Monday, October 7, 2019

NAVARATHRI



 நவராத்திரி வழிபாடு --- J.K. SIVAN

நவராத்திரி வழிபாடு  தோன்றிய காரணம், சிறப்பு, அனுஷ்டிக்கும்  முறை, அதன் பலன்   பற்றி தேவி மஹாத்மியம் விரிவாக சொல்கிறது.

சும்பன், நிசும்பன் என இரு ராக்ஷஸர்கள்.  தங்களை யாராலும் அழிக்க முடியாது என  வரம் பெற்று , முதல் காரியமாக தேவர்களை, பூலோக மக்களை எல்லாம் கொடுமைப் படுத்தினார்கள். வெள்ளையும் சொள்ளையுமாக,  பாக்கெட்டில் யாரோ சிரிக்கும் படம் வெளியே தெரிய, ரெண்டு கை கூபபி நெற்றியில் விபூதி குங்குமத்தோடு நம்மை அணுகி பதவி பெற்றதும்  அவர்களால் நாம் படும் துன்பம் தாங்க முடியாத அனுபவம் நமக்கே இருக்கும்போது, சும்ப நிசும்பர்கள் படுத்திய துன்பம் தாங்காமல் தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட மாட்டார்களா? ப்ரம்மா விஷ்ணு சிவனால் அழிக்க முடியாத அந்த ராக்ஷஸர்களை அன்னை ஆதி சக்தியால் மட்டுமே வதம் செய்ய முடியும். ஆகவே பிரம்மா, விஷ்ணு, சிவன் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அம்பாளுக்கு அளித்தார்கள்.

அன்னை திரிமூர்த்திகள் தந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

ஒன்பது நாட்கள் விடாமல் ராக்ஷஸர்களை யுத்தம்.  அந்த ஒன்பது நாட்களை நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். அந்நாட்களில் . மாலை  சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதைத்தான் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். நவராத்திரி  ஒன்பது நாளும் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில்  வழிபடுவர்.
அம்பிகையை முதல் மூகிறோம்.  முதல்  3 நாள்  துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி யாகவும்,  கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் அம்பாளை  முப்பெரும் சக்தியாக  வணங்குகிறோம்.

நவராத்திரியின் 1ம் நாள்  -  தேவி மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி.
2ம் நாள்  -   கௌமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரி.
3ம் நாள்  -   வாராஹி , கன்யா கல்யாணி .
4ம் நாள் -   மகாலட்சுமி. இவளே  ரோஹிணி
5ம்  நாள் -  வைஷ்ணவி, மோகினி..
6ம் நாள்  -  இந்திராணி. சர்ப்ப ராஜ ஆசனத்தில் தேவி  அமர்ந்த கோலம்.
7ம் நாள் -  மஹா  ஸரஸ்வதி, சுமங்கலி.
8ம் நாள்  - நரசிம்மிதருமி. நரசிம்மி.சினம் தணிந்த கோலம்.
9ம்  நாள்  - சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரி.
10ம் நாள் - அசுரர்களை அழித்து அம்பிகையின்  வெற்றியை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.

இப்படி அம்பாளை வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ அருள் புரிவாள்.. வருஷத்தில் ரெண்டு முறை நவராத்திரி என தேவி புராணம் சொல்கிறது. சித்திரையில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி. இப்போது புரட்டாசியில் வரும் நவராத்திரி சாரத நவராத்திரி. இந்த ரெண்டுமே எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்க இந்த ஏற்பாடு.

கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் காணாமல் போனது. புரட்டாசி சாரத நவராத்திரி தான் பிரபலம். நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டார்/ கண்ணபிரான், ஸ்யாமந்தக மணி யால் அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால் தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள்  என்கிறது  தேவி மகாத்மியம்..

நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் அஷ்டமி   அன்றாவது  விரதம் இருந்து பூஜிக்கலாம். விஜயதசமி அன்று  அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடியதன் தாத்பர்யம் : 
ஆணவம் சக்தியாலும், வறுமை செல்வத்தினாலும், அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட வேண்டும்  என்பதற்காக  வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும்  முப்பெரும் தேவியரை  வணங்கும் பண்டிகை.  விஜயதசமி  அன்று   புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் வெற்றி பெறும். று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.

''நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.''
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...