Sunday, August 4, 2019

SAI SATH CHARITHA




மனித உருவில் ஒரு தெய்வம் J K SIVAN
ஷீர்டி பாபா
6 தபோல்கரின் பாபா தரிசனம்
சென்ற அத்தியாயத்தில் பாபா காலரா எனும் கொள்ளை நோயை கோதுமை மாவாக்கி அரைத்து ஊருக்கு வெளியே தள்ளிய அதிசயத்தை பார்த்தோமே அதன் உள்ளர்த்தம் நமக்கு இப்போது புரியாது. ஞானிகள் மட்டுமே உணர்வார்கள். பாபா யாரு டைய அபிப்ராயம், போற்றுதல் தூற்றுதலையும் லக்ஷியம் பண்ணாதவர். எதை எப்போது செய்யவேண்டும் என அறிந்த லோக சம்ரக்ஷண யோகி. அவர் வாழ்வில் ஒவ்வொரு கணமும் ஏதாவதொரு அற்புதம் நிகழ்ந்து கொண்டே இருந்தது. அதை சிறிதும் வெளிப்படுத்தாதவர். அவரை நுட்பமாக அருகே இருந்து உணர்ந்தவர்களால், அறிந்தோரால் நமக்கு கிடைத்திருக்கும் அவரது அற்புத செயல்கள் , அதிசயங்கள் ரொம்பவே குறைவானவை. எத்தனையோ பக்தர்களின் பாபங்கள் அகன்றிருக்கிறது. உலகத்தின் உஜ்ஜீவனத்திற்கென அவதரித்த ஒரு மஹான் ஷீர்டி பாபா..
ஸாய் ஸத் சரித்திரம் எழுதுமுன் ஹேமத் பந்த் எனும் தபோல்கர் ரொம்ப யோசித்தார். தயங்கினார். நானோ ஒன்றுமறியாதவன். ஞானசூன்யம். அவ்வளவு பெரிய மஹானை சரியாக புரிந்துகொண்டு தப்பில்லாமல் குறையில்லாமல் எழுத முடியுமா? மிகவும் கடினமான ஒரு காரியத்தை நான் மேற்கொள்ள தகுதியானவனா? சாயிநாதா, பாபா, நீங்கள் தான் எனக்கு இதற்கு தேவையான சக்தியை, ஞானத்தை, அறிவை எனக்கு தந்தருளவேண்டும் என்று மனதார பாபாவை வேண்டினார்.
பகவானுக்கு தெரியும். யார் சரியானவன் . தன்னை வெளியுலகத்துக்கு முறையாக காட்ட தகுந்தவன் என்று. அவனை ஊக்குவிப்பார். நான் என்னுடைய '' தெவிட்டாத விட்டலா'' எனும் பாண்டுரங்கன் லீலா வினோத பக்தர்கள் அனுபவ சரித்திரத்தை எழுதும் முன்பு இப்படி ஒரு அற்புத மனிதனை , மஹீபதி என்கிற அந்த மராத்தி பக்தனை பாண்டுரங்கன் தேர்ந்தெடுத்து பக்த விஜயம் எழுத வைத்தான் என்பதை அவர் புத்தகத்தை படித்து உணர்ந்தேன். வேடன் வால்மீகி எப்படி ராமாயணம் எழுத நியமிக்கப் பட்டான்?.வியாசர் எப்படி மஹா பாரதம் எழுதினார்? எல்லாமே பகவான் கிருபை ஒன்றே.
1800ல் தாஸ் கணு தேர்ந்தெடுக்கப்பட்டு பக்த லீலாம்ரிதம் , சாந்த் கதாம்ருதம் ஆகியவை வெளிவந்து சில மஹான்கள் சரித்ரம் பற்றி வெளியுலகத்துக்கு தெரிந்தது. அதில் ஷீர்டி சாயி பாபாவின் வாழ்க்கை, அவர் உபதேசங்கள் எல்லாம் பற்றியும் அறிகிறோம். ஸாயி பாபாவின் லீலைகளை இன்னொரு புத்தகத்தில் அறியலாம். ஆம். ஸ்ரீ ஸாயிநாத் பஜன் மாலா என்ற சிறிய புத்தக தொகுப்பில் சாவித்ரிபாய் ரகுநாத் டெண்டுல்கர் என்னும் பக்தை அற்புதமாக சித்தரித்திருக்கிறார். மேலே சொன்ன தாஸ் கணு மஹராஜ்,பாபாவின் மேல் மராத்தி பாடல்கள் இயற்றியுள்ளார். குஜராத்தி மொழியில் அமிதாஸ் பவானி மேத்தா பாபாவின் லீலைகளை கதைகளாக தந்திருக்கிறார். இது சிறு உதாரணம். எண்ணற்ற மொழிகளில் எத்தனையோ புத்தகங்கள், நூல்கள் நமக்கு பொக்கிஷமாக பாபா லீலைகளை வாரி வழங்குகிறது.
பாபாவின் லீலைகளை எழுதுவது பெரிய ஒரு சமுத்திரத்தை ஒரு சிறிய செம்பில் அடக்க முயல்வது. கடலில் அளவிடமுடியாத செல்வம் இருந்தபோதும் , நமது சிறிய கைக்குள் கிடைத்த அழகிய, மனம் கவர் சோழிகள், சங்குகள், வண்ண சிப்பிகளை கொஞ்சம் தரலாமே என்ற முயற்சி இது. இதுவே எண்ணற்ற பக்தர்களின் வாழ்வில் அஷ்டாங்க யோக பலன், தியான மஹிமை, ப்ரம்ம ஞானம் பெற எல்லாம் தர வல்லது. பாபாவின் அருளாசி இல்லையென்றால் அவரைப் பற்றி எழுதவேண்டும், சொல்லவேண்டும் என்ற முயற்சி மனதில் தோன்றியே இருக்காது, வெளிப்பட்டிருக்காது என்பது நிச்சயம் இல்லையா?
தபோல்கர் எனும் ஹேமத் , ஷீர்டி பாபாவைப் பற்றி எழுத பாபாவின் ஆசி முதலில் தேவை என்று உணர்ந்து நண்பர், மாதவ்ராவ் தேஷ் பாண்டே என்ற பாபாவின் பக்தரை, அணுகினார். இருவரும் பாபாவிடம் ஒருநாள் சென்று வணங்கி அப்போது தேஷ்பாண்டே'' பாபா உங்கள் சரித்திரம் எழுத அண்ணா சாஹேப் ஆசைப்படுகிறார். என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது, நான் ஒரு சாதாரண பக்கிரி என்றெல்லாம் சொல்லாதீர்கள். உங்கள் ஆசியில்லாமல் அவரால் இது துவங்க இயலாது.'' பாபா இதை கேட்டுவிட்டு சிறிதும் யோசிக்காமல் அருகே இருந்த உதியை (சாம்பல்) எடுத்து ஹேமத்தை அருகே வர ஜாடை காட்டி சிரம் தொட்டு தலையில் இட்டு, ''அவன் எழுதட்டுமே . பக்தர்களின் கதை, அனுபவம் எல்லாம் சேமித்துக் குறிப்பெடுத்து கொண்டு எழுதட்டும் நான் உதவுகிறேன், அவன் என்னை வெளிப்படுத்தும் கருவி. நான் அவனை என்னைப் பற்றி சொல்ல உபயோகித்துக்கொள்கிறேன். என் பக்தர்கள் விரும்பும் அது நிறைவேறட்டும் ' என்கிறார். இதற்கு அகம்பாவம், தற்பெருமை கூடாது. நானே கதி என்கிற சரணாகதி அவசியம். அதெல்லாம் அவனிடம் உண்டாகும்போது நானே அவனுள் இயங்கி என்னைப்பற்றி கூறிக் கொள்வேன்'' என்கிறார் பாபா.
முதலில் ஹேமத் பந்த், பாபா பக்தர்கள் காகாசாஹேப் தீக்ஷித், நானாசாஹேப் சாந்தோர்கர் ஆகியோரை சந்தித்து தெளிவு பெறுகிறார். '' நீ ஷீர்டி போய் அங்கே இரு. பாபாவை தரிசித்து ஆசியோடு எழுது'' என்கிறார்கள் எத்தனையோ தடங்கல்,குடும்ப பிரச்னைகள் தபோல்கரை ஷீர்டி செல்வதை தள்ளி போட்டுக்கொண்டே போனது. .
ஒரு சம்பவம். என் நண்பரின் மகன் லோனாவ்லா வில் வசிப்பவன் உடல்நலம் குன்றி கவலைக்கிடமானான். நண்பன் எத்தனையோ சிகிச்சைகள் மருத்துவர்களை நாடியும் குணமில்லை. நண்பன் வணங்கும் குருவை வரவழைத்தும் பயனில்லை. இந்த நேரத்தில் பாஸின் போக சாந்தோர்கர் தாணாவிலிருந்து தாதர் செல்கிறார் அங்கிருந்து பாஸின் போகவேண்டும். சாந்தோர்கர் ''என்ன ஹேமத் நீ இன்னும் ஷீர்டி போகவில்லையா? '' என்று கேட்டபோது சுரீர் என்று சுடுகிறது. இதோ கிளம்புகிறேன் என்று தாதரிலிருந்து ரயிலில் புறப்படுகிறார். ஒரு முஸ்லீம் சகபயணி பேச்சுவாக்கில் மன்மத் சென்றால் அங்கிருந்து ஷீர்டி போவது கஷ்டம். போரிபந்தர் போய் அங்கிருந்து ஷீர்டி போவது சௌகரியம் என்று வழி சொல்கிறார். அப்புறம் அந்த முஸ்லீம் பயணி கண்ணில் படவில்லை. இது பாபாவின் அதிசயம் தான்.
மறுநாள் சௌகரியமாக காலை ஷீர்டி போய் சேருகிறார். காகா தீக்ஷித் அங்கே காத்திருக்கிறார். வாடாவில் ஒரு சத்திரத்தில் தான் பயணிகள் தங்குவார்கள். ஆகவே வாடாவில் தங்கி ஸ்னான பானங்கள், சிரமபரிகாரம் முடித்து விட்டு ஷீர்டி பாபா தரிசனம் செய்யலாம் என்று தபோல்கர் எண்ணும்போது நண்பர் தாதியா சாநூல்கர் தென்படுகிறார். ''பாபா தரிசனத்துக்கு வந்தாயா.? பாபா இங்கே தான் வாடாவில் ஒரு மூலையில் இருக்கிறார்'' என்றபோது பழம் நழுவி பாலில் விழுந்ததன் அர்த்தம் புரிந்தது. ஸ்நானமும் இல்லை பானமும் இல்லை. அப்படியே ஓடி பாபாவை தரிசிக்கிறார் தபோல்கர் எனும் ஹேமத் பந்த்.
பாபாவை பார்த்த கணத்திலேயே தன்னுள் ஒரு மின்சார தாக்குதல் உண்டாகி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார் தபோல்கர். இடம், பொருள், காலம், நேரம், பசி தாகம் எல்லாம் மறந்துவிட்டது. பாபாவின் பாதங்களை ஸ்பர்சித்த போது ஒரு புது வாழ்க்கை பிறந்தது. பாபாவை அறிமுகப்படுத்திய அத்தனை உள்ளங்களுக்கும்
நன்றிக் கண்ணீர் காணிக்கை செலுத்தினார். இனி அவர் உலகில் எங்கும் எதுவும் பாபாவே தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...