Sunday, August 18, 2019

aindham vedham



ஐந்தாம் வேதம்   J K SIVAN 
18 ம் நாள்  யுத்தம்

       

               ''சல்லியனும் இனி இல்லையடா''

''கர்ணனையா?  அர்ஜுனன் கொன்றுவிட்டானா?   ஐயோ என்னால்  நம்ப முடியவில்லையே''  என்று அதிர்ச்சியில் காந்தாரி மயக்கமுற்றாள். திருதராஷ்டிரன் தான் ஏற்கனவே  கீழே மயங்கி விழுந்தவன் இன்னும் எழுந்திருக்கவில்லையே'' என்கிறார் வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்.  


விதுரனும் சஞ்சயனும் அவர்களை எழுப்பி சமாதானம் செய்து வாழ்க்கை நிலையாமை பற்றி அறிவுறுத்தினார்கள்.

இந்த கட்டத்தில் நாம் மகாபாரதத்தின் மிக முக்கியமான கர்ண பருவத்திலிருந்து அடுத்து வரும் சல்லிய பர்வத்தில் அடியெடுத்து வைக்கிறோம். சல்லியன் கௌரவ சேனைக்கு அதிபதியாக நியமிக்கப் பட்டு மஹாபாரத யுத்தம் தொடர்கிறது.

''சஞ்சயா, எனக்கு மனம் வேதனையாக இருக்கிறது. என் மகனின் வாழ்வு எனக்கு முன்பே முடியும் என்று அறிகுறிகள் தென்படும்போது  ஒரு தந்தையின் நிலை  என்று யோசித்தால் உனக்கு புரியும். சீக்கிரம் சொல் என்ன நடக்கிறது அங்கே குருக்ஷேத்திர யுத்த களத்திலே ? அந்த பீமன் என்ன செயகிறான்? என்  பிள்ளைகள் இன்னும்  யார்  பாக்கி இருக்கி
றார்கள்?  என்று கேட்கிறான் திருதராஷ்டிரன்.

''கர்ணனைக் கொன்றதற்கு பழி வாங்குவேன் என்று படை திரட்டி துரியோதனன் பாண்டவர்களை எதிர்க்கிறான். எங்கே அந்த அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன் ஆகியோர்? நானே கொல்கிறேன் அவர்களை'' என்று வீரமாக பேசினான் உன் மகன் துரியோதனன்.

இரு புறமும் எண்ணற்ற சைன்யங்கள் உயிரிழந்த போதும் பல அக்ஷவுணி வீரர்கள் இன்னும் யுத்தத்தில் ஈடுபட்டதால்  யுத்தம் முடிவு பெறவில்லை.

''துரியோதனா, பார்த்தாயா எதிரே, பிணமலைகளை. இந்த யுத்தம் நம்மில் அனைவரை தின்றுவிட்டது. உனக்காக உயிரைக் கொடுத்தவர்கள் ரத்தம் பெரிய ஆறாக ஓடுகிறதே. கர்ணனும் மறைந்த பிறகு யுத்தத்தில் விருப்பமில்லாமல் தான் சைன்யம் யுத்த களத்தில் தொடர்கிறது. நம்பிக்கை இழக்காமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டிய பணி உனக்கும் எனக்கும் அவசியமாகிறது.'' என்றான் சல்லியன்.
                                                                           
 பீமனும் த்ரிஷ்ட த்யும்னனும் ஒரு புறம் படைகளோடு கௌரவர்களை எதிர்த்தனர். பீமன் கதாயுதத்தை சுழற்றிக்கொண்டு எதிர்ப்பட்டோரையெல்லாம் கொன்றான். மறுபக்கம் அர்ஜுனன் கௌரவப் படையை தாக்கினான். பீமன் கண்ணில் பட்ட இருபத்தி ஐந்தாயிரம் கௌரவ வீரர்கள் மரணமடைந்தார்கள் . நகுல சஹாதேவர்கள், சாத்யகி, சிகண்டி என்று அநேக சேனாதிபதிகளின் தாக்குதலுக்கு கௌரவ சேனையால் ஈடு கொடுக்க முடியவில்லை. துரியோதனன் அவர்களை உற்சாகப் படுத்தி போரிட வைத்தான்.பாண்டவ சைன்யமும் அளவில் குறைந்து விட்டது. அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன் அனைவருமே களைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் நமது தாக்குதல் நமக்கு வெற்றியை தரும். பயம் வேண்டாம். என்றான்'' வீராவேசமாக துரியோதனன்.

நகுலனும் சகாதேவனும் தம்முடைய படையுடன் ஒரு புறம் சகுனியை அவனது பெரிய காந்தார சைன்யத்தோடு
எதிர்கொள்கிறார்கள். காந்தார சைன்யம் முக்கியமாக தேர்ந்த யுத்தப் பயிற்சி பெற்ற குதிரைப் படை வீரர்களை கொண்டது. சாத்யகி நகுல சஹாதேவர்க ளுக்கு பக்க பலமாக இருக்கிறான். குதிரைகள் வேகமாக ஓடி வந்து எங்கும் புழுதியை கிளப்பி திரை போடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது.
யுத்தத்தில் வெற்றி நிச்சயம், கடைசி வரை போராடுவோம், தோற்றால் வீர மரணம் எய்துவோம் என்று சொல்லியவாறு துரியோதனன் விடாமல் கௌரவ சேனையை ஊக்குவிக்கிறான். கிருபர் அவனை நெருங்கினார். அவர் முகம்  கவலை சூழ்ந்திருந்தது.  அவனருகில் சென்று சொல்கிறார் :

 ''துரியோதனா , உலகிலேயே எவராலும் வெல்ல முடியாத மஹா வீரர்களான பீஷ்மர், துரோணர், கர்ணன், இவர்களைத் தவிர துச்சாதனன், ஜயத்ரதன், உன் சகோதரர்கள் அனைவரையும் இழந்து விட்டோம். எண்ணற்ற அக்ஷ்வுணி சேனைகளும் அழிந்தது. நீ மேலும் மேலும் தவறுகளை இழைத்துக் கொண்டே போகிறாய். அர்ஜுனன், பீமன் கிருஷ்ணன், ஆகியோரை எதிர்க்க இனி நம் சேனையில் சமமான வீரர்கள் இல்லை. இருப்பவர்களை காப்பாற்றுவது மன்னனுக்கு கடமை. இப்போதாவது யுத்தத்தை நிறுத்தி யுதிஷ்டிரனோடு சமாதானமாகப் போவது நல்லது. யுதிஷ்டிரன் இரக்கமும் தயையும் கொண்டவன். சகோதரர்கள் இரு சாராரும் அமைதியாக வாழ வழி இருக்கிறதே அதை விட்டு எதற்கு மரணத்தைத் தேடுகிறாய். கிருஷ்ணனும் திரிதராஷ்டிரனும் சொன்னால் யுதிஷ்டிரன் நீயே தொடர்ந்து அரசனாக இருப்பதை பாண்டவர்கள் மறுக்கவோ எதிர்க்கவோ மாட்டார்களே'' என்று உருக்கமாக சொன்னார்.

''கிருபரே , ஒரு நல்ல நண்பனாக நீங்கள் புத்திமதி சொல்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் எனக்காக தங்கள் உயிரையும் லக்ஷியம் செய்யாமல் போரிடுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் சொல்வதை நான் ஏற்க முடியாது. பாண்டவர்களோ க்ரிஷ்ணனோ, திரௌபதியோ என்னை நம்ப மாட்டார்கள், ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். கிருஷ்ணன் இன்னும் அபிமன்யுவின் மரணத்தை மறக்கவில்லை. என் நன்மையை எவரும் விரும்புவார்கள் என நினைக்கவே வழியில்லை. தனது சபதம் நிறைவேறாமல் போக அர்ஜுனனோ பீமனோ திரௌபதியோ சம்மதிக்க மாட்டார்கள். எனவே சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வெற்றி அல்லது வீரமரணம் ஒன்றே பதில். தோற்றால் எனக்காக உயிர் கொடுத்தவர்களோடு நானும் சேர்கிறேன். அதுவே எனக்கு விருப்பம்.'' என்றான் துரியோதனன்.

''அர்ஜுனா, துரியோதனன் தனது சேனைக்கு தலைவனாக எதிரே சல்லியனை நிறுத்தி இருக்கிறான். இவன் ஒருவனே எஞ்சியிருக்கும் மஹா வீரன். அவனையும் நீ கொன்று வீழ்த்தினால் யுதிஷ்டிரன் மாமன்னனாக முடிசூட்டிக்கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சற்று நேரத்தில் தான் உள்ளது. அங்கே பார், நடுவில் துரியோதனன், அவனைச்சுற்றி அஸ்வத்தாமன், கிருபர், திரிகர்த்தர்கள், சகுனி,க்ரிதவர்மன் ஆகியோர் பாதுகாக்க சல்லியன் படையோடு உன்னை நெருங்குகிறான்' என்றான் கிருஷ்ணன்.
கௌரவ சேனையில் பதினோராயிரம் தேர்கள், பத்தாயிரத்து எழுநூறு யானைகள், ரெண்டு லக்ஷம் குதிரைவீரர்கள், முன்னூறு ஆயிரம் காலாட்படைகள் இன்னும் இருந்தபோது பாண்டவர்களிடம் ஆறாயிரம் தேர்கள், ஆறாயிரம் யானைவீரர்கள், பத்தாயிரம் குதிரைவீரர்கள், நூறாயிரம் காலாட்படை வீரர்கள் தான் எஞ்சி இருந்தனர். இருப்பினும் அர்ஜுனன் தாக்குதலை கௌரவப் படை எதிர்க்க முடியவில்லை. ஒருவரோடொருவர் மோதி அன்றைய அழிவு ஆரம்பமானது.
நகுலனை,  கர்ணனின் பிள்ளைகள் சித்ரசேனனும் சுஷேணனும் கோபத்தோடு தாக்க ஆரம்பித்தார்கள் . கடைசியில் இருவரையுமே நகுலன் கொன்றான். மற்றொரு பிள்ளை சத்யசேனனும் எதிர்க்க அவனும் மாண்டான்.

சல்லியன் அஸ்வத்தாமா, கிருபர் க்ரிதவர்மன், துரியோதனன், சகுனி ஆகியோர் சூழ பாண்டவர்களை எதிர்த்தான் . அவனை பீமனும் சாத்யகி ஒருபுறமும் திருஷ்டத்யும்னன் சிகண்டி ஆகியோர் மறுபுறமும் எதிர்த்தனர். அர்ஜுனனை சம்சப்தகர்கள் அழைத்து அவன் அவர்களை கொன்று கொண்டு இருந்தான்.

சல்லியன் சரமாரியாக அம்புகளை யுதிஷ்டிரன் மேலும், அருகே இருந்த சாத்யகி, சிகண்டி ஆகியோர் மீதும் செலுத்தி போரிட்டான். பீமன் மீது க்ரிதவர்மன் அம்புகளை பொழிந்தான். திரௌபதி குமாரர்கள் மீது சகுனி தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். கிருபர் எங்கோ திருஷ்டத்யும்னனை வாட்டிக் கொண்டிருந்தார். அஸ்வத்தாமனும் துரியோதனனும் அர்ஜுனனை எதிர்த்தார்கள். சகாதேவன் சல்லியன் மகனைக் கொன்றான். துரியோதனனுக்கும் சேகிதானனுக்கும் நடந்த கதாயுத மோதலில் சேகிதானனின் மார்பை துரியோதனன் பிளந்து கொன்றான். துரியோதனனை திருஷ்டத்யும்னன் எதிர்த்தான். அஸ்வத்தாமன் விரைந்து துரியோதனனுக்கு உதவினான்.

சல்லியன் யுதிஷ்டிரனை கொல்வதில் மும்முரமாக இருந்தான். அர்ஜுனன் த்ரிகர்த்தர்களை புற்றீசல் போல் அம்புகளை செலுத்தி அழித்தான். கௌரவ சேனையின் பெரும்பகுதி அர்ஜுனனை சூழ்ந்து தாக்கிக் கொண்டிருந்தது. இதுவரை இரண்டாயிரம் தேர்கள் அவனால் அழிந்தன. ஒரு லக்ஷம் வீரர்கள் உயிரிழந்தனர். காட்டுத்தீயாக கௌரவ சேனையை கபளீகரம் செயது கொண்டிருந்தான்.

அஸ்வத்தாமன் கிருஷ்ணனை தாக்கினான்.  அதை தடுத்து  அர்ஜுனன் அஸ்வத்தாமனின்  வில்,   அம்புகள், ஆயுதங்களை முறித்தான். எஞ்சியிருந்த சம்சப்தகர்கள் அஸ்வத்தாமனை பாதுகாத்து அர்ஜுனனை எதிர்த்தார்கள்.

பீமனும் சாத்யகியும் அவனோடு சேர்ந்து சல்லியனைத் தாக்க, யுதிஷ்டிரன் மிக அற்புதமாக அன்று போர் புரிந்து சல்லியனை தாக்கி, அவன் குதிரைகளை கொன்று, அவன் தேரோட்டியை அழித்து பிறகு சல்லியனையும் கொன்றான். பீமன் அவன் சகோதரனையும் கொன்றான்.

''இன்னும் என்ன பாக்கி இருக்கிறது சொல் சஞ்சயா'' என்று அழுதான் திருதராஷ்டிரன்.

எங்கும் ரத்த ஆறு ஓட, தனது சேனை பெரும்பாலும் அழிந்த நிலையில் துரியோதனன் திகைத்து நின்றான். அம்புகளால் ஆயுதங்களாலும் திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் தாக்கினான்.

எஞ்சியுள்ள வீரர்களை ஒன்று திரட்டி சகுனியும் துரியோதனனும் பாண்டவர்களை எதிர்க்க துவங்கினார்கள். பீமன் அவனைக் கொல்ல எதிர்பட்ட இருபத்தோராயிரம் வீரர்களை தனி ஒருவனாக கொல்கிறான் . பாண்டவ அணியும் அளவில் இப்போது குறைந்து விட்டது.

சால்வன் திருஷ்டத்யும்னனை தாக்கி கடைசியில் அவனால் கொல்லப் படுகிறான். கௌரவ சேனை மீண்டும் நிலை குலைகிறது. க்ரிதவர்மன் அவற்றை மீண்டும் ஒன்று சேர்த்து பாண்டவர்களை தாக்க சாத்யகி அவனோடு போரிட்டு அவனை கொல்லும் நிலையில் கிருதவர்மனை கிருபர் வந்து காப்பாற்றுகிறார். யுத்தம் தொடர்கிறது.

அன்று பதினெட்டாம் நாள் யுத்தம். அர்ஜுனன் கௌரவ படையை கிட்டத்தட்ட நிர்மூலமாக்கி விட்டான். அவன் சென்ற இடம் எல்லாம் ரத்த ஆற்றின் தடம் ஓடியது. உயிரற்ற சடலங்கள் மலைகளாக குவிந்தன.
''சஞ்சயா,   எஞ்சியுள்ள என் மக்களின் கதி என்ன என்று சொல்.  இல்லை தப்பு,  என் மகன்கள்  அநேகமாக  எல்லோருமே தான்  அழிந்து  விட்டார்களே,துரியோதனனையும்  ஒரு சிலரையும்  தவிர.  அவன் கதியாவது என்ன என்று சொல் ''.

''அரசே, உன் மகன் துரியோதனன்  பிறந்ததே உன் வமிசத்தை அடியோடு ஒழிக்க என்று விதுரன் மற்றும் அநேக ரிஷிகள் முன்பே சொன்னது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. துர்யோதனனால் அனைத்து க்ஷத்திரியர்களும் அழிவார்கள்'' என்று சொன்னதும் பலித்துவிட்டது. எண்ணற்ற அரசர்கள் இந்த போரில் இரு பக்கமும் பங்கு கொண்டு உயிரிழந்தார்கள். துரியோதனனோடு தான் இந்த சர்வ நாசம் முடிவு பெறும். அதுவும் வெகு தூரத்தில் இல்லை.

துரியோதனன்  யானைப் படையை பாண்டவர்கள் மீது ஏவினதில் எண்ணற்ற உயிர்கள் பாண்டவ சைனியத்தில் மாள , பீமன் அந்த யானைகளை துன்புறுத்தி திருப்பி ஓடச் செய்கிறான். பல யானைகளை அவன் கொல்கிறான் . சாத்யகியும் அவனுக்கு துணையாக உதவ அங்கே அர்ஜுனன் வந்துவிட்டதால் கௌரவ சைன்யத்தை திரும்பி ஓடச் செய்தார்கள்.

''அரசே, துரியோதனனை பின்வாங்கச் செய்த பீமனை உயிர் தப்பின உன் பிள்ளைகள் சிலர் ஒன்றாக சேர்ந்து சூழ்ந்து கொல்வதற்கு முயல்கிறார்கள். அவர்கள் வேறு யாருமில்லை, துர்மர்ஷணன், ஸ்ருதந்தன் ,ஜைத்ரன், பூரிவலன் ,ரவி, ஜெயத்சேனன், சுஜாதன் , துர்விஷஹன் , துர்விமோச்சனன் துஷ்ப்ரதர்ஷன் மற்றும் ஸ்ருதர்வன் .'' நாம் எல்லோரும் ஒன்றாக தாக்கி பீமனை பழி வாங்குவோம்'' என்று அவனை நெருங்குகிறார்கள். அம்புகளால் தாக்கி பீமன் உடலில் ரத்தம் பெருகி ஓட ஆரம்பித்தது. பீமன் கோபத்தோடும் அத்தனை த்ரிதராஷ்டிரன் பிள்ளைகளை ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்திலும் துர்மர்ஷணன் தலையை திருகி துண்டித்தான். அடுத்து அவனிடம் சிக்கி மாண்டவன் ஸ்ருதந்தன் . அவனை அடுத்து இறந்தவன் ஜெயத்சேனன். பின்னர் ஸ்ருதர்வன். விளக்கின் முன் வீட்டில் பூச்சிகளாக உன் வீர மகன்கள் தானே சென்று பீமனிடம் உயிரை இழக்கிறார்கள். இதோ அடுத்து ஜைத்ரன், ரவி, பூரிவலன். பீமன் இன்னும் எவர் பாக்கி என்று தேடியவன் கண்ணில் துர்விமோச்சனன் அகப்படுகிறான். அழிகின்றான். தப்ப முயற்சித்த துஷ்ப்ரதர்ஷனையும் சுஜாதனையும் பிடித்து கொல்கிறான் பீமன். தனது அம்புகளால் பீமனை தாக்கிக் கொண்டிருந்த துர்விஷஹன் அவனருகில் நின்ற ஸ்ருதர்வன் ஆகியோரையும் பின் தப்பி ஓடாமல் மடக்கி எளிதில் கொல்கிறான். துரியோதனனைத் தவிர  அவன் சகோதரர்கள் எல்லோரையும் அல்லவா  பீமன்  கொன்று குவித்தான்.

   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...