Thursday, October 31, 2019

SHEERDI BABA



மனிதருக்குள் ஒரு தெய்வம் J K SIVAN
ஷீர்டி பாபா

''நான் மீண்டும் தரிசனம் தருவேன்''

கங்காபவாத்யா சிவ தரிசனம் பெற தவம் செய்ய காட்டுக்கு போகிறேன் என்றதும் அவர் மனைவி தேவகிரி அம்மாவும் நானும் என்று கூறி இருவரும் நடக்க, வழியில் பூர்ண கர்ப்பிணியான தேவகிரியம்மா ஒரு குழந்தையைப் பெற்று அதை ஒரு துணியில் சுற்றி தெரு ஓரத்தில் விட்டுவிட்டாள். அவளுக்கு எப்படி ஒரு பச்சைக் குழதையை விட்டுவிட்டு செல்ல மனம் வந்தது? என்று கேள்வி கேட்கவேண்டாம். அவள் அப்படி விட்டதால் தான் ஒருவேளை அந்த குழந்தையை ஒரு பக்கிரி பார்த்து எடுத்துக்கொண்டு போய் வளர்த்தார்.

பக்கிரிக்கும் மற்றவர்களுக்கும் ஷீர்டி பாபாவின் பெற்றோர் யாரென்றே தெரியாமல் போனது இதனால் தான்.

1917ல் ஷீர்டி ஒருமுறை தன்னோடு இருந்த அப்துல் பாபா,நானா சாந்தோர்கர், மஹாலசாபதி , தாஸ்கணு, ஆகியோரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்.
''நீ யார் என்று உனக்கு தெரியுமா?''

ஒவ்வொருவராக ''பாபா, நான் உங்கள் சிஷ்யன் '' என்றதும் பாபாவுக்கு குபீர் என்று கோபம் வந்துவிட்டது. ''முட்டாள்கள், இன்னுமொருதரம் அப்படிச் சொல்லாதே. எனக்கு இந்த உலகத்தில் யாரும் சீடர்கள், சிஷ்யர்கள் கிடையாது. ஆனால் எண்ணற்ற பக்தர்கள் உண்டு. உங்களுக்கு சிஷ்யனுக்கு பக்தனுக்கு உண்டான வித்யாசம் தெரியுமா?

எல்லோரையும் பார்க்கிறார். அவ்வளவு பேரும் மௌனம். பாபாவே தொடர் கிறார்.

''யார் வேண்டுமானாலும் பக்தர்களாக இருக்கலாம். சிஷ்யனாவது அப்படி சுலபம் இல்லை. தனது குரு நெருப்பில் விழு என்றால் கொஞ்சமும் யோசிக்கா மல் விழுபவன் தான் சிஷ்யன். அந்த அளவுக்கு குருவின் மேல் மரியாதை, மதிப்பு, கீழ்ப்படிகள் உள்ளவன் தான் சிஷ்யன். குரு ஒருவரே அவனுக்கு கடவுள் உலகம் எல்லாமே. மீதியெல்லாம் அப்புறம். என் வார்த்தைகளை எவ்வளவு தீரம் நீங்கள் பின்பற்றி இருக்கிறீர்கள்? எப்படி நீங்கள் என் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். என்னை நிழல்
போல் தொடர்ந்து என் எண்ணம் புரிந்து அதை செயலாக்குபவன் தான் என் சிஷ்யன்.

பக்தன் அப்படி இல்லை. எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் அவன் கடவுளை வேண்டலாம். நினைக்கலாம். குருவும் சிஷ்யனும் ரெண்டு உடல் ஓருயிர். சிஷ்யன் தன்னை தனியாக ஒரு ஜீவனாக நினைக்கக்கூட மாட்டான். அப்படிப்பட்ட சிஷ்யர்களை பார்ப்பது அபூர்வம். ஆனால் லக்ஷோப லக்ஷம் பக்தர்களை காணலாம்"
ஷ்யாம் இதெல்லாம் கேட்டுக் கொண்டி ருந்தான். பாபா உங்கள் திருவடிகளை தொழுது சேவை செய்வதை தவிர வேறொன்றறியேன் என அவன் மனம் சொல்லியது. பாபா இன்னொரு அறைக்குள் சென்று ''ஷ்யாம் ...''என்று கூப்பிட்டார். அவன் உள்ளே ஓடினான். பாபா அவனைக் கண்டதும் '' இந்த அகில உலகிலும் நீ ஒருவனே என் சிஷ்யன்'' என்கிறார். மற்றவர்கள் என் பக்தர்கள் மட்டுமே. தடால் என்று ஷியாம் பாபா காலடியில் விழுந்தான்.

''பகவானே உங்கள் பாதம் ஒன்றே எனக்கு அடைக்கலம், தஞ்சம்'' என்று கண்களில் நீரோடு சொன்னான்!" அதைச் சொன்னவன் அப்புறம் எழுந்திருக்கவில்லை. பாபாவின் ஆத்மாவோடு அவன் ஆத்மா ஐக்யமாகிவிட்டது.

82வயதில் பாபா கண்ணீர் சிந்தி எவரும் பார்த்ததில்லை.. அன்று தான் அப்போது தான் ஷியாம் மறைந்ததும் மூன்று சொட்டு கண்ணீர் அவரது கண்களில் இருந்து வழிந்தது.
''பாபா தெய்வமே, ஏன் உங்களுக்கு வருத்தம். நாங்கள் எல்லோரும் உங்கள் காலடியில் தான் இருக்கிறோம் '' என்றபோது பாபா ''குழந்தைகளே, நான் வருந்த வில்லை, ஷ்யாமுடைய பாபங்கள் அவனை விட்டு விலகிவிட்டன நான் சிந்திய மூன்று துளி கண்ணீரில் அதெல்லாம் கரைந்து விட்டது .

ஷீர்டி பாபாவின் ஒவ்வொரு செயலும் சொல்லும் எண்ணமும் பக்தர்கள் நலனுக்காகவே. கடைசியில் விடை பெறும்போது அப்துல் பாபா ஷீர்டி பாபாவை வணங்கி எதிரே நின்றபோது ''நான் மறுபடியும் வருவேன். உனக்கு தரிசனம் தருவேன் '' என்கிறார்.
''அது எப்போது குருஜி'?'
''இன்னும் எட்டும் வருஷம் கழித்து..முதல் பாபா மஹாராஷ்டிராவில். அடுத்தது சென்னையில்'' என்கிறார் பாபா. பாபா இதை சொல்லும்போது சென்னையும் ஆந்திராவும் பிரியாமல் ஒரு பெரிய ராஜ்யமாக இருந்தது. சத்யா சாயிபாபா அப்புறம் தான் ஆந்திராவில் பிறந்தார். முதல் பாபா ஷீர்டி பாபா தெய்வீகத்தை காட்ட. அடுத்தது சத்யசாய் தெய்வீகத் தை வளர்க்க, மூன்றாவது ஒரு பாபா உண்டு. பிரேம் சாய், அன்பை எல்லோரி டமும் நிலைநாட்ட.

மனிதன் மகேஸ்வரனை அறிந்து கொள்வதில்லை. மகேஸ்வரன் பெரியதில் பெரிதாகவும், சிறியதில் சின்னூண்டாகவும் இருப்பவன். அவனை எந்த உருவிலும் காணவும் முடியாது. எந்த உருவிலும் அவன் இருப்பதை உணரமுடியும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...