல்லா பாவங்களையும் அழிப்பதன் மூலம், பரமேஸ்வரனை திருப்தி படுத்துவதற்காக
புனிதமல்லாததோ புனிதமானதோ எந்த நிலையில் இருப்பவனானாலும், யார் தாமரைக் கண்ணனை மனதால் நினைக்கிறார்களோ அவருடைய உள்ளும் புறமும் சுத்தமானதாகிறது. மனது சொல் இவற்றால் செய்த செயல்களால் கிடைத்த பாபம் ஸ்ரீ ராமனை நினைப்பதால் நீக்கப்படுகிறது; சந்தேகம் வேண்டாம்.
விஷ்ணுவே திதி. அதுவே வாரம். நக்ஷத்ரமும் விஷ்ணுவே. யோகம் கரணம் ஆகியவையும் விஷ்ணுவே. உலகமெல்லாமே எல்லாமே விஷ்ணு மயமாகும்.
கௌரீ பதியாகிய சிவபிரானே (லக்ஷ்மியின் பதியான விஷ்ணுவே) உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன்.அதனால் (இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய) லக்னம் நல்ல லக்னமே; நாள் நல்ல நாளே. நட்சத்திரம், சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் அவை நல்லன செய் வனவே.  கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
எல்லா கூறுகளையும் கவனிக்கப்போனால் நல்ல நேரம் என்பது தேவர்களுக்கும் அகப்படாதாம். அப்படியானால் மனிதர்களான நமக்கு மட்டும் எப்படி அகப்படும்? அதனால் சுலபமான வழி இறைவனை நினைப்பதே. அது ராமனோ, கௌரீபதியான சிவனோ லக்ஷ்மி பதியான விஷ்ணுவோ - அது நம் குல ஆசாரப்படி இருக்கட்டும். அப்படி இறைவனை நினைக்க அந்த லக்னமே நல்ல லக்னம் ஆகிவிடுகிறது. அந்த நாளே நல்ல நாள் ஆகிவிடுகிறது. அமாவாசை அன்று சந்திரனுக்கு பலமில்லை.இருந்தாலும் இறைவனை நினைக்க அது பலம் பொருந்தியது ஆகிவிடுகிறது.

''ஸார் , நான்  வாத்தியாரை கேட்டு   நல்ல நாள்தான் பார்த்தோம்; நல்ல முகூர்த்தம்தான் பார்த்தோம். இருந்தாலும் எடுத்த காரியம் இப்படி ஆகிவிட்டதே ''     என்று புலம்புகிறார்கள். 
என்ன பிரச்சினை? 

கர்மாவை செய்து வைப்பவர் சொல்லச்  சொல்ல திருப்பிச் சொன்னார்களே தவிர இந்த சங்கல்ப நேரத்தில் பகவானை நினைத்தார்களா?  ஏன் நினைக்கவில்லை?  யாரை  வேண்டிக்  கொண்டு காரியதஹே ஆரம்பிக்கிறோமோ, அந்த பகவானை பற்றிய  மந்திரத்தை  வாய் பாதியாகவும், தப்பிக்கவும் சொல்கிறதே தவிர, மனது துளியும் அவரை நினைக்கவில்லையே.  மனது பகவானை நினைக்காமல், அவரை மனம் தேடாமல்  அவர் வந்து தானாகவே  நம் எதிரே நின்று உதவுவார் என்று எதிர்பார்க்கக் கூட இல்லை.  அப்படியும் அவர் நமக்கு பாரபக்ஷமின்றி உதவத்தான் செயகிறார்.
அவசரப்பட்டுக்கொண்டு,  அதனால் இனிமேல் முகூர்த்தமே பார்க்க்க வேண்டாம் என்று நினைக்க வேண்டாம். முடிந்த வரை நல்ல முகூர்த்தமாக பார்த்துவிட்டு -ஆதர்ச முகூர்த்தம் கிடைப்பது அரிது என்பதாலும், தெரிந்த தெரியாத தோஷங்கள் இருக்கலாம் என்பதாலும் - பகவானை நினைத்து சங்கல்பம் செய்ய வேண்டும்.

சங்கல்பம்  என்றால்  என்ன தெரியுமா?  ஒரு திட சித்தம், உறுதி மொழி, நான் உன்னை வேண்டிக்கொண்டு இந்த காரியத்தை எடுத்துக்கொண்டு நடத்துகிறேன், அதை சரியாக செய்து  உனக்கு திருப்தியாக முடிப்பேன், அதுவும்   உன் ஆசியால் என்று பகவானை வேண்டிக்கொண்டு  துவங்கும் காரியம். எவ்வளவு அர்த்தம் பார்த்தீர்களா?

இனியேனும் சங்கல்ப நேரத்தில் இறைவனை நினைத்துக்கொண்டு சங்கல்பம் செய்வோம்.   இனியேனும்  மந்திரங்களை உச்சரிக்கும் போது  அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டாவது, படித்தாவது  தெரிந்து கொள்வோம். முடிவு நம் கையில் இல்லை, துவங்கி செயது முடிப்பது ஒன்றே நமது கடமை, கர்மா.  கர்ம  வினைப்பயன் தானே  விளையும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...