Saturday, August 17, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
17ம் நாள் யுத்தம்

''கர்ணனும் காலத்தில் கரைந்தான்''

மகாபாரத யுத்தத்தின் மிக உச்ச கட்டமாக கர்ணன்-அர்ஜுனன் யுத்தம் காலம் காலமாக பேசப்பட்டு பல தலைமுறைகள் இதை ரசித்திருக்கின்றனர்.
சஞ்சயா, கர்ணன் எப்படியும் இன்று பாண்டர்வர்களை கொன்றோ வென்றோ யுத்தத்தை முடிப்பான் என்ற கடைசி நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உடனே சொல் மேலே அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்து '' திருதராஷ்டிரனுக்கு இதை சொல்வதற்குள் வார்த்தைகள் வெளியே வராமல் நா குழறியது. உடல் நடுங்கி வியர்த்தது. ''பீமன், ஐயோ பீமன், அவன் இன்னும் என்ன செய்கிறான் சொல்....''
அரசே சொல்கிறேன் கேளுங்கள்:
'' ஏமாற்றமடைந்த நாக ராஜன் அஸ்வசேனன் கர்ணனிடம் சென்று ''என்னை மீண்டும் அர்ஜுனன் மேல் செலுத்து'' என்று வேண்டினான்.

''நீ யார்? எப்படி எனது அஸ்திரமாக வந்தாய்? '' என்று கேட்ட கர்ணனுக்கு அதிதியின் மகன் காண்டவ வனத்தை அர்ஜுனன் தீக்கிரையாக்கியபோது உயிர் தப்பி அவனை பழிவாங்க காத்திருந்ததை சொல்கிறான்.
''ஓஹோ! அப்படியா? . இதைக் கேள் அஸ்வசேனா. நான் மற்றவன் துணையோடு என் எதிரியைக் கொல்பவன் இல்லை. உன் உதவி எனக்கு தேவை இல்லை, நீ போகலாம்'' என்றான் கர்ணன். இன்னொன்றும் சொல்கிறேன் கேள். ''ஒரு தடவை செலுத்திய அஸ்திரத்தை இரண்டாம் முறை செலுத்துபவன் நான் அல்ல'' என்று அஸ்வசேன நாகத்திடம் சொன்னான் கர்ணன். கர்ணனுக்கு குந்தியிடம் தான் கொடுத்த வாக்கு நினைவுக்கு வருகிறது. ஆகவே வேறு வழியின்றி மற்றொரு சந்தர்ப்பத்துக்காக அங்கிருந்து தப்ப அஸ்வசேனன் முயன்றதை கிருஷ்ணனின் கண்கள் கவனிக்க தவற வில்லை.

''அர்ஜுனா, உன்னைக் கொல்ல திட்டமிட்ட கொடிய நாகம் அஸ்வ சேனன் அதோ கர்ணனிடம் நிற்கிறான் பார். அவன் தப்பிச் செல்வதற்குள் உடனே அவனை கொன்றுவிடு'' என்றான் கிருஷ்ணன்.

''யார் அவன்? எதற்கு என்னை கொல்ல திட்டம் ?'' என்றான் அர்ஜுனன்.
''ஞாபகம் இருக்கிறதா? அக்னிக்கு உதவ, காண்டவ வனத்தை நீ அழித்தபோது தப்பிச்சென்ற நாகராணியை நீ கொன்றபோது அவள் வயிற்றில் இருந்தவன் இவன். உன்னை பழி வாங்க துடித்தவன். கர்ணனின் நாக அஸ்திரமாக உன்னை தாக்கினான். மீண்டும் உன்னைத் தாக்க கர்ணன் உதவி நாடுகிறான்'' என்கிறான் கிருஷ்ணன்.
அர்ஜுனன் இதற்குள் மேலே பறந்து சென்ற அஸ்வசேனனை ஒரு அஸ்திரத்தால் இரு துண்டுகளாக்கி கொன்று அவன் கதையை முடித்து, அஸ்வசேனன் தரையில் இறந்து விழுகிறான். . அர்ஜுனன் மேல் கர்ணன் மேலும் சில கொடிய அம்புகளை செலுத்துகிறான். அர்ஜுனன் அவற்றை முறித்து அவன் கவசத்தை உடைக்கிறான். அர்ஜுனனின் அஸ்திரங்கள் கர்ணன் தலை க்ரீடத்தையும் குண்டலங்களையும் சிதைக்கிறது.
கூரி ய விஷ அம்புகள் கர்ணனின் மார்பு கவசங்களை உடைத்து அவன் உடலில் பாய்ந்தன. அவன் மயங்கினான். அதோடு கர்ணன் அர்ஜுனனை மீண்டும் தாக்கினான். அர்ஜுனன் மேலும் மேலும் அவனை விடாது தாக்கியபோது கர்ணன் தனது மரணம் நெருங்குவதை உணர்ந்தான். கன்றுக்குட்டியை இழந்த பிராமணன் கொடுத்த சாபம் நினைவுக்கு வந்தது. ''உன் மரண காலத்தில் உன் தேர் பள்ளத்தில் சேற்றில் அமிழ்ந்து நகராது.''. அவன் உடல் எரிச்சலும் வலியும் வாட்டியது. களைத்துப் போனான் தான். ரத்தம் நீரோடையாக உடலெங்கும் அர்ஜுனன் அம்புகள் தாக்கியதால் பெருகி வழிந்தது. அர்ஜுனனைக் கொல்ல கடைசி ஆயுதமாக பார்கவ அஸ்திரத்தை மந்திர உச்சரிப்புடன் அர்ஜுனன் மேல் செலுத்த முயன்றான். பரசுராமன் சாபத்தால் ''முக்கிய நேரத்தில்'' மந்திரம் மறந்து போய்விட்டது. இடது தேர் சக்கரம் பூமியில் பள்ளத்தில் ஆழ்ந்து இறங்கியது. தேர் நகராமல் நின்றது. கர்ணனின் நாகாஸ்திரம் பார்கவாஸ்த்ரம் எல்லாவற்றையும் உடைத்து எறிந்தான் அர்ஜுனன். தேரிலிருந்து குதிரைகள் விலகி ஓடியது. ஓடாத தேரிலிருந்து சல்லியன் இறங்கிவிட்டான் . அப்போதும் கர்ணன் கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் அம்புகளால் தாக்கினான். அர்ஜுனன் மீது பிரம்மாஸ்திரத்தை செலுத்தினான். அர்ஜுனன் ஐந்திராஸ்திரத்தால் அதை தடுத்து நிறுத்தினான். அர்ஜுனன் மீண்டும் தனது பிரம்மாஸ்திரத்தை கர்ணன் மீது செலுத்தினான். ஒன்றை மாற்றி ஒன்றாய் கர்ணனின் வில்லை அர்ஜுனன் ஒடித்தான்.

கர்ணனின் தேர் சக்கரங்கள் மேலும் பூமியில் புதையவே, அவன் இறங்கி இரு கைகளாலும் அந்த சக்கரங்களை மேலே கொண்டு வர பலமாக முயற்சித்தான். ''அர்ஜுனா இது தான் நீ எதிர்பார்த்த தக்க தருணம். கடைசி சந்தர்ப்பம். உடனே கர்ணனைக் கொல் '' அர்ஜுனன் சரமாரியாக அம்புகளை கர்ணன் மேல் பொழிந்தான்.
''அர்ஜுன, நான் ஆயுதம் இன்றி தரையில் இருக்கும்போது நீ தேரிலிருந்து என்னை தாக்குவது யுத்த தர்மம் இல்லை. பொறு ' என்றான் கர்ணன்.

அப்போது கிருஷ்ணன் ''பரவாயில்லையே கர்ணா. நீ தர்மம், நீதி, நெறி, பற்றி எல்லாம் கூட பேசுகிறாயே. தனக்கென்று துன்பம் கஷ்டம் எல்லாம் வரும்போது தான் நியாயம் நேர்மை நீதி தோன்றுமா? துரியோதனன், துச்சாதனன் சகுனி எல்லோருடன் சேர்ந்து நீ திரௌபதி நான் ஒரு மெல்லிய ஒற்றை ஆடையில் இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள்'' என்று கெஞ்சியபோது அவளை நிர்தாட்சண்யமாக துகில் உரிய ஆணையிட்டவன் நீ தானே?.
சகுனி சூதில் வல்லவன் என்று தெரிந்தும், யுதிஷ்டிரனை வஞ்சகமாக மடக்கி, அவனை நிர்க்கதியாக விருப்பமின்றி சூதாட வைத்து ஏமாற்றி அவனையும் பாண்டவர்களையும் பல ஆண்டுகளாக வனவாசம் செய்வித்ததில் உனக்கும் பங்கு உண்டே. அது தர்மமா?
குழந்தைப் பருவத்தில் இருந்தே நீ துர்யோதனனோடு சேர்ந்து பீமனுக்கு உணவில் விஷம் வைத்தது, அவர்களை அரக்கு மாளிகையில் உயிரோடு எரிக்க திட்டமிட்டது உனக்கு தெரிந்தது தானே. அது நேர்மையா, நியாயமா, நெறியா?
நிரபராதியாக நின்ற திரௌபதியிடம் ''உன் கணவர்கள் உபயோகமற்ற முட்டாள்கள். நீ இங்கே வேறு ஒருவனை கணவனாக ஏற்றுக்கொள்'' என்று சொன்னது நியாயமா, தர்மமா?

நிராயுதபாணியாக நின்ற சிறுவன் வீரமாக உங்களை எல்லாம் போரில் துன்புறுத்தியவனை, அபிமன்யுவை, ஐந்து அதிரதர்களுடன் ஒன்று சேர்ந்து நீயும் அப்போது தாக்கி கொன்றது மட்டும் தர்மமா?,

கர்ணன் பதில் பேசவில்லை, தலை குனிந்தான் .''அர்ஜுனா, கர்ணன் மறையும் நேரம் வந்துவிட்டது. அவனைக் கொல்'' என்று உத்தரவிட மீண்டும் அர்ஜுனன் கர்ணன் யுத்தம் தொடர்ந்தது. கர்ணன் தரையில் இருந்து தேர் சக்கரத்தை மேலே நிமிர்த்த முயன்றான். ''அர்ஜுனா கர்ணன் தேரை உயர்த்துவதற்குள் அவனைக் கொல்'' என்றான் கிருஷ்ணன். மிகவும் சக்தி வாய்ந்த அஞ்சலிகா அஸ்திரத்தை எடுத்து அர்ஜுனன் கர்ணன் மேல் தொடுத்தான்.மந்திர உச்சாடனத்துடன் புறப்பட்ட அந்த சக்தி வாய்ந்த அம்பு கர்ணனின் சிரத்தை உடலிலிருந்து துண்டித்தது. எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்க, கர்ணனின் உடலிலிருந்து ஒரு ஒளி புறப்பட்டு மேலே சூரியனில் கலந்தது. பாண்டவர்களின் வெற்றிச் சங்கநாதம் எங்கும் எதிரொலித்தது. அஞ்சலிகா அஸ்திரம் கர்ணன் தலையையும் உடலையும் தூக்கி வீசி தரையில் தூரமாக எறிந்தது . சல்லியன் இதைப் பார்த்துவிட்டு திரும்பி சென்றான். அடியும் காயமும் நாசமும் சேதமும் கௌரவப் படையை பின்வாங்கி திரும்பச் செய்தது. துரியோதனன் கண்களில் சோகம் கலந்த கண்ணீரோடு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். உடல் நடுங்கியது.

(ஏன் அர்ஜுனன் அம்புகள் கர்ணன் உடலில் நுழையாமல் தர்ம தேவதை தடுக்கவில்லை?. ஏன் கிருஷ்ணன் பிராமணனாக வந்து அவன் தர்மத்தை தானமாக பெறவில்லை? , ஏன் குந்தி வந்து ''என் மகனே'' என்று கர்ணன் உடலை மடியில் போட்டுக்கொண்டு அழவில்லை ?'' இதெல்லாம் இந்த வியாச பாரதத்தில் ஏன் வரவில்லை? வியாசர் ரெண்டு வித பாரதத்தை எழுதினாரா? அல்லது கதைக்கு சுவை கூட்ட யாரோ இடைச் செருகலாக இதை எல்லாம் நுழைத்து விட்டார்களா? இதெல்லாம் நாம் படித்து கண்ணீர் சிந்தினோமே. சினிமாவில் பார்த்தோமே , பாட்டில் ''உள்ளத்தில் நல்ல உள்ளம்'' என்று உருகிய சீர்காழியை கேட்டு அழுதோமே ? புரியவில்லையே? நிச்சயம் நான் உங்களுக்கு சொல்வது வியாசர் எழுதிய மஹா பாரத ஸ்லோகங்களின் சுத்த மொழிபெயர்ப்பாக ஸ்ரீ பி.சி. ராய் வங்காள மொழியில் எழுதி ஸ்ரீ கங்குலியால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு 200 வருஷங்களாக உலகில் உலவி வருகிற ஒரிஜினல் மஹா பாரதம். அமெரிக்காவில் இதை பதிவு செயது வைத்திருக்கிறார்கள் .எங்கேயோ தப்பிதம் நடந்திருக்கிறது. இது மாதிரி நடப்பது எல்லாம் நமக்கு ஏற்கனெவே தெரிந்தது தான். ஒருவேளை பின்னாலே எப்போதாவது இது பற்றி ஏதாவது குறிப்பு வருகிறதா என்று காத்திருந்து பார்ப்போம் - என்னைத் தவறாக எண்ண வேண்டாம். யாமொன்றும் அறியோம் பராபரமே. ஜே .கே. சிவன்)

1 comment:

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...