Friday, August 23, 2019

JANMASHTAMI





                                              கண்ணன் பிறந்தான்  எங்கள்  மன்னன் பிறந்தான்.  

கிருஷ்ணன் அபூர்வன்.   பிறப்பதற்கு முன்பே, பிறந்ததும்  கொன்றுவிடுவான்  அண்ணன்  என்று  பெற்ற தாய்க்கு தெரிந்து  சிறையில் பிறந்த பிள்ளை கிருஷ்ணன். எப்படி  இருந்திருக்கும் அந்த தாயின் மன  நிலை.  பிறந்த மறு கணமே தாய் தந்தையை விட்டு இறந்தவனாக  கூடாது, எங்கோ  வளர்ந்து  சிறந்தவன் ஆகவேண்டும்  என்பதற்காக  பெற்றோரைப்  பிரிந்தவன். நடுநிசியில், ஆற்றைக் கடந்து கொட்டும் மழையில் அக்கரையில் ஒரு ஆயர்  வீட்டில் வளர்ந்த குழந்தை.  அது மட்டுமா,  அவன் வளரும்போது  ஒவ்வொருநாளும்  அவனைக் கொல்வதற்கு  அனுப்பப்பட்ட ஆபத்துகளை சந்தித்து உயிர் தப்பியவன்.  ஒவொருநாளும் மரணத்தை  எதிர்பார்த்து 125 வயது வாழ அவனால்  .எப்படி முடிந்தது? . எந்த அளவு  சுய  நம்பிக்கை.  காரணம் அவன் நம் போல்  சாதாரண அல்ல.  இப்படி தான்  அவதரிக்க வேண்டும் என்று  முன்னேற்பாடுடன் வந்தவன்.   கவலைகளை மறந்து  எதிர்ப்புகளை துறந்து சந்தோஷமாக வாழ்வாய்  என்று நமக்கு சொல்லித் தரவே   அப்படி உதாரண புருஷனாக தானும்  வாழ்ந்து காட்டி ,  மற்றவர்களையும் அதிக மகிழ்ச் சியில் ஆழ்த்தி ஆடிப் பாடி ஆயர்பாடியில் வளர்ந்தவன் கிருஷ்ணன். "ஹரே கிருஷ்ண!ஹரே கிருஷ்ண!கிருஷ்ண  கிருஷ்ண ஹரே ஹரே"என்று அவனது திருநாமத்தை வணங்கி பலன் பெறுகிறோம்..   பகவான் மகா விஷ்ணு பூமியின்  பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.    தஹி அண்டி,  தயிர் சட்டி,  என்று வடக்கே அவன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.  குஜராத்தில் வெண்ணை சட்டி விழா. நம் ஊரில் மாட்டு பொங்கலின் போது  மாடுகளுக்கு கொம்பில் வர்ணம், அலங்காரம் செய்வோமே அதுபோல்  நிறைய பசுக்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிந்து ஊர்வலம் ஜம்மென்று வரும்.நம் ஊர்களில் வெண்ணைத்தாழி  உற்சவம். 

மஹாராஷ்டிராவில் ஒட்டு மொத்தமாக  ஜென்மாஷ்டமி விழாவன்று உறியடி கோலாகலமாக நடக்கிறது. எண்ணற்ற பெண்களும் ஆண்களும் இதில் குழந்தைகளோடு பங்கேற்கிறார்கள். உறியடிகளில் பானைகளை உடைத்தவர்களுக்கு தாராளமாக பணப் பரிசு புதையலாக கிடைக்கிறது.  டைம்ஸ் ஆப்  இந்தியா  பத்திரிகை வாயிலாக  2014ல்  4000  மண்சட்டி உண்டியல்கள் இவ்வாறு பணம் நிரப்பி உயரே கட்டப்பட்டு  கோவிந்தர்கள்  என்று அவற்றை உறியடியில் வீழ்த்தி பரிசு பெற்றோர்க்கு கிடைத்தது என  படித்திருக்கிறேன்.  எந்த அளவுக்கு மக்கள் ஈடுபாடு கிருஷ்ணன் பிறந்த ஜென்மாஷ்டமி விழாவில் உள்ளது என்பது  .உலகறிந்த  உண்மை. 

இஸ்கான் கோவில்களில் வெகு வெகு விமரிசையாக இந்த ஜென்மாஷ்டமி விழாக்கள் நடைபெறும். 
வ்ரஜ பூமி என்று கிருஷ்ணன் பிறந்த இடத்தையும், அவன் வளர்ந்த பிரிந்தாவனத்தையும் அவன் கம்சனை தேடிச்சென்று அவனைக் கொன்ற மதுராவையும் தரிசிக்க  இந்தியாவின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள்.  எங்கும் ஜெகஜோதியாக விளக்கொளிகள், வண்ண வண்ண தோரணங்கள், சந்தோஷம். பக்தர்களின் பரவசம்  எல்லாம் பற்றி எழுத முடியாது.  நினைத்து பார்த்து ரசிக்க வேண்டியது தான் ஒரே வழி. 

வடக்கே ஜன்மாஷ்டமி சமயம்  பருவக்காற்று காலம் தீர்ந்து  பயிர்கள் வளர்ந்து அறுவடை காலமாக இருக்கும். எனவே விவசாயிகள், விளை நிலங்களில் அதிக வேலையின்றி கேளிக்கைகளில் ஈடுபட நேரம் கிடைக்குமே. ராஸலீலா வைபவத்திற்கு கேட்கவா வேண்டும். கோவர்தன கிரி நன்றி இன்னும் நம்  ரத்தத்தில் ஓடுகிறதே.

ஜென்மாஷ்டமி அன்று  ஜம்மு காஷ்மீரில்  காற்றாடி விட்டு கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலிருந்து பட்டம் பறக்கும்.  இந்த  வருஷமும்  இனி  வரும் காலத்திலும்  கேட்கவே வேண்டாம்.  இதுவல்லவோ  சிறப்பு  அந்தஸ்து.!

மணிப்பூரில் அஸ்ஸாமில்  ராஸ் லீலா கேளிக்கைகள் பிரபலம். 

குழந்தைகளை பாலகிருஷ்ணர்களாவும், ராதைகளாகவும் கோபியர்களாகவும் அலங்கரித்து அவர்களை கண் குளிர பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். 

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்  குட்டி குட்டியாக  கிருஷ்ணன் பாதங்கள் அரிசி மாவில் வரைந்து கண்ணை பறிக்கும். உப்பு சீடை, வெல்ல சீடைக்கு ஒரு தனி ருசி. இரவெல்லாம் பஜனை. ஹரே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம். வடக்கே கீத கோவிந்தம் படிப்பார்கள், பாடுவார்கள்.

போன வருஷம் நிறைய குட்டி குட்டியாக குழந்தைகளோடு -- இல்லை  பிஞ்சு ராதைகள்   குட்டி  கிருஷ்ணன்களோடு குலாவினேன். இந்த வருஷம் உடல் நலம் வெளியே  போக அனுமதிக்கவில்லை. 

பாகிஸ்தான்  பங்களா தேஷ் தேசங்களிலும் கிருஷ்ணனை இவ்வாறு கொண்டாடினார்கள், அரசியல்,  பிரிவினை என்பவை அவற்றை அழித்து விட்டது. எனினும் அங்கங்கே  வெளியே அதிகம் அரசல் புரசல் இல்லாமல் ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடி தான் வருகிறார்கள் சில பக்தர்கள். மனம் வேறு மதம் வேறு. 

இஸ்கான்  பக்தர்கள்  அமெரிக்காவிலும் மற்ற சில வெள்ளைக்கார தேசங்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை ஊர்வலமாக, ஆடல் பாடலோடு மேள  தாளங்களோடு  நெற்றியில் நாமம், தலையில் முழு, அரை, சிண்டு,   குடுமிகளோடு,  பஞ்சகச்சம், கோலத்தோடு பெண்களும் புடவையோடு தெருவெல்லாம்  ஆடிப்பாடிக் கொண்டு, கோலாட்டம், கைத்தாளங்களுடன் வண்ண வண்ண குழந்தைகளோடு கொண்டாடுவதைக்  காண  நிச்சயம் ரெண்டு கண்கள் போதாது.

கோகுலாஷ்டமி விழாவை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வர  கேட்கவா வேண்டும்.  மனிதர்களுக்கு பிறந்தநாள் என்றாலே வீடுகளை அலங்கரித்து தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடுவார்கள். கோகுலாஷ்டமி,  அதுவும் எல்லோருக்கும் பிடித்த  பகவான் கண்ணன் அவதரித்த நாள் என்றால் உற்சாகத்துக்கு என்ன குறைவு?  இந்த  கடவுள் தானே  மனிதராக அவதரித்து அழியாக கீதையை  நமக்கு பரிசளித்தவர் .  அந்த மாயக்கண்ணன் பிறந்தநாளை நாடே உற்சாகமாக கொண்டாடுகிறது. கண்ணன் பிறந்த ஆலயங்களில் அலங்காரம்,தோரணங்கள் எங்கும் கண்ணை பறித்து  களைகட்டாதா?.

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு.

தர்மநெறி தவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குருசேக்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார்.இந்த நாளையே கோகுலாஷ்டமி,  ஜென்மாஷ்டமி நாளாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர். பாத சுவடு கோலமிடுவதில்  தான் எத்தனை ரகம். குழந்தைகளின்  கால்களை மாவில் தோய்த்து  ரப்பர் ஸ்டாம்பாக   rubber stamp ஆக  சில வீடுகளில்.   பெரிய முன்பாகம், சின்ன பின்பாதம்,   விரல்களுக்கு மேல், அல்லது குறைவாக, பாதங்களும் ஒன்றன் பின் மற்றொன்றாக,  சேர்ந்து, 8 வரைந்து மேலே குச்சி குச்சிகளாக விரல்களை  நீட்டி  எத்தனையோ வீடுகளில் வேடிக்கையாக  பார்க்கலாம்.   நம்  குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும் அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலமாக   பழக்கத்தை    இன்னும்  நாகரிகம்  மாற்றவில்லை. இப்படி பாதம் வரைவதற்கு அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான்.  ஆச்சார்யனின் பாதத்தை  கண்ணனின் திருவடி  யோடு சேர்த்து  நாம்  வழிபடுபவர்கள்.

நம் வீட்டிலும் பாதச்சுவடுகளை வரைந்து வைத்தால் குழந்தைக்கண்ணன் தன் பிஞ்சு பாதங்களை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நம் வீட்டுக்கு வருவதைப் போல ஒரு தோற்றத்தைத் தரும்.

கண்ணனுக்கு பட்சணங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவல், பொரி, சுகியன்,அப்பம்,தட்டை,வெல்லச் சீடை,உப்புச் சீடை,முறுக்கு, அதிரசம் ஆகியவைகளை படையல் இட்டு வணங்கி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம். தஹிகலா என்றால், பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலப்பது என்பர்.
வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன. மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள்.

பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்

கிருஷ்ண ஜெயந்தி என்பது மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாளாகக் கருதப்பட்டு கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இவ்விழாவானது உலகெங்கிலும் உள்ள இந்துக்களால்  கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தில் பகவான் கிருஷ்ணன் தனது பால்ய பருவத்தில் நிகழ்த்திய சாகசங்கள் மற்றும் அவரின் குறும்புத்தனமான விளையாட்டுகள் நினைவு கூறப்படுகின்றன.

இவ்விழாவின் போது நடைபெறும் வழிபாட்டில் குழந்தை கண்ணனுக்கு பிரியமான பால், வெண்ணெய், பழங்கள், உப்பு சீடை, இனிப்புச் சீடை, தட்டை, அவல், அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள் போன்றவை இடம்பெறுவது தனிச்சிறப்பு ஆகும்.

சிறுகுழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டு வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றனர். மேலும் இல்லங்களில் வாயில் படியிலிருந்து வழிபாட்டு அறை வரையிலும் மாவினால் குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் வடமாநிலங்களில் தஹி அண்டி மற்றும் ராசலீலா என்னும் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் பள்ளிகளில் கிருஷ்ணர் மற்றும் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் மாறுவேடமிட்டு போட்டிகள் நிகழ்த்  தப்படுகின்றன.

இவ்விழா கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இனி இவ்விழா பற்றி காணலாம்.
கிருஷ்ணன் தனது லீலைகளின் மூலம் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவன். தனது பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் லீலைகள் புரிந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியவன்.  இந்து மக்களால் வழிபாடு செய்யப்படும் கடவுள்களில் கிருஷ்ணனின் குழந்தைப் பருவமே எல்லோராலும் முதன்மை யானதாக நினைவு கூறப்படுகிறது.

ஆயர் பாடியில் கோபியர்களையும், இடையர்களையும் துன்பங்களில் இருந்து பாதுகாத்ததால் இவரின் பிறப்பானது எளியோர்களாலும் கொண்டாடப்படுகிறது.

 இவ்விழாக் கொண்டாட்டத்தின் போது விரதமுறை பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் பகல் முழுவதும் விரதம் இருக்கின்றனர்.  மாலை நேரத்தில் வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் வாயிற்படி முதல் வழிபாட்டிடம் வரையிலும் மாவினைக் கொண்டு குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்படுகின்றன.

ஆயர்பாடியில் கண்ணன் குழந்தையாக இருந்த போது உயரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளில் உள்ள வெண்ணையை எடுத்து யாரும் அறியாத வண்ணம் உண்ணும் போது சிதறிய வெண்ணையில் கால் வைத்து நடந்ததால் உண்டான காலடித் தடங்களை நினைவு கூறும் வகையில் வீடுகளில் குழந்தைக் கண்ணனின் காலடித் தடங்கள் வரையப்படுகின்றன.
இவ்வாறு செய்வதால் குழந்தைக் கண்ணன் வாயிற்படி வழியே வந்து வழிபாட்டு அறையினுள் நுழைந்து தங்களின் வழிபாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

வழிபாட்டு அறையில் கிருஷ்ணருடைய உருவப்படமோ, சிலையோ இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணருக்குப் பிரியமான தட்டை, உப்பு சீடை, இனிப்பு சீடை, அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள், பால், வெண்ணெய், திரட்டுப்பால் போன்றவை படைக்கப்படுகின்றன.

கிருஷ்ணர் முல்லை, மல்லிகை, துளசி ஆகியவை கொண்டு அலங்கரிக்கப்படுகிறார். விளக்கு ஏற்றப்பட்டு தீபதூபங்கள் காண்பிக்கப்படுகின்றன. பகவத்கீதை, கிருஷ்ணர் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. பின் அருகிலிருப்போர் மற்றும் உறவினர்களுக்கு பிரசாத விநியோகம்.   வீட்டில் வழிபாடு முடிந்தபின் அருகிலிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்கு வழிபாடு செய்யச் செல்கின்றனர். கோவில்களில் நடு இரவு சிறப்பு வழிபாடுகள். கிருஷ்ணர் நள்ளிரவு பிறந்ததால் அதனை நினைவு கூறும் விதமாக நள்ளிரவு வழிபாடு நடைபெறுகிறது. அதன்பின்னரே விரதம் இருப்போர் உணவு உண்டு விரதத்தினை முடிக்கின்றனர். குழந்தைகள் கண்ணன் மற்றும் ராதை வேடங்கள் இட்டு வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.

இவ்விரத முறையைப் பின்பற்றவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான, புத்திகூர்மையான குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும், குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் அறிவு மேம்படுவதோடு நற்சிந்தனையும் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

 தஹி  அண்டி  மகாராஷ்டிர மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தெருக்களில் உயரமான இடங்களில் பானைகளில் தயிர் நிரப்பப்பட்டு கட்டப்படுகிறது. இதனுடன் பணமுடிப்பும் கட்டப்படுகிறது.   இப்போட்டியில் கலந்து கொள்பவர்களை  ''கோவிந்தாக்கள்'' என்று  கூப்பிடுவார்கள்.  இவர்கள் பிரமிடுகள் அமைத்து மேலேறி தயிர் கலசத்தை உடைத்து பணமுடிப்பினைப் பெறுகின்றனர். கோவிந்தாக்கள் குழுக்களை அமைத்து இரண்டு, மூன்று தஹி அண்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுண்டு.   ஆயர்பாடியில் கண்ணன் தனது நண்பர்களோடு சேர்ந்து   அவர்களையே மனித பிரமிடு  ஆக்கி   அவர்கள் மேல் ஏறி  உயரே  கட்டப்பட்டு இருந்த பானைகளில் உள்ள தயிர் மற்றும் வெண்ணெயை எடுத்தார் என்பதால்  இந்த கொண்டாட்டம். 

 ராசலீலா என்பது கண்ணன் கோகுலத்தில் கோபியர்களுடன் இணைந்து விளையாடிய லீலைகளை நடனமாடி நடிப்பதாகும். இந்நிகழ்வு வடமாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது.  ஜெயதேவர்  கீத கோவிந்தத்தில் எத்தனை பாட்டுகள்  அஷ்டபதியாக  பாடி த் தள்ளி இருக்கிறார்.  நிறைய அதெல்லாம் .எழுதி இருக்கிறேனே

தமிழ்நாட்டிலும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளுக்கு கண்ணன், ராதா மற்றும் மகாபாரத கதா பாத்திரங்கள் மாறுவேடமிட்டு போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.  இவ்விழாவின் போது உறியடி நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள்  வேறு. கோவில்களில் தேரோட்டம்  விசேஷம். கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் இவ்விழாவின் போது லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.   நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபட்டு நன்னிலை பெறுவோம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலையில்  வாசல் தெளித்து,வாசற்படியிலிருந்து பூஜை அறை வரைக்கும் கண்ணனின்  பிஞ்சுக் கால்களை மாக்கோலங்களாக இடவேண்டும்.கிருஷ்ணன் தனது மென்பாதங்களை பதித்து ஒவ்வொருவருடைய வீடுகளிலும் எழுந்தருளிகிறார் என்பது ஐதீகம்.

கிருஷ்ணன்  வருகையால் ஆயர்பாடியில்  செல்வமும்   வளமும் பெருகியது போல், ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக கிருஷ்ணரது பாதத்தை அரிசி மாவினால் போடுகிறார்கள்.    அரிசி மாவினால் கோலம் போடுவது ஏன்?  கோ குலத்தில் கண்ணன் தந்து தோழர்களுடன் கோபியர் இல்லம்தோறும் சென்று வெண்ணெயைத் திருடி தின்னும்போது,வீடு முழுவதும் வெண்ணெய் இறைபடும்.அவனது கமல மலர்ப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடு முழுவதும் கண்ணனின் பாதசுவடுகள் நிறைந்திருக்கும்.பண்டைகாலத்தில்  மக்கள்  கிருஷ்ண ஜெயந்தி அன்று வெண்ணையினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.அதன்  ஞாபகமாக தற்போது  மாக்கோலம்..

 கிருஷ்ணரது சிலையை  வைத்து முதலில் நெய்,பால்,தேன்,தயிர்,கடைசியாக  சுத்த   தண்ணீரால்  அபிஷேகம் செய்ய வேண்டும்.சுவாமிக்கு சந்தனம் குங்குமம் இட்டு,புஷ்பங்களால் அலங்கரிக்க வேண்டும்.வஸ்திரம் சாத்துவது விசேஷம். கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல்,வெண்ணெய்,நாவற்பழம் ,சீடை,முறுக்கு,அப்பம் ,பாலால் செய்த பலகாரங்கள் போன்றவற்றை  நிவேத்தியமாக வைத்து,கிருஷ்ணாஷ்டகம்,ஸ்ரீமத் பாகவதம்,கிருஷ்ணன் கதைகள் சொல்லி கற்பூர ஆர்த்தி காட்ட வேண்டும்.

கிருஷ்ண  ஜெயந்தி விரதத்தை   கணவனும்,மனைவியும் சேர்ந்து அனுஷ்டிப்பது  மிகவும் உத்தமமாகும்.பகற் பொழுது உபவாஸம் இருந்து இரவில்,கண்ணனது திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும். கோகுலாஷ்டமி அன்று இருக்கும் விரதமானது, பல்லாயிரம் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதற்கு சமம்.
நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிகாக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கிறோம் .  நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ‪ஸ்ரீகிருஷ்ண‬ ஜெயந்தி.

ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராசலீலா, தகி அண்டி என பல வடிவங்களில் அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது.வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எந்த விதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். மற்ற  திதிகள் போல இந்த இரண்டும் நல்ல திதிகளே.   இதை  உணர்த்தவே ராமாவதாரத்தில், மகாவிஷ்ணு நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம். அதேபோல், கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணனாக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்‘ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது.     இப்படிதான்  ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள், தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும் இந்த நாள் ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் சூரியன் இருக்கும் சமயம் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளான இந்த தினம் ஸ்ரீஜெயந்தி தினமாகும் இந்த தினம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த தினமாக கொண்டாடப் படுகிறது.

வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்ரம் வைகானசம் என்னும் இரண்டு விதமான ஆகமங்கள் உண்டு. ஆகமங்கள் என்பது ஆராதனை முறைகளாகும். பாக்ன்சராத்ர ஆகமம் என்பது பத்ரிகாஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு தானே நரனும் நாராயணனுமாகி நாராயணன் நரனும்மு உபதேசித்த பூஜை முறைகளாகும், இந்த பூஜை முறை ஐந்து ராத்திரிகளில் சொல்லப்பட்டதால் பாஞ்சராத்ரம் என்று பெயர் பெற்றது. வைகானச ஆகமம் என்பது பகவான் விஷ்ணு தானே வகானச முனிவராகி சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்ததாக கூறப்படுவதால் இந்த ஆகமம் வைகானச ஆகமம் என்று கூறப்படுகிறது.

பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என்பது ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் கிருஷ்ணபட்சம் அஷ்டமியன்று கொண்டாடப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். இன்று சூரிய உதயத்தில் சப்தமி அல்லது கிருத்திகை நட்சத்திரம் சம்பந்தம் ஒரு வினாடி இருந்தாலும் அது தோஷமுள்ள நாளாக கருதப்படுவதால் மறுநாள் தான் ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடப்படவேண்டும். மேலும் சூரிய உதயத்தில் அஷ்டமி ரோகிணி ஆகியவை இல்லாதிருந்தாலும் அன்றே பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி ஆகும்.

ஸ்ரீ வைகானச ஸ்ரீஜெயந்தி ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் நடு இரவில் ரோகிணி இருக்கும் சமயம் வைகானச ஸ்ரீஜெயந்தியாகும் அன்று தேய்பிறை அஷ்டமி அர்த்தராத்திரிக்கு முன்பு சிறிதளவு இருந்தாலும் போதுமானது. இவ்வாறு பலவகையிலும் பலவித ஆச்சாரியார்களின் வழிகாட்டுதலின்படி பலவிதமான நாட்களில் பலவித பெயர்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.

1.சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2.பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
3.காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
4.கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் இடது சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5.ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6.முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
7.மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
8.பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபடுவர்.

அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம். இதைத்தான் சூடிக்கொடுத்த ‪சுடர்க்கொடி ஆண்டாள்‬ தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

என்று பாடியருளி, கிருஷ்ணனை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது ‪திருப்பாவை‬ பாசுரத்தில் கூறியுள்ளார்.

குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சத்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சத்புத்திர பாக்ய யோகத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு. கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...