Tuesday, August 13, 2019

AINDHAM VEDHAM



 ஐந்தாம் வேதம்    J  K  SIVAN 
16ம் நாள் யுத்தம்..
                                                          
         மும்முரமாக உயிர்கள் பலியாகிறதே!

நண்பர்களே, அன்பர்களே, இதுவரை எவ்வளவு பொறுமையாக  இந்த தொடரை வாசித்துக் கொண்டு வருகிறீர்கள்!   நைமிசாரண்யத்தில் ரிஷிகள் கூடி  சுதர் மூலமாக  வியாசர் பாரதத்தை  பிள்ளையார்  தந்தத்தை ஒடித்து     எழுதியதிலிருந்து  இன்று  குருக்ஷேத்திர யுத்தத்தில்  16ம்  நாள்வரை என்னோடு பயணம் சென்ற அனைவருக்கும்  நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இதை நான் செய்த மிகப்பெரிய  பாக்கியமாக  கருதுகிறேன்.

யுத்தத்தோடு மகா  பாரதம் முடியவில்லை, யுத்தம் தான் முடிந்தது... மேலே  சொல்வேன், செல்வோம்.                                                                                     
" அர்ஜுனா, நீ கர்ணனை எதிர் கொள். பீமன், துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் தாக்கட்டும். நகுலன் வ்ரிஷசேனனையும், சகாதேவன் சகுனியின் சேனையையும் சந்திக்கட்டும். சிகண்டியும் சாத்யகியும் மற்றவர்க்கு தக்க சமயங்களில் உதவட்டும். அஸ்வத்தாமனை த்ரிஷ்ட்ட த்யும்னன் கவனிக்கட்டும்''  என்று  கிருஷ்ணன் அறிவுரை  சொன்னான்.

''கர்ணா.   அதோ பார் உன் எதிரே அர்ஜுனனின் வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேர் வருகிறது.  .அருகில்  வரட்டும். சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அவனைக் கொல்'' என்றான் சல்லியன்.  

''அர்ஜுனனை சம்சப்தகர்கள் சூழ்ந்திருக்கிறார்களே,அவர்களிடமிருந்து அவன் முதலில் உயிர் தப்பட்டும். பிறகு என்னை நெருங்கட்டும்'' என்றான் கர்ணன்.

''விளக்கின் முன் வீட்டில் பூச்சிகள் அவர்கள். அதோ பார் தலைகள் சடசடவென்று கீழே விழுவதை. அதற்குள் உன் மனதில் அவனை எதனால்  தாக்குவது எப்படி என்று ஏதாவது திட்டம் தயார் செயது கொள், அப்பறம் நேரம் இருக்காது'' என்றான் சல்லியன். கர்ணன் பாஞ்சால சேனையையும் துருபதன் விராடன் சேனைகளையும் கபளீகரம் செய்தான். முன்னேறினான். திருஷ்டத்யும்னன் சாத்யகியால் கர்ணனைத்  தடுக்க முடியவில்லை. கர்ணனின் மகன் பானுசேனன் பீமனை எதிர்த்து உயிரிழந்தான். கர்ணன் பாண்டவ சைனியத்தைச்  சிதற அடிக்கிறான். யுதிஷ்டிரனை நெருங்கி கொல்லும் சந்தர்ப்பம் வந்தது. யுதிஷ்டிரனை கையால் பிடித்து வாளால் வெட்ட நினைக்கும்போது குந்தி சொன்னது கவனம் வந்தது ''தர்மனைத் தொடாதே. அடுத்த கணமே நீயும் நானும் சாம்பலாகிவிடுவோம்.''      யுதிஷ்டிரனை நன்றாக ஏசி உயிர் தப்ப விடுகிறான் கர்ணன்.

பீமனும் கவுரவ சேனையும் மோதும்போது பீமன் விவித்சுவை கொல்கிறான். துரியோதனன் சகோதரர்கள் விகடன், சஹன் ,க்ரதன், நந்தன், உபநந்தன், ஆகியோரையும் கொல்கிறான்.

அர்ஜுனனை விடாது தமது பக்கம் இழுத்து அவன் கௌரவ சேனையை நாசம் செய்யாமல் இருக்க சம்சப்தகர்களை அனுப்பி தினமும் அவனை அவர்கள் தம்மோடு போருக்கிழுக்கும் வித்தை அன்றும் தொடர்ந்தது. கர்ணனோடு யுத்தம் அவசியம் என்பதால் அர்ஜுனன் அவர்களனைவரையும் ஒரு நாக பாச அஸ்திரத்தால் நகரமுடியாமல் நிறுத்தி வைக்கிறான். அவர்கள் அனைவரின் கால்களையும் விஷ பாம்புகள் சுற்றிக்கொண்டு அவர்கள் அசையாமல் நிற்கின்றனர். சுசர்மன் விஷயம் தெரிந்தவன். சௌபர்ணா அஸ்திரம் எய்து பருந்துகளை அனுப்பி பாம்புகளை விலக்குகிறான். சிகண்டியின் அம்புகளை தடுத்த கிருபர் மீது சுகேது பாய்ந்து இருவரும் போரிட்டு கடைசியில் கிருபர்  எய்த அம்பினால் சுகேதுவின் தலை உடலிலிருந்து துண்டாக கீழே விழுகிறது.

கர்ணனின் சுடும் அம்புகளை எதிர்க்கமுடியாமல் பாண்டவ சைன்யம் கலங்குகிறது. அவனை எதிர்த்த வீரர்கள் மரணத்தை தழுவுகிறார்கள். சேதி தேச அரசர்கள், பாஞ்சாலர்கள் அவனை சூழ்கிறார்கள். பெரும் யுத்தம். அம்புகளால் அவர்களை துளைக்கிறான் கர்ணன். முடிவில் ஜிஷ்ணு, ஜிஷ்ணு கர்மன், தேவபி, சித்ரன், சித்ராயுதன், ஹரி, சிங்ககேது, ரோசமானன், சலபன், அனைவரையும் வெட்டி சாய்க்கிறான் கர்ணன். அவனது பராக்ரமம் சல்லியனை வியக்க வைக்கிறது. திருஷ்டத்யும்னன் சிகண்டி ஆகியோர் கர்ணனை எதிர்க்கிறார்கள். சாத்யகியும் சேர்ந்து தாக்குகிறான்.

அர்ஜுனன் சம்சப்தர்களை நிர்மூலமாக்குகிறான். ''அர்ஜுனா,  கர்ணனை இப்போது தாக்கு'' என்றான் கிருஷ்ணன். கௌரவப் படையை நாசம் செய்தவாறு அர்ஜுனன் எதிரே செல்ல, அவனை காம்போஜ அரசன் சுதக்ஷிணனின் சகோதரன் தடுக்க அர்ஜுனன் அம்புகள் அவனை கொல்கின்றன . எண்ணற்ற உயிரற்ற உடல்கள் அர்ஜுனன் செல்லும் வழியில் நிறைகிறது.

அஸ்வத்தாமன் எதிர்ப்பட்டு அர்ஜுனனை தாக்க அவனைக்  படுகாயப் படுத்தி அனுப்புகிறான் அர்ஜுனன். என் தந்தையை கொன்ற திருஷ்டத்யும்னனை கொல்லாமல் திரும்பமாட்டேன். அர்ஜுனன் பீமன் எவர் எதிர்த்தாலும்''  என்கிறான் அஸ்வத்தாமன்.

திருஷ்டத்யும்னனுக்கும் அஸ்வத்தாமனும் யுத்த களத்தில் ஒருவரோடொருவர் மோதிய போது அஸ்வத்தாமன் கடுங் கோபத்தோடு ''அடே பாதகா , என் தந்தையைக்  கொன்றவனே , இன்று உன் உயிரைப் பறிக்காமல் நான் நகர்வதில்லை, உன்னை விடுவதுமில்லை'' என்றான்.

''ஆஹா, ஹே ப்ராமணா, என் வாள் புண்யம் பண்ணியுள்ளது. உன் தந்தையைக் கொன்றது போதாதென்று உன்னையும் அவரிடம் அனுப்பப் போகிறதே''   என்றான் திருஷ்டத்யும்னன் பதிலுக்கு. இருவருமே சிறந்த வீரர்கள் போர் முறை அறிந்தவர்கள். இருப்பினும் அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனை விட அதிக சக்தி வாய்ந்தவனாக அவனை கொல்ல முயற்சித்தான். கிருஷ்ணன் இதை கவனித்து

 ''அர்ஜுனா, நமது திருஷ்டத்யும்னனை அஸ்வத்தாமன் கொல்லும் முயற்சியில் உள்ளான். உடனே அவனைக் காப்பாற்று. கிருஷ்ணனின் தேர் அஸ்வத்தாமனை நோக்கி திரும்பியதை அவன் பார்த்ததும் அவன் ஏமாற்றம் அடைந்தான். அதற்குள் பார்த்தனின் அம்புகள் அவனை சரமாரியாக தாக்க தோளில் காயமுற்று தேர் தட்டில் மயங்கி சாய்ந்தான். பிறகு மெதுவாக அங்கிருந்து நகர்ந்தான். அதற்குள் அவனுக்கு உதவ கர்ணன் வந்துவிட்டதால் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் நேரடி தாக்குதல் தொடர்ந்தது. அஸ்திரங்கள் ஒருவரை ஒருவர் தாக்க, அவற்றை லாகவமாக அவர்கள் தடுத்து இந்த வீர விளையாட்டு சிறிது நேரம் நடந்தது. அதற்குள் சம்சப்தகர்கள் அர்ஜுனனை சூழ்ந்து கொள்ள அவர்களைக் கொல்வதில் அர்ஜுனனின் கவனம் சென்றது.

''அர்ஜுனா, அங்கே பார், யுதிஷ்டிரனைக்  கௌரவ சேனை தாக்கி அவனைக்  கொல்ல முயற்சிக்கிறது. நல்ல வேளை சாத்யகியும் த்ரிஷ்ட்ட த்யும்னனும் சிகண்டியும் அங்கே உதவிக்கு சென்றுவிட்டார்கள். நகுல சகாதேவர்கள், பீமன் ஆகியோர் கௌரவ சேனையை மறுபக்கம் அழிக்கிறார்கள். கர்ணன் இப்போது யுதிஷ்டிரனைத் தாக்குகிறான். அவனை எதிர்க்க யுதிஷ்டிரனால் முடியாது.  கொல்லப் படுவான். பாண்டவ சேனையை கர்ணன் திணரச் செய்கிறான்.  அர்ஜுனா, நீயும் கர்ணனும் சம பலம் கொண்ட வீரர்கள். அவன் நமது அரசனையும் படைகளையும் அழிக்கும் முன்பு நீ உடனே அவனை அழிக்கவேண்டும்'' என்றான் கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...