Thursday, October 24, 2019

GARUDA PURANAM




கருட புராணம்     J K SIVAN

                        பிரபஞ்ச தோற்றம்...         
                                    
சூத மகரிஷி நைமிசாரண்யத்தில் சௌனகர் மற்றும் இதர ரிஷிகளுக்கு  கருட புராணம் பற்றி  விளக்குகிறார்:\

சூதர்  பேசுவதை எல்லா ரிஷிகளும் ஆர்வமாக வாய் பிளந்து கேட்கிறார்கள். சூதர்  தொடர்கிறார்:

''ஆகவே  கருட புராணத்தை விஷ்ணு ருத்ரனுக்கு சொல்ல, ருத்ரனிடமிருந்து ப்ரம்மா அறிந்துகொண்டு அதை வேத வியாசருக்கு சொல்ல, வியாசர் என்னிடம் சொன்னார். அதை தான்  சௌனகா, உனக்கும் மற்றோர்க்கும் இந்த நைமிஷ ஆரண்யத்தில் சொல்கிறேன்.
' கருடன் பகவான்.  வாசுதேவன் அருளால் மிகுந்த பலத்தை அடைந்தவன்.  ஹரியின் வாஹனமாகி, சிருஷ்டியில் அவனு
க்கும் பங்கு உண்டு.  தேவர்களை எதிர்த்து வென்று அம்ருத கலசத்தை கொண்டு வந்ததில் ஹரியின் நாபியில் உள்ள  பிரபஞ்சமே திருப்தி யடைந்தது.  கருடன் பெயர் கேட்டாலே, அவனை  நினைத்தாலே, பார்த்தாலே போதும்  நாகங்கள் மடிந்து போகும்.  கருடனால் காஸ்யபர்  அக்னியில் வெந்து சாம்பலான மரங்களை உயிர்ப்பித்தார்.  கருடன் தான் ஹரி புரிகிறதா?  இதை கருடன் காஸ்யபருக்கு உணர்த்தினான். கருடபுராணத்தை படித்தால் பக்தி பிறக்கும், வேண்டியது பெறலாம்.  இனி  ஹரி நாராயணன் எவ்வாறு கருடபுராணத்தை ருத்ரனாகிய சிவனுக்கு சொன்னார் என்பதை கூறுகிறேன்:

வாசுதேவன் தான் நரநாராயணன்,  பரமாத்மா,  பிரபஞ்ச சிருஷ்டியும் சம்ஹாரமும் புரியும்  கர்த்தா.  உருவமும் அருவமுமாக அனைத்தும் அவரில் அடங்கும்.  புருஷன்,  காலன்  என்றும் புகழப்படும் நாராயணன் உருவத்தோடும்  அருவமாகவும்  உணரப்படுபவர். அநாதி.  ஆதி அந்தமில்லாதவர்.  புருஷோத்தமன். ஆத்மா அவரிடமிருந்து  புறப்பட்டு வெளியே  ஜீவன்களிடத்து உறைகிறது. புத்தி,  மனசு, தத்வங்கள் , பஞ்ச பூதம் அனைத்தும்  பிறக்கிறது. 
''ருத்ரா, ஹிரண்யகர்பம்,  பொன் முட்டை என்கிற வார்த்தையே அவரால் தான் உருவானது.  சிருஷ்டி எனும்  படைப்பு தொழிலுக்காக தன்னையே ஒரு தனி ஸ்ரிஷ்டியாக முதலில் படைத்துக் கொள்கிறார். அதுவே நான்கு  அதரங்கள் கொண்ட  ப்ரம்மா.  த்ரி குணங்களும் அவரால் உண்டாகிறது.  ரஜோ குணத்தால்  பிரபஞ்சம் படைக்கப்படுகிறது. அசையும் அசையா பொருள்கள்  ஜீவன்கள் உண்டாகிறது. தங்க முட்டையில் தான் தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் எல்லாமே உருவாவதற்கு காரணம்.  சர்வமும் அதில் அடக்கம்.   விஷ்ணுவால் தோன்றிய  ப்ரம்மா சிருஷ்டியை துவக்குகிறார்.   விஷ்ணு அந்த  ஜீவர்களைக்  காக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். அதை  முடிவில் சம்ஹரிக்கும் நேரம் வந்தபோது அழிப்பவரும் அவரே.  ஹரி தான் கால சம்ஹார மூர்த்தி.   ப்ரம்மாவாக அவதரித்த விஷ்ணு  பிரபஞ்சத்தை படைக்கிறார், விஷ்ணு பாதுகாக்கிறார். ருத்ரனாக  உருவெடுத்து கல்பத்தின் முடிவில்  சம்ஹாரத்தை  செய்கிறார். 

 ''சங்கரா, கேட்கிறாயா?  நாராயணன் இவ்வாறு ப்ரஹ்மாவாகி சிருஷ்டியை, படைப்பு தொழிலை மேற்கொள்ளும்போது ஒரு சமயம்  ஹரியானவர் ஒரு  பெரிய  காட்டுப்பன்றி அவதாரமெடுத்து  ஹிரண்ய கர்ப்பத்தை  ஹிரண்யாக்ஷன் எனும் ராக்ஷஸன் பூமியை  நீருக்கடியில் ஒளித்துவைத்திருந்ததை  தெரிந்து  நீரில் தாவி தனது கோரைப்பற்களால்  பூமியை  தாங்கி நிலை நிருத்தியவர்''   என்கிறார் நாராயணன் 

பெரிதில் பெரிதான மஹத் முதலில்  ஸ்ரிஷ்டிக்கப்படுகிறது.  அதுவே  ப்ரம்மாவின்   வேறுபட்ட உருவம்.ரெண்டாவதாக ''தன் மாத்திரைகள் ''  உண்டாகிறது.  அண்டத் தில் சிறு துகள்கள்.  மூலப் பொருள் களான  மூலகம்,  ELEMENTS  ஸ்ரிஷ்டிக்கப்படுகிறது.   அப்புறம் உறுப்புகள் தோன்றுகிறது.  புத்தி செயல்படுகிறது. பூமியிலும்  விண்ணிலும்  அசையும்,  அசையா  உயிர் சக்திகளுண் டாகிறது.   மனிதன் உலகில் பரிணாமமாக  தோன்றுகிறான். அதன் பிறகு தான்  அனுக் ரஹம் எனப்படும்  மூன்று குணங்கள் அவனுள்ளே  உருவாகிறது.  இதெல்லாம்  ஐந்து  ''வைகாரிக'' வழி முறை எனப்படும் . அப்புறம் கௌமாரம்  தோன்றுகிறது. சிருஷ்டியில் இப்படி ஒன்பது படிப்படியான முறைகள் உண்டு  விண்ணுலக தேவதைகள் முதல்  பூமியின் அசையா பொருள்கள் வரை.

ப்ரம்மா வின் சங்கல்பத்திலிருந்து என்று சொல்லும்போது எண்ணத்தின் மூலம் என்று புரிந்து கொள்ளலாம். புத்திரர்கள் பிறக்கி றார்கள்.  தேவர்கள், அசுரர்கள், பித்ருக்கள், மனிதர்கள் என்று பிரிவுகளாக அவர்களை வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.   இருள்   பகல் உண்டாயிற்று. ஒளி கொடுக்க சூரிய சந்திரர்கள் தோன்றினர்.  சத்வ தம குணங்களை கொண்ட  ஜீவன்கள் ப்ரம்மாவின் உடலிலிருந்து உண்டாயிற்று.  தமோ குணம் கொண்ட அசுரர்கள் இருளில் சக்தி பெற்றவர்களானார்கள். தேவர்கள் சத்வ குணம் கொண்டவர்களாக  பகலில் உருவாயினர்.  அந்தி நேரத்தில் பித்ருக்கள் எனும் முன்னோர்கள்  தோன்றினர். ரஜோ குணம் கொண்ட மனிதர்கள் உருவாயினர். இருளுக்கு ஒளி கொடுக்க சந்திரன். ராக்ஷசர்கள்  பசி மிகுந்தவர்களாக  உலவினர். யக்ஷர்கள் அவர்களுக்கு எதிராக  சக்திகொண்டவர்களாகி  விண்ணில் உருவானார்கள்.  சர்ப்பங்கள் தோன்றின. கந்தர்வர்கள்  ஒலி கூட்டினார்கள்.  பூமியில்  காட்டு  மிருகங்கள்,வீட்டு  விலங் குகள்,  பறவைகள், ஊர்வன,  தாவரங்கள் எல்லாமே  தோன்றின. 

பிரம்மாவிடமிருந்து  ரிக் முதலான  வேதங்கள்  உருவாயின.  பிராமண க்ஷத்ரிய வைஸ்ய இதர  தொழில் ரீதியாக  பிரிவுகள்  உருவாகியது. ர்கள். ப்ரம்ம, சக்ர, மருத், கந்தர்வ  பிரதேசங் கள்  தோன்றின.  அவரவர் கடமைகள், பொறுப்புகள் பிறகு காலப்போக்கில் மேற் கொள்ளப்பட்டது.  எங்கிருந்து வந்தோமோ அங் கே கடைசியில் போகவேண்டும் என்ற நியதி புரிந்து கொள்ளப் பட்டது.   சப்த ரிஷிகள்  ஒரு மண்டலத்தில் விண்ணில் தங்கினார்கள். மற்ற ரிஷிகள், முனிவர்கள்  ஆரண்யம் எனும் வனங்களில் வாழ்ந்தார்கள். தவம் செய்தார்கள். யதிகள் ஓரிடத்தில் தாங்காமல் யாத்திரை மேற்கொண்டார்கள். 

பிரபஞ்சத்தை படைத்த ப்ரம்மா தனது சங்கல்பத்தில் உருவான ஜீவன்கள்  பெருக  வழி செய்தார்.தர்மா, ருத்ரன்,மனு, சனக ,சனாதன, பிருகு ,ஸநத்குமார,ருசி, சுத்த, மரீசி, அத்ரி, அங்கிரஸ ,புலஸ்திய, புலஹ, க்ரது ,நாரத, பத்ரிஸ்  இன்னும் எத்தனையோ  மஹரிஷிகள் உருவானார்கள்.  விஷ்ணுவின்  நாபியில் உருவான பத்மத்தில் தோன்றிய பிரம்மா, வலது கட்டைவிரலால் தக்ஷனை   படைக்கிறார். தக்ஷனுக்கு அழகிய பெண்கள் பிறக்கிறார்கள்.  சதி  என்பவள் ருத்ரனை  அடைகிறாள்.   பிருகு ரிஷிக்கு  தாதா , விதாதா எனும் புத்திரர்கள் உண்டாகிறார்கள்.  மனுவிற்கு  அயதி   நியதி எனும்  இரு பெண்கள்.  அவர்களே  தாதா விதாதா  என்பவர்களை மணக்கிறார்கள்.  அவர்கள் புதல்வர்கள் தான்  பிராணா,  ம்ருகண்டு,  ம்ருகண்டு மகன் மார்க் கண்டேயன்.  மறிச்சியின் மனைவி  ஸம்பூதி , பௌர்ணமாஸா வை பெறுகிறாள்.  அத்ரி அனசூயாவை மணந்து  சோமா, துர்வாஸா , தத்தாத்ரேயா  ஆகியோரை பெறுகிறார்.  க்ரது  சுமதியை மணந்து  அறுபதினாயிரம் ரிஷிகளை புத்ரர்களாக பெறுகிறார். இவர்களை வலகில்யர்கள் என்று  அறிவோம்.  எல்லோரும் ஒரு கட்டைவிரல் நீளம் தான். சூரியன் போல் ஒளிவீசுபவர்கள். வசிஷ்டர் ஊர்ஜா வை மணந்து அவர்களுக்கு  ஏழு ரிஷிகள் பிறக்கிறார்கள்.  ரஜோ, கத்ர, ஊர்தவஹு , ஷாரண, அனகா, சுதபா, சுக்ரா. இவர்கள் தான் சப்தரிஷிகள்.

தக்ஷன்  ஸ்வாஹாவை அக்னிக்கு தருகிறான். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள்  பாவகன், பவமான , ஷுசி ,என்ற மூவரும்  ஜலத்தை அருந்தி உயிர்வாழ்பவர்கள்.  ஸ்வதா   மூலம்  மேனா , வைதரணி  எனும் இரு பெண்கள்  உருவாகிறார்கள். மேனா  ஹிமாச்சலத்தின் மனைவி.  மனு ஸ்வயம்பு  இந்த பூமியில் பிறந்த ஜீவன்களை  ஒரு சீரான  கோட்பாட் டில் , கட்டுப்பாட்டில் வைக்க நியமிக்கப் படுகிறார்.  சவ்யம்பு மனுவின் மனைவி ஷதரூபா. தனது பாபங்களை தவத்தில் அழித்தவள். அவளுக்கு பிறந்தவர்கள் ப்ரியவ்ரதன், உத்தானபாதன். பெண்கள் ப்ரஸ்ருதி , அகுதி ,தேவஹுதி.   அகுதி  ருசி ரிஷியை மணக்க, பிரசுருதி தக்ஷனை மணக்க,  தேவஹுதி கர்தம ரிஷியை கணவனாக அடைகிறாள்,  இந்த  பட்டியலுக்கு முடிவில்லை என்பதால் இததோடு நிறுத்திக் கொள்கிறேன்.

மேலும் தொடர்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...